புதன், 1 பிப்ரவரி, 2023

என்னூல் திறனரங்கம் 3 : ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம்’

 

தமிழே விழி!                                                                      தமிழா விழி!

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414)

மலர்க்கொடி வெளியீட்டகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்க்காப்புக் கழகம்

என்னூல் திறனரங்கம் 3  

இலக்குவனார் திருவள்ளுவனின்

‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர ப.மருதநாயகம்’

நூல் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம்

கூட்ட எண் Meeting ID: 864 136 8094 

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு  https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரும் ஞாயிறு தை 22/05.02.2023 காலை 10.00 மணிக்கு மும்பை பல்துறைக் கலைஞர் இராணி சித்திரா தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கும்.






ஞாயிறு, 29 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி)

தீரன் திண்ணியன் தேசத் தலைவன்

களம்புகல் ஓம்புமின்தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87)

“நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!”

பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும் வண்ணம் இத்தகைய இலக்கியச் சான்றுகள் எத்தனை எத்தனை!

தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் – ஔவை சொன்னவாறான ஒற்றைப் போர்வீரன் அல்லன்.  அவ்வாறான பல்லாயிரம் வீரர்களுக்குத் தலைவீரன்! கொடும்பகைக்கு முகங்கொடுத்து விடுதலைக்காகப் போரிடும் தேசிய இனத்தின் தலைவன் வீரனாய், பெருவீரனாய், வீரமுதல்வனாய் இருந்தாக வேண்டும். அதற்கும் மேலே எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியனாகவும் இருத்தல் வேண்டும்.

எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளின் முற்பகுதிகளிலும் – அப்போது சிறையில் அடைபட்டிருந்த எனக்கும் தோழர்களுக்கும் – பிரபாகரன் அறிமுகமாகி அறியப்பட்டது வீரனாகவும் புலிப்படையின் வீரத் தலைவனாகவுமே!

தமிழகத்தில் கருவிப் போராட்டவழி புரட்சி நடத்தும் கருத்தில் துணிந்து செயல்பட்டு இளம்வயதில் சிறைப்பட்டிருந்த எங்களுக்குத் தமிழீழத்தில் ஓர் இளைஞன்இளந்தலைவன் வெற்றிகரமாக விடுதலைப் போர் தொடுத்து வீரம் விளைத்து வரும் செய்திகள் பெரிதும் ஈர்ப்பாயின.

மறுபுறம் தமிழீழ மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இன ஒடுக்குமுறையும் அடக்குமுறையும்பற்றிய செய்திகள் வெளியில் போலவே சிறைக்குள்ளேயும் கொந்தளிப்பு உண்டாக்கின. இந்தக் கொடிய ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் நடத்தி வந்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் நாங்கள் கொண்டிருந்த ஈடுபாடும் வளர்ந்தது.

வந்தது ’83. இன அடக்குமுறை இன அழிப்பாகி, அரச பயங்கரவாதம் கொலைத் தண்டவமாடிற்று. கருப்பு – (இ)யூலையில் வெளிக்கடைச் சிறையில் நடந்த கொடுவதைகளும் கோரக் கொலைகளும் நாகரிக உலகை அதிரச் செய்தன. தமிழகத்தைக் கொதிக்கச் செய்தன. கொதிப்பின் உச்சநிலை சிறைகளிலேதான். இங்கே சிறைத் தமிழர்களைப் பொறுத்த ஆத்திரத்தோடு ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது – சட்டத்தால் தலையிடப்பட்டு அடைபட்டுக் கிடக்கிறவனால் சுவர் தாண்டிக் கடல் கடந்து கை நீட்டிக் கண்ணீரைத் துடைக்க முடியுமா?

தசையெலும்பைப் பூட்டி வைக்கலாம். தளும்பும் மனவுணர்ச்சிகளைக் கூடவா பூட்டி வைக்க முடியும்? மதுரைச் சிறையில் சிங்கள அரசதிபருக்குக் கொடும்பாவி கட்டிக் கொளுத்தினார்கள். திருசிராப்பள்ளிச் சிறையில் சிறைபட்ட அனைவரும் திரண்டு மௌன ஊர்வலம் நடத்தி மையத் திடலில் பொதுக்கூட்டமும் நடத்தினோம்.

எல்லாச் சிறைகளிலும் ஒரு நாள் உணவு மறுத்து அந்த உணவின் மதிப்பைத் தமிழக முதல்வரின் தமிழீழ ஏதிலியர் உதவிநிதிக்கு அனுப்பி வைத்தோம். அதிகார வருக்கம் வறட்டு விதிமுறைகளைக் காட்டி இதற்கெல்லாம் தடையிட்ட போது எதிர்த்துப் போராடினோம். 1983 ஆண்டிறுதியில் தமிழக அளவில் எல்லா மையச் சிறைகளும் சேர்ந்து போராடிய போதுமுதல் கோரிக்கையே இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் உரிமை வேண்டும் என்பதுதான்.

தமிழீழ விடுதலைக் குறிக்கோளை ஆதரிப்பவர் களாகவும்புலிப்படையோடு ஒருமைப்பாடு கொண்டவர்களாகவும்தம்பியை நேசிப்பவர்களாகவும் நாங்கள் மாறிப் போனதில் ஒரு முரண்பாடு இருக்கவே செய்தது – எங்களின் நிலைப்பாடு நாங்கள் சார்ந்திருந்த மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சிக்கு அடியோடு ஒவ்வாதது.

இந்தியாவில் தேசிய இனச் சிக்கல் குறித்தும், தமிழ்த் தேசிய இனத்தின் தன்தீர்வுரிமை (சுயநிர்ணய உரிமை) குறித்தும் கட்சித் தலைமையோடு எங்களுக்கு மாறுபாடுகள் இருந்தாலும், தமிழீழப் போராட்டம்தான் எங்கள் புரிதலைக் கூர்மையாக்கி முடிவை விரைவுபடுத்தியது. தமிழீழப் போராட்டத்தின் வரலாற்று நியாயத்தைக் காண விடாமல் மறைக்க சிவப்புத் திரைகளுக்கும் கூட உரிமையில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து ஆழ்ந்தகன்ற விவாதங்கள் நடைபெற்றன. எங்களுக்குள்ளே மட்டுமன்றித், தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளுக்காகவும் வேறு கோரிக்கைகளுக்காகவும் அறப்போராட்டம் நடத்திச் சிறைக்கு வந்த வேறு பல கட்சித் தலைவர்களோடும் கூட விவாதித்தோம். விடுதலையாகி வெளியே வந்த பிறகும் விவாதித்தோம். இதனால் தமிழீழ விடுதலை ஆதரவு நிலைப்பாடு உறுதிபட்டதோடு, தம்பி மீதான மதிப்பும் உயர்ந்தது. வீரத்துக்காக வியந்து வணங்கும் நிலை மாறி, விடுதலை அரசியல் பற்றிய தெளிவு வளர்ந்தது.

விடுதலை அரசியலின் நீட்சியே விடுதலைப் போர். விடுதலை அரசியல் என்பது வரலாற்று நோக்கில் விடுதலை தேவைப்படும் நிலையிலுள்ள வெகுமக்களை அறிவும் உணர்வும் ஊட்டி அணிதிரட்டிப் போராடச் செய்வதும், நட்பைச் சேர்த்துக் கொள்வதும், பகையைத் தனிமைப் படுத்துவதுமான முயற்சிகளைக் குறிக்கும். இம்முயற்சிகளைத் தொடரக் கருவியெடுக்கும் கட்டாயம் நேரிடும் போது விடுதலை அரசியல் விடுதலைப் போராக வடிவெடுக்கும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.     (திருக்குறள் 471)

அரசியலுக்கும் அதே போல் போருக்கும் வழிகாட்டும்படியான இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாக அன்று முதல் இன்று வரை பிரபாகரனின் வழிநடத்தல் விளங்கி வருகிறது எனலாம்.

இந்தத் தலைவன் வெறும் வீரனல்லன் என்பதை 1987 நிகழ்சிகள் மெய்ப்பித்தன. அப்பம் பிரித்த குரங்கின் வேலையைச் செய்ய முற்பட்டது இந்திய அரசு. இராசீவ் காந்தி – செயவர்த்தனா உடன்படிக்கையின் பேரால் இந்தியப் படை யாழ்ப்பாணத்தில் கனத்த கால் பதித்தது. ஈழ விடுதலைப் போராட்டத்தைச் சூழ்ந்தது ஒரு புதிய நெருக்கடி – இந்தியா நண்பனா? பகைவனா?

தமிழீழப் போராட்டம் தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறைக்கு இரு பக்கங்கள் உண்டு. இந்திய மக்களின் நலனையும், தமிழக மக்களின் உணர்வையும் பிரதிபலிப்பதாக இருக்கும் வரை இந்திய அரசு தமிழீழ மக்களின் நண்பனாய் இருக்க முடியும். ஆனால் தேசிய இனங்களை ஒடுக்கும் இந்திய ஆளும் சக்திகளின் நலனையும், தெற்காசியா மீதான மேலாதிக்க நோக்கத்தையும் பிரதிபலிக்கிற அளவில் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கெடுக்கவே முற்படும். அடுத்தும் கெடுக்கலாம். எதிர்த்தும் கெடுக்கலாம்.

காலங்காலமாய் இந்தியாவை நண்பனாகவே பார்த்துப் பழகிய தமிழீழ மக்கள் இப்போது 1987இலும் இந்தியப் படைகளின் வருகையைத் தங்கள் மீட்சிக்குத் துணை என்றே பார்ப்பது போலிருந்தது. இந்திய அரசின் உள்நோக்கத்தைத் தெளிவாகப்  புரிந்து கொண்ட பிரபாகரனின் தலைமை மக்களின் நாடித் துடிப்பை அறிந்து செயல்பட்டது. சுதுமலை அம்மன் திடலில் பிரபாகரன் ஆற்றிய உரை விடுதலை அரசியலில் அவரது தெளிவான தொலைநோக்கைக் காட்டியது.

கருவிமேல் காதலில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே கருவி என்பதால் கருவியைப் பாதுகாப்பதற்காக மக்களை இழக்க வேண்டியதில்லை. கருவியைக் கையளிக்கிறோம் என்றால் எமது மக்களின் பாதுகாப்பைக் கையளிக்கிறோம் என்று பொருள். முதிர்ச்சியின் முத்திரை தாங்கிய இந்த அணுகுமுறை பழுத்த அரசியல் நோக்கர்களையே வியந்து நோக்கச் செய்தது. சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் இவனே எனப் போற்றினோம்.

இந்தியப் படையின் செயல்பாடு… இது மீட்க வந்த படையாமிதிக்க வந்த படையாஎன்று மக்களைச் சிந்திக்க வைத்தது. புலேந்திரன்குமரப்பா உள்ளிட்ட பன்னிருவர் சிங்களப் படையால் சிறைபிடிக்கப்பட்டு நஞ்சுண்டு மாண்ட போது இந்தியா வேடிக்கை பார்த்த அவலம் தமிழீழ மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. உடன்படிக்கையைச் செயலாக்குவதில் ஒப்புக்கொண்ட  சிற்சிலவற்றைக் கூட நடைமுறைப்படுத்தாமல் இந்திய அரசு இழுத்தடித்ததை அம்பலமாக்கும் வகையில் புலிகளின் அழைப்பை ஏற்று தமிழீழ மக்கள் அறப்போராட்டம் நடத்தினார்கள். கொல்ல வந்தவரைக் கொஞ்ச வந்தவராகப் பார்க்கச் செய்த பனிப்படலம் விரைந்து விலகலாயிற்று. இந்த அறப்போராட்டத்தின் உச்சம்தான் திலீபனின் பட்டினிப் போர். அது இறுதியாகவும் உறுதியாகவும் தில்லிக் கழுகின் புறாச் சிறகைக் கழற்றிப் போட்டது.

திலீபனின் ஈகம் உலக வரலாற்றிலேயே தனித்துவமானது. இந்தத் தனித்துவமான தியாக மறவனை வளர்த்தெடுத்த தலைமையின் மகத்துவத்தை என்னென்பது! இறந்தும் வென்ற திலீபனின் போராட்டம் இந்தியாவின் அரசியல் தோல்வியைக் குறித்தது. அந்த அரசியல் தோல்வியை இராணுவத் தோல்வியாக மாற்றத்தான் ஒன்றரை ஆண்டுக்கு மேல் பிரபாகரன் தலைமையில் புலிப்படை வீரப் போர் புரிந்தது. மண்ணையும் மக்களையும் சார்ந்து நின்று போர் புரிந்தால் எவ்வளவு பெரிய வல்லடிப் படையையும் முறியடிக்க முடியும் என்ற வரலாற்றுப் படிப்பினையை வியத்துநாமுக்குப் பிறகு உலகுக்குணர்த்தியது தமிழீழம்.

திலீபனின் ஈகம் ஏற்படுத்திய தாக்கம் கருதியும், தமிழீழப் போராட்டத்தைக் கொள்கைவழி நின்று ஆதரிக்கும் நோக்கம் கருதியும் 1990 செட்டம்பரில் என்னை அமைப்பாளராகக் கொண்டு தமிழகத்தில் திலீபன் மன்றம் நிறுவப்பட்டது. அதன் மூன்று நிலைப்பாடுகள்:

·        தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை.

·        இராசீவ் – செயவர்த்தனா உடன்படிக்கை ஈழத்தமிழர் நலனுக்குப் பகை.

·        தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்!

அரசும் காவல் துறையும் செய்த கெடுபிடிக்கும் நெருக்கடிக்கும் இடையில் திலீபன் மன்றம் தனக்குரிய பங்கினை ஆற்றிவந்தது.

திலீபன் மன்றமும் விடுதலைக் குயில்களும் தமிழ் தமிழர் இயக்கமாக இணைந்த பிறகும் மேற்கூறிய நிலைப்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. தடைச் சட்டம்கள், அடக்குமுறை நெருக்கடிகள், அதிகாரக் கெடுபிடிகள் யாவற்றுக்குமிடையே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து நிற்கிறோம். பிரபாகரனின் தலைமை மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம். எந்நிலையிலும் இதில் எமக்கு ஊசலாட்டமில்லை.

இது வெறும் வீரவணக்கமோ நாயக வழிபாடோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். வரலாற்றை உருவாக்குபவர்கள் வெகுமக்களே.எவ்வளவு பெரிய தலைவனாயினும் வீரனாயினும் வரலாற்றின் கருவியே என்பதில் ஐயமில்லை.தமிழீழ விடுதலைப் போர் வரலாறு கண்டெடுத்த தலைசிறந்த கருவி பிரபாகரனே.வரலாற்றால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றை வடிப்பவராகத் திகழ்வதால் அவரே வரலாற்று நாயகன்.

தேசியத் தலைவர் என்பது அலங்காரப் பட்டமன்று.அது கடினமான பெரும் பொறுப்பு.இந்தப் பொறுப்பை உணர்ந்து இன்னல்களையும் இடர்மிகுந்த திருப்பங்களையும் கடந்து தன் மக்களை வழிநடத்தி வருவது பிரபாகரனின் தலைமைச் சிறப்பே.

தமிழகத்தில் தமிழ்த் தேசியப் புரட்சிக்காக உழைத்துவரும் எம்மைப் போன்றோர் பிரபாகரனின் போராட்ட வரலாற்றிலிருந்து நிறையக் கற்கவும் கடைப்பிடிக்கவும் வேண்டியதிருப்பதாகக் கருதுகிறோம். ஒரு சிலவற்றை ஈண்டு குறிப்பிடலாம்.

ஒரு மக்களினத்தை ஒன்றுபடச் செய்து பகைவனுக்கும் எதிராக அணிதிரட்ட வேண்டுமானால் அவ்வினத்திற்குள்ளான முரண்பாடுகளையும் பூசி மெழுகுவதன்று வழி. அவற்றுக்கு முறையாகத் தீர்வு காண வேண்டும். பிரபாகரனின் தலைமை சிங்களப் பேரினவாதத்தையும், அதற்கு துணைவந்த பிறரையும் எதிர்த்துப் போராடும் போதே, தமிழீழ மக்களின் ஓர்மையைச் சிதைத்து ஒற்றுமையைக் கெடுக்கும் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்துப் போரடியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் கண்டுள்ளது. தமிழீழ மக்களின் வெல்லற்கரிய வலிமைக்கு இந்தப் புரட்சிய ஒற்றுமையே அடித்தளமாகும். தமிழ்த் தேசியத்துக்கான போராட்டம்,சாதியொழிப்பு அல்லது சமூகநீதிக்கான போராட்டம் இவ்விரண்டின் இடையுறவையும் புரிந்து உள்வாங்கிக் கொள்ள தமிழீழம் நமக்குதவும்.

பிரபாகரன் மிக சிறந்த படைத் தளபதி என்பதை மாற்றாரும் மறுக்க மாட்டார். ஆனால் வெறும் படைத் தளபதியல்லர், மக்கள் விடுதலைப் போரின் தலைவர் அவர் என்பதை அவரின் போருத்திகளே காட்டும். ஆள் வலிமை, அறிவியல்–தொழில்நுட்ப வலிமை, ஆயுத வலிமை என்று அனைத்து வகை வலிமையோடும் அடக்கி ஒடுக்கும் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களாதரவை மட்டுமே சார்ந்து போராடுவதற்கான உத்தியாக உலக வரலாற்றில் கெரில்லாப் போர் முறை வளர்த்தெடுக்கப்பட்டது. நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த தற்கொடைப் போர் முறை கெரில்லாப் போர்முறையின் உச்சக்கட்ட வளர்ச்சியாகும்.

ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் தன்னந்தனியாக நின்று பேரினவாத அரசையும் அதற்குத் துணையாக வரும் வல்லாதிக்க ஆற்றல்களையும் எதிர்த்துப் போராடுவது எளிதன்று. தன் தரப்புக்கு ஆகக்குறைந்த இழப்போடு பகைத் தரப்பை ஆகப் பெருமளவுக்கு நொறுக்கிச் சிதறடிக்கும் தற்கொடைப் போர்முறையே இந்தக் கடினமான பயணத்தில் திறமிகு தடைநீக்கி என்பதை தமிழீழப் போராட்ட வரலாறு மெய்ப்பிக்கிறது. எந்தப் படையாலும் கரும்புலிகளின் உயிராயுதத்திற்கு எதிர்நிற்க முடியாது. இதுவே தற்கொடைப் போர்முறை. இந்தப் போர்குறையை வகுத்து வழிநடத்துவதில் பிரபாகரனின் போர்த்திறன் மட்டுமல்ல, விடுதலை அரசியலின் வித்தக நோக்கும் முன்னிற்கிறது.

விடுதலைப் போராளிகள் அமைதியையே விரும்புகின்றனர் – அது இடுகாட்டு அமைதியாய் இருந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு! உரிமைகளோடு சேர்ந்து வரும் மெய்யமைதிக்காகவே அவர்கள் போராடுகிறார்கள். விடுதலைப் போராளி தன் இரு கைகளையும் உயர்த்திக் காட்டுகிறார். ஒரு கை அமைதிக்காக! ஒரு கை போருக்காக! எந்தக் கை வேண்டுமென்று பகைவரே முடிவு செய்யட்டும். அமைதி என்றால் அமைதி! போர் என்றால் போர்! எது வேண்டும் சொல் பகையே! இதுவே விடுதலைப் போராளியின் அணுகுமுறை.

பிரபாகரன் சண்டைப் பிரியர், சமாதானத்தின் பகைவர் என்றெல்லாம் பாக்கு நீரிணையின் அப்பக்கமும் இப்பக்கமும் வறட்டுத் தவளைகள் போல் கத்திக் கொண்டிருந்தவர்கள் எங்கே? பிரபாகரனின் இப்போதைய அமைதி முயற்சி மெய்யான சண்டைப் பிரியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது.

தமிழீத் தாயகத்திற்கான போராட்டம் போர்வழி நடந்தது. இப்போது அமைதி வழி தொடர்கிறது. எப்படியும் அது முன்னேறிச் செல்கிறது. வீரனாகவும், அதற்கும் மேலே விடுதலைப் போர் வித்தகனாகவும் மக்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலில் இறுதி வெற்றி உறுதி. அது ஒரு தேசத்தின் வெற்றி. விடுதலை நாடும் அனைவரின் வெற்றியும் கூட!

ஒளிக் கதிர்களுக்கு எல்லைகள் உண்டோ?

[தலைவர் பிராபகரன் 50ஆம் பிறந்த நாள் (2004) மலருக்காக எழுதிய கட்டுரை]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 20


சனி, 28 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): நாற்று பறித்த இராமன்

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6) – தொடர்ச்சி)

 நாற்று பறித்த ராமன்

பொன் நாடார் கொலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகும் தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில மாதக் காலம் கடலூர் மத்திய சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இடையிடையே வேறு சில வழக்குகளுக்காக அவர் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார். கடலூர் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது.

யாவற்றிலும் பெரிய வழக்கு — சதி மற்றும் கொலை வழக்கு — தஞ்சை நீதிமன்றத்தில் ருந்தது. நானும் இலெனினும் எந்த வழக்கில் தண்டனை பெற்றிருந்தோமோ அதே வழக்கு! அந்த வழக்கில் முதல் எதிரி நான், கடைசி எதிரி ஏஎம்கே. மொத்தம் ஏழு எதிரிகளில் முதலில் பிடிபட்ட எங்கள் நால்வர் மீதும் வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கொடுத்தாயிற்று. மற்றவர்கள் அது வரை பிடிபடாததால் அவர்கள் மீதான வழக்கைப் பிரித்து(Split) நடத்தியாக வேண்டும்.

இப்போது ஏஎம்கே பிடிபட்டு விட்டதால், அவரை மட்டும் குற்றக் கூண்டில் நிறுத்தி மீண்டும் ஒரு முறை வழக்கு விசாரணையை நடத்தியாக வேண்டும்.

அப்போது திருச்சி சிறையில் இருந்த நாங்கள் தஞ்சை நீதி மன்றத்தில் ஏ.எம். கே. மீதான வழக்கு விசாரணை தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். வழக்கின் மீது அக்கறை கொண்டதால் அல்ல. அது பற்றி நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை . தஞ்சையில் வழக்கு என்றால் ஏஎம்கேயை திருச்சி சிறையில்தான் வைத்தாக வேண்டும். அவரைப் பார்த்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அவரைப் பார்த்து அவரோடு பேசவும் நாங்கள் ஆவல் கொண்டு காத்திருந்தோம்.

என்னையும் இலெனினையும் பொறுத்த வரை பாச உணர்ச்சிக்கு மேற்பட்ட ஒரு காரணமும் இருந்தது. நாங்கள் எந்த இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்டோமோ அந்த இயக்கத்துடன் சிறையில் கருத்து மாறுபாடு கொண்டு விலகி நின்றோம். வருங்காலத்துக்கான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தோம்: வெளியே எங்களை வழிநடத்திய தோழர் ஏஎம்கேயுடன் இது குறித்து விவாதிக்க விரும்பினோம். அதற்காக அவரது வருகையை எதிர்பார்த்திருந்தோம்.

