புதன், 7 ஏப்ரல், 2010

தமிழ்நாட்டில் முதலாவதாக ஓய்வூதியர்களுக்கு மின்னணு பண அஞ்சல் படிவம் அறிமுகம்



திருநெல்வேலி, ஏப். 5: தமிழ்நாட்டில் முதலாவதாக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு மின்னணு முறையிலான பண அஞ்சல் படிவங்கள் திருநெல்வேலியில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் 46,962 பேருக்கு 11 வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் மாதாந்திர ஓய்வூதியத் தொகை அனுப்பப்பட்டு வருகிறது. அந்த அலுவலகங்களில் ஆள்கள் பற்றாக்குறையால் சில மாதங்களில் பண அஞ்சல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவதுண்டு. இந்த காலதாமதத்தை தவிர்க்க விண்ணப்பங்களை மின்னணு முறைக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டது. அதன்படி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை கணினி மூலம் பூர்த்தி செய்து அது அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்படும். அந்த வகையில் முதலாவதாக மின்னணு முறையில் தயாரிக்கப்பட்ட 46,962 பண அஞ்சல் படிவங்களுக்கான குறுந்தகட்டையும், ஓய்வூதியத் தொகையான ரூ. 1,97,24,040-க்கான காசோலையையும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் மாவட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சரவணனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. ரமணசரஸ்வதி, மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கள்ளச்சாராய வடிப்பு தொழிலில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் 8 பேருக்கு கறவை மாடு வாங்க தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 80 ஆயிரத்தையும் ஆட்சியர் வழங்கினார்.
கருத்துக்கள்

மின்னணு முறை பணவிடை அஞ்சல் படிவத்தில் அனுப்புவோர் தகவலுக்கு இடமில்லை. எனவே, உள்ளபடியான அனுப்பப்பட்ட பணத் தொகையை அறிய முடியாது. முழு விவரங்களும் சேரும் வகையில் படிவ முறையை உடனே மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 4:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக