செவ்வாய், 26 ஜூன், 2012

Engineer work as labourer :சிற்றாள் வேலைக்குத் தகுதி பொறியியல் படிப்பா?


சித்தாள் வேலை செய்யும் சிவில் இன்ஜினியர்கள்

மேட்டூர்:மேட்டூர் புதுஅனல்மின் நிலையத்தில், முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சிவில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், சித்தாள் வேலையும், பி.இ., மெக்கானிக் படித்தவர்கள் வெல்டிங் வேலையும் செய்கின்றனர்.
மேட்டூரில், 3,550 கோடி ரூபாய் செலவில் புதிதாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி, 2008 ஜூன் 25ல் துவங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்க வேண்டும்.கட்டுமான பணி தாமதம் காரணமாக இன்னமும் மின் உற்பத்தி துவங்கவில்லை.

சோதனை ஓட்டம்:கடந்த, மார்ச் இறுதியில் ஆயில் மூலம் "சோதனை ஓட்டம்' நடத்தப்பட்ட நிலையில், மின் உற்பத்தி துவங்க மேலும் பல மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது' "புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியில்', சப்-கான்ட்ராக்டர்களில் கீழ், 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் பலர், பி.இ., மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் படித்தவர்கள். சப்-கான்ட்ராக்டர்கள் இவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை தருவதில்லை என்ற போதிலும், இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், புதிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கும்போது, தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் பணிபுரிகின்றனர்.

மேட்டூர் அனல்மின் நிலையம், "மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஸ்டாலின்' கூறியதாவது:மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்டுமான பணியில், 20க்கும் மேற்பட்ட சப்-கான்ட்ராக்ட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் பகுதியை சேர்ந்த சில அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் புது தெர்மலில் மின் உற்பத்தி துவங்கும் போது, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறி ஏராளமான தொழிலாளர்களை பணியில் சேர்த்து விட்டனர்.இதற்கான தொழிலாளர்களிடம் சிலர் மறைமுக பணம் பெற்றுள்ளனர். புது தெர்மலில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேட்டூர் பகுதியை சேர்ந்த, பி.இ., மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் படித்த இளைஞர்கள் பலர் வேலை செய்கின்றனர்.இதில், சிவில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், கூலியாட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் தாங்களே சித்தாள் வேலையும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், வெல்டிங் வேலை, வெல்டர்களுக்கு உதவியாளராகவும், எலக்ட்ரிக்கல் படித்தவர்கள் வயரிங் வேலையும் செய்து வருகின்றனர்.

பணமோசடி:இந்நிலையில், மோசடி கும்பலை சேர்ந்த சிலர், புது தெர்மலில் பராமரிப்பு பணிக்கு ஆள் சேர்த்து விடுகிறோம் என, கூறி மறைமுக பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி "தொழிற்சங்கம்' சார்பில் நோட்டீஸ் வெளியிட்டுள்ளோம். கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு புதுதெர்மலில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதற்கு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் மேற்பார்வை பொறியாளர் (பொதுவியல்) எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலைய கட்டுமான பணியில், பி.ஜி.ஆர்., நிறுவனம், துணை நிறுவனங்கள்தான் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமித்துள்ளது. மின்உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் தொழிலாளர்கள் நியமிக்கபடவில்லை. புதுதெர்மலுக்கு பணியாளர்கள் தேர்வு செய்வது தலைமையின் முடிவை பொறுத்தது, என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக