நடனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 மே, 2013

ஏழையும் நடனம் கற்கலாம்!

ஏழையும் நடனம் கற்கலாம்!

குடிசை பகுதி ஏழை குழந்தைகளுக்கும், முறையான நடன பயிற்சி தரும், உமாசிரீ நடராசன்: எங்கள் குடும்பத்திற்கு, திருச்சி தான் பூர்வீகம். திருமணம் ஆன பின், சென்னை கூடுவாஞ்சேரியில், ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறோம். அப்பாவும், அம்மாவும், ரயில்வேயில் வேலை செய்ததால், "டிரான்ஸ்பர்' ஆகிகிட்டே இருந்தது. எங்கும் நிலையாய் படித்ததில்லை. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், பரத நாட்டியம் கற்க ஆரம்பித்த போது, எனக்கு ஏழு வயது. திருச்சி, "கலைக் காவேரி'யில் நடனத்தில் டிப்ளமோ கோர்ஸ் படித்தேன். அப்பா, டில்லிக்கு டிரான்ஸ்பர் ஆனதால், டில்லி கிரீன் பீல்டு பள்ளியில், நடன ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். கணவர் புரோகிதம், ஜோதிடம், கோவில் கச்சேரிகளில் ஆன்மிக பாடல்கள் பாடுவது என, பல திறமைகள் கொண்டவர்.ஆர்வம், ஈடுபாடு உள்ள யாரும், நடனத்தை கற்க முடியும். ஆனால், வசதி இருந்தால் மட்டுமே, முறையாக நடனம் கற்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி, ஏழை மற்றும் குடிசை பகுதி குழந்தைகளுக்கு, முறையான நடனத்தை கற்றுத் தர வேண்டும் என்ற சிந்தனையில், கணவர் உதவியுடன் என் வீட்டின் ஒரு பகுதியில், நடன பள்ளியை ஆரம்பித்து கற்று தருகிறேன். பரத நாட்டியம் மட்டுமே நடனம் என்றிருந்த நிலை மாறி, "கிளாசிக்கல், போக், வெஸ்டர்ன்' போன்ற நடனத்தை கற்று, எதிர்காலத்தில் சிறந்த, "டான்சர்' ஆக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. தினமும் நடன பயிற்சி செய்வதால், குண்டான குழந்தைகளின் உடல் எடை குறைகிறது. 50 வயதிலும், 30 வயது போல் இளமையாகவே இருக்க உதவுகிறது. மேடை ஏறும் போது ஏற்படும் கூச்சம், பதற்றம் போன்றவை நீங்குகின்றன. குழந்தைகள் கவனச் சிதறல் இன்றி, மனதை ஒருநிலைபடுத்த முடிகிறது. தற்போது, கிறிஸ்தவ, முஸ்லிம் குழந்தைகள் கூட, ஆர்வமாக நடனம் கற்க வருவது, மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. மற்றவர்களும், இது போன்ற நடன பள்ளிகளை துவங்கினால், அதுவே எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

புதன், 16 ஜனவரி, 2013

நடனமாடிய வெளிநாட்டுப் பயணிகள்: மதுரையில் "கலகல'


நடனமாடிய வெளிநாட்டு ப் பயணிகள்: மதுரையில் "கலகல'


மதுரை:திருமங்கலம் அருகே மேலக்கோட்டை கிராமத்தில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாய் நடனமாடி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும், பொங்கல் விழா கிராமங்களில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் 175 வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். இதில், அமெரிக்கா பயணிகள் அதிகம்.மேலக்கோட்டை ஊர் நுழைவுப் பகுதியில், கிராம மக்கள் சார்பில், வெளிநாட்டினர் ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து, திலகமிட்டு வரவேற்றனர்.மேளதாளம் முழங்க, ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட அவர்கள், நாகயசாமி பாண்டியர் ஜமீன் அரண்மனையை பார்வையிட்டனர். பின், குருநாதசாமி கோயில் முன் பாரம்பரிய கலைவிழா நடந்தது.கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, தேவராட்டம், ஒயிலாட்டம், கராத்தே, யோகா என பல கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வெளிநாட்டு பயணிகளும் கலைக்குழுவினரோடு ஆடி மகிழ்ந்தனர். பின், கிராமிய சூழலில் அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
மாணவி ரேச்சல்: 21 நாள் பயணமாக 16 பேர் கொண்ட மாணவர்கள் குழு இந்தியா வந்துள்ளோம். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். இங்கு நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் நெகிழ வைப்பதாக இருந்தது. ஏற்கனவே இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கும், என கேள்விப்பட்டிருந்தேன். நேரில் பார்த்த போது வியப்பாக இருந்தது.

ரோஸ் (அக்கவுண்டன்ட்): முதல் முறையாக இந்தியா வந்து, இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். மக்களின் வரவேற்பு முதல் அவர்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரங்களை பார்க்கும் போது புதுமையாக உள்ளது.

பென்மில்ஸ் (சேரிட்டபிள் டிரஸ்ட்): ஆடல், பாடல், இசை எல்லாம் ரசிக்கும் வகையில் இருந்தன. அறிமுகமான அனைவரிடமும் இந்நிகழ்ச்சியின் சிறப்புகள் குறித்தும் தெரிவிப்பேன், என்றனர்.

கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. சுற்றுலா அலுவலர் தர்மராஜ், பஞ்., உதவி இயக்குனர் சுகுமாரன், ஊராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.