திங்கள், 13 மே, 2013

கோடையில் அறுவடை செய்யலாம்!

கோடையில் அறுவடை செய்யலாம்!

கோடையில், நம் தாகத்தை குறைக்கும் தண்ணீர்ப் பூசனி, விவசாயம் பற்றி கூறும், விவசாயி இராசேந்திரன்: நான், கடலூர் மாவட்டத்தில் உள்ள, அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன். சொட்டு நீர் பாசனத்தின் மூலம், தர்பூசணி விவசாயம் செய்யலாம் என்பதால், குறைந்தபட்ச நீர் ஆதாரம் இருந்தாலே போதும். தர்பூசணியை, எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். ஆனால், அதிக குளிர்ச்சி மற்றும் அதிக வெயில் காலங்களில், நோய் பாதிப்பு ஏற்படுவதால், ஜனவரி முதல், ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பயிரிட்டால், நல்ல பலன் கிடைக்கும். ஏக்கர் ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். தர்பூசணி, ஒரு குறுகிய கால பயிர் என்பதால், தினமும் அதன் வளர்ச்சியை கணக்கிடுவது அவசியம். ஏனெனில், விதை ஊன்றிய, 90 நாட்களிலேயே அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு, 5 டன் தொழு உரமிட்டு, இரு முறை நிலத்தை உழுது, சொட்டு நீர் பாசனத்திற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டும். வரிக்கு வரி, 6 அடி அகலமும், செடிக்கு செடி, 2 அடி இடைவெளியும் விட்டு, ஒரு அடி ஆழத்தில் குழி எடுத்து, ஏக்கருக்கு, 25 கிலோ பொட்டாஷ், 50 கிலோ, டி.ஏ.பி., உரங்கள், வேர் புழுக்களை தடுக்க, 8 கிலோ போரைட் கலந்து, ஒவ்வொரு குழிக்குள்ளும் சமஅளவில் போட்டு, மூட வேண்டும்.பின், குழிக்கு, 3 விதைகள் என்ற வீதத்தில், 1 அங்குலம் ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

ஊன்றிய ஒரு வாரத்தில், செடிகளாக வளர்ந்து வரும். சரியாக வளராத செடியை, குழிக்கு ஒன்று என்ற வீதத்தில் அகற்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 200 கிராம் விதைகள் போதுமானது. விதை விதைத்த, 45ம் நாளிலிருந்து, தர்பூசணி காய்கள் பழுக்க ஆரம்பித்து, 60 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தது, 10 முதல், 15 டன் வரை அறுவடை செய்யலாம். தர்பூசணி, கோடை கால சீசனுக்கு ஏற்ற பயிர் என்பதால், வெயில் காலங்களில் இதன் தேவை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. ஒரு கிலோ தர்பூசணியை, குறைந்தபட்சம், 6 ரூபாய்க்கு விற்றால் செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம்.தொடர்புக்கு 92446 81350.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக