திங்கள், 18 பிப்ரவரி, 2013

1,741 உடல் உறுப்புகள் தானம் : முன்னேற்றம் தேவை

1,741 உடல் உறுப்புகள் தானம் : இருந்தாலும் இன்னமும் முன்னேற்றம் தேவை


கடந்த நான்கு ஆண்டுகளில், சாலை விபத்துகள் போன்றவற்றில் சிக்கி, மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடம் இருந்து, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட, 1,741 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உள்ளன.

சாலை விபத்துகள் போன்றவற்றில் சிக்கி, மருத்துவமனைகளில் மூளைச்சாவு ஏற்படுவோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் குடும்பத்தினரின் ஒப்புதல்படி, தகுதியான, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தானமாகப் பெற்று வருகின்றன.
தானம்:


இவ்வகையில், கடந்த, 2008ம் ஆண்டு, அக்., முதல், கடந்த ஆண்டு, டிச., வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மூளைச்சாவுக்கு ஆளானவர்களில், 306 பேரிடம் இருந்து, மொத்தம், 1,741 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.இவற்றில், சிறுநீரகம் - 563; விழி வெண்படலம் (கார்னியா) - 482; இதய வால்வுகள் - 350; கல்லீரல் - 280; இதயம் - 52; நுரையீரல் - 13 ஆகியவை அடங்கும்.தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளில், கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவை அனைத்தும், தேவையானவர்களுக்குப் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றில், அதிகபட்சமாக, அப்பல்லோ மருத்துவமனை, தங்கள் மருத்துவமனைகளில், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் பெற்ற (லோக்கல் முறை), 102 சிறுநீரகங்கள், 111 கல்லீரல்கள் ஆகியவற்றை, தேவையானவர்களுக்குப் பொருத்தி உள்ளது.பிற மருத்துவமனைகளில் இருந்து தானமாகப் பெற்ற (ஷேர் முறை), 31 இதயத்தை, நோயாளிகளுக்குப் பொருத்தியதில், பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது.

முன்னிலை:
"லோக்கல்' முறையில், 56; "ஷேர்' முறையில், 37 என, மொத்தம், 93 சிறுநீரகங்களை பயன்படுத்தி, அரசு மருத்துவமனைகளில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்னிலை வகிக்கிறது.இது குறித்து, அரசு பொது மருத்துவமனை, மருத்துவர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், சிறுநீரகத்தின் தேவை, தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. அதிகரித்துவரும் நீரிழிவு நோய், சிறுநீரக தானம் கொடுப்போர் மற்றும் பெறுவோரின் ரத்த வகை பொருந்தாதது, மாற்று சிறுநீரகத்தை நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளாதது போன்றவை, ஆகியவை இந்த அறுவை சிகிச்சையில் அதிக வெற்றி தராததற்குக் காரணமாகி விடுகிறது.
 
ஆர்வமில்லை:
மூளைச்சாவு ஏற்படுவோரிடம் இருந்து தானமாகப் பெறும் உறுப்புகளை, 4 முதல் 5 மணி நேரத்திற்குள், தேவைப்படுவோருக்கு பொருத்திவிட வேண்டும். நோயாளிகள் ஆர்வம் காட்டாதது, ரத்த வகை ஒன்றிப் போகாதது போன்ற காரணங்களால், தானமாகப் பெறப்படும், "கார்னியா'க்கள், முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் போக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது  செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக