திங்கள், 1 ஜூலை, 2013

மருத்துவர்கள் நாள்

 வாழும் கடவுள்கள்-இன்று மருத்துவர்கள் நாள்

உடலில் குறை என்றால் நாம் உடனடியாக ச் செல்வது டாக்டரிடம். அவர்களது பணி மதிப்பு மிக்கது. எந்த நேரத்தில் சென்றாலும் டாக்டர்கள், மருத்துவ சேவை அளிக்கின்றனர். இவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அவர்களது அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஜூலை 1ம் தேதி, தேசிய டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பி.சி.ராய் பிறந்த தினம், தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பி.சி.ராய்:

மேற்கு வங்கத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என பல துறைகளில் பிறருக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார். 1882ல் பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார். பாட்னா கல்லூரியில் பி.ஏ., முடித்துவிட்டு கோல்கட்டாவிலும், பிரிட்டனிலும் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இந்தியாவுக்கு திரும்பியதும் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். "சுதந்திரம் எனும் கனவு நிறைவேற, இந்தியர்களுக்கு வலிமையான உடலும், மனமும் தேவை' என்பது பி.சி.ராயின் நம்பிக்கை. இதனால் ஏழைகளுக்காக, பல ஆஸ்பத்திரிகளை தொடங்கினார். 1948ல் மேற்கு வங்க முதல்வர் ஆனார். இவருக்கு 1961ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை செய்பவர்களுக்கு, "பி.சி.ராய் தேசிய விருது' வழங்கப்படுகிறது.

எப்போது விடிவு:

டாக்டர்கள் தினம் கொண்டாடும் வேளையில், இந்தியாவில் இன்னமும் பல கிராமங்கள், ஆரம்ப சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, அப்பகுதி மக்கள் 10 கி.மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். எனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில், குறைந்தது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். டாக்டர்களும் கிராமப்புறங்களில் பணி செய்ய முன் வரவேண்டும். நோயாளிகள், டாக்டர்கள் விகிதம் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. மாணவர்கள் அதிகளவில் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்க வசதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மனத்தை விட்டு அகலாத மருத்தவ அனுபவங்கள்:

"எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று கையெடுத்து கும்பிட்டு, கண்ணீர் விட்டு கதறுவோம். "எங்க குடும்பத்தையே காப்பாத்திட்டீங்க' என்று ஆனந்தக் கண்ணீருடன் காலில் விழுவோம்.இவை எல்லாம் யாரிடம் சொல்வோம்? கடவுளின் பிரதிநிதிகளாக நாம் மதிக்கும் டாக்டர்களிடம் தான்!கடவுளிடமும், உயிர் காக்கும் டாக்டர்களிடமும் சோகத்தையும், சந்தோஷத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொள்வோம். அழகை ஆராதிப்பது மனித இயல்பு. அந்த அழகைத் தாண்டி உடலில் ஏற்படும் மாற்றங்களை, நோயின் கொடுமைகளை அலசி ஆராய்வது, தெய்வ இயல்பு. அசுத்தம், அருவருப்பு பாராமல், அலட்சியம் செய்யாமல், அன்பு பாராட்டி அரவணைக்கும் மனித தெய்வங்கள், மருத்துவம் படித்த டாக்டர்களே.விபத்தில் அடிபடும் விலைமதிப்பில்லா உயிர்களுக்காக... திடீர் விபரீதத்தை சந்திக்கும் நோயாளிகளுக்காக... தங்களது 24 மணிநேரத்தையும் விழிப்போடு, செலவிடத் தயாராக இருப்பவர்கள் இவர்கள்.ஒவ்வொரு நோயாளியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான், டாக்டர்களின் பிரார்த்தனை. பிரார்த்தனையைத் தாண்டி, தங்களை பிரமிக்க வைத்த மருத்துவ அனுபவங்களை, "மருத்துவர்கள் தினமான' இன்று, நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்,

கட்டியுடன் வளர்ந்த குழந்தை :

எஸ்.லலிதா, மகப்பேறு நிபுணர், மதுரை:
மற்ற துறைகளில் நோயாளி ஒருவர் தான், அவருக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். மகப்பேறு துறையில் ஓருயிரை, ஈருயிராக நல்லபடியாக காப்பாற்ற வேண்டும். என் அனுபவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளேன். சிலமாதங்களுக்கு முன், வெளியூரைச் சேர்ந்த கர்ப்பிணியை என்னிடம் அழைத்து வந்தனர். அந்தப்பெண் ஐந்துமாத கர்ப்பமாக இருந்தபோது, "ஸ்கேன்' பார்த்ததில், குழந்தையுடன் பெரிய கட்டியும் இருந்ததை, கண்டுபிடித்தனர். முதல் பிரசவம் என்பதால், அங்கிருந்து என்னிடம் அனுப்பி வைத்தனர். அந்தபெண்ணின் ஒரு சினைப்பையில் மிகப்பெரிய கட்டி இருந்தது. அந்த கட்டி திரும்புவதற்கு வாய்ப்பு அதிகம் இருந்தது. அப்படித் திரும்பினால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கரு கலைந்து விடும். ஐந்தாம் மாதத்தில் இருந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை, மருத்துவமனைக்கு வரவழைத்தேன். அப்பெண்ணுக்கு வயிறு மிகப் பெரியதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக கட்டி திரும்பவில்லை. ஆனால் சுகப்பிரசவத்தின் போது பிரச்னை ஏற்படலாம் என்பதால், முன்கூட்டியே தேதி நிச்சயித்து அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தையை வெளியே எடுத்தோம். அதன்பின், சினைப்பையுடன் சேர்த்து கட்டியை அகற்றினோம். குழந்தையின் எடை 2.800 கிலோ தான். ஆனால் கட்டி 3 கிலோ எடையுள்ளதாக இருந்தது. ஒரு சினைப்பையை அகற்றினாலும், மற்றொரு சினைப்பையின் மூலம் அப்பெண் குழந்தை பெற முடியும். குழந்தையை வெளியே எடுத்தபின் தான், எனக்கு நிம்மதியாக இருந்தது. பேச 98421 33144
 
24 முறை "எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்தோம் :

எஸ். சீனிவாசன், இருதய சிகிச்சை நிபுணர், மதுரை:
அந்த மனிதருக்கு 65 வயதிருக்கும். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, என்னிடம் அழைத்து வந்தனர். அவருக்கு ஆறு மாதத்திற்கு முன்பே, இருதயத்திற்கு செல்லும் இடது ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, "ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பைத் (மயோ கார்டியல்) தாண்டி அடுத்த நிலைக்கு (கார்டியாக் அரஸ்ட்)சென்று விட்டார். அடுத்த மூன்று நிமிடங்களில் அவருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால், மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைந்து விடும். அதிகபட்சமாக பத்து நிமிடங்களுக்குள் நினைவு திரும்பச் செய்தாலும், மூளையில் ஆக்ஸிஜன் குறைவால் சேதம் ஏற்படும். இவருக்கு 40 நிமிடங்கள் வரை, பிரச்னை நீடித்தது. 5 முறை "எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்தாலே, சரியாகி விடுவர். இவருக்கு 24 முறை "ஷாக்' கொடுத்தோம். அதுமட்டுமல்ல, கையால் வைத்து இருதயத்தை அழுத்தி, செயல்பட வைக்க குழுவாக முயற்சி செய்தோம். 40 நிமிடங்களைத் தாண்டி, அதிர்ஷ்டவசமாக பிழைத்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவரது மூளையில் செல்கள் பாதிக்கப்படவில்லை. நல்ல நினைவோடு, ஐந்தாம் நாள் துள்ளி குதித்து வீட்டுக்குச் சென்றார். என் மருத்துவ வாழ்க்கையில் நான் சந்தித்த, அதிசய நோயாளி இவர். பேச 98430 51402

மார்பு எலும்புகள் நுரையீரலை கிழித்தன :

என்.மோகன வெங்கட்ராமன், பொது அறுவை அறுவை சிகிச்சை நிபுணர், தேனி
:36 ஆண்டு மருத்துவ சேவையில் ஏராளமானோரை காப்பாற்றி உள்ளேன். 25 ஆண்டுகளுக்கு முன், மருத்துவத் துறையில் பெரிய அளவில் வசதிகள் இல்லை. சீலையம்பட்டியை சேர்ந்த முனியாண்டி என்பவர், பஸ்சில் இருந்து இறங்கும் போது, இரண்டு பஸ்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். மார்பும், முதுகும் நொறுங்கியது.இதயம், கல்லீரல் நசுக்கப்பட்ட நிலையில், மார்பு எலும்புகள் ஒடிந்து, அவரது நுரையீரலை குத்தி கிழித்திருந்தன. மிக ஆபத்தான நிலையில், அவரைக் கொண்டு வந்து சேர்த்தனர். வெளிக்காற்றும் புகுந்து நுரையீரல், பலூன் போல் பெரிதாக இருந்தது. அவருக்கு, சிகிச்சை அளிப்பது சவாலான விஷயமாக இருந்தது. மார்பில் இரண்டு பக்கமும் துளையிட்டு, பைப் மாட்டி நுரையீரலுக்குள் நுழைத்து, அந்த பைப்பின் மறுபகுதியை வாளி தண்ணீருக்குள் மூழ்க வைத்து, நுரையீரலுக்குள் இருந்த காற்றை வெளியேற்றினேன். சில நாட்களில், நோய்த் தொற்று ஏற்பட்டு, நெஞ்சு முழுவதும் சீழ் பிடித்து விட்டது. அந்த காலத்தில் அவரை காப்பாற்றியது சாதனை. தற்போதும் அவர் நல்ல உடல் நலமுடன், வேலை செய்கிறார். போன்: 90470 06573.
சந்தேகத்தால் கணவர் பிரிந்து விட்டார் :

கே.மகாலட்சுமி, மனநல டாக்டர், திண்டுக்கல் :ஒரு நாள் இரவு 11 மணிக்கு வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டது. வெளியில் ஒரு கன்னியாஸ்திரியுடன், 35 வயது பெண்ணும் நின்றார். "அன்று காலையில் தான் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், மயிரிழையில் காப்பாற்றியதாகவும்' கன்னியாஸ்திரி கூறினார். இவரின் சந்தேக புத்தியால், கணவர் பிரிந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார். இரண்டு குழந்தைகள் ஆதரவற்று, தவித்ததும் தெரிய வந்தது. அந்த இரவிலேயே மனநலம் தொடர்பான சிகிச்சையை துவக்கினேன். இப்போது அந்த பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.பெரும்பாலானோர், தங்களைப் பற்றிய தாழ்வுணர்ச்சியால், மன அழுத்தம் ஏற்பட்டு ஒருசில நொடிகளில், வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். அவர்களின் பிரச்னைகளை பொறுமையாக கேட்டு, ஆறுதலான வார்த்தைகளை கூறினால், தற்கொலைகளை தடுத்து விடலாம். பேச- 97860 41477.

வலியில்லை வயிறு பெரிதாக இருந்தது:

டாக்டர் எஸ்.முத்துலட்சுமி, மகப்பேறு நிபுணர், விருதுநகர்
எட்டு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. 15 வயது சிறுமி, நிமிர்ந்து படுக்க முடியாமல், மூச்சுவிட சிரமப்படுவதாக, அவரது தாய் அழைத்து வந்தார். ஆனால் வலியில்லை. அந்தப் பெண்ணின் வயிறு ஏழுமாத கர்ப்பிணியின் வயிறைப் போல் பெரிதாக இருந்தது. அந்த பெண்ணுக்கு ஆறுமாதங்களாக வயிறு பெரிதாகி கொண்டே வந்திருக்கிறது. பர்தா அணிந்திருந்ததால் பெற்றோருக்கு தெரியவில்லை. ரொம்பவும் பெரிதாக வெளியே தெரிந்தபின்பே, தாய் பயந்திருக்கிறார். உடனடியாக "ஸ்கேன்' செய்த போது, சினைப்பையில் 4.50 கிலோ எடையுள்ள நீர்க்கட்டி இருந்தது. அறுவை சிகிச்சை மூலம், சினைப்பையில் துளையிட்டு, அதிலிலுள்ள 5 லிட்டர் நீரை வெளியே எடுத்தேன். அதன்பின், அந்த சினைப்பையை அகற்றினேன். தற்போது அந்த சிறுமி, நன்றாக இருக்கிறாள். போன்: 93446 06044.

கைவிளக்கு வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை:

ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், பொது அறுவை சிகிச்சை நிபுணர், சிவகங்கை:
சென்னையில், எம்.எஸ்., முடித்து, திருவண்ணாமலை, கும்மனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்தேன். எட்டு மாத கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சையின் மூலம், குறைப்பிரசவம் பார்த்தேன். குழந்தையை வெளியில் எடுத்தபின், அப்பெண்ணின் நஞ்சை எடுக்க தாமதமானது. ரத்தப்போக்கு தொடர்ந்தது. அந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற வேறு வழியில்லை. கைவிளக்கு வெளிச்சத்தில், நஞ்சை வெளியில் எடுத்தேன். அன்று அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மறுநாள், அந்த கிராமத்தினர் திரண்டு வந்து நன்றி கூறினர். இந்த நன்றி வேறு யாருக்கும் கிடைக்காது. வசதி, கட்டமைப்பு, கருவிகள் குறைவு, என்பதை காரணம் காட்டாமல், இருக்கிற வசதியை வைத்து, சிறப்பான சேவையை டாக்டர்கள் அளிக்க வேண்டும். போன்: 99433 39995.

குழந்தையை த் தேள் கடித்தது :

ஆர்.முத்துமாரி, குழந்தைகள் நல நிபுணர், ராமநாதபுரம் :
சில மாதங்களுக்கு முன், ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்தேன். ஒரு தாய், தன் மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிவந்தார். குழந்தை, தொடர்ந்து அழுது கொண்டும், அதிகமாக வியர்த்து கொண்டும் இருந்தது.உடன் வந்தவர்கள், "வயல்வெளியில் குழந்தையை உட்கார வைத்துவிட்டு, வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்தோம். குழந்தை திடீரென அழுதது. பசிக்காக அழுவதாக நினைத்தோம். தொடர்ந்து அழுது மயக்கமுற்று கீழே விழுந்தது. என்னவென்று தெரியவில்லை' என்றனர். குழந்தையை பரிசோதித்த போது, தேள் கடித்த அறிகுறி தெரிந்தது. விஷத்தை போக்க சிகிச்சை அளித்து, அரை மணி நேரத்தில், குழந்தையை சகஜநிலைக்கு வர வைத்தேன். குழந்தையின் தாயும், கிராமத்தினரும், "குலதெய்வம் போல இருந்து குழந்தையை காப்பாற்றியுள்ளீர்கள். மறக்கமாட்டோம்' என கும்பிட்டனர். போன்: 93450 61119.



 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக