மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

மதுவை த் துறந்த தருமபுரி இளைஞர்கள்

மதுவை த் துறந்த தருமபுரி இளைஞர்கள்
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_792992.jpg
தமிழகத்தில், அதிக அளவு மது விற்பனையாகும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, பேதின்னஹள்ளி கிராம இளைஞர்கள், இனி சாகும் வரை, மதுபாட்டில்களை தொடுவதில்லை என, உறுதி எடுத்துள்ளனர்.இந்த சம்பவம், போதையில் தள்ளாடும் அந்த மாவட்டத்துக்கு அதிர்ச்சியையும், போதைக்கு எதிரானவர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சிக்கு அருகில், புளிஞ்சங்கொட்டா, பொந்தன் கொட்டா என்ற இரண்டு கிராமங்களுக்கு இடையில் உள்ளது, பேதின்னஹள்ளி என்ற சிறிய கிராமம்.

மாறியது எப்படி?

ஒரு பக்கம், நாகாவதி அணையாலும், மூன்று பக்கம், காடுகளாலும் சூழப்பட்டுள்ள அந்த கிராமத்தில், மொத்தமாக, 450க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களில், 300 பேர், ஓட்டுரிமை பெற்றவர்கள்.அந்த ஊரில் எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், அரசியல் கட்சிகளும், அந்த ஊரை வெறும் ஓட்டு வங்கியாகவே, பயன்படுத்தி வந்துள்ளன. இந்தியாவின் எந்த வரைபடத்திலும் இல்லாத அந்த ஊரை, இன்று தமிழகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழும், கிராமமாக மாற்றி வருகிறார், அங்குள்ள உதவி கல்வி அதிகாரி, தங்கவேலு.கடந்த, 2009ல், தங்கவேலு அந்த பகுதிக்கு சென்றபோது, குழந்தை திருமணம், போதைக்கு அடிமை ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே அந்த கிராமம் அறியப்பட்டிருந்தது. படிப்பறிவில்லாத அந்த கிராமத்தினர், பெங்களூரு, கோவை போன்ற பகுதிகளில், கட்டுமான பணிகளிலும், ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களில், சாயப்பட்டறைகளிலும், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் இருந்தனர். ஊரில், வயோதிகர், கர்ப்பிணி பெண்களை தவிர்த்து வேறு யாரும் இருப்பதில்லை. அப்படி ஒரு குக்கிராமமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் தலைகீழ்.

அதை தங்கவேலே விவரிக்கிறார்:பேதின்னஹள்ளிக்கு, பள்ளிக்கூடம் வந்தால், அந்த பகுதி மக்களின் வாழ்வில், ஒரு மாற்றம் வரும் என, நினைத்தேன். முதலில், ஆரம்ப பள்ளி அமைப்பது குறித்து, அந்த பகுதி மக்களிடம் விவாதித்தேன்.குழந்தைகளை படிக்க வைப்பதற்கு, அவர்களிடம் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும், பண உதவி அளிக்க முன்வந்தனர்.

பள்ளி உதயம்:

தங்களுக்கு கல்வியறிவு இல்லை என்றாலும், தங்கள் குழந்தைகளுக்காவது படிப்பறிவு அளிக்க வேண்டும் என்பதில், அவர்களின் ஆர்வம் மெச்சும்படியாக இருந்தது.இவ்வாறு தங்கவேல் கூறினார்.அங்கு உடனடியாக, ஆரம்ப பள்ளி துவங்க அனுமதி கிடைக்கவில்லை. இருந்தாலும், மனம் தளராத தங்கவேலு, கல்வி துறை மட்டுமின்றி, அரசு துறைகளின் அத்தனை படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கினார்.ஒருவழியாக, அனுமதி கிடைத்தது. பள்ளி கட்டுமான பணிகளில், ஊரே ஒன்று கூடி சேர்ந்து உழைத்து, 2010, ஆகஸ்ட் மாதத்தில், பள்ளி திறக்கப்பட்டது. உடனே, 120க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளியில் சேர்ந்தனர்.முதன்முதலாக, மாணவர்கள் படிக்கும் சத்தத்தை அந்த கிராமம் கேட்டது. அந்த சத்தத்தில், ஆண்டுக்கணக்கில் ஊரையே சூழ்ந்திருந்த அறியாமை இருட்டு, மெல்ல மெல்ல விலகியது.ஆனால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற, கட்டாயம் வந்த போது, பேதின்னஹள்ளி கிராமத்து மக்கள் எல்லாரும், குடும்பத்துக்கு, 200 ரூபாய் வீதம், நன்கொடை அளித்தனர்.அடுத்த ஆண்டில், மாணவர் சேர்க்கை அதிகமான போது, மேலும் அதிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, ஓய்வு பெற்ற தமிழாசிரியரான, தன் சித்தப்பாவையே, பணிக்கு அமர்த்தினார், தங்கவேலு. இன்று, 300க்கும் மேற்பட்ட குழந்தைகள், அதில் படித்து வருகின்றனர்.

பள்ளியைத் தாண்டி, அந்த பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த நினைத்தார், தங்கவேலு. அதற்காக சங்கம் அமைக்க முடிவு செய்தார்.சமூக ஆர்வலர்கள் பலரையும், அந்த பகுதிக்கு வரவழைத்து, பேச வைத்தார். விளைவு, இப்போது, பேதின்னஹள்ளியில்,‘மருதம் இளைஞர் நற்பணி மன்றம்’ என்ற பெயரில், இளைஞர்களுக்கான அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது.அதில், உறுப்பினர்களாக உள்ள, இளைஞர்கள், ‘இனிமேல் மது அருந்த மாட்டோம்’ என, உறுதி எடுத்துள்ளனர். போதையால் தள்ளாடும் ஊர் என, பெயரெடுத்த பகுதியில், இன்று மதுபாட்டில்களை உடைத்து போடும் அளவுக்கு, இளைஞர்கள் துணிந்து விட்டனர்.இதுகுறித்து, தங்கவேல் கூறுகையில், ‘‘இளைஞர்களின் சூழ்நிலையே, அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால், தன்னை சுற்றி இருப்பவர்களையும், நல்வழிப்படுத்துவர். ஏனெனில், விதைப்பவர் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை," என்றார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும்: வைகோ

தமிழகம் மதுவின் பிடியில்
 இருந்து விலக வேண்டும்:
 சிவகாசியில் வைகோ பேட்டி


தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும்: சிவகாசியில் வைகோ பேட்டி
சிவகாசி, டிச. 20-

தமிழகத்தில் முழு மதுவிலக்கு, அதுவே எமது இலக்கு என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 510 கிராமங்களின் வழியாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 12-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 14 நாட்கள் தொண்டர் படை சூழ விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று மாலை விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியிலிருந்து தொடங்கிய பிரசார பயணத்தின் போது வைகோவுக்கு பல்வேறு கிராமங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் வரவேற்பளிக்கப்பட்டது. சிவகாசிக்கு வந்த அவருக்கு வழிநெடுகிலும் சாலையில் இருபுறமும் ஏராளமானவர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

பிரசாரத்தின் போது சிவகாசி புறவழிச் சாலையில் பெருந்திரளானவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் எத்தனையோ நடைபயணம் மேற்கொண்ட போதிலும் மதுவிலக்கு கோரிக்கைக்கு கட்சிகளையும், சாதி, மதங்களையும் கடந்து அனைத்து தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் தற்போது மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டபடியால் இது ஒட்டுமொத்த சமுதாயத்தை யும் அழித்து விடும்.

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பஸ்சில் செல்லும்போது அவரை மது அருந்திய நபர்கள் நாசப்படுத்திய விவகாரம் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசு என்ன பரிகாரம் செய்யப்போகிறது. இதற்குண்டான மதுவின் மூல காரணத்தையே ஏற்க அரசு மறுக்கிறது.

மதுவிலக்கிற்கு முன் உதாரணமாக காந்தி பிறந்த மண் குஜராத் மாநிலம் விளங்குகிறது. தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும். மக்கள் சக்தியை திரட்டினால் தான் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும். பல்வேறு எல்லைகளை கடந்து தமிழக மண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து வருகிறேன்.

மதுவிலக்கு அமுல் செய்யப்பட்டால் நாட்டில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் இருக்கும். தெருவுக்குதெரு வீதிக்கு வீதி அரசு திறந்துள்ள மதுக் கடைகள் இருக்காது. தமிழகத்தின் எதிர் காலத்தை நிர்ணயிக்கின்ற இளம் தலைமுறையினரிடம் எங்களது போராட்டம் நியாயம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அறவழிச் சிந்தனையாளர்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாட்டையும், தமிழ் சமூகத்தையும் மதுவின் மூலமாக பாழாக்க விட மாட்டோம் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.