First Published : 12 Oct 2011 09:42:40 PM IST
Last Updated : 12 Oct 2011 11:05:41 PM IST
சென்னை, அக்.12: பௌர்ணமி இரவு சந்திரன் முழு நிலவாகக் காட்சி தரும். ஆனால் எப்போதும் பார்க்கும் சந்திரனுக்கும் இந்தப் பௌர்ணமி அன்று நாம் காணும் சந்திரனுக்கு ஒரு வித்தியாசம் இருக்கும். ஆம்... இந்தச் சந்திரன் இந்த ஆண்டின் மிகச் சிறிய அளவாகக் காட்சி தரும். இந்த ஆண்டின் மற்ற பௌர்ணமிகளைவிட இந்தப் பௌர்ணமிச் சந்திரன் அளவில் சிறியதாகத் தோன்றுவதற்குக் காரணம், பூமியிலிருந்து சந்திரன் அதிகத் தொலைவில் இருக்கும் என்பதுதான்.சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், வட்டப்பாதையில் அல்லாமல் நீள்வட்டப்பாதையில் அது சுற்றி வருகிறது. அதனால், சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவில் அவ்வப்போது மாற்றமும் இருக்கும். பூமிக்கு மிக அருகில் சந்திரன் வரும்போது அதனை ஆங்கிலத்தில் பெரிஜி (Perigee) என்பார்கள். பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு அதிகமாக வரும்போது, அதனை அப்போஜி (Apogee) என்பார்கள். இன்று இரவு பூமியில் இருந்து சந்திரனின் தொலைவு 4,06,434 கி.மீ. ஆக இருக்கும். இதுவே மிக அதிக தொலைவு என்பது குறிப்பிடத் தக்கது.இந்த ஆண்டு மார்ச் 19 அன்று இவை இரண்டுக்கும் இடையில் இருந்த தொலைவு 3,56,571 கி.மீ. எனவே அன்று சந்திரன் பெரியதாகக் காட்சி அளித்தது. இதனை மகா பௌர்ணமி(Super Moon) என்று அழைத்தார்கள். அந்தப் பௌர்ணமிச் சந்திரனோடு ஒப்பிட்டால் இதன் அளவு 12.5 சதவீதம் குறைவாகும். மேலும், தொலைவு அதிகம் என்பதால், வழக்கமான சந்திரனின் ஒளியைவிட ஒளியும் 20 சதவீதம் குறைவுதான்