வெள்ளி, 25 ஜனவரி, 2013

பல கோடி வாங்கி நடிப்பது ஈகமா?

பல கோடி வாங்கி நடிப்பது தியாகமா?


பொதுநலன் சிந்தனை யுள்ள கவிஞர் மற்றும் எழுத்தாளர் மதுமிதா: மத்திய அரசின், சேவை வரி விதிப்புக்கு எதிராக, தமிழக திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். "திரையுலகினருக்கா சேவை வரி?' என, ஆவேசப்பட்டனர். லைட்மேன்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என, திரைத் துறையில், அடிமட்டத்தில் கிடப்பவர்கள் ஆவேசப்பட்டால், நியாயமானது; சொகுசு பங்களா, ஆடம்பர கார் என, வலம் வருகிறவர்களும் ஆவேசப்படலாமா?
தங்கள் நியாயமான உரிமைகளுக்காக போராட, அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், இவர்களின் போராட்ட கோரிக்கைகளும், அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களும் நியாயமானதா? ரஜினிகாந்த் முதல் சத்யராஜ், விவேக் வரை, அனைவரது பேச்சுக்களும் எரிச்சலூட்டின."மக்களை மகிழ்விப்பதற்காக, எங்களையே தியாகம் செய்கிறோம்' என்றனர். ஒரு படத்திற்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடிக்கின்றனர். இது தியாகம் என்றால், நாம் எல்லாரும் சோறு சாப்பிட, சேற்றில் இறங்கி, விவசாயம் செய்யும் விவசாயியை, என்ன சொல்வது? வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறான். தண்ணீரின்றி பயிர் வாடுவதைக் கண்டு, விவசாயி தற்கொலை செய்யும் நிலையில், திரைப்படத் துறையினர், "நாங்களும் கஷ்டப்படுகிறோம்' என, கண்ணீர் வடிப்பது அநியாயமில்லையா? ரஜினிகாந்தோ, முன்னணி நடிகர்களோ, தாங்கள் வாங்கும் சம்பளத்தை, வெளிப்படையாக சொல்ல முன்வருவரா? சேவை வரியால், கறுப்பு பணம் உருவாகும் என்கின்றனர். இதற்கு முன், சினிமாவில் கறுப்பு பணம் இல்லாமலா இருந்தது?இலங்கை தமிழர், காவிரி நீர், கார்கில் பிரச்னைகளுக்காக போராடினார்களாம். இவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, குறைத்து மதிப்பிடுவது என் எண்ணம் இல்லை. அரசுப் பணி செய்வோரை தவிர்த்து, மற்ற அனை வருமே நிரந்தரமற்ற பணியாளர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக