திங்கள், 25 மார்ச், 2013

கெயில் திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: முதல்வர் பதிலுரை

கெயில் திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது முதல்வர் பதிலுரை


“கெயில்” திட்டம் தொடர்பாக 25.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு இன்று பேரவையில் முதல்வர் பதிலுரை அளித்தார்.
அதிலிருந்து...
“நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எப்போதும் எல்லா உரிமையும் உண்டு” என்றார் அண்ணா. 
அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியில் இந்த அரசு, மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
கேரள மாநிலம், கொச்சி  திரவ எரிவாயு முனையத்திலிருந்து  பெங்களூர் வரை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டது.
மேற்படி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 20 மீட்டர் அகலத்திற்கும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதற்காக 1962 என்ற சட்டத்தின் கீழ் 5,842 பட்டாதாரர்களுக்கு சொந்தமான சுமார் 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை, அதாவது சுiபாவ டிக ருளந-ஐ பெறுவதற்கு கெயில் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.  இதற்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் ஆகும்.
இந்தத் திட்டம்  விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்றும்; தற்போது கெயில் வகுத்துள்ள திட்டப்படி இது செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்து; இந்தத் திட்டத்திற்கு ஏழு மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  விவசாயிகளின் கவலை எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் 28.2.2013 அன்று மாண்புமிகு அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தினேன்.
இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளை முதலில் கேட்டறிவது அவசியம் என்று நான் எடுத்துக் கூறியதுடன், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் அடிப்படையில் அரசு தலைமைச் செயலாளரால் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டேன்.
எனது ஆணைப்படி கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்காக பொது கருத்துக் கேட்புக் கூட்டங்கள் 2013 மார்ச் திங்கள், 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்னை-ராஜா அண்ணாமலைபுரம், பி.எஸ். குமாரசாமி ராஜா சாலையிலுள்ள, அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்பட்டன.  இந்த பொது கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மேற்குறிப்பிடப்பட்ட ஏழு மாவட்டங்களின் 134 கிராமங்களைச் சார்ந்த 
2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும்,
கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் அமைப்பதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும்;
கெயில் நிறுவனம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாய நிலத்தின் பெரும்பகுதியின் நிலப் பயன்பாட்டு உரிமையினை பெறுவதால்  விவசாயிகள் தங்களது  நிலத்தில்  உரிய விவசாயம் செய்ய இயலாமல் நிலத்தின் பெரும்பகுதியினை இழக்க நேரிடுவதுடன், எதிர்காலத்தில் நில மேம்பாட்டிற்குத் தேவையான எதையும் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் என்றும்;
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வேளாண் நிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதனால் அந்த விவசாயிகளின் பொருளாதார நிலைமை மிகக் கடுமையாக பாதிப்படைவதுடன், அவர்கள் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் நிலத்தில் தேவையான விவசாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்படும் என்றும்;
விவசாய நிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதனால்  அந்நிலங்களின் மதிப்பு மிகக் கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும்;
கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்தில் கவரப்படும் விவசாய நிலங்களுக்கு வங்கிகள் கடன் தர முன்வருவதில்லை என்றும்;
கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல சாத்தியப்படக் கூடிய  பகுதிகளிலும்  விவசாயிகளின் கோரிக்கைகள் கெயில் நிறுவனத்தால் கருத்தில் கொள்ளப்படாமல், விவசாய நிலங்களின் வழியாகவே எரிவாயுக் குழாய் பதிக்க கெயில் நிறுவனம் முனைந்துள்ளது என்றும்; 
இத்திட்டம் விவசாயிகளின் முழு மனதான ஒப்புதல் பெறாமலும், விவசாயிகளுக்கும் நில உரிமையாளர்களுக்கும் முறையான தகவல் அளிக்காமலும், கெயில் நிறுவனத்தினால் செயலாக்கம் செய்யப்பட்டது என்றும்;
இக்குழாய்கள் பதிப்பதனால் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உருவாக்கிய அவர்களின் வீடுகள், கோழிப்பண்ணைகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகும் என்றும்;
விவசாயிகளின் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் பகுதியில் ஆழமாக வேரூன்றும் மரங்கள் வளர்க்கக் கூடாது என கெயில் நிறுவனம் தடை செய்வதால் தென்னை மரம் மற்றும் பழவகை மரங்களை சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும்;
கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்த் தடம் சில இடங்களில் அனுமதி பெறப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகள், கல்வி நிறுவனங்கள் வழியாகச் செல்வதால் அவ்விடங்களில் எரிவாயுக் கசிவு அல்லது பெரும் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, 8.3.2013 அன்று கெயில் நிறுவனம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டால் அந்தப் பணிகள் முடியும் வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது என்றும், எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு மேற்கொள்ள இயலாது என்றும், ஒவ்வொரு எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதல் வால்வு நிலையம் அமைக்க வேண்டியிருப்பதால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பிரச்சனைகள் ஏற்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் போது பாறைகள் உள்ள இடங்களில் பாறைகளை வெடிக்கச் செய்யும் போது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே வாங்கப்பட்ட பொருட்கள், குழாய்கள் மற்றும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் ஆட்சேபணைகள் மற்றும் கெயில் நிறுவனத்தின் கருத்துகள் ஆகியவற்றை எனது தலைமையிலான அரசு கவனமாக பரிசீலித்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாததற்கு வலுவான தொழில் நுட்பக் காரணங்கள் எதையும் கெயில் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மாறாக, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை நியாய உணர்வு கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமெனில், அதனால் யாருக்கு, எவ்வளவு பாதிப்பு என்பதையும், தேச நலன் எவ்வளவு என்பதையும் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட வேண்டும்.  இந்த அடிப்படையில், இந்தத் திட்டத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால் திரவ எரிவாயு தொழிற்சாலைகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு எனது தலைமையிலான அரசு கீழ்க்காணும் முடிவுகளை எடுத்துள்ளது.
கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்கும் தற்போதைய திட்டத்தினை உடனடியாக கைவிடவேண்டும்.
இத்திட்டத்திற்கான குழாய்களை தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு கெயில் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கெயில் நிறுவனம் ஏற்கெனவே நிலங்களில் குழாய்களைப் பதிக்க தோண்டியுள்ள குழிகளை உடனடியாக சமன்படுத்தி அந்நிலங்களை அதன் முந்தைய நிலையில் விவசாயிகளிடமும் நில உரிமையாளர்களிடமும், ஒப்படைக்க வேண்டும்.
விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடரும் வகையில் ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை கெயில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும் இழந்து, தற்போது வரை இழப்பீடு அளிக்கப்படாத விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் உடனடியாக கெயில் நிறுவனம் உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்.
மேற்கண்ட தமிழக அரசின் முடிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு நடவடிக்கைகளை கெயில் நிறுவனம் மேற்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு திரவ எரிவாயு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் கெயில் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.
“கெயில்” திட்டம் தொடர்பாக விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம் என்பதில் எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதையும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்தத் திட்டத்திற்கும் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றைக்கும் உடந்தையாக இருக்காது என்பதையும் தங்கள் வாயிலாக, இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்து அமர்கிறேன்.
- என்று கூறினார் முதல்வர் ஜெயலலிதா.
க்

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(9)

சபாஷ்.... முதல்வர் முதல்வர் தான். "திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம்" விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்த அன்னையே... நீங்கள் வாழ்க பல்லாண்டு.
வாழ்த்துக்கள். மிகச் சிறந்த அறிவிப்பு. தமிழக முதல்வருக்கு மிக்க நன்றி.
நல்ல முடிவு தமிழகத்திற்கும் பயனுள்ளவகையில் திட்டம் மாற்ற அறிவுறுத்தியது வரவேற்க்கதக்கது
எரி வாயுக் குழாயைப் பதித்து மூடியபின் அதன் மேல் நன்றாக விவசாயம் செய்யலாம், மரம் மட்டும் வைக்க முடியாது, கட்டிடம் கட்ட முடியாது. முக்கியமாக ரியல் எஸ்டேட்டுக்காக நிலத்தை மாற்ற முடியாது. விவசாயத்தைப் பற்றியெல்லாம் இங்கு யாருக்குக் கவலை? ரியல் எஸ்டேட்டுக்கு நிலத்தை மாற்ற முடியாது என்பதுதான் விவசாயிகளின் உண்மையான பிரச்சினை. அதற்காகத்தான் இத்தனைக் கூப்பாடும், ஒப்பாரிகளும். ஏதோ கொச்சியிலிருந்து பெங்களூருக்கு காஸ் கொண்டு போவதற்காகப் போடப்பட்ட திட்டமல்ல இது. கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருக்கும் முக்கியமான தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் தருவதற்காகத்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே கோவாவில் இருந்து பெங்களூர் வரை பைப்லைன் போடப்பட்டுள்ளது. கொச்சியில் இருந்துதான் பெங்களூருக்கு காஸ் கொண்டு போகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஏற்கனவே கொச்சி - மங்களூர் பைப்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்றால் மங்களூரில் இருந்து பங்களூரை இணைத்து விட்டுப் போய்விடுவார்கள். தமிழர்கள் சும்மா புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
துடிமன்னன் அவர்களே, சாலை ஓரம் குழாய் பதிக்கட்டுமே ஏன் விவசாய நிலங்கள் ? கேரளாவில் விவசாய நிலங்களைத் தொடவில்லை. ஏன்? தமிழன் மட்டும் இளிச்சவாயன் அதுவும் 15 சென்ட் நிலத்திற்கு 790 ரூபாய் இழப்பீடு விவரம் தெரிந்து கருத்து கூறலாமே?
துடி மன்னனே..... இந்த செய்தியில் வெளியான முதல்வரின் படத்தை பார்த்தாயா.... அதுவே எங்களின் வெளிப்பாடும். விவசாயிகளின் நலனே நாட்டின் நலன். ஒரு போதும் விவசாயிகளை விட்டுகொடுக்க மாட்டோம். ஏன் முதலிலேயே செய்ய வேண்டியது தானே. ஏன் தமிழக விவசாயிகள் என்ன இளிச்சவாயர்களா? இராசாராமன் வெ இராமன் ஹைதராபாத்
துடிமன்னன் அவர்களே விவசாயி என்றால் இளக்காரமாக உள்ளதா. அவர்கள் இல்லை என்றால் நீங்கள் பட்டினி கிடக்கவேண்டியதுதான். உங்க நிலத்தை அரசு கேட்ட நீங்க மறு பேச்சு பேச கொடுப்பிங்களா. உர்ருக்குக்கு எளச்சவன் விவசாயி ஆயிட்டான். கொஞ்சமவுது மனசாட்சியோட பேசுங்க சார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக