வியாழன், 31 மே, 2012

கொழும்பு பாரதி விழாவைப் புறக்கணிப்பீர் – தமிழ்ப் படைப்பாளிகள்.

கொழும்பு பாரதி விழாவைப் புறக்கணிப்பீர் – தமிழ்ப் படைப்பாளிகள்.

boycott_answer_1_xlarge
கொழும்பு தமிழ்ச்சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் கொழும்பு நகரில் நடத்தவுள்ள பாரதியார் விழா தொடர்பான தமிழ்ப் படைப்பாளிகளின் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.
கொழும்பில் பாரதியார் விழா நடத்துவதாக கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் அறிவித்துள்ளன. இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது இந்த விழா குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராஜபட்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும் தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயன்றாலும் உலக அரங்கில் இலங்கையின் கொலைவெறிக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இந்த நிலையில் ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்’ என்கிற முழக்கத்துடன் கொலைகார ராஜபட்சேக்களின் தலைநகரில் இந்திய அதிகாரிகளை வைத்துக்கொண்டு விழா எடுப்பது பாரதி என்கிற போராளிக் கவிஞனின் புகழுக்கும் பெருமைக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர இந்த விழா வேறெந்த விளைவையும் ஏற்படுத்தாது. பாரதி அன்பர்கள் இதை உணரவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தேமதுரத் தமிழோசையைப் பரப்பப் புறப்படுவது பொருத்தமற்றது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பாரதி வெறும் கவிஞனில்லை. வீர சுதந்திரம் வேண்டி நின்ற விடுதலைப் போராளி. அச்சம் தவிர் ஆண்மை தவறேல் – என்று தமிழினத்துக்குத் துணிச்சலைப் போதித்தவன். கொடுங்கோலரசுக்கு ஒருபோதும் அடிபணியாதவன். ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்று குவித்ததைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கொழும்பைக் காப்பாற்ற அந்த மகாகவியின் பெயர் பயன்படுத்தப் படுவதை எந்தப் படைப்பாளியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கொழும்பில் போய் விழா நடத்தி அங்கே நடந்த இனப்படுகொலை குறித்து அச்சம் தவிர்த்து ஆண்மையோடு ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் சூழலும் அங்கே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு இந்த விழாவைக் கைவிட பாரதி அன்பர்கள் முன்வரவேண்டும். எப்படியாவது இந்த விழாவை நடத்த இலங்கை அரசு முயன்றால் விழாவை அடியோடு புறக்கணிக்கவேண்டும். அதன்மூலம் கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த்தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது என்பதை பாரதி அன்பர்கள் நிரூபிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
கூட்டறிக்கையில் கையொப்பமிட்ட படைப்பாளிகள்:
புலவர் புலமைப்பித்தன் இயக்குநர் ஆர்.சி.சக்தி கவிஞர் காசி ஆனந்தன் தமிழருவி மணியன் கவிஞர் இன்குலாப் அறிவுமதி தாமரை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஓவியர் வீரசந்தானம் டிராட்ஸ்கி மருது இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்ட 50 படைப்பாளிகள் கைஒப்பம் இட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. http://thiru2050.blogspot.in/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D என்னும் வலைப்பதிவில் உள்ள கொழும்பில் பாரதியார் விழாவா? உடனே நிறுத்துமாறு தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகோள் : நட்பு இணைய இதழ் பதிவு செய்த நாள் : 29/04/2012என்னும் அறிக்கையையும் இன்று (31.05.2012) வெளிவரும் தமிழக அரசியல் இதழில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்னும்.
    தலைப்பிலான செய்தியையும் காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு