ஆஸி.சென்ற மகிந்தாவுக்கு முறையான வரவேற்பில்லை;
பொதுநலவாய நாடுகளின் (கொமன் வெல்த்) தலைவர்களது உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஆஸ்திரேலியாவின் பேர்த் அனைத் துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்க, ஆஸ்திரேலிய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆஸ்திரேலியப் பிராந்திய அதிகாரிகள் மட்டுமே சென்று ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசின் சார்பில், மேற்கு ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர் மார்க்பிசப், மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் எலிசபெத் பெஜட் ஆகியோரே ஜனாதிபதிதலைமையிலான இலங்கைக் குழுவினரை விமானநிலையத்தில் வரவேற்றனர்.
ஆஸ்திரேலிய மஷ்டி அரசின் அமைச்சர்களோ, உயர்நிலைப் பிரதிநிதிகளோ அல்லது வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளோ இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இது ராஜதந்திர ரீதியிலான பின்னடைவாகக் கொள்ளத்தக்கது என்று வெளி விவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது மனைவி சிராந்தி, வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விளையாட்டுத்றை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, ஜனாதிபதியின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவே நேற்றிரவு பேர்த் விமான நிலையத்தைச் சென்றடைந்தது.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நடுநிலையாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் முழுமையான ராஜதந்திர வரவேற்பு ஜனாதிபதிக்கு வழங்கப்படாதமை குறித்து இலங்கை வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்
Short URL: http://www.ethirinews.com/?p=20958