சனி, 23 ஜூன், 2012

துணிவிருந்தால் எதுவும் இயலும்! - சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

"துணிவிருந்தால் எதுவும் சாத்தியம்!'


பஸ், டிராக்டர், லாரி டயர்களுக்கு பஞ்சர் பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள விஜயலட்சுமி: என் கணவர் அரசு பஸ் ஓட்டுனராக இருந்தார். இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் என, வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றது. விபத்து ஒன்றில், பலமான அடியுடன் இருந்த என் கணவரை, பெரிய போராட்டத்திற்கு பின் தான், காப்பாற்றினோம். அப்போது, என் கணவரை அலுவலகத்தில், தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தனர். மருத்துவமனை, கோர்ட், வழக்கு என அலைந்ததை இப்போது நினைத்தாலும், நடுக்கமாக இருக்கும். அந்த சமயம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என் மகள், குளத்தில் மூழ்கி இறந்துவிட்டாள். அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால், மனமுடைந்து போனேன். அப்போது, எனக்கு நானே தைரியம் சொல்லி, மனதில் வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டேன். என் கணவருக்கு வேலையில்லாததால், வருமானமும் இல்லை. கஷ்டமான வேலை எதுவும் பார்க்க முடியாததால், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். என் கணவரின் சகோதரர்கள், "வல்கனைசிங்' கடை வைத்திருந்தனர். அதனால், நாமும் அப்படி ஒரு கடை வைக்கலாம் என முடிவெடுத்தேன். ஆனால், கையில் பணம் இல்லை. அப்போது தான், என் மகள் படித்த பள்ளி ஆசிரியர், "உங்கள் மகள் பள்ளியில் இன்சூரன்ஸ் கட்டியிருந்தாள். அவள் இறந்ததால், 10 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும்' என, கூறினார். அந்த பணத்தைக் கொண்டு, இந்த தொழிலை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் கணவருக்கு உதவியாக இருந்து, கொஞ்ச நாளில் தொழிலை முழுவதுமாக கற்றுக் கொண்டேன். நாளடைவில், நானே கடையைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். கடையை ஆரம்பித்து, 20 ஆண்டுகளாகிவிட்டது. வாடகை வீட்டில் இருந்த நாங்கள், இன்று சொந்தமாக வீடு கட்டி விட்டோம். கொஞ்சம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயமும் செய்கிறோம். இத்தொழில் மூலம், மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை, உடலில் வலுவும், தெம்பும் இருந்தால், பெண்கள் எந்த வேலையையும் செய்யலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக