பூணூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூணூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஜூன், 2025

85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!



(சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 தொடர்ச்சி)

  1. 4.1.2023 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடி வட்டம் ஆதனூரில் இவ்வூரில் பிறந்த  நந்தனார் குருபூசை நிகழ்ச்சி நடந்தது. இங்குதான் ஆளுநர் இரா.ந.இரவி 100 பட்டிலினத்தவருக்குப் பூணூல் அணிவித்துள்ளார். நந்தனாரைத் தீயில் இறக்கி அதன் மூலம் அவர் புனிதமானதாகச் சனாதனவாதிகள் கூறுவதுபோல், பட்டியலின மக்கள் பூணூல் அணிந்ததால் புனிதமானதாகச் சனாதனவாதி ஆளுநர் இரா.ந.இரவி கூறுகிறார். அவரே தன்னைச் சனாதனவாதி என்று கூறுவதால் இவ்வாறு கூறுவது இழித்துரைப்பதாகாது. இதுதான் அனைவரையும் சமமாகக் கருதும் சனாதனம் என்கிறார். பூணூல் அணிவதால் உயர்வடையலாம் எனக் கூறுவதுதான் சனாதனம். பூணூல் அணிவித்ததன் மூலம் பட்டியிலினத்தவரை மோட்சம் அடைய வைத்ததாகவும் சனாதனவாதிகள் கூறுகின்றனராம். இதன் மூலம் பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்கள் என்னும் சனாதனத்தை வலியுறுத்துகிறார் அவர்.

பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

என்னும் பாரதியார் சாதி வெறியில் இவற்றைச் செய்யவில்லை. பிராமணன் மட்டும்தான் பூணூல் போட வேண்டுமா? எல்லாரும் போடலாம் எனக் கூறுவதற்காக உணர்ச்சி வயப்பட்டு செய்த செயல் இது. எனினும் பூணூல் அணிந்தவன் உயர்ந்தவன் என்பது இழிவை உயர்த்தும் சனாதனம் ஆகும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  “பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதருமத்தின் பேதத்தினை ஆளுநர் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார். அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப்படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா? ” என்கிறார்.

அமைச்சர் பொன்முடி, “பட்டம் கொடுக்க வேண்டிய ஆளுநர் பூணூல் அணிவித்து வருகிறார். இதற்கு ஏன் ஆளுநர்” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“நந்தனார், கோயிலுக்குச் சென்றதால்தான் சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் மூடப்பட்டுக் கிடக்கிறது. இன்றும் தெற்கு வாசல் திறக்கப்படாமல் உள்ளது. பூணூல் அணிவிக்கப்பட்ட 100 பழங்குடியினரையும் அந்த வாசல் வழியாக ஆளுநர் உள்ளே அழைத்துச் சென்றிருக்கலாமே” என்கிறார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம். இதன் மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர்களைக் கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

வி.சி.க.வைச்சேர்ந்த  சிந்தனைச் செல்வன், “புராணங்களில் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் செயல்படுத்திக் காட்டுவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? மூவாயிரம் தீட்சிதர்களில் ஒருவரும் தீயில் விழுந்து எழுந்து புனிதமடையவில்லை. நந்தன் மட்டும் நெருப்பில் விழுந்து எழுந்ததால்தான் புனிதமடைகிறார், அவருக்குப் பூணூல் அணிவிக்கப்படுகிறது என்று கூறி, இப்போதும் அதைச் செய்தால் எப்படி ஏற்க முடியும்?” என்கிறார்

“பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா?” என்கிறார் தோழர் மருது.

இவ்வாறு பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவை யாவும் மக்கள் குரலே.

ஆனால், பிராமணர்களை மட்டும் உயர்த்துவதை மறைக்கும் வகையாகப் “பிராமணத்துவம் பிறப்பினால் வருவது அல்ல, ஒழுக்கத்தினால் வருவது.” எனப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இவ்வாறு சொல்வதன் மூலம் பிராமணர்கள் அனைவரும் ஒழுக்கத்தால் உயர்ந்து அந்நிலை அடைந்தார்கள் என்று மாயையையும் உருவாக்குகிறார்கள். எல்லா ஒழுக்கவான்களும் பிராமணர்கள் என்றால் பிற வருணத்தார் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதானே பொருள்.

  • (தொடரும்)

சனி, 17 மே, 2025

பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 – தொடர்ச்சி)

  • 20. “சனாதன தருமம் நீண்ட தொடர்ச்சியாக இன்றுவரை நம்மிடம் இருந்து வருகிறது. இப்படியான நீண்ட பாரம்பரியத் தொடர்ச்சி உலகில் வேறு எங்கும் கிடையாது.” என்று ஆளுநர் இர.நா.இரவி கூறுகிறாரே!
  • ஒன்றின் தொடர்ச்சியோ கால இருப்போ அதன் சிறப்பை விளக்குவதாகப் பொருள் இல்லை. காலங்காலமாகச் சில தொற்று நோய்கள் இருக்கின்றன. அதற்காக அவை சிறந்தனவாகுமா? ஆகாதல்லவா? அதேபோல்தான் சனாதன தருமத்தின் தொடர்ச்சி என்பது அதன் சிறப்பைக் குறிப்பதாகாது.  சனாதனம் நிலவும் பொழுதே அதற்கான எதிர்ப்பும் தொடர்ச்சியாக இருப்பதையும் உணர வேண்டும். 

நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர்

மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால் 

என்றும்

குலமும் ஒன்றே குடியும் ஒன்றே

இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

என்றும்

கபிலர் அகவல் கூறுவது சனாதனத்திற்கு எதிர்ப்பாகத்தானே. எனவே, தொடர்ச்சியாகச் சனாதனம் இருப்பதாகப் பெருமை பேசுநர், தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு இருப்பதையும் உணர்ந்து அடங்கி ஒடுங்க வேண்டும்.

  • 21. பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா?
  • பூணூல் அணிந்து இருக்கும் போது, தவறான காரியங்கள், ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்; கோவில் சொத்தைத் திருட வாய்ப்பு கிடைத்தாலும் நம்மைச் செய்ய விடாமல் நம் மனச்சான்றே நம்மைத் தடுத்து விடும் – இவ்வாறு பரப்புரை செய்கிறார்களே!
  • பூணூல் அணிந்த பிராமணர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள் என்று நம்புவதற்காக இவ்வாறு கூறுகிறார்கள்.
  • ஒருவன் ஒழுக்கமாக வாழ்வதற்கு அவன் அணிந்துள்ள நூலோ தோற்றமோ உடையோ காரணமாக அமையாது. நல்லவர்களும் தீயவர்களும் எல்லாச் சாதியிலும்தான் இருக்கிறார்கள். எனவே, சாதியின் அடிப்படையில் நல்லவன் அல்லது கெட்டவன் என்பது பொருந்தாது.

பூணூல் அணிந்த பிராமணர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்குக் காவல் துறையும் நீதித்துறையும் ஊடகங்களுமே சான்றாகும். எனினும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கோயில் கருவறையில் பல பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதையும்   காமக் களியாட்டங்களில் ஈடுபட்டதையும் உலகே அறியும். பூணூல் அணிந்ததால்  ஒழுக்கமாக இருக்க அவர் மனச்சான்று வேலை செய்ய வில்லையே.

மற்றொன்றையும் சொல்லலாம். தன்னை உலகக் குரு எனச் சொல்லிக்கொண்ட பிராமணரில் ஒரு பிரிவின் தலைவர் செயேந்திரர் எவ்வளவு ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டார், இறையன்பர்களுடன் தகா உறவு கொண்டார், கொலைச்செயலில் ஈடுபட்டதாக அவரிடம் பணியாற்றிய மற்றொரு பிராமணரே வெளிப்படுத்தினார் என்பதை உலகம் மறக்க வில்லை. துறவு நிலை கொண்டதாகக் கூறிக் கொண்டாலும் காம உறவால் நாட்டை விட்டே வெளியேறிய அவருக்கு ஏன் அவர் அணிந்த பூணூல் நல்லறிவு புகட்ட வில்லை. எனவே இவையாவும் பிராமணர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காகக் கட்டவிழ்த்து விட்ட கதைகளே!

கோவிலில் நடைபெற்ற மற்றொரு கொடுமையையும் நினைத்துப் பாருங்கள்: 10.01.2018 அன்று  சம்மு-காசுமீர் மாநிலத்தின் கத்துவா நகரில் எட்டுஅகவைச் சிறுமி  காணாமல் போயிருந்தாள். பின்னர், நாடோடி குருசார்/குச்சர்(Gurjar/Gujjar) சமூகத்தைச் சேர்ந்த இச்சிறுமியைக் கடத்திக் கோயில் ஒன்றில் கட்டி வைத்துப்  போதை மருந்தைத் திணித்துப் பல நாள்களுக்கு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்றமை அறிந்து உலகே அதிர்ந்தது. (பெரும்பாலான ஊடகங்கள் சிறுமி எனக் குறிப்பிடாமல் பெண் என்றே குறிப்பிட்டுக் கொடுந்துயரின் வீச்சைக் குறைக்க முயன்றன.)  கோயில் பணியாளர் சஞ்சி இராம், தீபக் கசூரியா, பர்வேசு குமார்,  ஆனந்து தத்தா, திலக்கு இராசு, சுரீந்தர் ஆகியோருடன் சேர்ந்தே இக்கொடுமையை அஞ்சாமல் புரிந்துள்ளார். கோயில் பணியாளர் சஞ்சி இராம் தன் மகன் விசாலுடன் இணைந்தே கற்பழித்துக் கொலைபுரிந்துள்ள கொடுமையும் அரங்கேறியுள்ளது.

கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்று கலைஞர் மு.கருணாநிதி பரசாக்தி மூலம் முழங்கச் செய்தார். உயர் குலத்தவராகக் கற்பிக்கப்படுவோர் கோயில்களைத் தங்களின் காமஇச்சைக்குக் களமாகக் கொள்ளும் கொடுமை குறையவில்லை. குற்றமிழைத்தவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதால்(தாழ்ந்த செயல் புரிந்தோர்  உயர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்வோர் என்பதால் அதைக் குறிப்பிடவில்லை.) அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து ஏக்குசா மஞ்சு அமைப்பு கத்துவா நகரில் பேரணி நடத்தியது. இதில் சனாதன பாசக மாநில  அமைச்சர்கள் சந்திர பிரகாசு கங்கா, இலால் சிங்கு ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுள் இலால்சிங்கு `1947-இல் சம்முவில் நிகழ்ந்த இசுலாமியர்  படுகொலைகளை மறந்துவிடாதீர்கள்’ என்று  மிரட்டிப்பேசியவர்).( இவர்களுள் மூவருக்கு வாணாள் சிறைத்தண்டனையும் மூவருக்கு 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் மட்டும்தான் வழங்கப்பட்டன. மரணத்தண்டனையைத்தான் மக்கள் எதிர்பார்த்தனர்.)

இதற்காக, எல்லாப் பூணூல் அணிந்தவர்களும் ஒழுக்கக்கேடர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், பூணூல் அணிவதாலேயே ஒழுக்கமானவர் என்ற ஏமாற்று  வேலையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களிலும் நல்லவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அதற்குக் காரணம் பூணூல் அல்ல.

புதன், 14 மே, 2025

சனாதனத்தின்படிப், பூணூல் பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 



சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே!

     சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே தகுதியானவன் எனப்படுகிறது. 

“திருமணமாயினும் நீத்தார் சடங்காயினும் நம்மைப் பூணூல் அணியச் செய்யும் பொழுது  அவ்வாறு அணிந்தால்தான் நாம் சடங்கிற்கு உரிய தகுதி பெறுகின்றோம் என்றும் கடவுளின் அருளுக்கு ஆளாகின்றோம் என்றும் கூறி இழிவுபடுத்தும் பொழுது நாம் அதை எதி்ர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் இழி தகைமை இன்றும் உள்ளது. திராவிட இயக்கப் பணிகளாலும் தன்மதிப்பியக்கச் செயற்பாடுகளாலும், இந்நிலைமை ஓரளவு குறைந்துள்ளது.” என முன்பு ஒரு கட்டுரையில் (கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு?, இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல 12.02.2017) குறிப்பிடப்பட்டது இங்கே நினைவு கூரத்தக்கது.

அவ்வாறே பிறர்  பூணூல் அணிந்தாலும் அவற்றிலும் பாகுபாடு காட்டுவதே சனாதனம். பூணூல்களில் பயன்படுத்தப்படும் நூல்கள் வருணத்திற்கேற்ப மாறுபடும். பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சத்திரியனுக்கு சணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டும். (மனு,அத்தியாயம் 2 : சுலோகம் 44.) இதை மறைத்துவிட்டு அனைவரும் பூணூல் அணியலாம் என்பது வருணாசிரமம் எனக் கூறுவோரைச் சட்டப்படித் தண்டிப்பதுதான் முறையாகும். 

“சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு என்னும் நூலில் பூணூல் அணிவது தொடர்பான வழக்கு ஒன்று குறிக்கப் பெற்றுள்ளது.

விசுவப் பிரம்ம சங்கத்தார் தங்கள் குலத்திற்கான திருமணங்களைத் தாங்களே செய்து கொள்ளலாம் என்றும் பிராமணர்கள் செய்யத் தேவையில்லை என்றும் அறிவித்தனர். பஞ்சாங்கக் குண்டையன் முதலிய பிராமணர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு பஞ்சாயத்தார் முன்னிலையில் வந்தது. பஞ்சாயத்தார் பிராமணர், பஞ்சாங்கம் குண்டையன் என்பார் கேட்கிற கேள்விகளுக்கு ஆசாரி பிரிவினர் வேத பிரமாணப்படி மறுமொழி கூற வேண்டும். கூறிவிட்டால் அவர்களே தங்கள் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்; இல்லையென்றால் பிராமணர்களை வைத்துத்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறினார்கள். பஞ்சாயத்தாரின் விதிகளுக்கு உட்பட்டுப் பிராமணப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை அளித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த பஞ்சாயத்தார், “”பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தருக்கித்ததும் மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இனி விசுவப் பிரம்ம சங்கத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்த பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று 1818 இல் தீர்ப்பு சொன்னார்கள். இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் பஞ்சாங்கக் குண்டையனும் வேறு சில பிராமணர்களும் சேர்ந்து கொண்டு ஆசாரிகளுடன் அடிதடிச் சண்டையில் ஈடுபட்டார்கள்.

     மனுதருமம் கூறியபடி பிராமணர்களுக்குத்தான் வேதம் ஓதுவித்தல் உள்ளிட்ட கடமைகள் செய்ய உரிமையுண்டு என்பதை மெய்ப்பிக்க இயலாமல் சண்டையில் பிராமணர்கள் இறங்கியதைச் சித்தூர் வழக்கு எடுத்துக் கூறுகிறது.

1896இல் ஃகம்பி(Hampi) ஏம கூட மடத்தில் நடந்த விவாதத்தில் தேவாங்கர்கள் பூணுல் அணிவது தம் உரிமை என மெய்ப்பித்துள்ளனர். இவ்வழக்குகள் எல்லாம் பிராமணர்களின் ஏகபோக உரிமையாகப் பூணூல் கருதப்படுவதையும் அதன் விளைவையும்தான் காட்டுகின்றன. என்ற போதும் பூணூல்  மூலம் பிராமணர்களை உயர்ததுவதே சனாதனம்.

பூணூலின் முதன்மையைக் கூறவந்த மனு “பிராமணன், உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பிராமணர்களை உயர்ந்தவர்களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது. பூணூல் அணிந்த பிராமணர்களுக்குக் குமுகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசுகின்ற மனு, “வைதீகமாக இருந்தாலும் உலகியலாக(இலெளகீகமாக) இருந்தாலும் நெருப்பு எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு இருந்தாலும் சகலமான சுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்ல வா! (9:319)” என அறிவிக்கிறது.

பூணூல் முதலிய பிராமணச் சாதிக்குறிகளைத் தரிக்கிற சூத்திரன் அங்கங்களை அரசன் வெட்டி விட வேண்டும். (மனு, அத்தியாயம் 9, சுலோகம் 224) எனச் சனாதனம் சொல்லும்போது யார் வேண்டுமானாலும் பூணூல் போடலாம் என்பது ஏமாற்று வேலைதானே.

(தொடரும்)