திங்கள், 28 ஏப்ரல், 2014
திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு
என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார்
நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச்
சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப்
பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு
மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த
வேலை எனக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறுதான் தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது.
எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் சான்றிதழை மாற்றித் தரவேண்டினோம். ஆனால் எவ்வகை மறுமொழியுமில்லை.
ஆறுமாதக் காலமாகியும் மறுமொழி அளிக்காத
காரணத்தினால் எனது தோழிகளோடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களிடம் சென்று ஏன்
எங்களுக்கு மறுமொழி தரவில்லை என்று கேட்டேன்.
பள்ளிச்சான்றிதழான 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புச் சான்றிதழை மாற்றிதர மாட்டோம் என்று மடலின் மூலம் தெரிவித்தனார்.
எங்களுடைய சான்றிதழ் மாற்றித்தராத காரணத்தினால் வேலை வாய்ப்பிலும், சான்றிதழ் சரிபார்ப்பதிலும் குழப்பம் நிகழ்கிறது.
மேலும் 10 ஆம் வகுப்புச் சான்றிதழை மாற்ற முடியாது என்றும் அதற்குச் சட்டமில்லை என்று கூறிய மடல் இது.
ஒவ்வொரு செயலுக்கும் போராட்டம் செய்ய
வேண்டியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நாங்களும் மனிதர்கள் என்பதைப்
புரியாமல் அடிப்படை உரிமைகூட மறுக்கப்படுகிறது.
ஆதலால்தான் எங்களுடைய சான்றிதழ்களை
மாற்றித்தர வேண்டும், கல்வியிலும் வேலைவாய்ப்பில் மாற்றுப்பாலின
பெண்களுக்கு (திருநங்கைகள்) இட ஓதுக்கீடு தர வேண்டும் என்கிறோம். இந்த
வேண்டுகோள்களை நிறைவேற்றக் கோரி வருகின்ற 28.04.2014 திங்கள் அன்று மதுரை
மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்யப்
போகிறோம். இதற்குத் தங்களின் ஆதரவை அளிக்கும்படி தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி
மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இடம் : மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகம்.
தேதி :சித்திரை 15, 2045 / 28.04.2014 திங்கள்
நேரம் காலை 10.00 மணி
இப்படிக்கு,
சுவப்னா
ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
எமது போராட்டம்: வெறும் நிகழ்வா? அல்லது வரலாறா?
எமது போராட்டம்: வெறும் நிகழ்வா அல்லது பெருமைக்குரிய வரலாறா என்பதை நீங்கள்தான் வரையறுக்க வேண்டும்
- கலாநிதி இராம் சிவலிங்கம்
அணையாமல் இருக்க காற்றோடு போராடுவதை
வாழ்வாகக் கொண்ட மெழுகுவர்த்தி போல், ஈழம்வாழ் எம் உறவுகளும்
அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் மத்தியிலே, சிங்கள அரசின் இன
அழிப்பிலிருந்து தம்மைத் தாமே காப்பாற்ற, போராட வேண்டிய துயரய நிலைக்குத்
தள்ளப்பட்டதற்கு யாரப்பா காரணம்? தரமில்லா புலம் பெயர் அணிகளும்,
தகுதியில்லா அதன் தலைமைகளுமல்லவா?
எமது பூமியையும், அதன்
பூர்வீகக்குடிகளான எம் உறவுகளையும் நாளுக்கு நாள் வேகமாக இழந்துவரும் வேளை,
அவர்களுக்கு உதவவேண்டியது எமது தலையாய கடமையல்லவா? ஐ.நா மனித உரிமைக்கான
செனிவா மாநாட்டில், நீதியும் நியாயமும் நிலைக்க வேண்டும் என்று போராடும்
உலகம் தம்மாலான பணியைத் தயங்காது செய்துவருகையில், பங்காளிகளாகச் செயற்பட
வேண்டிய புலம்பெயர் அணிகள், பார்வையாளர்களாகத் தம்மைப் பதிவு செய்யப்
பறந்து செல்லும் பரிதாப நிலைகண்டு வருந்துகிறேன்.
அறியாமையால் தீங்கு செய்வோரும்,
எம்மவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இயங்குவோரும் திருந்த வேண்டும் என்ற
அவாவில்தானே அவர்களின் தப்பான போக்கையும், தவறான செயல்களையும்
சுட்டிக்காட்டினேன். எம் இனத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக
இயங்குவதும் இரண்டகமே என எடுத்து விளக்கினேன். கட்டபொம்மன் ஆண்டபோது ஓர்
எட்டப்பன், பண்டார வன்னியன் ஆட்சியில் ஒரு காக்கை வன்னியன், தேசியத்
தலைவர் காலத்தில் ஒரு கருணா என்ற நிலை மாறி, நாம் ஓர் அணியாக இயங்க
வேண்டும். இதுவே என் ஆசை.
எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்குக்
கொண்டு சென்று எமது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அவாவில்தானே
செய்வதறியாது காலத்தைக் கடத்தி எமது வாய்ப்புக்களை வீணடிக்கும் அணிகளையும்,
அறிக்கைமூலம் அரசியல் நடாத்தும் ஞானிகளையும் ஒதுங்கிநின்று, திறமையும்,
நம்பிக்கையும் கொண்ட வல்லவர்களுக்கு வழி விடுமாறு வேண்டினேன்.
இன்று நாம் நடாத்துவது குடியியல்
பயிலும் பத்தாம் வகுப்பல்ல, எமது சட்டபூர்வமான உரிமையப் பெறுவதற்காக
அரசியல்தந்திரம் நிறைந்த உலகத் தலைவர்களுடன், நாம் நடாத்தும் மூளைக்கும்
மூளைக்குமான போர். நீதி வேண்டும் உலகில் நியாயத்துக்கான போர். எமது அரசியல்
போருக்குத் தேவையான அடையாளத்தையும்,தேவைக்கும் அதிகமான ஆதாரங்களையும்
முள்ளிவாய்க்கால் எமக்குத் தந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் முன்னேற்றம்
ஏதுமின்றி நாம் முடங்கி நிற்பது ஏன்? தரமானோர் பங்களிப்பு போதாமையே.
தகுதியும், தகைமையும் கொண்ட பற்றுறுதியுமானவர்கள் இணைந்துவிட்டால்…. வழியா
இல்லை இப்பூமியில்.
இன்று, வெற்றியின் விளிம்பில் மீண்டும்
நிற்கும் நாம், எமது வெற்றியை உறுதிப்படுத்த :வேண்டுமானால், தன்மானம்
கொண்ட தமிழ்த் தலைவர்களின் தன்னலமற்ற பங்களிப்பும், புத்தியாளர்களின்
ஒப்பிலா ஒத்துழைப்பும், எம் உறவுகளான உங்களின் உணர்வு பூர்வமான ஆதரவும்
மட்டற்ற அளவில் தேவை. இந்த வரம் மட்டும் எமக்குக் கிடைத்துவிட்டால்;
தகுதிக்கும், தகைமைக்கும்,பற்றுறுதிக்கும் முதலிடம் கொடுத்து எமது இலக்கை
அடைவோம், இலட்சியத்தை நிறைவு செய்வோம். இது திண்ணம்.
எண்ணிலடங்கா ஈகங்களும், எழுத்திலடங்கா
ஒப்படைப்புகளும் நிறைந்த எமது போராட்டம், வெறும் நிகழ்வாக முடிவுபெற
வேண்டுமா? அல்லது பெருமைக்குரிய வரலாறாக நிலைக்க வேண்டுமா? என்பதை
வரையறுக்க வேண்டியவர்கள் வேறு யாருமில்லை, எம் உறவுகளான, நீங்களே.
தொடர்புக்கான தொ. இல: கனடா 416 829 1362 ,மின்வரி கீழே.
பாவம் செய்தால் மட்டும் பாவமல்ல, பாவம் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருப்பதுவும் பாவமே.
கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@sympatico.ca
அகரமுதல இதழ் 24ஒருங்குகுறியில் ஏற்படுத்தப்படும் குழப்பம்! - மா.பூங்குன்றன்
உலகெங்கும் பேசப்படும்
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு.
ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா.
மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது.
அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து
என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு
வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும்.
தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக
நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல்
அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள்
என தொல்லியல் பொருள்கள் பலவற்றிலும் தமிழ் எழுத்துகள் காணக்கிடக்கின்றன.
இந்தியாவில் வேறு எந்த எழுத்திற்கும் இந்தத் தொன்மை இல்லை. உலகின் பழமையான
சில மொழிகளுக்கே எழுத்துப் பதிவுகள் கிடைக்கின்றன. அவ்வாறு எழுத்துப்
பதிவுகள் கிடைத்து, இன்றும் வழக்கிலிருக்கும் மொழி தமிழ்.
தமிழ்மொழியின் எழுத்தமைப்பும்
தமிழ்மொழியைப் போன்றே சிறப்புடையதாகும். முதல் இலக்கண நூலான தொல்காப்பியம்
தமிழ்எழுத்துகளை, பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்யும் என மொத்தம்
முப்பது என்று வரையறுத்திருந்தாலும் உயிர்மெய் என்ற கூட்டெழுத்துகளைச்
சேர்த்து ஓர் அட்டவணைப்படுத்தித் தமிழ் எழுத்துகளை வகைப்படுத்தியுள்ளனர்.
ஒரு மொழிக்கான எழுத்தமைவு அட்டவணை அந்த
மொழிக்கே உரிய சிறப்புக்குரியதாகும். அதைச் சீர்குலைப்பது மொழியைச்
சீர்குலைப்பதற்கு ஒப்பாகும். அதில் வேறு மொழி எழுத்துகளைச் சேர்ப்பதோ,
இருப்பதை நீக்குவதோ அம் மொழியை அழிக்க வழிவகுக்கும்.
இந்தியாவில் இரு மொழிப்பிரிவுகள் உள்ளன.
ஆரிய மொழியமைப்பைப் பின்பற்றிச் சில மொழிகளும் தமிழ்(திராவிட)மொழியமைப்பைப்
பின்பற்றிச் சில மொழிகளும் இயங்கி வருகின்றன.
ஆரிய மொழியிலிருந்து உருவாக்கப்பட்ட
சமற்கிருதத்திற்கு ஒரு வரிவடிவ அமைப்பும் இன்றுவரை உருவாகவில்லை.
கிரந்தத்தையோ, தேவநாகரி எழுத்து முறையையோதான் அவர்கள் பயன்படுத்தித் தங்கள்
மொழியைப் பதிவு செய்து வந்தனர்.
தமிழியக்குடும்ப மொழிகளான தெலுங்கு,
கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் சமற்கிருத மொழிச் சொற்களை ஏராளமாக
நுழைத்துள்ளனர். அம்மொழிகளில் சமற்கிருதச் சொற்களைப் பிரித்துவிட்டால்
அவை தூய தமிழாகவே விளங்கும் என்பது வெளிப்படை.
இதேபோல் அவற்றின் எழுத்தமைப்பிலும்
சமற்கிருத எழுத்தமைப்பைப் புகுத்தியுள்ளனர் என்பதும் அவ்வாறு
புகுத்தியதால்தான் அவை தமிழ்மொழியிலிருந்து பிரிந்தன என்பதும் நாம்
மனங்கொள்ளவேண்டிய செய்தியாகும்.
மலையாள மொழியில் எழுத்தச்சன் என்பவரால்
எழுத்துகள் உருவாக்கப்பட்டுத்தான் அது பிரிந்துபோனது. அவ்வாறு எழுத்தச்சன்
உருவாக்கிய எழுத்து வரிசை சமற்கிருத எழுத்து வரிசையின் அடிப்படையில்
உருவானது.
தமிழ் எழுத்தமைவிலிருந்து சமற்கிருதம்
முகாமையாக வேறுபடும்கூறு என்பது ‘வருக்க எழுத்துமுறை’ இடம் பெற்றுள்ளதே.
‘க,ச,ட,த,ப’ என்ற வல்லெழுத்துகளின் மாற்றொலிகளுக்கு எழுத்து வரிவடிவம்
கொடுக்கப்பட்டுள்ளதே முகாமைக் கூறாகும்.
தமிழ் எழுத்தமைவு அட்டவணையில் பல சிறப்பு எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.
‘ழ’ கரம் தமிழியக் குடும்ப மொழிக்கே உள்ள
சிறப்பு எழுத்தாகும். அதேபோல ‘ண, ற, ன’ மூன்றும் இடவேறுபாட்டிற்குத்தக
வேறுபடுத்தவல்லவை. இதேபோல் ரகர, றகரமும், லகர ளகரமும் ஒரேபோல்
இடத்திற்குத்தக மாற்றி ஒலிக்கத்தக்கன.
கப்பல், தங்கம், பகல் – இம்மூன்று
சொற்களில் வரும் ககரத்தை ஒரேபோன்று மக்கள் ஒலிப்பதில்லை. இதைத்தான்
மாற்றொலியன் என்று மொழியியலில் பெயரிடுகிறார்கள். இதுபோல் மொழியில் உள்ள
எல்லா எழுத்துகளையும் அதற்குரிய ஒலி அமைப்பிலேயே மக்கள் அனைவரும்
பலுக்குவார்கள் என்றும் கூற முடியாது.
தமிழ் எழுத்தமைப்பில் ‘க,ச,ட,த,ப’ என்ற
ஐந்து எழுத்துகளுக்கும் இடத்திற்குத் தக ஒலிப்புமாற்றி ஒலிக்கக்கூடிய
எழுத்தொலிகளுக்குத் தனித்தனி வரிவடிவங்கள் இடம் பெறவில்லை. இது சமற்கிருதம்
சார் மொழிகளுக்கும் தமிழ், தமிழியக்குடும்ப மொழிகளுக்கும் உள்ள முகாமையான
வேறுபாடாக இருந்தது.
நாளடைவில் வடமொழிச் சொற்களை ஏராளமாக
ஏற்றுக்கொண்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நுழைந்துள்ள சில
வடமொழிச் சொற்களைப் படிப்பதற்காக வேறு புதியபுதிய எழுத்து வடிவங்களை
உருவாக்கவேண்டிய தேவை வந்தது.
தமிழில் சில பிறமொழிச் சொற்கள் கலந்தாலும் அவற்றை அந்தந்த மொழியில் உள்ள எழுத்தோடு கடன் பெறும் வழக்கமில்லை.
எனினும் தொடர்ச்சியாகத் தமிழ்மொழியில்
பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழின் தனித்தன்மையைக் கெடுக்கவேண்டும் என்ற
நோக்கத்துடன் செயல்படுவோர் பலர் உண்டு.
அவர்கள் தமிழில் உள்ள சொற்களில்
மட்டுமல்லாமல் தமிழ் எழுத்தமைப்பிலும் கலப்புச் செய்து வந்தனர். ‘ஜ’, ‘ஷ’,
‘ஹ’, ‘ஸ’ போன்ற வடமொழிக்கான ஒலிகளுக்கு வரிவடிவங்களை நுழைத்தனர் என்பதும்
கண்கூடு.
அதேபோல் ‘க,ச,ட,த,ப’ போன்ற எழுத்து
வரிசையிலும் மாற்றொலியனுக்குத்தக எழுத்துகளை நுழைக்க நேரம்
பார்த்துக்கொண்டுள்ளனர் என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சமற்கிருதத்திற்கு இன்றுவரை ஒரு தனிப்பட்ட
எழுத்து உருவாகவில்லை. மேலும் மக்கள் வழக்கிலிருந்தே அது அகன்றுபோனதால்
அவர்கள் அதைப் புதுப்பிக்க எண்ணுகின்றனர். அம் மொழிக்கு மொழி, இன அடையாளம்
அழிந்துபோனதும் இதற்குக் காரணம்.
அதனால் இந்தியாவில் உள்ள பிறமொழிகளில்
தங்கள் சமற்கிருதச் சொற்களைப் புகுத்துவதும் அம் மொழிகளின் மரபைச்
சீர்குலைப்பதுமான முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன.
ஒவ்வொரு துறையிலும் கணினிவழி முன்னேற்றம்
தலையெடுக்கத் தொடங்கிவிட்ட இக்காலத்தில் மொழியியலிலும் அம் முன்னேற்றம்
ஏற்பட்டு மொழியையும் கணினிவழிச் செயற்பாட்டுக்குக் கொண்டுவந்து அவரவரும்
தங்கள் மொழியை இணையத்திலும், மின் அஞ்சலிலும் பயன்படுத்தத்
தொடங்கிவிட்டனர்.
இதற்கும் மேலாகக் கணினி நிறுவனமான ‘மைக்ரோ
சாப்டு’ (Microsoft) நிறுவனம் உலகில் பரவலாக உள்ள மொழிகளுக்கு ஓர்
ஒருங்குகுறி அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும்
ஒருங்குகுறிச் செயற்பாடு நடைபெற்று அம் மொழிகளில் மென்பொருள்
உருவாக்கம்பெறும் அளவிற்கு முன்னேற்றம் பெற்று வருகின்றன.
இந்த ஒருங்குகுறியமைப்பில் சமற்கிருதம்
சேருவதற்குத் தேவையான தனி எழுத்தமைப்பு அதனிடம் இல்லை. யாருமே பேசாத ஒரு
மொழிக்கு ஒருங்குகுறி அமைப்பு உருவாக்க அமெரிக்க நிறுவனமும் ஒப்பவில்லை.
தமிழகத்தின் ஒரு சிறு பகுதியைச் சிறிது
காலம் ஆண்ட பல்லவனின் காலத்தில் சமற்கிருதம் ஆளுமைப் பெற்றிருந்தது. தமிழ்
எழுத்தினின்று சில மாற்றங்களுடன் கூடிய எழுத்து(கிரந்த)முறை ஒன்றை,
சமற்கிருதத்தில் வலிந்து உருவாக்கிக் கொண்டு, அதில் சில கல்வெட்டுகள்
உருவாக்கப்பட்டன. தமிழ் எழுத்துக்களும் கலந்த கலவையான அவற்றை யாரும்
எளிதில் படித்திட முடியாது. அவை சிறு கால இடைவெளியில் சில ஆண்டுகளே இடம்
பெற்ற செய்திகளை அடக்கியவை.
அவற்றை ஒரு காரணமாகக் காட்டி அக்
கல்வெட்டுகளை மின்னியம் (னுபைவைணைந) செய்யவேண்டும் என்றும் வலியக்கூறி,
கிரந்தத்திற்கு ஒருங்குகுறி வேண்டும் என்று ஒரு கூட்டத்தினர்
பெருமுயற்சியெடுத்து வருகின்றனர்.
தமிழில் அவை இடம்பெறுமாறு ஒரு நுழைவை
இடையில் கரவாக ஏற்படுத்தினர். இதை விழிப்பாக இருந்து தமிழறிஞர்களையும்,
கணினி அறிஞர்களையும் ஒருங்கிணைத்து, நாம் அன்று எதிர்த்துத் தடுத்து
விட்டோம்.
1938-இல் தொடங்கி தொடர்ந்து நாம்
எதிர்த்துக்கொண்டிருந்தாலும், இன்றும் எந்த நேரம் அயர்ந்திருப்போம் என்று
பார்த்துத் தொடர்ந்து இந்தித்திணிப்பு எவ்வாறு நடைபெற்றுக்கொண்டு வருகிறதோ,
அதேபோல் சமற்கிருத விரும்பிகள் ஒருங்குகுறியில் தங்கள் மொழி நுழைவு
பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்மொழிமேல் படையெடுத்து அதைச்
சீர்குலைப்பதன்வழி கிரந்தத்தின் வழியாகவும் வேறு வழியாகவும் தொடர்ந்து
அவர்களின் படையெடுப்பை நடத்திக்கொண்டுதான் உள்ளனர்.
இந்தியெதிர்ப்பை மேற்கொள்வதற்குத் தமிழ்
உணர்வாளர்களின் ஆர்வம் இன்று குறைந்துவருவதுபோல் கணினி உலகில் தமிழ்
ஒருங்குகுறியின்மேல் திணித்துக் கொண்டிருக்கும் மொழிக்குலைவுப்
படையெடுப்புகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிடக்கூடாது.
தமிழறிஞர்களும் உணர்வாளர்களும் கணினியில்
ஈடுபட ஆர்வம் கொள்வதில்லை. கணினி தொழில்நுட்பத்தைப்
புரிந்துகொண்டிருப்பவர்களுக்குத் தமிழ் உணர்வு இல்லை.
இதைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழைச்
சீர்குலைக்கும் அடுத்தடுத்தப் படையெடுப்புகள் சிலரால்
முன்னெடுக்கப்படுகின்றன. இதன் விளைவு தெரியாது ‘உத்தம’த்துப் பொறியாளர்கள்
சிலர்கூட தமிழ் மொழிமரபு குலைந்துபோகத் துணை நிற்கிறார்கள்.
தமிழ் ஒருங்குகுறியில் இடம்பெறும் தமிழ்
எழுத்துகளுக்கு உரோமன் எழுத்தில் ஒலிவடிவம் கொடுக்கவேண்டியுள்ளது.
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துகளிலேயே அவற்றின் ஒலி வடிவம்
கொடுக்கப்படவேண்டும். எந்தவொரு நெருக்கடி வந்தாலும் ஆங்கில எழுத்தின் 26
எழுத்துகளில் எந்த மாற்றத்தையும் யாரும் ஏற்படுத்துவதில்லை. ஆங்கிலத்தில்
இருக்கும் மரபை யாரும் குலைப்பதுமில்லை.
‘C’ என்ற எழுத்திற்கு ‘ச, க’ என்ற இரு
ஒலிகளையுமே இடத்திற்குத்தகப் பயன்படுத்துகின்றனர். ‘க’வும், ‘ச’வும் ஒரே இன
ஒலி வகையில்லை. ஒன்றுக்கொன்று மாற்றொலியனும் இல்லை. அதுமட்டுமன்றி
ஓரெழுத்து சில இடங்களில் அமைதி (Silent) கொள்வது என்றெல்லாம் பல
முரண்பாடுகள் ஆங்கில எழுத்தமைப்பில் உள்ளன.
தமிழில் உள்ள ஒருங்குகுறி எழுத்துகளுக்கு
இவ்வாறான குறைபாடுடைய 26 ஆங்கில எழுத்துகளின் ஒலி வடிவத்தைக் கொண்டே
கொடுக்க வேண்டும் எனும் நிலையில், ஆங்கில மரபு கெடக்கூடாது என்று எவ்வாறு
அக்கறை காட்டப்படுகிறதோ அவ்வாறே தமிழ் மரபும் குறைவுபடக்கூடாது என்பதிலும்
தமிழறிஞர்கள், கணினித்தமிழ்ப் பொறியாளர்கள் அக்கறை கொள்ளவேண்டும்.
கப்பல், தங்கம், பகல் என்ற மூன்று
சொற்களிலும் வரும் எழுத்துகள் மாற்றொலிகளாக ஒலிக்கப்பட்டாலும் ‘க’ என்ற ஒரே
எழுத்தைப் பயன்படுத்துவதுதான் தமிழ்மொழி மரபு. அதே வகையில் ஆங்கிலத்தில்
‘K’ என்ற ஒரே எழுத்தைப் பயன்படுத்துவதுதான் குறிமாற்ற முறையாக இருந்து
தமிழ் மரபைக் காப்பாற்றும்.
பலுக்கல் முறையில் ஓர் எழுத்தின் ஒலிக்கு
மாற்றொலிகளாகப் பயன்படுத்தப்படும் ஒலிகளுக்கெல்லாம் வெவ்வேறு எழுத்துகளைப்
பயன்படுத்தத் தொடங்கினால், தமிழின் எழுத்து மரபு கட்டுக்குலைந்துபோகும்.
உரோமன் எழுத்துகள் 26ஐ மட்டுமே உலகமொழி அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றால் அதை விரிவாக்கம் செய்து சீர்படுத்த வேண்டும் .
அதைவிடுத்து, மீண்டும் மீண்டும் ஆங்கிலச்
செருப்பிற்குத் தக்கவாறு தமிழ் முதலான அனைத்து மொழிகளின் கால்களையும்
வெட்டிவிட முன்வரும் போக்கை அறவே தவிர்க்கவேண்டும்.
எந்தவோர் அரசும் தமிழ் வளர்ச்சியில் அக்கறை
காட்டாத நிலையில், தமிழறிஞர்களும் கணினிப் பொறியாளர்களும் மட்டுமே தமிழ்
மென்பொருள்கள் பலவற்றை உருவாக்கித், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டுக்
கொண்டிருக்கையில், மீண்டும் மீண்டும் ஒருங்குகுறியில் சிக்கல்களை
ஏற்படுத்திக் கொண்டிருப்பதைக் கவனத்துடன் இருந்துத் தடுத்தல் வேண்டும்.
- தென்மொழி ஆசிரியவுரை, சித்திரை 2045 / ஏப்பிரல் 2014
தனித்தமிழ் பேசுவோம்!
தாய்த்தமிழ் காத்துயர்வோம்!
மக்களால் பேசப்படும் மொழியே வாழும்!
நம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய
நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும்,
குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம்
மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ்
சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக்
காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின்.
இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக் கொண்டு வந்தால், காநீர், தேநீர்,
பல்துலக்கி, பற்பசை, வழலை, துண்டு, சிற்றுண்டி, நண்பகலுணவு, பள்ளி,
கல்லூரி, அலுவலகம், தானி, பேருந்து, தொடர் வண்டி ஆகிய தமிழ்ச் சொற்கள்
எவ்வாறு துலங்கும்? பேச்சு வழக்கின்றி மறையத்தானே போகின்றன. எனவே ‘‘தமிழ்ச்
சொற்களை அறிந்து நாம் பேச வேண்டும்’’ என்ற உறுதி மேற்கொள்ள வேண்டும்.
தமிழர் நம் இல்லங்களில் தமிழிலேயே பேச
வேண்டும். ஆனால் பெரும்பான்மையினர், தமிழ் & ஆங்கிலம் = ‘தமிங்கிலம்’’
எனப்படும். கலப்பு மொழி தான் பேசுகின்றனர். எடுத்துக் காட்டுகள் – லேட் ஆயிருச்சு. பஸ் வந்திரும். சார்ஜர் எங்கே? லஞ்ச் பிரேக்ல எனக்கு கால் பண்ணு. மீட்டிங் இருக்கு. வர்றதுக்கு நைட் ஆயிரும்.
இவ்வாறு பேசினால், ஆங்கிலச் சொற்கள் நிலைத் தோங்க. தமிழ்ச் சொற்கள்
மறைந்து அழியும். தமிழர் நாம் சந்திக்கும் பொழுதும் தனித் தமிழ் பேச
வேண்டும். ‘‘இன்னும் சில நூற்றாண்டுகளில், இவ்வுலகில் பேசப்படும் மொழிகள்
12 ஆக இருக்கும். அவற்றில் ஒன்றாகத் தமிழ் இருக்க வாய்ப்பில்லை’’ என்று
யுனெசுகோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு நிறுவனம்)
விழிப்புணர்வூட்டுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஓர் அபாயச்
சங்கொலி எனக் கருதி ஒவ்வொரு தமிழ் மகனும், தாய் மொழியை மற்றும்
தமிழினத்தைக் காத்திடத் தனித்தமிழ் பேசுதல் வேண்டும். இது காலத்தின்
கட்டாயம்.
‘‘ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், பெரும்
படை பலம் தேவையில்லை. அவ்வின மொழியை அழித்தாலே போதும்’’ என ஐரிசு அறிஞர்
டிவேலரா குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றின் அடிப்படையில் சிந்தித்தோ மானால்,
ஆங்கிலேயரோ அல்லது ஆங்கிலமோ தற்போது நம் மீதோ அல்லது நம் மொழி மீதோ
ஆதிக்கம் செலுத்தி, நம்மினத்தையும் மற்றும் மொழியையும் அழித்திட முயவில்லை
என்பதும், நாமாகவே ஆங்கிலத்தின் மீதுள்ள தீராத மோகத்தால், அதைத் தமிழுடன்
கலந்து பேசி, தாய் மொழி மற்றும் தமிழின அழிவிற்கு வழி வகுத்து வருகின்றோம்
என்பதும் தெரிய வரும். இச்செயல் முறையற்றது. குறையும் மற்றும்
குற்றமுமுடையது. இதனைத் தவிர்த்து, மொழியும், இனமும் தழைத்தோங்கத்
தனித்தமிழ் பேசுவதே நம் தலைமைக் கடன்.
‘‘பொருள் மிக்க தமிழ் மொழிக்குப்
புரிந்திடுவீர் நற்றொண்டு – புரியீராயின்
இருள் மிக்க தாகி விடும் தமிழ் நாடும்
தமிழர்களின் இனிய வாழ்வும்”
என புரட்சிப் பாவலர் பாரதிதாசன்
பாடியுள்ளார். தனித்தமிழ் பேசுவதே ஒவ்வொரு தமிழ் மகனும், தாய்த்தமிழுக்குச்
செய்திடும் தலையாய தமிழ்த் தொண்டாகும். மொழியின் பெருமை பேசுவது,
இலக்கியம் பேசுவது, தமிழ்க் கூட்டங்கள் நடத்துவது, நூல்கள் எழுதுவது,
ஆய்வுகள் நடத்துவது ஆகிய தமிழ் வளர்ச்சிக்கென நடைபெறும் செயல்பாடுகள்
தொடரட்டும் வளர்ந்தோங்கி, ‘‘மொழிக்கு மூச்சு, பேச்சே’’ என்பது உண்மை. எனவே
தங்கத் தமிழர்களாகிய நாம் அனைவரும் தனித்தமிழ் பேசுவோம்.
தனித்தமிழ்ப் பயிற்றகம்
அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்
பள்ளிதோறும், ஊர்தோறும், தொகுதி தோறும்
சுருங்கக் கூறின் தமிழ் நாடெங்கும் தனித் தமிழ்ப் பயிற்றகங்கள் உடனடியாகத்
தோற்றுவிக்கப்பட வேண்டும். மாணவர்க்கு மட்டுமன்றி, பெற்றோர்க்கும்,
மற்றோர்க்கும், தனித்தமிழ்ப் பேச்சுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இது
முடியுமா? என்று வினா எழுப்பிவிட்டு, முடியாது என்று தாங்களே பதிலும்
கூறிக் கொண்டு சோம்பியிருந்து விடல் கூடாது. மொழிப் பற்றுடன் முயற்சி
மேற்கொள்ள வேண்டும். முயற்சி திருவினையாக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள கல்விக் கூடங்கள், தமிழ் மன்றங்கள், சங்கங்கள், பேரவைகள், சாதிச் சங்கங்கள், நேயர்(இரசிகர்)
மன்றங்கள், கோவில் திருப்பணிக்குழுக்கள் ஆகிய அனைத்தும், தனித்தமிழ்ப்
பயிற்றகம் தோற்றுவித்துப் பயிற்சி வழங்கி அருந்தொண்டாற்றிட பேரார்வத்துடன்
முன்வர வேண்டும்.
தமிழக அரசு, தமிழகமெங்கும் தனித் தமிழ்ப்
பேச்சுத் தொடரவும் மற்றும் வளரவும், திட்டமிட்டு ஆவண செய்திட வேண்டும்.
இதுவே தமிழுக்குச் செய்யும் தலையாய தொண்டாக அமையும்.
தாய் மொழியில் பேசுவதோ, தாய்மொழியை
வளர்ப்பதோ, பிற மொழிகளை வெறுப்பதாகாது. ஒரு மனிதன், எத்தனை மொழிகள்
வேண்டுமாயினும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனது தாய்மொழியின் மீது மட்டுமே
பற்றுக் கொள்ள வேண்டும். நம் தாய்மொழியுடன் வேறு எம் மொழியையும் கலந்து
பேசக்கூடாது என்பவையே இப்பயிற்றகம் வலியுறுத்தும் கருத்துக்களாகும்.
தன்மானத் தமிழன்பர்களே! நாம் தனித்தமிழ் பேசி, தாய்மொழி மற்றும் தமிழினங் காப்போம்.
தனித்தமிழ்ப் பயிற்றகத்தகவலறிய
அழையுங்கள்: 9095902217
பொதுச் செயலாளர்,
தமிழ் ழகரப் பணி மன்றம்
தனித்தமிழ்ப் பயிற்றகம், துரைப்பாக்கம், சென்னை – 600 097.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)