santhan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
santhan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 செப்டம்பர், 2011

daily one time food-mother of Santhan: அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!- சாந்தனின் தாய்

என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!- சாந்தனின் தாய்

என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து அழுதார் மரணதண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தனின் தாயார்.
மரண வாசலில் இருந்து மீண்டு நிற்கும் மூவரில், சற்று வித்தியாசமானவர் சாந்தன். சாய்பாபாவின் தீவிர பக்தரான இவர், சாய் பக்தர்கள் குழாம் ஒன்றையே சிறையில் உருவாக்கிவிட்டார்.
சாந்த சொரூபியாக வலம் வரும் சாந்தன் பேசுவது ரொம்பவும் குறைவு. பெயர் மாற்றக் குழப்பத்தால் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் இவருக்கு, ‘ஈழத்தில் இருக்கும் தாய், தந்தையர் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் கதி என்ன?’ என்றே தெரியவில்லை.
அந்தத் துயரத்தை ஜூனியர் விகடன் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருந்தார்!
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு, இலங்கையில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அம்மாளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டோம்.
‘தமிழகத்தில் இருந்துபேசுகிறோம்…’ என்றவுடனே, அவர் குரலில் பரவசம் பரவ… திக்குமுக்காடிப் போனார். சட்டென்று அவருக்கு வார்த்தைகளும் வரவில்லை. பின்னர், தீராத அந்த சந்தோஷத்துடன் பேசினார்.
‘எங்கட பிள்ளைக்காக எங்களால போராட முடியலை… உங்கட முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும் வணக்கமும். அங்க போராடற அத்தனை தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்கட நன்றியைத் தெரிவிச்சுக்கொள்றம். உங்க எல்லாரையும் தெய்வம் போல நாங்க நினைக்கிறம்!” என்ற அவரிடம் சாந்தன் பற்றிக் கேட்டோம்!
ஐயா, எங்கட பிள்ளை படிச்சுப்போட்டு… வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அங்க வந்தார். பிள்ளைக்காக எங்கட சொந்தக் காணியை (நிலம்) ஈடு வெச்சு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பினம்.
ஆனா, ஐயா அங்க என்ன நடந்ததென்டே தெரியாது. எங்கட பிள்ளைய பிடிச்சுவச்சுக்கொண்டு, இவ்வளவு காலம் வெச்சிருக்கிறாங்கள். அவரை விட்டுடுவாங்கள் என்ற நம்பிக்கையிலதான் உறுதியோடு இருந்தம். ஆனா, திடீரென்டு இடிபோல செய்தி வந்தது ஐயா…”
தொடர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ”10 மாசம் சுமந்து பெத்த அந்தப் பிள்ளைய, 20 வருஷமா பார்க்காம இறக்கிறம் ஐயா… 20 வருஷத்தில இடையில ஒருமுறைகூட அவரைப் பார்க்க ஏலலை (இயலவில்லை)… வேலைக்காக வெளிக்கிட்டவர், (புறப்பட்டவர்) தன்னோட தம்பி ஆசையா கேட்ட பலூன் வாங்கித் தந்து போட்டுப் போனார்.
தங்கை மேல அவருக்கு ரொம்பப் பிரியம்… தங்கை சைக்கிள் ஓட்டி விழுந்துபோட்டால் என்டு சொல்லி, தானே அவளை ட்யூஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அந்த அளவுக்குச் செல்லம்…
புறப்பட்டுப் போனபோதுகூட, தங்கையின் கையப் பிடிச்சுக்கொண்டு, ‘அம்மா பாவம்… நம்ம வெச்சுக்கொண்டு கஷ்டப்படுறாங்க. வெளிநாட்டுக்குப் போய் அண்ணன் உழைச்சு பணம் அனுப்புறன். தம்பியும் நீயும் கனக்கப் படிச்சு, டாக்டரா வரவேணும்’ என்டு கனக்க புத்திமதி சொல்லிக்கொண்டு போனார்.
அந்த பிள்ளையத்தான், பிடிச்சுப் போட்டுட்டாங்கள்… எங்களால் ஒண்டும் செய்ய முடியேல்ல. 20 வருடங்கள் ஓடிப்போயிட்டது… எங்கட பிள்ளை எப்படி இருக்கிறார்? அவருடைய தோற்றம் எப்படி இருக்குது? காணக் கொடுத்து வைக்கலையே, ஐயா…
எங்கட குடும்பத்தைக் காப்பாத்துவார் என்டுதான் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிச்சு வெச்சம். கடவுள் இப்படிச் செய்திட்டாரே?
என்ட கணவருக்கு 70 வயது. அவருக்கும் உடல் நிலை மோசம். ஒரு கண் பார்வை குறைஞ்சிட்டது. அவரையும் பார்த்துக்கொண்டு, என்ட பிள்ளையப் பார்க்க முடியாத நிலைமை… ரெண்டு பேராலயும் தூரப் பயணம் செய்யமுடியாது.
வறுமை இன்னொரு பக்கம்… வயோதிக காலத்தில சரியான கஷ்டம், துன்பம் அய்யா! கிடைக்கிற கூலித்தொழிலைச் செய்து, கஷ்டப்பட்டுத்தான் ஜீவியம் பண்ணிக்கொண்டு இருக்கிறம்…
என்ட கணவர் கடுமையான வேலைகளைச் செஞ்சுதான் நாளாந்தம் செயல்பட்டுக்கொண்டு இருந்தவர். இந்தியா ஊடாக வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வந்த பிள்ளைய, அங்க பிடிச்சுப் போட்டதில் இருந்தே மனுஷருக்கு உடம்பு போச்சுது.
இடையில ஒரு முறை (2000, தி.மு.க. ஆட்சியில்) பிள்ளைக்கு கருணை மனு போட்டதில, நல்ல உத்தரவை நம்பிக்கையா எதிர்பார்த்தோம், ஆனா, அதில பெரிய ஏமாற்றம். அப்போது முதலே அவருக்கு உடம்பு பிரச்னையாகிப் போயிட்டது…
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையால குணமாக்கிக்கொண்டு வாறம். இருந்தாலும் அவரால சகஜமா செயல்படமுடியாத நிலைமை… 20 வருஷமா விரதம் இருக்கிறதால, என்னுடைய உடம்பும் மோசமாயிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள். அதனால செயல்பட முடியலை… வந்து பார்க்க முடியலை.
இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோட இருப்போமென்டு இருக்கிறம். எங்கட பிள்ளைய பார்க்கவேணும். அவருக்கு என்ட கையால சாப்பாடு கொடுக்க வேணும்… (அழுகை பீறிட்டவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகையோடு தொடர்கிறார்)
என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…
எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து மீண்டும் அழத் தொடங்கியவரை, நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஈழத் தமிழ் அப்பாவித் தாயின் ஓலத்துக்கு பலன் கிடைக்குமா?
ஜூனியர் விகடன்
Short URL: http://meenakam.com/?p=34807

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

statement of condemned (?) prisoner perarivaalan: நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்! – பேரறிவாளன்

நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்! – பேரறிவாளன்

ஜூனியர் விகடனிலிருந்து
பதிவு செய்த நாள் : August 26, 2011


ஈழப் படுகொலைகள் உண்டாக்கிய துயரமே தமிழக மனங்களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரையும் காப்பாற்றக் கோரி கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே…
முதலில் பேரறிவாளன்…
எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி
எதிர்கொள்கிறீர்கள்?
முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!
தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?
அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!
“தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல… 20.07.07 அன்றே  உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ‘வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்… தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. மனசாட்சியின் கண்ணீர்க் குரலாகச் சொல்கிறேன்… எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!
கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?
99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். ‘வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். ‘தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது  என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என ‘சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது… தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!
அடுத்து முருகன்…
தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?
மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!
“தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்…. நன்றி!
அடுத்து ம.தி.சாந்தன்…
“ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறுபடிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே…?
கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.
கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?
நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், ‘முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.  ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை
நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள். ‘நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார்.  ஆனால், நீதிபதி வாத்வா, ‘ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான்  நளினியை சாந்தன் அறிவார்’  என்கிறார்.
நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?
சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள்  தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.  இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!
கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?
என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனையை நீக்குக – மதுரையில் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனையை ரத்து செய்க – மதுரையில் ஆர்ப்பாட்டம்

இன்று 13 08 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனை இந்தியக் குடியரசுத் தலைவரால் உறுதிசெய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக தமிழின ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்துடன் ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் ,முருகன்,சாந்தன் மட்டுமல்லாமல் அப்சல்குரு போன்றவர்கள் மீதான மரண தண்டனையும் நீக்கப்பட வேண்டும் என்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.மரணதண்டனை தரும் இந்திய அரசுக்கு அகிம்சையைப் பற்றிப் பேசவும் அசோக சக்கரத்தை சின்னமாக வைத்துக்கொள்ளவும் என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.இதன் தொடர்ச்சியாக வரும் செவ்வாய்க் கிழமை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பேரணி ஒன்றையும் நடத்தவிருக்கிறார்கள்.

Popularity: 1% [?]