தோழர் இலெனினைப் பொறுத்த வரை, ஏஎம்கேயால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்துக்கு வந்தவர். ஆனால் நம்புவதற்கே கடினமான செய்திதான், அப்போதெல்லாம் அவருக்கு ஏஎம்கேயை ஏஎம்கே. என்று தெரியாது. பெரியவராகவும் தோழர் சங்கரனாகவும்தான் தெரியும். முன்பின் அறிமுகமில்லாத — இன்னார் என்றே தெரியாத — ஒருவரின் வழிகாட்டுதலை நம்பி ஏற்று, மனைவி மக்களைத் துறந்து உயிரைக் கொடுக்கவும் சித்தமாய்ப் புரட்சிகர இயக்கத்தில் இணைவது என்றால்… அந்தப் பெருமையில் பெரும் பங்கு ஏஎம்கேயின் ஒப்படைப்புணர்வையும் அயராத உழைப்பையும் சாரும்.

தோழர் ஏஎம்கேதான் என்னைப் பந்துவக்கோட்டை வரச்சொல்லி இலெனின், குருமூர்த்தி,  இராசப்பா முதலான தோழர்களிடம் அறிமுகம் செய்து வைத்தவர். அப்போதெல்லாம் தோழர் இலெனின் அவரைப் பெரிய ஐயா என்றும் என்னைச் சின்ன ஐயா என்றும் அழைப்பார்.

இலெனினும் மற்றத் தோழர்களும் ஏஎம் கோதண்டராமன் என்ற பெயரையே ‘கியூ’ பிரிவு போலீசார் சொல்லித்தான் தெரிந்து கொண்டார்கள். அந்தப் பெயருக்குப் பின்னாலிருந்த வரலாற்றைச் சிறையில் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

வட ஆற்காடு மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள ஆனைமநல்லூர் ஏஎம்கேயின் சொந்த ஊர். நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறிவுக் கருத்துகளிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இயங்கி வந்தார். திகவிலிருந்து திமுக பிரிந்த போது இரண்டும் வேண்டா என்று பொதுவுடைமைக் கட்சிக்கு மாறி விட்டார். வயது 16, ஆண்டு 1950.

வேலூர் ஊரிசு கல்லூரியிலும், பிறகு சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த போது, தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் பொதுவுடைமை இயக்கத்துக்காக உழைத்தார். படிப்பு முடிந்து சிறிது காலமே வழக்கறிஞராகப் பணி புரிந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் புரட்சிக்காகவே ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞருக்குக் கறுப்பு மேலாடையும் அங்கியும் மாட்டி வழக்குரைஞர் தொழில் செய்வது சரிப்பட்டு வரவில்லை. ஒருநாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு முழு நேர இயக்கப் பணிக்கு வந்து விட்டார்!

மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தொழிற்சங்கப் பணியாற்றத் தோழர் ஏஎம்கே ஆவடி-அம்பத்தூர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். வில்லிவாக்கத்திலிருந்து பட்டாபிராம் வரை ஏராளமாய்ப் புதிய தொழிற்சாலைகள் முளைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தப் பகுதியில் தொழிலாளர்களை அமைப்புவழியில் திரட்டித் தொழிற்சங்கம் கட்டும் பொறுப்பை ஏஎம்கே திறம்பட நிறைவேற்றினார்.

1967 தேர்தலுக்குப் பின் மா.பொ.க. (சிபிஎம்) கட்சிக்குள் மூண்ட கருத்துப் போராட்டத்தில் தலைமையுடன் கடுமையாக மோதிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏஎம்கே. அவரோடு சேர்த்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் தொழிற்சங்கத் தலைவர் குசேலரும் ஒருவர்.

நக்குசலைட்டு(Naxalite) இயக்கம் எனப் பெயர் பெற்ற இ.பொ.க.(மா.இலெ.)/CPI(M.L.) கட்சியைத் தமிழகத்தில் தோழர் எல். அப்புவுடன் சேர்ந்து நிறுவியவர் ஏஎம்கே .உடனடி ஆயுதப் போராட்டம், சிற்றூர்ப் புறங்களில் வருக்கப் பகைவரை அழித்தொழிப்பது,  மக்கள்திரள் போராட்டங்களைக் கைவிட்டு கரந்தடிப் போர் முறையை (Guerrilla warfare) மேற்கொள்வது என்றெல்லாம் கட்சி நிலையெடுத்த போது, தயக்கமோ தாமதமோ இல்லாமல் இந்த முடிவுகளை ஏற்று, நகர வாழ்வையும் தொழிற்சங்க அரசியலையும் துறந்து தஞ்சை மாவட்டச் சிற்றூர்ப்புறத்துக்கு வந்து விட்டார் ஏஎம்கே!

முதல் சந்திப்பிலேயே என்னைப் பார்த்து, “மற்றதையெல்லாம் உடைப்பது இருக்கட்டும், உங்கள் குடும்பத்தை உடைத்து விட்டு வெளியே வாருங்கள்” என்று சொன்னவர் ஏஎம்கே.

அந்த முதல் சந்திப்பை மறக்கவியலாது. நக்குசல்பாரி இயக்கமாக அறியப்பட்ட மா-இலெ கட்சியை எனக்கு அறிமுகம் செய்தவர், என்னை இயக்கத்துக்கு வென்றெடுத்தவர் பேராசிரியர் இராதாகிருட்டிணன் (இப்போது தோழர் மருதமுத்து). அவரும் நானும் தோழர் பாசுகரனும் ஆசிரியர் தோழர் சிவானந்தமும் சில மாணவர்களும் குடந்தை நகரில் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருந்தோம். கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்த (இ)லிபரேசன் இதழையும் கோவையிலிருந்து வந்து கொண்டிருந்த ‘புதிய தலைமுறை’ இதழையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். நாங்களே ‘புதிய உலகம்’ என்ற திங்களேடு தொடங்கத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ஏட்டுக்கு ஆசிரியர் என்று முடிவாகியிருந்தது. ஆனால் எங்களுக்குக் கட்சியோடு தொடர்பில்லை.

திருச்சிராப்பள்ளியில் ஆசிரியர் தோழர் ’அசுரனோடு’ இராதாவுக்குத் தொடர்பிருந்தது. கட்சியோடு தொடர்பு வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.  

1969 செட்டம்பர்த் திங்கள் ஒரு வெள்ளிக் கிழமை இரவு அசுரனோடு பெரியவரும் (ஏஎம்கே) குடந்தையில் பேராசிரியர் இராதாவின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தனர். அக்கா இந்திரா எங்களுக்கு உணவு பரிமாறியவுடனே ஏஎம்கே ’உட்காருவோமா?’ என்று கேட்டு, சுற்றி எங்களை உட்கார வைத்துக் கொண்டு அறிக்கையுரை அளிக்கத் தொடங்கி விட்டார். உடனே ஆய்தப் போரட்டம், ஊர்ப்புறத்துக்குச் சென்று அழித்தொழிப்புக்கு விவசாயத் தொழிலாளர்களை ஆயத்தப்படுத்துவது என்று சொல்லி விட்டு, அழித்தொழிப்பை நியாயப்படுத்த சாரு மசூம்தார் கூறியவற்றை எடுத்துக்கட்டினார். 1905 முதல் உருசியப் புரட்சியின் தோல்வி குறித்து இலெனின் எழுதிய “மாசுகோ எழுச்சி குறித்து”/ “On the Moscow Uprising” என்ற கட்டுரையைப் படித்துக்காட்டி விளக்கினார்.   

விடியற்காலை புறப்படும் முன் ”சரி, நீங்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். “தியாகு எப்போதோ முடிவு செய்து விட்டார், கட்சித் தொடர்புக்காகத்தான் காத்திருந்தோம், இப்போதைக்கு அவரை ஆசிரியராகப் போட்டு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டிருக்கோம்” என்று இராதா சொன்ன போது ஏஎம்கே வேகமாகத் தலையசைத்து மறுத்தார்: ”தியாகு ஒரு பாட்டாளிய மாணவர் (proletarian student) எனத் தோன்றுகிறது. அவரை உடனே சிற்றூருக்கு அனுப்புங்கள். பத்திரிகை வேலையெல்லம் மற்றவர்கள் பாருங்கள். புரட்சிதான் அவசரப் பணி.” என்னைப் பார்த்து தியாகு, முதலில் உங்கள் குடும்பத்தை த் துண்டித்துக் கொள்ளுங்கள் (“Thiagu, you first break your family”) என்று சொல்லிப் பெரும்பண்ணையூர் தோழர் ஆர். மாணிக்கம் முகவரியை எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். இரண்டே நாளில் படிப்புச் சான்றிதழ்கள் அனைத்தையும் எரித்து விட்டு நான் பெரும்பண்ணையூர் சேரி போய்ச் சேர்ந்தேன்.]

அவரோடு ஏறத்தாழ ஓராண்டுக் காலம் தஞ்சை மாவட்டத்துச் சேரிகளில் வேலை செய்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. வேலை என்றால் இயக்க வேலை மட்டுமல்ல!

மக்களுடன் ஒன்றுகலப்பதன் பகுதியாக நான் வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கிய போது என்னை அவர் பாராட்டினார். பாராட்டிய தோடு நில்லாமல் அவரும் வயல் வேலைகளைப் பழகிக் கொண்டு செய்யத் தொடங்கி விட்டார்.

பட்டுக்கோட்டைப் பக்கம் நம்பிவயல் அருகே ஒரு சிற்றூரில் நாங்கள் இருவரும் நாற்றுப் பறிக்கும் வேலைக்குப் போயிருந்தோம். அந்த நிலம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர் ஒருவருக்குச் சொந்தமானது. நாற்றுப் பறிக்க வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சேரிக்காரர்களே என்றாலும், குடியானவத் தெருவிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

வேலைக்கு நடுவில் அனைவருக்கும் வரப்பில் வைத்துத் தொன்னையில் கூழ் ஊற்றுவார்கள். வரிசையாக நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடிக்க வேண்டும். குடியானவத் தெருக்காரர்கள் அது வரை சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் கூழ் வாங்கிக் குடிக்க வராமல் ஒதுங்கி நின்று கொள்வார்கள். நிலவுடைமையாளராகவே இருந்தாலும் சேரிக்காரர் சேரிக்காரர்தான்கூலிக்காரராகவே இருந்தாலும் சாதிக்காரர் சாதிக்காரர்தான் என்பதில் அவர்கள் தெளிவாய் இருப்பார்கள்.

ஏஎம்கேயும் நானும் வரிசையில் நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடித்த போது குடியானவத் தெருக்காரர்களுக்குத் திகைப்பு! அது வரை எங்களைத் தங்கள் ஆள் என்று எண்ணியிருக்க வேண்டும்!

கூழ் குடித்து முடித்து சேற்று நீரில் கைகழுவி புறங்கையால் வாய் துடைத்து வெற்றிலைபாக்கு மென்று சுவைத்தபடி ஏஎம்கே மீண்டும் நாற்றுப் பறிக்கக் கால் மடித்து உட்கார்ந்த போது அருகிலிருந்தவர் சன்னமான குரலில் கேட்டார்:

“ஏனையா நீங்களும் போய் அவன்களுடன் கூழ்  வாங்கிக் குடிக்கிறீர்கள்? ஏதோ வேலைக்கு வந்துவிட்டோம் என்பதால் சாதியை விட்டுவிட முடியுமா?”

ஏஎம்கே சிரித்துக் கொண்டே சொன்னார்: ”நாங்களும் சேரிதான். சொந்தக்காரர்கள். வெளியூரில் இருந்து வந்துள்ளோம்.”

கேட்டவர் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டார். அன்றிரவு ஏஎம்கேயிடம் நான் கேட்டேன்: “நீங்கள் அப்படிச் சொன்னீர்களே, அவன் நம்மைத் தெரிந்து கொண்டு காட்டிக் கொடுத்துவிடப்  போகிறான்”

அப்போது நாங்கள் தலைமறைவாக இருந்தோம். ஏஎம்கே சொன்னார்:

நாம் புரட்சி செய்ய வேண்டும் என்றால் நம்முடைய வருக்க நிலையிலே இருந்து இறங்கி வருகிற மாதிரி சாதி நிலையிலே இருந்தும் இறங்கி வர வேண்டும். நமக்குச் சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. சாதி பேரில் மிக அதிகமாக ஒடுக்கப்படுகிறவர்களுடன் ஒன்றாயிட வேண்டும். அதை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அதுதான் நமக்கு உண்மையான பாதுகாப்பு.”

தஞ்சையில் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்காகக் கடலூரிலிருந்து ஏஎம்கே திருச்சி சிறைக்கு மாற்றப்படும் செய்தி கிடைத்து நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். திருச்சி சிறைக்குக் கொண்டுவரப்பட்ட போது அவரும் கூட எங்களையும் மற்ற தோழர்களையும் சந்திக்கும் ஆவலோடுதான் வந்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவரை எங்களோடு வைக்காமல், தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்தார்கள். ஏமாற்றம்! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள எங்களுக்குத் தேவைப்பட்டது மனவுறுதி!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு – தாழி மடல் 20

வெள்ளி, 27 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6)

 அகரமுதல

     27 January 2023      



(தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? – தொடர்ச்சி)

ஏ. எம். கே. (6)

மனவுறுதி

சட்டத்தின் ஆட்சி என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் சட்டம் தன்வழிச் செல்லும் என்றும் அரசிலிருப்பவர்கள் எவ்வளவுதான் பிரமாதமாய்ப் பறைசாற்றினாலும், அரசு இயந்திரத்தின் அடக்குமுறைக் கருவிகளே சட்டத்தை மீறுகிற சந்தர்ப்பங்களில் இந்தக் கோட்பாடுகளை எல்லாம் வசதியாக மறந்து விட்டுச் கண்களில் கறுப்புத் துணி கட்டி விடுவார்கள்.

இதை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ஆயுதப் படையினரின் மனவுறுதி கெட்டு விடக் கூடாதாம். சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது மக்களின் மனவுறுதிதானே தவிர, ஆயுதப் படையினரின் மனவுறுதி அன்று. ஓர் உண்மையான மக்களரசுக்கு மக்களின் மனவுறுதிதான் முதன்மையாக இருக்க வேண்டும்.

‘மனவுறுதிக் கோட்பாடு’ பல வழிகளிலும் செயல்படுவதால்தான், ஆயுதப் படையினர் கொலையே செய்தாலும் சட்டத்தின் கையில் சிக்காமலிருக்க முடிகிறது. சிக்கினாலும் எளிதில் தப்பிவிட முடிகிறது.

கடலூர் சிறைக்குள் பொன் நாடாரை அடித்துக் கொன்ற சிறை அதிகாரிகளின் ’மனவுறுதி’யும் கூட அரசுக்கு முக்கியமாய்த் தெரிந்திருக்க வேண்டும். விசாரணை முடிந்து நீண்ட காலம் கழிந்தபின் தண்டனை ஏதுமின்றியோ, அற்பசொற்பத் துறைவழித் தண்டனைகளுடனோ அவர்கள் வேலைக்குத் திரும்ப அழைக்கப் பட்டார்கள். ஒரே ஒருவர். அதிலும் அவர்கள் அனைவரிலும் உயரதிகாரியான சிறைக் கண்காணிப்பாளர் மட்டும் வேலைநீக்கம் செய்யப்பட்டார்.

கைதியின் மரணத்துக்காக ஒரு சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்பட்டது — கைதிகள் நடத்திய போராட்டத்தினால் இப்படி ஒரு விளைவு ஏற்பட்டது — சாதாரண நிகழ்வு அன்று. இந்த சாதனை குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் வேலைநீக்கத்துக்கான உண்மைக் காரணம் தெரிய வந்தது.

பொன் நாடாரைக் கொலை செய்ததற்காகவோ, அந்தக் கொலைக்கு உடந்தையாய் இருந்ததற்காகவோ, அந்தக் கொலையைத் தடுக்கத் தவறியதற்காகவோ சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்படவில்லை. ஓர் இரவு முழுக்கச் சிறைக் கைதிகளை க் கதவடைப்புச்  செய்யாமல் விட்டதற்காகவே அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்நீதி கேட்டுப் போராடிய கைதிகளை வலுவந்தமாய்ப் பிடித்துக் கொட்டடியில் அடைக்காமல் விட்டதுதான் கொலைப் பாதகத்தை விடவும் கொடுங்குற்றம்! இதுவும்கூட மனவுறுதிக் கோட்பாட்டின் வேலைதானோ என்னவோ!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 19

தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?

 அகரமுதல


தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? 




(தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5), கடலூர் இரவு-தொடர்ச்சி)

நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?

எங்குச் சுற்றினாலும் இங்குதான் வந்து நிற்க வேண்டும் என்பது போல், காலநிலை மாற்றம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் புதைபடிவ எரிபொருளின் வாசலில்தான் நிறுத்தப்படுகிறோம்.

செடிகொடிகள் மரங்கள் விலங்குகள் (மனிதனும் கூட) மண்ணில் புதைந்து நீண்ட காலம் மக்கிச் சிதைந்துதான் புதைபடிவ எரிபொருள் உண்டாகிறது. அது கரி வளி, நீரகம் எனும் இரு தனிமங்களால் ஆனது. நிலக்கரி, எண்ணெய் (கல்+நெய் = கன்னெய், பெற்றோல்), இயற்கை எரிவாயு ஆகியவை முதன்மையான புதைபடிவ எரிபொருள்கள் ஆகும்.

நிலக்கரி என்பது பாறையடுக்குகளில் படிவுகளாகக் காணப்படுகிறது. பாறையும் மடிந்த செடி கொடி மரங்களும் விலங்குகளும் மக்கிய நிலையில் அடுக்கடுக்காகக் குவிந்து நிலக்கரி ஆகின்றன. ஒரு நிலக்கரித் துண்டின் எடையில் பாதியளவு புதைபடிவச் செடி கொடிகள் மரங்களாக இருக்க வேண்டும்.

காவிரித் தீரத்தில் புதைபடிவ எரிபொருள் கிடைப்பதற்குக் காரணம்: காட்டாறாகப் பெருகிவந்த காவிரியாறு செடி கொடிகள் மரங்களை எல்லாம் சாய்த்து மண்ணில் புதையச் செய்து விட்டது. இலட்சக்கணக்கான ஆண்டுகளில் அது மக்கிக் கரியும் பிற எரிபொருளும் ஆயிற்று. 

கன்னெய் என்பது படிவுற்ற பாறையடுக்குகளில் களிப்பாறை(shale) போன்று திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. இந்த மூலப்பொருளைச் சூடாக்கி கெட்டியான எண்ணெய் ஆக்கி, இதைப் பயன்படுத்தி வளியெரிநெய் (gasoline) செய்யலாம். வட அமெரிக்காவில் கன்னெய்யை வளியெரிநெய் என்றுதான் சொல்வர். இயற்கை எரிவாயு வழக்கமாகக் கன்னெய்ப் படிவுகளுக்கு மேல் சிப்பங்களாக (அல்லது பொட்டலங்கள் போல்) காணப்படுகிறது. கன்னெய் இல்லாத படிவப் பாறை அடுக்குகளிலும் எரிவாயு காணப்படுவதுண்டு. இயற்கை எரிவாயு முதன்மையாக ஈரவளியால்(methane) ஆனது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மொத்த ஆற்றலில் 81 விழுக்காடு நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுவதாகும். வீடுகளில் குளிர் போக்கிக் கதகதப்பூட்டவும், ஆலைகளில் எந்திரம் இயக்கவும், சாலையில் வண்டியோட்டவும் தேவையான மின்னாற்றல் இப்படித்தான் இயற்றப்படுகிறது.

புவியானது அள்ள அள்ளக் கொடுக்கும் அட்சய பாத்திரமன்று. இருக்கிற நிலக்கரியை எல்லாம் எடுத்துத் தீர்த்து விட்டால் புதிய நிலக்கரி கிடைக்க இலட்சக்கணக்கான ஆண்டுகளாகும். எண்ணெயும் எரிவாயுவும் கூட இப்படித்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே புதைபடிவ எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டும். அதாவது புவித்தாயின் அடிவயிற்றிலேயே விட்டுவைக்க வேண்டும்.

இரண்டாவதாக, கடந்த 20 ஆண்டுகளில் மாந்தச் செயல்பாடுகளால் கரியுமிழ்வுகள் பெருகிப் போனதில் கிட்டத்தட்ட முக்கால் பங்கிற்குப் புதைபடிவ எரிபொருள்களே பொறுப்பாகும். இப்போது புதைபடிவ எரிபொருள் மீதான சார்புநிலையைக் குறைக்கவும், இந்த எரிபொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கெடுவதைக் குறைக்கவும் வழியுண்டா? என்று அறிவியலரும் பொறியியலரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

நிலக்கரியைக் காட்டிலும் இயற்கை எரிவாயு 50 விழுக்காடு குறைவாகவே உமிழ்வுடையது என்பதால் எரிவாயு கொண்டு வண்டியோட்டும் படியான ஊர்திகளை வணிக அளவில் கிடைக்கச் செய்யும் தொழில்நுட்ப ஆய்வுகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காற்று மண்டலத்திலிருந்து கரியிருவளியைப் பிடித்து நிலத்தடியில் பதுக்கி வைக்கும் ஆய்வுகளும் நடக்கின்றன.

எல்லாம் சேர்ந்து புதைபடிவ எரிபொருளின் தீங்கைக் குறைத்துப் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்திக் காலநிலை மாற்றத்துக்குத் தடை போட்டு விடுமா? விடும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நிலத்தடி பூதங்களை வெளியே வர விடாமல் உள்ளேயே அடைத்து வைப்பதற்குத்தான் வழி தேட வேண்டும். முதலில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு பரவாமல் தடுக்கப்பட வேண்டும்.

ஒரு சில ஆண்டுகள் முன்பு பச்சை வேட்டைக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது அருந்ததி இராய் கேட்டார்:

“நாம் களிக்கனிமத்தை மலையிலேயே விட்டு விடலாமா? “(“Shall we leave the bauxite in the mountains?”)

அலுமினியத்துக்கு இன்றியமையாத மூலப் பொருள் களிக்கனிமம் (bauxite)எனும் தாது. களிக்கனிமச் சுரங்கங்களாலும் களிக்கனிமத்திலிருந்து ஈயம் செய்யும் செய்முறையாலும் பாரிய சூழற்கேடு நிகழ்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகக் களிக்கனிமம் எடுப்பதை நிறுத்தி விடுவோமா? அதாவது, உங்கள் சுரங்கக் கொள்கை என்ன? என்று கேட்டார் அருந்ததி இராய்.

நம் சுரங்கக் கொள்கை என்ன? நிலக்கரியை நிலத்திலேயே விட்டு விடுவோமா?

தோழர் தியாகு

தரவு –தாழி மடல் 19