அனைத்திந்திய

சிறுவர் எழுத்தாளர் சங்கம்  தொடக்க விழா

 அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.
       இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார்.
    கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
       அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன் கருத்துரை வழங்கினார். குழந்தை எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் புதல்வர் அழகப்பன், அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தைத் தொடக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
      ‘இதயத் தும்பி’ சிறுவர் இதழை கவிஞர் மு.முருகேசு வெளியிட, ஆதித்தியா வித்யாமந்திர் பள்ளித் தாளாளர் பஞ்சமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
   பின்னர் நடைபெற்ற ‘சிறுவர் உலகமும் கவிதையும்’ எனும் தலைப்பிலான கவியரங்கில் கவிஞர் மு.முருகேசு தலைமையில், கவிஞர்கள் பாலக்கிருட்டிணன் வண்ணமுத்து, மல்லிகை தாசன், துரை.நந்தகுமார், வானவன், சென்சி, இரா.நாகராசன் ஆகியோர் கவிதை படைத்தனர்.
      கவிஞர் இராய.செல்லப்பாவின் கவிதையை அவரது மகள் அருச்சனா, பேரன் கந்தா செய், பேத்தி சம்பிரதா ஆகியோர் பாடலாகப் பாடினர்.
      குமாரராசத முத்தையா அரசு மேனிலைப்பள்ளி, பள்ளிக்கரணை ஆதித்தியா வித்யாமந்திர் பள்ளி மாணவ- மாணவிகளின் பாடல், உரையரங்கம் நடைபெற்றன.
     விழாவில், குழந்தை எழுத்தாளர் காந்தலெட்சுமி சந்திரமெளலி, புதுகை இராசேந்திரன், கு.இராமச்சந்திரன் முதலான ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
     நிறைவாகக், கவிஞர் குடந்தை பாலி நன்றி கூறினார்.