வியாழன், 14 மார்ச், 2013

குடிமை ப் பணித் தேர்வு மாற்றங்கள் - முதல்வர் மடல்

உடனடி நடவடிக்கைக்குப் பாராட்டுகள். மடல் எழுதியதுடன் அல்லாமல் முயற்சி மேற்கொண்டு மத்தியப் பணித் தேர்வுகளைத்தமிழிலும் பிற மொழிகளிலும் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் மழலைக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்வழிப் படிப்பு இருப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++

 

குடிமை ப் பணித்  தேர்வில் புதிய மாற்றங்களால்  ஊர்ப்புறஏழை மாணவர்களுக்கு ப் பாதிப்பு: தலை.‌ அமை ச்சருக்குச்  செயலலிதா மடல்

சிவில் சர்வீஸ் தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்களால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். எனவே, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புதன்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில்:
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்து தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்தப் புதிய நடைமுறைகள் இந்து மொழி பேசாத சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு எதிரானதாகும். சிவில் சர்வீஸ் தேர்வு முறைகளில் நான்கு விதமான முக்கிய மாற்றங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்துள்ளது. அவை தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.பள்ளிக் கல்வியின் இறுதி வரை தமிழில் படித்து, பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் படித்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்ற பழைய முறை இப்போது மாற்றப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு வரை எந்தவொரு மாணவர் தமிழ் வழியில் பயில்கிறாரோ அவர் மட்டுமே, பிரதானத் தேர்வில் விருப்பப் பாடங்கள் உள்பட அனைத்தையும் தமிழில் எழுத முடியும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது, தாய்மொழியாம் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை பறிப்பதாகும். ஆனால், இந்தி மொழி வழியில் படித்தவர்களுக்கு இதுபோன்ற நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இரு மொழிகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் என்பது தமிழ் பேசும் தேர்வர்களுக்கு மட்டுமின்றி இந்தி மொழி மொழி பேசாத அனைத்து மாணவர்களுக்கு எதிரானதாகும். மேலும், தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும்.இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-வது சரத்துகளுக்கு எதிரானது மட்டுமின்றி, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது தாய்மொழியில் எழுதும் மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும்.
இரண்டாவது புதிய நடைமுறையாக, பட்டப் படிப்பில் பிரதான பாடமாக தமிழ் இலக்கியத்தை தேர்வு செய்து படித்த மாணவர்களால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியும். இந்த நிபந்தனை மற்ற பாடங்களுக்கு விதிக்கப்படவில்லை. குறிப்பாக, இளங்கலை கணிதம் படித்த ஒருவர், தனது விருப்பப் பாடமாக வரலாறை எடுக்க முடியும். ஆனால், தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியாது.மூன்றாவது மாற்றமாக, ஒரு குறிப்பிட்ட மொழிப் பாடத்தை தேர்வுக்காக எடுக்க விரும்புவோரில், குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் அவர்கள் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வை எழுத முடியும். இந்த புதிய நடைமுறையானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானதாகும்.நான்காவது புதிய அம்சமாக, இந்திய மொழியில் கட்டாயமாக ஒரு தகுதிóத் தாளை எழுத வேண்டும் என்கிற விதிமுறை நீக்கப்பட்டு, ஆங்கில மொழியில் கட்டுரை எழுதும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆங்கிலம் படித்த தேர்வர்களுக்கு சாதகமாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.மாநில அரசுகளிடம் ஆலோசிக்கவில்லை: சிவில் சர்வீஸ் தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து, மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையையும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளவில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்வதைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.
எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக