perumazhai pulavar somasundaranar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
perumazhai pulavar somasundaranar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 செப்டம்பர், 2010

பெருமழைப் புலவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் உத்தரவு

First Published : 18 Sep 2010 12:00:00 AM IST


சென்னை, செப். 17: மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தினரின் வறுமை நிலை கருதி ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்து ஆகஸ்ட் 7-ம் தேதியிட்ட "தினமணி'யில் செய்தி வெளியானது. அன்றைய தினமே பெருமழைப் புலவரின் இல்லத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார், தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் கபிலர்.இதனிடையே, மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் வறுமை நிலை கருதி தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவாரூர் மாவட்டம், மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ல் பிறந்தவர் பொ.வே.சோமசுந்தரனார். ஆழ்ந்த தமிழ்ப் புலமை பெற்ற அவர், திருவாசகம், நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற 21 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். செங்கோல், மானனீகை முதலிய நாடக நூல்களையும் இயற்றிய தமிழறிஞர்.அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்புகள் பலவற்றைக் கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய திருமகன் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் கடந்த 1972-ல் இயற்கை எய்தினார். பெருமழைப் புலவரின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் சிரமங்களுக்கு ஆளாகி இப்போது அவருடைய வாரிசுகள் வறுமையில் வாடுவதாகப் பத்திரிகைகள் வாயிலாக முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குச் செய்திகள் வந்தன.பெருமழைப் புலவரின் நூல்களை அரசுடைமையாக்குவதில் பிரச்னைகள் இருக்கின்றன. இப்போதுள்ள சூழலில் அவரது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்காக உதவும் நோக்குடன் அவரின் குடும்பத்துக்கு உதவி நிதியாக தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் அளிக்கப்படுகிறது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

கலைஞருக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள்! கோரிக்கை வைத்தவர்களுக்கும்தினமணி, குமுதம் ஆகியவற்றுக்கும் நன்றிகள். பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரானர் புகழ் ஓங்குக! 
மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 11 செப்டம்பர், 2010

திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவர் பெயர் சூட்டக் கோரிக்கை


திருத்துறைப்பூண்டி, செப். 10: திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.      20-ம்  நூற்றாண்டின்  இணையற்ற உரையாசிரியராகத் திகழ்ந்து, ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.     சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார். மேலும், மானனீகை, செங்கோல் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1952-ல் ஏற்பட்ட புயல், 1966-ல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி குறித்தும் அவர் எழுதிய கவிதைகள், அறிஞர்கள் மட்டுமன்றி பாமர மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தன.    அவரது நூற்றாண்டு விழா அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலப் பெருமழையில், ஆர்.எஸ். ரங்கசாமித் தேவர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.    விழாவுக்கு மேல பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம், தஞ்சை சி.சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      பெருமழைப் புலவரின் திருவுருவப் படத்தை முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் மா. கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.    விழாவில் முனைவர் இளமுருகன் பேசியது:        உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் நெஞ்சில் பெருமழைப் புலவரின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ், துபை தமிழ் சங்கங்களின் சார்பில் பல்வேறு நாடுகளிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரியிலும், சென்னை, மற்றும் தில்லியிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.     புதுச்சேரி பாரதிதாசன் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு. இளங்கோவன் பேசியது:   புலவரின் சொந்த ஊரான மேலப் பெருமழையில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது நூல்களை அரசு உடைமையாக்க வேண்டும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைய  உள்ள தமிழத் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.    நிகழ்ச்சியில் புலவரின் மகன்கள் சோ. பசுபதி, சோ. மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர்.    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் வேதவள்ளி ராஜமாணிக்கம், ஆர். இளங்கோவன், ஆர். செல்வகணபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கருத்துக்கள்

பெருமழைப்புலவர் சோமசுந்தரனாரின் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கலைஞரே அறிவிப்பார். ஐயமில்லை. எனினும்,மத்தியப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைவது என்பது பேரறிஞர் அண்ணா அவர்களின் எண்ணத்திற்கு மாறானது. தமிழுக்கும் தமிழகக்கல்விக்கம் தீங்கிழைக்கும். என்செய்வது ஆளுவோரின் போக்கு மாறியுள்ளதால் முத்தமிழறிஞரின் ஊரான திருவாரூருக்கே அப்பல்கலைக்கழகம் அமைய உள்ளது என்பது வேதனையான செய்தி. வேதனையில் ஓர் அறுதலாக முனைவர் மு.இளங்கோவன் வேண்டியவாறு அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குப் பெருமழைப்புலவர் பெயர் சூட்ட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 6:07:00 PM
,thedithedik kandarinthu,thigattatha senthamizh urai theettiya perumazhaip pulavarin peyarai soottuvadhu ,thamizhaga arasu avarukku seyyum mudhal mariyadhaiyaga irukkattum. maa.ulaganathan
By m.ulaganathan
9/11/2010 2:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தினமணி செய்தி எதிரொலி: பெருமழைப் புலவர் இல்லத்தில் அதிகாரி ஆய்வு


திருத்துறைப்பூண்டி, ஆக. 8: வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள் என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை தினமணியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அன்றைய தினமே புலவரின் இல்லத்துக்கு தஞ்சை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.கபிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரை ஆசிரியராகத் திகழ்ந்தவர் மேலப் பெருமழை கிராமத்தைச் சேர்ந்த பெருமழைப் புலவர் என்று அழைக்கப்பட்ட பொ.வே. சோமசுந்தரனார்.இவர் தனது தமிழ்ப் புலமைத் திறத்தால் சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பட்டினத்தார் பாடல்கள், நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை உள்ளிட்ட பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியதுடன், மானனீகை, செங்கோல் முதலிய உரைநடை நூல்களையும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு உள்ளிட்ட பல இலக்கிய நூல்களையும் படைத்தவர்.பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையான அறிவு பெற்ற இவர், பள்ளி ஆசிரியராக இருந்திருந்தால்கூட அவரது மறைவுக்குப் பின்னர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைத்திருக்கும். தற்போது இவரது மகன்கள் 100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.இதுகுறித்த செய்தி தினமணியில் விரிவாக வெளியானது.விரைந்து செயல்பட்ட தமிழ் வளர்ச்சித் துறை: இதைத் தொடர்ந்து, செய்தி வெளியான அன்றைய தினமே விடுமுறை நாளாக இருந்த போதிலும், சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கூ.வ.பூவரசு ஆணையின்படி, திருவாரூர் மாவட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தஞ்சை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.கபிலர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப் பெருமழை கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று புலவரின் வாரிசுகளைச் சந்தித்தார்.அவரிடம் புலவரின் மகன்கள் எஸ்.பசுபதி, எஸ்.மாரிமுத்து ஆகியோர் தங்களது தந்தை பெயரில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்றும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்றும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புலவர் பெயரில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் இருக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.மேலும், புலவர் எழுதிய நூல்களுக்கு பரிவுத்தொகை மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு அரசின் நிதி உதவி, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.இந்தக் கோரிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என கபிலர் உறுதி அளித்தார்.செப்டம்பர் 5-ம் தேதி புலவரின் நூறாவது ஆண்டு பிறந்த தினமாகும். அதற்குள் அரசின் சார்பில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என அவரது மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
கருத்துக்கள்

முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று நேற்றே நான் குறிப்பிட்டது உண்மையாவதில் மகிழ்ச்சியே! நூல்களை நாட்டுடைமையாக்கிப் பரிவுத் தொகையை வழங்குவார் என்பதில் ஐயமில்லை. மணிமண்டபம் முதலான பயனற்ற ஆசை களைக் குடும்பத்தினர் விடுதலே நன்று. செய்தியில் குறிப்பிட்டாற்போன்று த.வ.இய்க்குநர் பூவரசு அன்று; முனைவர் கூ.வ.எழிலரசு. விரைவான நடவடிக்கைக்ககுக்காரணமான செயலர் /முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் /முதல்வர் ஆகியோருக்கும் செய்தியை வெளியிடச் செய்த செய்தியாளருக்கும வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்

திருத்துறைப்பூண்டி, ஆக. 7: பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையில் வாடி வருகின்றனர். செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, சோமசுந்தரனாரின் வாரிசுகளின்வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.      தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் பொ.வே. சோமசுந்தரனார்.          நூலை இயற்றிய மூல ஆசிரியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள் வரிசையில் சோமசுந்தரனாருக்கு தனியிடம் உண்டு. மேலும், சிறந்த உரையாசிரியர்களாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வரிசையில் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக திகழ்ந்தவர் சோமசுந்தரனார்.      இளமையில் வறுமையின் காரணமாக, திண்ணைப் பள்ளி வரை மட்டுமே படித்த அவர், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக விளங்கியதுடன், விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரிடமும் பாடம் கற்ற பெருமைக்குரியவர்.     பல்கலைக்கழகக் கல்வியில் முதல் மாணவராக தேறியபோது, தமிழ் தெரியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு அளித்த சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு, ஊர் திரும்பிய அவர், மீண்டும் உழவுத் தொழிலை மேற்கொண்டார்.     இந்நிலையில், கதிரேசன் செட்டியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவாசகத்துக்கான உரையை சோமசுந்தரனார் எழுதினார். இதுவே, பின்னாளில் அவர் சிறந்த உரையாசிரியராக திகழக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.     இதைத்தொடர்ந்து, பழந்தமிழ் நூல்களை வெளியிட்டு வந்த சைவ சித்தாந்த நூல்பதிப்பு கழகத்தின் தலைவர் சுப்பையாப்பிள்ளை, கறுப்புக்கிளார் ராமசாமிப் புலவர் மூலமாக சோமசுந்தரனாரின் தமிழ்ப் புலமையை கண்டு வியந்து, முன்னர் உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கும் சோமசுந்தரனாரை வைத்தே விளக்கமாக உரை எழுதி வெளியிட்டார்.     அவ்வாறு சோமசுந்தரனார் எழுதிய விளக்கமான உரையில், பழம் புலவர்களின் சில கருத்துகளை மறுத்து எழுதி, அந்தக் காலத்திலேயே புலவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய வரலாறும் உண்டு.    சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, வெண்பாமாலை, கல்லாடம், பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கும் உரை எழுதிய பெருமைக்குரியவர் சோமசுந்தரனார்.       இவை தவிர, செங்கோல், மானனீகை முதலிய உரைநடை நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறும் எழுதிய பெருமைக்குரிய சோமசுந்தரனாரின் நூல்கள், நாடகங்கள், பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.     பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சோமசுந்தரனார், 1972-ம் ஆண்டு, ஜனவரி 3-ம் தேதி காலமானார்.    செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரின் சிறப்பையும், புலமையையும் முரசொலியில் எழுதி, அவருக்கு மேலும் பெருமை சேர்த்தார். வறுமையின் பிடியில் வாரிசுகள்:  புலவரின் மறைவுக்குப் பிறகு, சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையின் பிடியில் சிக்கி, உழன்று வருகின்றனர்.  சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவரும் மேலப்பெருமழை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர் என்பது வேதனையளிக்கும் விஷயம்.    "எங்கள் தந்தையின் புகழ் அவர் உயிரோடு இருக்கும்வரையில் எங்களுக்குத் தெரியவில்லை. தமிழை நேசித்த அளவுக்கு, குடும்பத்தின் நிலையை மேம்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.    எங்களின் நிலை குறித்து தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியப்படுத்தி, கடிதம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் தந்தை குறித்து நன்கு அறிந்த முதல்வர் கருணாநிதி, எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர் பசுபதி, மாரிமுத்து.     இதுகுறித்து மேலப்பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம் கூறியது:     மேலப்பெருமழை கிராமத்துக்கு பெருமை சேர்த்த சோமசுந்தரனார் பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், அவரின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்ய வேண்டும் என்றார் அவர்.    சோமசுந்தரனாரின் வாரிசுகளுக்கு நிதியுதவி அளித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு சோமசுந்தரனாரின் பெயரைச் சூட்டுவதுடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் இருக்கையையும் அமைக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள், இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துக்கள்

ஊர்ப்பெயர் சிலருக்கு வேறுபட்ட சிறப்புப் பொருளைத் தருவதுண்டு. அதுபோல்தான பெருமழைப்புலவர் என்னும் பொழுது அறிஞர் சோமசுந்தரனார் பெருமழை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதை விட சொல்மழை பொழிவதில் பெருமை மிக்கவர் என்பதால் அப்பெயர் பெற்றார் எனக் கருதும் வகையில் சிறப்பினைத் தந்தது.எதற்கெடுத்தாலும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கூறுவதைவிட அவரது வழிமுறையினர் சிறக்க வகை செய்ய வேண்டும் என்பதே முதன்மையானது. உரைவளம் தந்த பெருமழைப்புலவருக்கு உதவ வேண்டித் தினமணி குரல் கொடுத்ததை இந்நேரம் முதல்வர் படித்திருப்பார்; எவ்வகையில் உதவ வேண்டும் என்றும் முடி வெடுத்திருப்பார். இதனைப் பிறர் படிக்கும் பொழுது் அறிவிக்கவும் செய்திருப்பார்.எனவே தினமணிக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *