massacare லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
massacare லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2013

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் வடமாகாணத் தேர்தல் --- கலாநிதி இராம் சிவலிங்கம்

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் 
வடமாகாணத் தேர்தல்
--- கலாநிதி இராம் சிவலிங்கம்



தமிழீழ வரலாற்றில் என்றுமே சந்திக்காத, எதிர்பார்க்காத விதத்திலான வடமாகாணத் தேர்தல்; தமிழர் வீதாசாரத்தையும், எண்ணிக்கையையும் அளவுகோலாகப் பார்க்கும் ஓர் புது விதமான தேர்தலாகும். அதாவது, இங்கு வெற்றி மட்டுமல்ல, எமது வாக்குகளின் எண்ணிக்கையும் முதன்மையானதே! அங்கு வாழ் உறவுகளும், இடம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு சொந்தங்களும் தம் கடமையையும், எமது தேவையையும் உணர்ந்து தமது பங்கைத் தவறாது தரவேண்டும்.

சிங்களக் குடியேற்றத்தைத் தமிழர்  நிலங்களில் , குறிப்பாக வடமாகாணத்திலும்  உருவாக்கி, ஓர் இனத்தின் எதிர்காலத்தைச் சிதைக்க, சீரழிக்க முயலும் சிங்கள அரசுக்கு, இத்தேர்தல்  ஒரு பாடமாக அமைய வேண்டும். இடம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் இதயம் அங்குதான் இருக்கிறது என்பதை உலகிற்கும்,  எம்மவர்க்கும் எடுத்துரைக்கும் வகையில் இத்தேர்தல் முடிவு அமைய வேண்டும். இது கண்டு, உலகெலாம் பரந்து வாழும் எம்மவர் உள்ளம் பூரிப்பும், புதிய தென்பும் பெறவேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்ச்சிக்குப் பின் எத்தனையோ  சோதனைகளை நாம் எதிர்கொண்டோம், சந்தித்தோம். ஆனால், அத்தனை பரீட்சையிலும் நாம் சிறப்புடன் சித்தியடையவில்லையா. அறவழிப் போராட்டத்தில் அதன் அந்தத்தை கண்டோம், ஆயுதப் போரில் எம் வீரத்தைக் காட்டினோம். இன்றைய, அரசியல் போரிலும் நாம் வெற்றி பெறுவது   உறுதி.  தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அடுக்கி வைத்திருக்கும் எம் வேண்டுகோளை, யாரால் தடுக்க அல்லது மறுக்க முடியும்?.
ஒரு முறை அல்லது இரண்டுமுறை ஒருவரை ஏமாற்றலாம். ஆனால், தொடர்ந்து எவரையும் ஏமாற்ற முடியாது என்பதைச் சிங்கள அரசும் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. இறைமையின்றி, சிங்கள அரச படையின் அடக்குமுறையின் கீழ், வடமாகாண மக்கள் வாழ்வதையும்; அங்கு இடம்பெயர்ந்தோர் நாதியற்று நிற்கையில், அந்த இடங்களில் சிங்கள அரசு சிங்களவர்களை குடியேற்றுவதையும் புதிய வடமாகாண முதல்வர் அம்பலமாக்குவதை,  மெய்ப்பிப்பதை யாரால் தடுக்க முடியும்?
  
உல்கெலாம் பரந்து வாழும் எம் அன்பான  உறவுகளே! இத்தேர்தலில் நாம் சிறப்புடன் சித்தியடைய உங்கள் பங்களிப்பு தேவையானதும், முதன்மையானதுமாகும். புலம்பெயர் தேசத்தில் வாழும்  ஒவ்வோர்  உறவும் தமது சொந்தங்களைத் தவறாது வாக்களிக்க, ஆவன செய்து அவர்களை, ஊக்குவிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

ஈழம் வாழ் உறவுகளே! பாசம் மிகு பரம்பரையே! நீங்கள் எந்த ஊரில், எந்த நகரில், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தேர்தல் அன்று, வடமாகாணத் தேர்தல்நடக்கும் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் பொன்னான வாக்குகளைத் தமிழர் கூட்டணி வேட்பாளருக்குத் தவறாதும், மறவாதும் அளிக்குமாறு உலகெலாம் பரந்து வாழும் நம் உறவுகள் சார்பாக உங்களை  அன்புடன் வேண்டுகிறேன். எம்மவர் வாழ்வும், எமது எதிர்காலமும் உங்கள் கையில் தான் தங்கியிருக்கிறது,

நன்றி.

கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@synpatico.ca