செவ்வாய், 5 ஏப்ரல், 2011

Joint rule with cong. - kalaignar : காங்கிரசோடு கூட்டணி ஆட்சி: கருணாநிதி சூசகம்

இப்போதைய ஆட்சிப்பீடத்தில் காங்.கிற்கு இடம்  தராமல் தமிழக உணர்வைக் காப்பாற்றிய  கலைஞர் நடைபெறும் தேர்தலில் அதற்குப் பங்களிப்பதாகக் கூறுவது அவருக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். காங். எந்த வகையிலும் தமிழக ஆட்சிப்பீடத்தில் ஏறுவதை மக்கள் விரும்பவில்லை. காங். கூட்டணி ஆட்சியை விரும்பாத மக்கள் வேறு கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு எடுத்து விடுவார்கள். ஒப்புக்குச் சப்பாணியாகக் காங். இருந்துவிட்டுப் போகட்டும்! ஆட்சியில் பங்கு எனக் கூறினால் தேர்தல் மடிவு அறிவித்ததும் வேறு அணிக்குத் தாவிவிடும்.  கொலைகாரக்  காங். தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை வர வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக்   காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




காங்கிரஸோடு கூட்டணி ஆட்சி: கருணாநிதி சூசகம்


சென்னை ஏப்ரல்,4: சட்டப்பேரவைத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றிபெறாவிட்டால் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து செயல்படுவோம் என்று கூட்டணி ஆட்சி குறித்து முதல்வர் கருணாநிதி சூசகமாகப் பேசினார்.வடசென்னை மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை அயனாவரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி பேசியது:"தில்லியிடமிருந்து நாம் எதிர்பார்க்கப்படுபவை எல்லாம் தாமதமாக வந்து சேர்வதுபோல குலாம்நபி ஆசாத்தும் இந்தக் கூட்டத்திற்கு தாமதமாக வந்து சேர்ந்துள்ளார். ஆனால் தில்லியிலிருந்து நமக்கு எதுவும் தாமதமாக வந்து சேர்ந்தாலும் அனைத்தும் தட்டாமல் தாராளமாக வந்து சேர்வதின் அடையாளமாகத்தான் இந்தக் கூட்டம் இருக்கிறது. விமானம் தாமதமாக வந்ததாலேயே ஆசாத்தும் தாமதமாக வந்திருக்கிறார்.திமுக ஆட்சியின் கடந்தகால சாதனைகளைக் குறிப்பிட்டு, அந்தச் சாதனை தொடர வேண்டும் என்றால் 6-வது முறையாக நான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆசாத் உள்பட எல்லோரும் பேசினர். அப்படி சாதனைகள் தொடர வேண்டும் என்றால் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகளுக்கிடையே வலுவான நல்ல உறவு இருக்க வேண்டும். இதன் அடையாளமாகத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது. இது ஏதோ தேர்தலுக்காக நாங்கள் சொல்லவில்லை. அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அண்ணா பலமுறை வலியுறுத்தி கூறியது.தமிழகத்தின் தேவைகள் அனைத்தையும் மாநிலக் கட்சிகளால் மட்டுமே உருவாக்கிக் கொடுத்துவிட முடியாது. மத்திய அரசோடு இணைந்திருக்கிறபோதுதான் நம்முடைய உரிமைகளை வலியுறுத்தி பெற முடியும்.தமிழ் செம்மொழி என்கிற அந்தஸ்தைப் பெற நூறு ஆண்டுகள் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. பரிதிமாற்கலைஞர் என்று பெயர் மாற்றிக்கொண்ட சூரியநாராயண சாஸ்திரியின் நூறு ஆண்டுகாலப் போராட்டம் அது. மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கையும், சோனியா காந்தியையும் ஒருமுறைக்கு இரு முறை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இதுகுறித்து சோனியாந்தி எனக்கு எழுதிய கடிதத்தில் தமிழ் செம்மொழி தகுதி பெற்றதற்கான பெருமை என் ஒருவரையே சாரும் என்று எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதைப்போல மெட்ரோ ரயில் திட்டம், நிறைவேறப்போகிற சேதுசமுத்திர திட்டம் எல்லாம் காங்கிரஸ் - திமுகவின் வலுவான உறவாலேயே கிடைத்தது. வெற்றிபெறாவிட்டால்: எனவே உரிமைகளைக் கேட்டுப்பெற இந்தக் கூட்டணி மேலும் மேலும் வலுவாகத் தொடர வேண்டும். இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் எங்களுடைய இதயத்தின் ஒற்றுமைக்கேற்ப இணைந்து, மத்திய அரசிடமிருந்து உரிமைகளைக் கேட்டுப்பெறுவோம்' என்றார் கருணாநிதி.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக