தோழர் தியாகு எழுதுகிறார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோழர் தியாகு எழுதுகிறார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!

      20 May 2024     அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!- தொடர்ச்சி)

‘மாவீரர்நாள் உரை’ நிகழ்த்த அரிதாரம் பூசி வந்த பொய்த் துவாரகைக்குக் கட்டியம் பாடிய காசி ஆனந்தனார் பேசிய வசனத்தை மறந்திருக்க மாட்டீர்கள்: “இந்திய அரசின் துணையோடு துவாரகை அரசியலில் களமாடப் போகிறார்.”

‘துவாரகை’ நாடகத்தில் விரைவாகவே திரை விழுந்து விட்டதால் சூத்திரதாரிகள் இப்போது பிரகடனக் காய்களை உருட்டத் தொடங்கியுள்ளார்கள். முதலாவதாக ‘நான்கு தூண் கொள்கை’ப் புகழ் சிடிஎஃப் சுரேன் சுரேந்திரனின் கதையாடலில் இமய மலையிலிருந்து உருட்டப்பட்டுள்ள இமாலயப் பிரகடனம்! இதை அறியாத்தனமாக யாராவது ஆதரித்து விட்டால் அவர்கள் அந்த இமாலயத் தவற்றுக்காக வருந்துவதற்குப் பொருத்தமான பெயர்தான்!

அடுத்து இந்திய இந்துத்துவ ஆளும் கும்பலின் ஆசியோடு சென்னையிலிருந்து உருளப் போவது ‘தமிழ்நாட்டு மக்களின் கூட்டுப் பிரகடனம்.’ இரண்டகர்களுக்கு இனிய முகம், இது முதிய முகம் என்று இரவல் கொடுத்திருப்பவர் பழ. நெடுமாறன். அவர் தலைமையில்தான் கூட்டுப் பிரகடனத்துக்கு மாநாடு கூட்டப் போகிறார்கள். ‘ஐயா’ இந்த வயதில் இந்த அளவுக்குத் தாழ்ந்து போவார் என்று நம்புவது உலகத் தமிழர்களுக்குக் கடினமாகத்தான் உள்ளது.

காசி ஆனந்தனும் பழ. நெடுமாறனும் தமிழீழத்துக்காக எந்தக் காய் நகர்த்துவதாக இருந்தாலும் அதற்கு முன் உலகத்தமிழர்களிடம் ‘துவாரகை’ மோசடிக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். பிரகடனம், பிலாக்கணம் எல்லாம் பிறகுதான்!

இராசபட்சேக்கள் நடத்திய இனவழிப்புக்கு முழுக்க முழுக்க உடந்தையாக இருந்த இந்திய அரசு, பன்னாட்டு அரங்கிலும் இனவழிப்புக் குற்றவாளிகளை சூழ்ச்சித் திறத்தோடு இன்றளவும் பாதுகாத்து வரும் இந்திய அரசு.. இப்போதும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்கு ‘யாமிருக்க பயமேன்?’ என்று சேதி சொல்லியிருக்கிறது. அதற்கு இந்திய சாணக்கியம் கண்ட வழிதான் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு படாடோபமான வரவேற்பு!

தமிழினவழிப்புப் போரில் கோழைத்தனமாக அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்த சிங்களப் படைப் பிரிவுகளின் முதன்மைத் தளபதிகள் ஐந்தாறு பேரில் ஒருவர்தான் சவேந்திர சில்வா. இவர் தலைமையிலான படைப் பிரிவுகள் இழைத்த போர்க் குற்றங்கள் ஐநா அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. அவரே இந்தக் குற்றங்களைத் தன் வீரச் செயல்களாகப் பீற்றிக் கொள்ளவும் தயங்கவில்லை.

சவேந்திர சில்வாவின் போர்க் குற்றங்கள் சிங்களத்தின் தமிழினவழிப்புப் பெருங்குற்றத்தில் முக்கியக் கூறுகளாகும். யுகோசுலாவிய இனக்கொலைகளில் இசுலோபடான் மிலோசெவிக்கின் தளபதிகள் பன்னாட்டு நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது போல் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர்தான் சவேந்திர சில்வாவும்.

சவேந்திர சில்வாவின் கொலைப் ‘புகழ்’ உலகெங்கும் பரவிக் கிடக்கிற ஒன்று. செவ்விந்தியர்களை இனவழிப்புச் செய்து நிறுவப்பெற்றதும், உலகெங்கும் பற்பல இனவழிப்புகளை முன்னின்று நடத்தியதும், இன்றளவும் இசுரேலின் நெட்டன்யாகு வரை எத்தனையோ இனக்கொலைக் குற்றவாளிகளுக்கு ஆபத்பாந்தவனுமாகிய அமெரிக்காவே சவேந்திர சில்வாவின் போர்க் குற்றங்களைக் கேட்டு ‘அதிர்ச்சியுற்று’ அவர் அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகளுக்குப் பன்னாட்டு அரசுகள் பயணத்தடை விதிக்கப் பரிந்துரைத்தார். சிங்கள அரசோ இந்தக் குற்றவாளிகளை ஐநாவிற்கும் பன்னாட்டு அரசுக்கும் தூதுவர்களாக அனுப்பி அவர்களுக்கு அரசதந்திரச் சட்டக் காப்பு வழங்கியது. சவேந்திரா கையில் தமிழர்களின் குருதிக் கறையோடு ஐநாவுக்குச் சென்றதும், ஐநா அமைதிக் காப்புப் படைகளில் பொறுப்பேற்றதும் எவ்வளவு பெரிய கொடுமை!

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள அரசு நடத்திய போருக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கும் வழிகாட்டலுக்குமான காரணங்களை ஆய்வு செய்த நோர்வே நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டிய செய்தி: இந்திய அரசு இந்திய மண்ணில் பொதுமக்களுக்கு – குறிப்பாகப் பழங்குடி மக்களுக்கு – எதிராகப் ‘பச்சை வேட்டை’ போன்ற உள்நாட்டுப் போர் நடவடிக்கைகளை நிகழ்த்த இலங்கையில் வைத்து ஒத்திகை பார்க்க விரும்புகிறது என்பதாகும். இப்படிப் பார்க்கும் போது, இந்திய இராணுவப் பயிற்சிக் கழகத்தில் பயில்படையினரின் பயிற்சி நிறைவு விழாவுக்கு முதன்மை விருந்தினராகச் சவேந்திர சில்வா அழைக்கப்பட்டது பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பயிற்சி நிறைவு செய்த ஒவ்வொருவர் கையிலும் வாள் கொடுத்தாராம் சவேந்திரர்! கொலைகாரன் கொடுத்த கொலைவாள் இந்தப் பயில் படையினருக்கு என்ன கற்றுத்தரும்? ஒன்றே ஒன்றுதான்: ‘அப்பாவிப் பொதுமக்களை வதைக்கவும் அழிக்கவும் தயங்காதீர்! என்னைத் தேடி வந்த விருதுகளும் பரிசுகளும் மரியாதைகளும் உங்களையும் தேடிவரும்!’

இந்தியாவைத்தான் நம்பியிருக்கிறோம் என்று நாளும் புலம்பிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் பேர் அறிஞர்கள் இனி மோதிக்கும் அமித்சாவுக்கும் முதுகு சொரிந்தால் போதாது, சவேந்திர சில்வா போன்ற தளபதிகளுக்கும் ‘போற்றி போற்றி’ பாட வேண்டியதுதான்!

தமிழர்கள் இந்த இனக்கொலைக் குற்றவாளிகள் ஒவ்வொருவரையும் கூண்டிலேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குற்றவாளியின் பெயரையும், முகத்தையும், அவர் செய்த கொடுஞ்செயல்களையும் நினைவில் வைத்துக் கொள்வதோடு உலகெங்கும் பரப்பவும் வேண்டும். எந்த நாடும் இந்தக் கொலைகாரர்களை வரவேற்று மதிப்பளிப்பது கிடக்கட்டும், நுழையவே அனுமதிக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [TGTE] இந்த இனக் கொலைக் குற்றவாளிகளில் முதன்மையான பன்னிருவர் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பட்டியலில் ஆறாவது இடத்தில் சவேந்திர சில்வா இடம்பெறுகிறார். மகிந்த இராசபட்சே, சந்திரிகா, கோத்தபாயா, சரத் பொன்சேகா, சகத்து டயசு ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சவேந்திர சில்வா! சவேந்திராவுக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது போல் இந்தியாவும் தடை விதிக்க வேண்டும்! உலக நாடுகள் ஒவ்வொன்றும் தடை விதிக்க வேண்டும்! இலங்கையும் தடை விதிக்குமளவுக்கு தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்.

சவேந்திராவுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் ஐநாவும் உலக நாடுகளும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டம் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் போராட்டத்தின் முகன்மைக் கூறுகளில் ஒன்று. எந்த வல்லரசுக்கும் பாதந்தாங்கும் முயற்சி இந்தப் போராட்டத்துக்கு உதவாது.

தமிழீழ மக்களின் ஒன்றுபட்ட போராட்ட வலிமையையும், தமிழக மக்களின் உறுதியான தோழமையையும், உலகத் தமிழர்களின் ஆக்கத் துணையையும், முற்போக்கு வரலாற்று ஏரணத்தையும், இனவழிப்புக்கு ஆளான இனத்திற்கே உரிய அற வலிமையையும் நம்பித் தொடர்ந்து சலியாது போராடுவோம்! வெல்வோம்!

ஞாயிறு, 19 மே, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!

      19 May 2024      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழம் – . . . . பகைத்தது இந்தியாவா? . . . . ஈழமா? – தொடர்ச்சி)

தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்!

அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள் அடைந்த போர்க்கள வெற்றிகளின் அடித்தளம் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் காட்டிய தெளிந்த உறுதியே ஆகும். ஆணாதிக்கமும், சாதியாதிக்கமும் கோலோச்சுகின்ற ஒரு சமூகம் அயலாதிக்கத்தை எதிர்த்து ஒன்றுபடத் தகுதியற்றது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.

உயிராய்தம் ஏந்தித் தாய் நிலத்திலும் தாய்க் கடலிலும் தாய்க் காற்றிலும் போயடங்கி விட்ட கரும்புலிகள் எனும் அதிசய மாந்தர்கள் உட்பட நம் மாவீரர்கள் எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் விளையாத வியக்கத்தக்க வீரமும் ஈகமும் ஈழத் தமிழ் மண்ணில் விளைந்திடச் செந்நீர் பாய்ச்சினார்கள்.

மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச் சின்னங்களையும் சிதைத்து அழித்து விட்டதாகச் சிங்களப் பேரினவாதம் இறுமாந்திருக்கலாம். மாவீரர்கள் துயில் கொண்டுள்ள தமிழ் மண் தமிழ் மக்களுக்கே உரியது. அது அயலானுக்கு வணங்காமண்! ஆதிக்கத்துக்கு அடங்காப் பற்று!! ஒல்லாந்தரும் போர்த்துகேயரும் பிரித்தானியரும் சிங்களரும் பெருவிலை கொடுத்துக் கற்ற பாடத்தை இந்தியரும் கற்க விரும்பினர், கற்றுத் திரும்பினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் முதல் விடுதலைப் போராட்டமன்று. நம் காலத்திலேயே நடந்து வெற்றிகண்ட சில போராட்டங்களைக் குறிப்பிடுவதானால், தென் ஆப்பிரிக்க மக்கள் இனவொதுக்கலுக்கு எதிராக நடத்திய நீண்ட போராட்டத்தையும், நமீபியாவிலும் சிம்பாப்வேயிலும் வெள்ளைக் குடியேற்ற ஆதிக்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களையும் குறிப்பிடலாம். வல்லரசியங்களின் விருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் மீறி ஒடுக்குண்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றி காண முடியும் என்பதற்கு இவை வரலாற்றுச் சான்றுகளாக நம் முன்னுள்ளன.

இன்றளவும் அயராமல் தொடரும் பாலத்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டம் உலகைக் குலுக்கும் நிகழ்வாகி நம் தோழமையைக் கோரி நிற்கிறது. தமிழர்கள் தமக்கு நேர்ந்த இனவழிப்புப் பேரவலத்துக்கு ஈடுசெய் நீதி கோரிப் போராடும் போது உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று சோர்வடையத் தேவையில்லை. மாந்தரை மாந்தர் அடிமை கொள்ளும் கொடுமைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.

உரோமானிய ஆண்டைகளை எதிர்த்து வெள்ளை அடிமைகளைப் படைதிரட்டிப் போர்தொடுத்த இசுபார்ட்டகசைத் தூக்கிலிட்டுக் குதூகலித்த கோமான்கள் ஒழிந்து விட்டார்கள். இசுபார்ட்டகசு இன்றளவும் புரட்சிக்கும் விடுதலைக்கும் அடையாளச் சின்னமாக நம் உணர்வில் வாழ்கிறார்.

இசுபார்ட்டகசு மறைந்து சற்றொப்ப ஈராயிரம் ஆண்டு கழித்து பிரெஞ்சு ‘மாவீரன்’’ நெப்போலியனை எதிர்த்து ஐத்தியின் கருப்பு அடிமைகளைத் திரட்டிப் போர் புரிந்த (உ)டூசான் லூவர்சூர் (Toussaint L’Ouverture) புரட்சிக்கும் விடுதலைக்கும் மற்றுமோர் அடையாளச் சின்னமாவர்.

‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்’ மாந்தரைப் போல் அல்லாமல், வாழ்வையும் சாவையும் மக்களுக்காகத் தன்னளிப்புச் செய்த நம் மாவீரர்கள் காலங்களும் வெளிகளும் கடந்து உலகின் ஒடுக்கப்பட்டோரது விடுதலை வேட்கையின் புனிதச் சின்னங்களாக மதிக்கப் பெறுவார்கள்.

வியத்துனாம், கியூபா, அல்சீரியா, தென் ஆப்பிரிக்கா என்று உலகெங்கும் கடந்த காலத்தில் வெற்றி கண்ட விடுதலைப் போராட்டங்கள் போலவே இன்றளவும் எண்ணிறந்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துத் தொடர்ந்து களங்கண்டு நிற்கும் பாலத்தீனம், குர்திசு, காசுமீரம் உள்ளிட்ட மூத்த விடுதலைப் போராட்டங்களின் தொடரியில் தமிழீழப் போராட்டத்தை ஒளிரும் கண்ணியாக்கிய பெருமை நம் மாவீரர்களைச் சாரும்.

ஒவ்வொரு தேசத்தின் விடுதலைப் போராட்டமும் தனக்கான அணிவகுப்பை உருவாக்கும் போது உள்நாட்டுச் சூழலை மட்டுமல்லாமல் பன்னாட்டுச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அனைத்துலகச் சூழலையும் வட்டாரச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏதேனும் ஓர் வல்லரசை நத்தி நிற்கும் அழுத்தங்கள் எழும். இந்த அழுத்தங்களுக்குப் பணியாமல் அடிப்படையில் சொந்த மக்களைச் சார்ந்து விடுதலைப் பயணத்தை முன்னெடுத்தால் மட்டுமே விடுதலைக் குறிக்கோளைத் தொலைத்து விடாமல் தொடர இயலும்.

சப்பானை நத்தி நிற்கும் அழுத்தம் வியத்துநாம் விடுதலைப் போராட்டத்துக்கு எழுந்த போது தெளிவாக அதனை மறுதலித்தவர் ஓ- சி-மின். பாலத்தீன விடுதலைப் போராட்டத்தை அரபு அரசுகளின் புவிசார் அரசியலோடு பிணைக்கும் முயற்சிகளை எதிர்த்து உறுதி காத்தவர் யாசிர் அராபத்துதமிழீழ விடுதலைப் போராட்ட நலன்களை இந்திய வல்லரசிய நலன்களுக்கு உட்படுத்த மறுத்து அதற்காக ஒரு பெரும் போரையே சந்தித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களப் படையை எதிர்த்துக் கண்ட களங்கள் போலவே இந்திய வல்லரசிய அமளிப் படையை எதிர்த்துக் கண்ட களங்களும் மாவீரர்களின் புகழைப் பேசும். அவற்றிலிருந்து பெற்ற அரசியல் படிப்பினைகள் தமிழீழ விடுதலைக்காகத் தொடரும் போராட்டத்தின் பாதையெங்கும் ஒளியூட்டும்.

போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலக்கு மாறுவதில்லை என்று முள்ளிவாய்க்காலுக்கு முன்பே தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைநோக்குடன் சாற்றினார்கள். இன்று விடுதலைப் போராட்டம் நீதிக்கான போராட்டமாக வடிவெடுத்துள்ளது. மறப் போரில் வீரம் விளைத்த மாவீரர்களின் நினைவுகள் இன்று அறப் போரிலும் நமக்குத் துணையாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பன்னாட்டுலகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் விடுதலைப் போராட்டங்கள் “சாத்தியமற்றவை” ஆகி விட்டதாக இன்றளவும் ஒருசிலர் கதைக்கக் கேட்கிறோம். அது வெறும் மாயைதான். ஒடுக்குமுறை இருக்கும் வரை அதற்கு எதிரான விடுதலைப் போராட்டமும் நடக்கத்தான் செய்யும் என்பதே வரலாற்று நெறி. உலக நிகழ்வுகள் இதற்கான புதிய சான்றுகளைக் காட்டிய வண்ணம் உள்ளன. பாலத்தீனத்துக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் காசாப் போர் மிக அண்மைய சான்றாகும். பாலத்தீன விடுதலைக்காகவும் இனவழிப்புப் போரை உடனே நிறுத்துவதற்காகவும் புவிபரப்பெங்கும் முற்போக்கு ஆற்றல்கள் குரல் கொடுத்து வருகின்றன. தமிழீழ மாவீரர்களின் பெயரால் அந்தக் குரலில் நம் தமிழ்க் குரலும் இணைகிறது. இது வரை இணைந்திருபப்து போதாது என்றால், இன்னும் விரிவாகவும் முனைப்பாகவும் பாலத்தீனத்துக்கான நம் குரல் ஒலிக்க வகைசெய்ய வேண்டும் என மாவீரர்கள் பெயரால் அழைக்கிறேன்.

நம் மாவீரர்களின் மகத்தான தனிச் சிறப்புகளில் ஒன்று அவர்கள் தமிழின உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் களம் கண்டவர்களே தவிர ஒருபோதும் இனவாதிகள் அல்ல. சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக சிங்களக் குடியாட்சிய ஆற்றல்கள் முன்னெடுக்கும் போராட்டம் மண்ணுக்குள் உறங்கிடும் மாவீரர்களால் வாழ்த்தப்பெறும்.

வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்படி விடுமையும் இறைமையும் கொண்ட தமிழீழக் குமுகியக் குடியரசு (FREE AND SOVEREIGN REPUBLIC OF SOCIALIST TAMIL EELAM) அமைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நம் மாவீரர்கள் மக்கள் தமக்களித்த கட்டளையாகவே கொண்டார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. உலகில் பல விடுதலை இயக்கங்கள் மதவெறிச் சார்பின் பக்கம் இழுக்கப்படுவதற்கு மாறான உலகிய (SECULAR) நிலைப்பாட்டில் நம் மாவீரர்கள் ஊன்றி நின்றார்கள்.

உறுதியான போராட்டங்களுக்கு மாற்றாக உருப்படாத 13ஆம் திருத்தம் போன்ற உலுத்துப் போன சமரசத் திட்டங்களை அரசியல் மேசையில் உருட்டும் இந்திய-சிங்களச் சூதாட்டங்கள் குறித்து நாம் எச்சரிக்கையோடு இருப்பதையே மாவீரர்களின் பெயரால் வலியுறுத்த வேண்டியுள்ளது.

இருதுருவ உலகம் ஒருதுருவ உலகமாகி, பலதுருவ உலகமாகி வருவதாகப் பன்னாட்டு அரசறிவியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஆளும் அரசுகளை மட்டுமே இவர்கள் கணக்கில் கொண்டுள்ளார்கள். உண்மையில் போராடும் தேசங்களே இறுதிநோக்கில் வரலாற்றுச் சக்கரங்களை உருட்டிச் செல்கின்றன. அரசுகளற்ற தேசங்கள் என்ற அணிவரிசையில் தமிழீழமும் புகழார்ந்த இடம்பெற மாவீரர்களின் வீரமும் ஈகமும் வழிசெய்தன என்பதை நெஞ்சில் நிறுத்தி அவர்களை வணங்குவோம்!

சனி, 18 மே, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?-தொடர்ச்சி)

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளாமல், இந்திய அரசை நத்தி ஏதாவது தீர்வு பெற்றுக் கொள்வது என்ற கோழைத்தனமான அணுகுமுறையைத் தமிழ் மக்களின் சார்பிலேயே சிலர் முன்மொழிந்து வரக் காண்கிறோம். அடிப்படையில் இந்திய வல்லரசுதான் ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டது என்ற உண்மையைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு தமிழீழ மக்கள் மீதும் புலிகள் மீதும் இவர்கள் சுற்றடியாகப் பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இப்போதைக்கு ஈழத் தமிழர் நலனை விடவும் இந்திய வல்லரசின் நலன்தான் உயர்ந்தது என்ற கருத்தைத் தலைவர் பிரபாகரன் பெயரிலேயே செல்லுபடியாக்க இழிமுயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் பொய்மைகளைத் தோலுரிக்கவும், ஈழ தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு எத்தகையது என்பதை விளக்கவும் தேவை இருப்பதாக நம்புகிறேன். தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளையே எடுத்துக் காட்டி வரலாற்றுப் புரட்டர்களை மறுதலிக்க முடியும் என நம்புகிறேன். படியுங்கள்! புரிந்து கொண்டு உரையாடுங்கள்!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று எழுந்துள்ள பல்வேறு சிக்கல்களுக்கும் மையமாக இருக்கும் ஒரு வினா: இந்திய அரசு குறித்தான நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

ஒருசில நண்பர்கள் அடிக்கடி சொல்லி வரும் கருத்துத் துளிகள் இவை: நாம் இந்தியாவையே நம்பியிருக்கிறோம். இந்தியாவின் தயவில்தான் ஈழம் அமைக்க முடியும். இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமன்று, இந்தியாவைக் குறை கூறவே கூடாது. இந்தியாவின் நிகழ் அணுகுமுறையை மட்டுமன்று, கடந்த கால நடைமுறையையும் கூட குற்றாய்வு செய்யக் கூடாது. இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்குத் தனித் தமிழீழமே ஏற்றது என்பதை இந்திய அரசுக்குப் புரிய வைக்க வேண்டும்.

இந்த இந்தியச் சார்புக் கொள்கையினர் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தேசியத் தலைவர் பிரபாகரனையும் போற்றக் கூடியவர்கள். அவர் பெயரால் தம் அணுகுமுறையை நியாயப்படுத்தவும் செய்கிறவர்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரனின் ஆழ்ந்த பார்வைகளுக்குச் சான்றாகத் திகழும் அவரது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினர் வாதுரைப்பதில்லை. 1987 ஆகட்டு 4 சுதுமலைச் சாற்றுரை ஈழத் தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு பற்றிய முகன்மையான ஆவணமாகும். அடுத்து, தலைவர் பிரபாகரன் 1989 முதல் 2008 வரை ஆற்றிய 20 மாவீரர் நாள் உரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இன்னும் சில செவ்விகளும் உள்ளன. இவற்றைப் படித்துப் புரிந்து உள்வாங்கிக் கொள்வது இந்திய வல்லரசு குறித்தான ஈழத் தேசக் கொள்கையை வகுக்க உதவும்.

ஈண்டு நான் தலைவர் பிரபாகரனின் இறுதி மாவீரர் நாள் உரையை (2008 நவம்பர் 27) எடுத்துக்காட்டி அவரது அணுகுமுறையை விளங்கிக் கொள்ளவும் விளக்கிக் காட்டவும் முயல்கிறேன். இந்த உரையில் நம் கருத்தாய்வுக்குப் பொருத்தப்பாடுள்ள சில பகுதிகளைப் பார்ப்போம்.

“உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”

தமிழின அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றல்லவா? அதிலும் முதன்மையான ஒன்றல்லவா? போரியல் வகையிலும், பொருளியல் வகையிலும் மட்டுமன்று. அரசியல் வகையிலும் அரசதந்திர வகையிலும் சிங்களத்தின் நேர் இன அழிப்புப் போருக்கு இந்திய வல்லரசு முண்டு கொடுத்து நின்றதும், இன்றளவும் கட்டமைப்பியல் இன அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதும் இந்திய வல்லரசே என்ற உண்மையை மறுக்கவோ மறக்கவோ மறைக்கவோ எப்படிக் கூடும்?

இன அழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுவதற்காகத் தமிழீழத் தேசம் பன்னாட்டு அரங்கில் எடுத்து வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று இந்திய அரசு தன் பாவத்துக்குக் கழுவாய் தேட முயன்றிருக்கலாம் அல்லவா? மாறாக, ஐநா மனிதவுரிமைப் பேரவை விவாதங்களிலும் தீர்மானங்களிலும் நேரடியாகவும் சுற்றடியாகவும் சிங்கள அரசைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வரக் காண்கிறோம்.

கடந்த காலத்திய, நிகழ்காலத்திய உண்மைகளை மூடி மறைப்பதுதான் அரசதந்திரம் என்று இந்திய சார்பு ஈழக் கொள்கையினர் நம்புவதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த அரசதந்திரத்தால் இது வரை என்ன பயன் விளைந்துள்ளது? என்று அவர்கள் விரல்விட்டுச் சொல்லட்டும். இந்தியா குட்டக் குட்ட நாம் குனிவதும், நாம் குனியக் குனிய அவர்கள் குட்டுவதும்தானே கண்ட பலன்?

இத்தனைக்குப் பிறகும் நம் அன்பர்களில் சிலர் “நாங்கள் இந்தியாவைத்தான் நம்பியிருக்கிறோம்” என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. தந்தை செல்வா அவர்களோ, தலைவர் பிரபாகரன் அவர்களோ இந்தியாவை நம்பியோ பிற அயல் அரசுகளை நம்பியோ இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை. வேறு எதை நம்பித் தொடங்கி நடத்தினார்கள்? கேளுங்கள், தலைவரே உங்களுக்கு விடை சொல்வார்: எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்றுஎமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”

கடந்த காலத்தில், குறிப்பாக 1983 கறுப்பு யூலைக்குப் பின் “இந்தியப் படையை ஈழத்துக்கு அனுப்பித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தமிழ்நாட்டில் ஒரு கோரிக்கை எழுந்ததுண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் இதற்காக ஒரு மறியல் போராட்டமே நடத்தியது. ஆனால் எவ்வித நெருக்கடியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தக் கோரிக்கையை வழிமொழிந்ததில்லை.

“எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.”

தலைவர் பிரபாகரன் குறிப்பிடும் “வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகள்” யார்? சிங்களம் தவிர, தமிழீழத்தை ஆக்கிரமித்த எதிரி என்பது இந்தியாவே அல்லவா? ஈழத்தைப் பகைத்து இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா?

“இதேநேரம்சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமைசமாதான முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்தது.”

சமாதான முயற்சிகளுக்கு ஊறு விளைவித்த உலக நாடுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டா? இல்லையா?

“எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துதடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டுஎம்மை வேண்டத்தகாதோராகதீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டிபுலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்துகட்டுப்பாடுகளைப் போட்டுஎமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.”

சிறிலங்கா தவிர ஈழ விடுதலை இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சித்திரித்த முதல் நாடு இந்தியாதான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு முதன்முதலாகத் தடை விதித்ததும் இன்றளவும் தடையை நீடித்து வருவதும் இந்தியாதான்.

ஈழத் தமிழர்கள் மறக்கக் கூடாத ஒரு வரலாற்று உண்மை என்ன தெரியுமா? சிங்களம் தவிர, தமிழீழத்தின் மீது படையெடுத்த ஒரே அயல்நாடு இந்திய வல்லரசுதான்! தமிழ் மக்கள் இன்றளவும் ஒவ்வொரு ஒன்றுகூடல் நிகழ்வைத் தொடங்கும் போதும் அகவணக்கம் செலுத்துவது சிங்களப் படைகளாலும் இந்தியப் படைகளாலும் கொலையுண்ட தமிழர்களுக்கே அல்லவா? இந்த அகவணக்கத்திலிருந்து இந்தியப் படையால் கொலையுண்டவர்களை நீக்கினால்தான் இந்திய வல்லரசின் பரிவைப் பெற முடியும் என்று நினைப்பதே அம்மக்களின் நினைவைக் களங்கப்படுத்துவது அல்லவா?

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துதடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டுஎம்மை வேண்டத்தகாதோராகதீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டிபுலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்துகட்டுப்பாடுகளைப் போட்டுஎமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

“தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாகநீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகிமனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்திதமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்துசிறைகளிலே அடைத்துஅவமதித்தன.”

இப்படியெல்லாம் இந்தியா செய்யவில்லை என்று நம் இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினரால் சொல்ல முடியுமா?

“மாறாகசில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக் கொடுத்துஇராணுவப் பயிற்சிகளையும்இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.”

இந்தச் சில நாடுகளில் இந்தியாவும் முதன்மையான ஒன்றில்லையா?

ஈழப் போராட்டம் இந்திய நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிரானதா? இந்த வினாவிற்குத் தலைவர் பிரபாகரனின் விடை இதோ:

“உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

“எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.”

இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, வேறு எந்த நாட்டுக்கும் ஈழ விடுதலைப் போராட்டம் எதிரானதன்று. நீண்ட போராட்ட வரலாற்றில் எந்த நாட்டையும் நாம் பகைத்துக் கொண்டதில்லை. இந்தியாவை மட்டும் எதற்காகப் பகைத்துக் கொள்ளப் போகிறோம்? இந்தியா தன் வல்லரசிய நலன்களுக்கு ஈழப் போராட்டம் எதிரானது எனக் கருதினால் அதற்கு நாம் எப்படிப் பொறுப்பாவோம்?

“எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும்எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

“இதற்கான புறநிலைகளை உருவாக்கிநட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்திகாத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மைத் தடை செய்துள்ள நாடுகள்எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டுஎம்மீதான தடையை நீக்கிஎமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.”

அன்று இந்தியாவுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவே தலைவர் விரும்பினார். இன்றும் ஈழ மக்களின் விருப்பம் அதுவே. ஆனால் அன்றும் இன்றும் தடை விதித்து நட்புக்குத் தடை போட்டுக் கொண்டிருப்பது இந்திய வல்லரசுதான் என்பது கண்கூடான உண்மையல்லவா?

“நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும்இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச் சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.”

இந்தியா சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதானால் அதற்கான முதல் நடைபடி, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதுதான். பதினைந்து ஆண்டுகள் கரைந்த பின்னும் தலைவர் பிரபாகரனின் சொற்கள் உண்மையாக ஒலிக்கின்றன. இந்தியாவைப் பகைச் சக்தியாக நாம் கருதவில்லை, கருத வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவை நட்புச் சக்தியாகவே தமிழர்கள் கருதினார்கள், இன்றும் கருதுகின்றார்கள். ஆனால் இந்தியப் பேரரசின் அணுகுமுறைதான் ஈழ மக்களுக்கும் அவர்தம் போராட்டத்துக்கும் பகையாக உள்ளது.

கற்றுக்குட்டித்தனமான சில நாடகங்களை அரங்கேற்றுவதன் மூலம் இந்திய வல்லரசின் இந்த அணுகுமுறையை மாற்றி விட முடியாது என்பதை “இந்தியாவையே நம்பியிருக்கும்” நம் அன்பர்கள் விரைவில் உணர்ந்து கொண்டால் நன்று.

செவ்வாய், 2 ஜனவரி, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : சொல்லடிப்போம் வாங்க!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி)

கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி

குமுக மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, குமுக வளர்ச்சி நெறிகளின் படி முதலியம் அழிவதும் குமுகியம் (SOCIALISM) மலர்வதும் தவிர்க்கவியாலாதவை என்ற மார்க்குசியத்தின் உறுதியான நிலைப்பாடு அதனை ஓர் ஊழ்வினைக் கோட்பாடு போல் காட்டும் தீவாய்ப்பு உள்ளது. ஆனால் இஃது உண்மையில்லை. மாந்தர் விரும்பிய படியெல்லாம் குமுக மாற்றமோ அதற்கான புரட்சியோ நடந்து விட மாட்டா. அதே போது மாந்தர் விரும்பாமலும், மாந்த முயற்சி இல்லாமலும் எம்மாற்றமும் வராது, எப்புரட்சியும் நடவாது. மாற்றமும் புரட்சியும் தவிர்க்கவியலாதவை என்ற கருத்தின் பொருள் மாந்த முயற்சி இல்லாமலே அவை நடக்கும் என்பதன்று. புறஞ்சார்ந்த குமுக நெறிகளைத் தலைவிதியாக மார்க்குசியம் கருதவில்லை. குமுக நெறிகளைப் புரிந்து உள்வாங்கிக் கொண்டு குமுக அமைப்பையும் அதன் வளர்ச்சி நிலையையும் முரண்பாடுகளையும் கணித்துப் புரட்சிக்குரிய கோட்பாடும் நடைமுறையும் வழிமுறையும் அமைப்பு முறையும் இல்லாமல் குமுகியப் புரட்சி நடைபெறாது. விடுதலையும் கிட்டாது. “தானாய் எதுவும் மாறும் என்பது பழைய பொய்யடா!”

மார்க்குசியம் உயர்ந்த கனவுகளின் தோரணம் அன்று. நாம் வாழும் குமுகம் எத்தகையது என்பதை உள்ளது உள்ளபடி பகுத்தாய்ந்து அதிலிருந்து சுரண்டலற்ற புதிய பொதுமைக் குமுகத்துக்கும் அதன் முதற்கட்டமாகிய குமுகியத்துக்கும் முன்னேறும் வழிகளை வெளிபடுத்துவதே மார்க்சியத்தின் கடமை ஆயிற்று. குமுகியத்துக்கு வழிநடத்தும் குமுக ஆற்றல் எது? இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகளே என்பதை மார்க்சும் எங்கெல்சும் இனங்காட்டினார்கள். மார்க்குசிய ஆய்வுமுறையின் மையமாக இருப்பது பாட்டாளி வகுப்பின் வரலாற்று நலனும் கடனும் ஆகும்.

இலெனின் சொன்னார்:
“மார்க்குசும் எங்கெல்சும் தொழிலாளர் வகுப்புக்கு ஆற்றிய சேவை என்ன? சுருங்கச் சொல்லின் தொழிலாளர் வகுப்பு தன்னை அறியவும் தன்னை உணரவும் கற்றுத் தந்தார்கள். கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தினார்கள்.”

முதலிய (முதலாளித்துவ) அமைப்பின் கமுக்கத்தை விண்டுரைக்க மார்க்குசு பயன்படுத்திய வழிமுறை மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். பொதுமைக் கட்சியின் கொள்கையறிக்கை (COMMUNIST MANIFESTO) இப்படித் தொடங்குகிறது: “ஏடறிந்த வரலாறு அனைத்தும் வகுப்புப் போராட்டங்களின் வரலாறே ஆகும்”.

குமுக வகுப்புகளிடையிலான முரண்பாடுதான் வரலாறு நெடுகிலும் வளர்ச்சியின் உந்தல், இந்த முரண்பாடுகள் முற்றித்தான் புரட்சிகள் வெடிக்கின்றன, குமுக மாற்றங்கள் நடக்கின்றன, இந்தக் குமுக மாற்றங்களின் வேர்க் காரணங்கள் பொருளாக்கத்திலும் பங்கீட்டிலுமான மாற்றங்களே என்பது மார்க்குசியக் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் ஆய்வுமுறைக்கும் அடிப்படை ஆகும்.

வகுப்புப் போராட்டம் என்பதைக் குறுக்கி தேசியப் போராட்டங்களுக்கு உரிய அழுத்தம் தராதாரும் உளர். ஆனால் தொழிலாளர் வகுப்பு தன்னைத் தேசமாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமை அறிக்கை கூறுவதன் ஆழ்பொருளை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. அதனால்தான் அறிக்கையின் முத்தாய்ப்பையே திரித்து “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்று முடிக்கின்றார்கள். “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்பதுதான் உண்மையான இறுதி முழக்கம். இரண்டுக்குமான வேறுபாடு எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்கதே.

பொதுமை அறிக்கை என்ற அந்தச் சின்னஞ்சிறிய நூல் முழுவதுமே மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சுடர்மிகு செயல்விளக்கமாகத் திகழ்கிறது.

மார்க்குசிய ஆய்வுமுறை நேரான வகுப்புப் போராட்டங்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் உரிய அறிந்தேற்பு வழங்குகிறது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆதிக்கத்தை வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கம் என்றும், இனஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய விடுதலைப் போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவியது. இன்றைய இசுரேலின் சீயோனிய அரசு வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கத்தைக் குறிக்கும் இன ஒதுக்கல் ஆட்சி என்றும், பாலத்தீன மக்களின் போராட்டத்தைத் தேசியத் தன்தீர்வுக்கும் தேசிய விடுதலைக்குமான போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவுகிறது. இசுரேல்-பாலத்தீனப் பூசலுக்கு மதங்களிடையிலான பூசல் ஒரு வரலாற்றுக் காரணமாகத் தோன்றினாலும், மெய்யான வேர்க் காரணம் வல்லரசியங்களின் விரிவாளுகை நலனே என்பதைப் புரிந்து கொள்ளவும், இந்தப் பூசலுக்கு நிலையான அரசியல் தீர்வு காணவும் மார்க்சிய ஆய்வுமுறை வழிகாட்டுகிறது.

இந்துத்துவத்தை இந்து மதம் என்று நம்பப்படும் மத நம்பிக்கைகளிலிருந்து வேறுபடுத்திக் காணவும், இந்துத்துவ அரசியலின் பார்ப்பனிய உள்ளடக்கத்தைக் கண்டுணரவும், வகுப்பு வகையிலும் சாதி வகையிலும் அதன் பார்ப்பன-பனியா-பெருமுதலிய ஆளும் வகுப்புச் சார்பைத் தோலுரித்துக் காட்டவும் மார்க்சிய ஆய்வுமுறை துணைசெய்கிறது.

முதலிய வளர்ச்சிக்கும் இயற்கைச் சூழல் அழிவுக்குமான நெருங்கிய தொடர்பை மார்க்சிய ஆய்வுமுறை துலக்கமாக வெளிப்படுத்துகிறது. முதலியம் நிலத்தைக் கொள்ளையிடுவதாகவே மார்க்சு சொல்கிறார்:

“…முதலிய வேளாண்மையில் முன்னேற்றம் என்பதெல்லாம் தொழிலாளரை மட்டுமல்லாமல் மண்ணையும் கொள்ளையிடும் கலையிலான முன்னேற்றம்தான். குறிப்பிட்ட காலத்திற்கு மண்வளத்தைப் பெருக்குவதிலான முன்னேற்றம் என்பதெல்லாம் அந்த வளத்தின் நீடித்து நிலைக்கும் தோற்றுவாய்களைச் சிதைப்பது நோக்கிய முன்னேற்றம்தான்… முதலியப் பொருளாக்கம் செல்வமனைத்தின் மூலத் தோற்றுவாய்களான மண்ணையும் தொழிலாளரையும் உறிஞ்சித்தான் தொழில்நுட்பம் வளர்க்கிறது.”

மாந்தருக்கும் சுற்றுச் சூழலுக்குமான இயங்கியல் உறவை மார்க்சிய ஆய்வுமுறை வெளிப்படுத்துகிறதுமாந்தர் சுற்றுச்சூழல் மீது செயல் புரிவது போலவே சுற்றுச் சூழலும் மாந்தர் மீது செயல் புரிகிறது. எப்படி நீருக்கு வெளியே மீனால் உயிர்வாழ முடியாதோ, அதே போல் சுற்றுச் சூழலுக்கு வெளியே மாந்தரால் உயிர்வாழ முடியாது. மாந்தர்தம் உடனடி நன்மைக்காக சுற்றுச்சூழலைச் சிதைக்கலாம் என்பது எவ்வளவு விபரீதம்! இந்த விபரீதத்தை அறிவியல் வழியில் வெளிப்படுத்துவது மார்க்சிய ஆய்வுமுறையே!

கொடும் போர்களாலும், காலநிலை மாற்றத்தாலும், முதலிய ஈட்ட வெறியின் வரம்பற்ற பெருக்கத்தாலும் உலகம் பேரழிவு நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணரவும், இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவும் இன்றைய உலகப் பொருளியலையும் அரசியலையும் பகுத்தாய மார்க்சிய ஆய்வுமுறையே நமக்குத் துணை!


பின்குறிப்பு:

இந்தக் கட்டுரையில் இடம்பெறும் புதிய கலைச்சொற்கள்:

[சொல்லடிப்போம் வாங்க!]

புதிய தமிழ் (பழைய தமிழ்) – ENGLISH)



1) மார்க்குசிய ஆய்வுமுறை – THE MARXIST METHOD;
2) குமுக மாற்றம் (சமூக மற்றம்) – SOCIAL CHANGE;
3) பொருண்மியம் (பொருள்முதல் வாதம்) – MATERISLAISM;
4) கருத்தியம் (கருத்துமுதல்வாதம்) – IDEALISM;
5) இயங்கியல் பொருண்மியம் (இயக்கவியல் பொருள்முதல்வாதம்) – DIALECTICAL MATERIALISM;
6) வரலாற்றுப் பொருண்மியம் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம்) – HISTORICAL MATERIALISM;
7) முதலியம் (முதலாளித்துவம்) – CAPITALISM;
8) குமுக வகுப்புகள் (சமூக வருக்கங்கள்) – SOCIAL CLASSES;
9) வகுப்புப் போராட்டம் (வருக்கப் போராட்டம்) – CLASS STRUGGLE;
10) படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) – EVOLUTION;
11) வாழ்நிலை – BEING;
12) உணர்வுநிலை – CONSCIOUSNESS;
13) ஆக்கம் (உற்பத்தி) – PRODUCTION;
14) உழைப்பின் இலக்குப் பொருள் – OBJECT OF LABOUR;
15) உழைப்புக் கருவி – INSTRUMENT OF LABOUR;
16) ஆக்கப் பொறிகள (உற்பத்திச் சாதனங்கள்) – MEANS OF PRODUCTION;
17) ஆக்க ஆற்றல்கள் (உற்பத்திச் சக்திகள்) – FORCES OF PRODUCTION;
18) ஆக்க உறவுகள் (உற்பத்தி உறவுகள்) – RELATIONS OF PRODUCTION;
19) பொதுமைக் கட்சி அறிக்கை (பொதுமை அறிக்கை) – MANIFESTO OF THE COMMUNIST PARTY (COMMUNIST MANIFESTO);
20) குமுக அமைப்பு (சமூக அமைப்பு) – SOCIAL SYSTEM;
21) குமுகப் புரட்சி (சமூகப் புரட்சி) – SOCIAL REVOLUTION;
22) தொல் பொதுமைக் குமுகம் (ஆதிப் பொதுவுடைமைச் சமூகம்) – PRIMITIVE COMMUNIST SOCIETY;
23) அடிமையுடைமைக் குமுகம் (அடிமையுடைமைச் சமூகம்) – SLAVE-OWNING SOCIETY;
24) கிழாரியக் குமுகம் (பிரபுத்துவ / நிலப்பிரபுத்துவ) சமூகம்) – FEUDAL SOCIETY;
25) அடித்தளம் – BASE;
26) மேற்கட்டுமானம் – SUPERSTRUCTURE;
27) புறஞ்சார்ந்த குமுக நெறிகள் (புறவய சமூக விதிகள்) – OBJECTIVE SOCIAL LAWS;
28) சுற்றுச் சூழல் – ENVIRONMENT;
29) காலநிலை மாற்றம் – CLIMATE CHANGE;
30) முதலிய ஈட்டம் (முதலாளித்துவ இலாபம்) – CAPITALIST PROFIT;
31) முதலிய வேளாண்மை (முதலாளித்துவ விவசாயம்) – CAPITALIST PROFIT.
32) ஊழ்வினைக் கொள்கை (தலைவிதித் தத்துவம்) – FATALISM;
33) தன்-தீர்வு (சுய நிர்ணயம்) – SELF-DETERMINATION.

தோழர் தியாகு
தாழி மடல் 413

(தொடரும்
)


திங்கள், 1 ஜனவரி, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : கைச் சரக்கா மார்க்குசியம்?

      01 January 2024      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கைச் சரக்கா மார்க்குசியம்?

மார்க்குசுக்கு அடிக்கடித் தேர்வு வைக்கின்றனர். எந்த ஒரு சிக்கலுக்கும் மார்க்குசிய வழியில் தீர்வு காண்பது பற்றிய கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. இசுரேல்-பாலத்தீனத்தின் மீத இசுரேல் நடத்தி வரும் இனவழிப்புப் போரைப் மார்க்குசிய வழியில் புரிந்து கொள்வதும் விளக்குவதும் எப்படி? இந்தியாவில் பாசிச பாசகவை எதிர்ப்பதற்கு மார்க்குசியம் வழிகாட்டுமா? குமுகிய நாடுகள் எனப்பட்டவற்றில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும் தோல்விகளுக்கும் மார்க்குசியம் தரும் விளக்கம் என்ன? பொதுமைக் குமுகம்பற்றிய மார்க்குசியத்தின் நம்பிக்கை மாறாதுள்ளதா? இப்படிப் பல கேள்விகளை நான் செல்லும் இடமெல்லாம் சந்திக்கிறேன்.

ஒன்றைத் தெளிவாக்க விரும்புகிறேன்: மார்க்குசியத்தைச் ‘சர்வரோக சஞ்சீவி’யாக நான் கருதவில்லை. தெளிவுள்ள மார்க்குசியர்கள் யாரும் அப்படிக் கருதவில்லை. அது அனைத்து நோய்களுக்குமான அருமருந்து அன்று. அதே போது தங்கள் தோல்விகளுக்கான பழியை மார்க்குசியத்தின் மீது சுமத்தி “மார்க்குசியக் கைச்சரக்கு” என எள்ளி நகைப்போரை வெறுத்து ஒதுக்குவது தவிர எனக்கு வேறு வழியில்லை.

மற்ற வகையில் மார்க்குசியர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்ளாத சில வரலாற்றாசிரியர்கள் கூட மார்க்குசியத்தைத் தமது ஆய்வுமுறையாகக் கொள்ளக் காண்கிறோம்.

ஆனால் மார்க்குசிய ஆய்வுமுறை என்பது என்ன? அதைத் துல்லியமாக வரையறுத்துச் சொல்ல முடியாதா? எப்படியும் எது மார்க்குசிய ஆய்வு முறை? எது மார்க்குசிய ஆய்வுமுறை இல்லை? மார்க்குசிய ஆய்வுமுறை தொடர்ச்சியான மாற்றத்தை வலியுறுத்துகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் மாற்றங்களுக்கு நடுவில் மாற்றமில்லாமல் தொடரும் சில அடிப்படைகளை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. மார்க்குசிய ஆய்வு முறையிலும் அவ்வாறான அடிப்படைகளைக் கண்டு தெளியலாம் என நம்புகிறேன். மார்க்குசிய ஆய்வுமுறையின் அடிப்படைகள் சிலவற்றைத் தெளிந்துரைக்க முயல்கிறேன்.


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மார்க்குசிய ஆய்வுமுறையின் அடிப்படைகள்

“அறிஞர்கள் உலகத்தைப் பலவாறு விளக்க மட்டுமே செய்துள்ளனர்; ஆனால் அதனை மாற்றுவதுதான் முகன்மையானது” என்றார் காரல் மார்க்குசு. மார்க்குசிய ஆய்வுகளின் நோக்கம் உலகை மாற்றியமைப்பதாகும். குமுக மாற்றமே மார்க்குசியத்தின் குறி. இதற்கான ஒரு கருவியே மார்க்குசிய ஆய்வுமுறை.

மார்க்குசிய ஆய்வுமுறை இயங்கியல் பொருண்மியத்தையும் (dialectical materialism) வரலாற்றுப் பொருண்மியத்தையும் (historical materialism) அடிப்படையாகக் கொண்டது. வாழ்நிலைதான் உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்பதே பொருண்மியத்தின் சாறமாகும். “விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கும் செருமானியக் கருத்தியலுக்கு நேர்மாறாக நாங்கள் மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏறுகிறோம்” என்று மார்க்குசும் எங்கெல்சும் அறிவித்துக் கொண்டார்கள்.

இயற்கை அறிவியலர் சார்லசு தார்வின் உயிரியல் படிமலர்ச்சியின் நெறிகளைக் கண்டுரைத்தார். குமுக அறிவியலர்கள் காரல் மார்க்குசும் பிரெடெரிக் மார்க்குசும் மாந்தக் குமுக வரலாற்றின் வளர்ச்சி நெறிகளைக் கண்டுரைத்தனர். வரலாற்றில் நிகழும் மாற்றங்களுக்கு என்ன காரணம்? குமுக மாற்றங்களும் புரட்சிகளும் போர்களும் எங்கிருந்து வருகின்றன? உடனடிக் காரணங்களும் தற்செயல் காரணங்களும் பற்பலவாக இருக்கலாம். ஆனால் உண்மையான அடிப்படைக் காரணம் என்ன?

எக்காலத்திலும் எக்குமுகத்திலும் மாந்தருக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் வசிக்க உறையுள்ளும் ஆகிய இன்றியமையாத் தேவைகள் உள்ளன. இவற்றோடு கூட நாகரிக வளர்ச்சியைப் பொறுத்து வேறு பல தேவைகளும் எழுகின்றன. இந்தத் தேவைகள் அளவிலும் பண்பிலும் வளர்ந்து சென்ற வண்ணமுள்ளன. இவற்றை மாந்தர்கள் இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையும் உழைப்புமே செல்வமனைத்துக்கும் அடிப்படைகளாகும்.

இயற்கையில் கிடைப்பவற்றைத் தமக்கு வேண்டியவாறு உழைப்பைக் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செயலையே ஆக்கம் (உற்பத்தி) என்றழைக்கிறோம். வெறுங்கையால் ஆக்கம் செய்ய இயலாது என்பதால் உழைப்புக் கருவிகள் தேவை. உழைப்பின் இலக்குப் பொருட்களையும் உழைப்புக் கருவிகளையும் சேர்த்து ஆக்கப் பொறிகள் என்கிறோம். ஆக்கப் பொறிகளையும் ஆக்கம் செய்யும் ஆக்குநர்களையும் சேர்த்து ஆக்க ஆற்றல்கள் என்கிறோம். ஆக்கத்தில் ஈடுபடும் மாந்தர்களுக்கிடையிலான உறவுகளே ஆக்க உறவுகளாகும். ஆக்க ஆற்றல்களும் (forces of production) ஆக்க உறவுகளும் (relations of production) சேர்ந்ததே ஆக்க முறை (mode of production) ஆகும். ஒவ்வொரு குமுக அமைப்பும் பொருளாக்க முறையை, அதாவது பொருளியல் அமைப்பை அடித்தளமாகக் கொண்டு இயங்குகிறது.

குமுக அமைப்பின் அடித்தளமாகப் பொருளியல் அமைப்பும், மேற்கட்டுமானமாக அரசியல், சட்டம், கலை இலக்கியம், பண்பாடு போன்றவையும் உள்ளன. குமுகத் தேவைகள் ஓயாமல் வளர்ந்து செல்வதால் ஆக்க ஆற்றல்கள் மாறவும், அதனடிப்படையில் ஆக்க உறவுகள் மாறவும் வேண்டியுள்ளது. பொருளியல் அடிப்படை மாறும் போது ஏறக்குறைய அதற்கேற்ப அரசியல், சட்டம், கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றமே குமுக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படையாகும். குமுக அமைப்பு மாறுவதே குமுகப் புரட்சியாகும்.

ஆனால் பொருளியல் அடித்தளத்துக்கும் அரசியல், பண்பாடு உள்ளிட்ட மேற்கட்டுமானத்துக்குமான உறவைக் கொச்சையாகவும் எந்திரத்தனமாகவும் புரிந்து கொண்டு விடக் கூடாது என்று மார்க்குசிய மூலவர்கள் எச்சரித்தார்கள். மேற்கட்டுமானம் ஒப்பளவில் பொருளியல் அடித்தளத்திலிருந்து தற்சார்பாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த அடித்தளத்தின் மீது எதிர்வினையும் புரிகிறது. பொதுவாக அரசியல் புரட்சிகளே பொருளியல் அமைப்பின் அடிப்படை மாற்றத்துக்கு வழியமைத்துக் கொடுக்கின்றன. அரசியல் மாற்றங்களில் கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றுக்குள்ள பங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மார்க்குசிய ஆய்வுமுறையில் குமுக வளர்ச்சியை ஆய்வு செய்யும் போது முதன்மையான ஐந்து குமுகப் பொருளியல் அமைப்புகளாக அறியப்படுகிறவை: (1) தொல்பொதுமைக் குமுகம், (2) அடிமையுடைமைக் குமுகம், (3) கிழாரியக் குமுகம், (4) முதலிய அல்லது முதலமைக் குமுகம், (5) பொதுமைக் குமுகத்தின் முதற்கட்டமாகிய குமுகியக் குமுகம். இந்த ஐந்தைத் தவிர வேறு குமுக அமைப்புகளே இல்லை என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவை தவிர இடைநிலை அல்லது மாறுநிலை வடிவங்களும், ஒன்றுக்கு மேற்பட்டவை கலந்த வடிவங்களும் இருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக, சாதியப் பொருளாக்க முறையில் அதற்கேயுரிய கூறுகளோடு அடிமையுடைமை, கிழாரியம், முதலியம் ஆகியவற்றின் கூறுகளும் கலந்து காணப்படுகின்றன.

எந்த ஒரு குமுகத்தையும் நிலைத்து நிற்கிற ஒன்றாக அல்லாமல் இயக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கிற ஒன்றாக அணுகக் கோருவதாகும் மார்க்குசிய ஆய்வுமுறை. வரலாற்றுப் பொருண்மியம் என்பது வரலாற்றுக்கு இயங்கியல் பொருண்மியத்தை அல்லது பொருண்மிய இயங்கியலைப் பொருந்தச் செய்வதாகும்.

கற்பித்துக் கொண்ட புனிதமான சில பேருண்மைகளுக்கேற்ப மெய்ந்நடப்புகளை வளைக்காமல், மெய்ந்நடப்புகளிலிருந்து உண்மைகளை அடைய வலியுறுத்துவதாகும் மார்க்குசிய ஆய்வுமுறை. மெய்ம்மைகளிலிருந்து உண்மையை அடைதல் (From facts to truth) என்பார் இலெனின். தரவுகளிலிருந்து முடிவுகளுக்கு என்றும் இதைச் சொல்லலாம்.

தோழர் தியாகு
தாழி மடல் 413

(தொடரும்)