நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஆகஸ்ட், 2013

அலெக்சேண்டேரியா நூலகத்தின் மதிற் புறத்தில் தமிழ்

அலெக்சேண்டேரியா நூலகத்தின் வெளி கட்டமைப்பில் தொன்மைக்கு அடையாளமாக தமிழ் மொழி எழுத்து இடம் பெற்றுள்ளது.
இது அலெக்ஸ்சேண்டேரியா நூலகத்தின் வெளி கட்டமைப்பு, இவை ஒரு நூலகமாகவும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் ஒரு நடுவமாகவும் செயல்படுகிறது..

இதன் வெளிப்புறத்தில் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வாயிலாக, மொழியின் தொன்மையின் அடையாளமாக தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளது...

இது எகிப்து நகரத்தின், மத்திய தரை கடலின் (Shore of Mediterranean Sea) கரையில் அமைந்துள்ளது..

வாழ்க தமிழ்.....

ஞாயிறு, 5 மே, 2013

குழந்தைகளுக்குத் தனியாக ஒரு நூலகம்

குழந்தைகளுக்கு த் தனியாக ஒரு நூலகம்

ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்றார் ஹிட்லர். மொழியே சமுதாயத்தின் அடையாளம். மொழியைமேம்படுத்தும் இடம் நூலகம்.

நூலகத்தை அமைப்பது சாதாரணமல்ல. மொழியின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத காதலும், அக்கறையும் கொண்ட மனிதர்களால் தான், நூலகத்தை அமைக்க முடியும். தனி மனிதராய், சமுதாயத்தின் மீது கொண்ட ஆதங்கத்தால், சேதுராமன்,40, மடிப்பாக்கத்தில் "ரீடர்ஸ் கிளப்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகவே ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளார்.
அவரோடு உரையாடியதில் இருந்து..

குழந்தைகளுக்கு என தனியாக ஒரு நூலகம் அமைக்க காரணம்?

நான் கார்ப்பரேட் கம்பெனியில், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். நிம்மதியான வாழ்க்கை, கை நிறைய சம்பளம், சொகுசான கார் என, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தேன்.

சம்பளம்... சம்பளம்... என பந்தய குதிரை போல் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் குழந்தைகள் படிப்பு பற்றி யோசிக்கும் போது தான், அவர்கள் இணையதளம், வீடியோ கேமில் மூழ்கியிருந்தது தெரிந்தது.குழந்தைகளின் கவனத்தை திருப்ப, புத்தக வாசிப்பை முறைப்படுத்தினோம். ஆரம்பத்தில் புத்தகம் படிப்பது போல், நடித்து வீடியோகேம்விளையாடினர்.

தொடர்ந்து கண்காணித்தால், புத்தக வாசிப்பில் மூழ்கினர். அவர்களின் வயதுக்கேற்ப, தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுத்தோம்.பின், தினசரி இதழ்கள், வரலாற்று புத்தகங்கள் என, வாசிப்பு பழக்கம் அதிகரித்தது. என் குழந்தைகள் போன்ற சமவயது குழந்தைகளோடு பேசியதில், குழந்தைகளின் உலகம் பற்றி அறிந்தோம். குழந்தைகளுக்கான நூலகம் அமைக்க வேண்டும் என, தோன்றியது.

தற்போது, 10 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கிஉள்ளேன். குழந்தைகள், மாணவர்கள், பெரியோர் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புத்தகங்கள் உள்ளன.

உங்கள் நூலகத்தின் சிறப்பு என்ன?

புத்தக வாசிப்பாளர்களுக்காக, www.readersclub.co.in தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான புத்தகத்தை தேர்ந்தெடுத்து, வாசிப்பாளர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அனுப்பினால் போதும். அடுத்த இரு நாட்களுக்குள், வீடு தேடி புத்தகம் வரும். அதற்காக, தனி கட்டணம் கிடையாது. வாசித்து முடித்ததும், வீடு தேடி வந்து பெற்று கொள்வர். நூலகத்தை தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை.

இதற்காக, மாத சந்தா, 100 ரூபாய் வரை வாங்கப்பட்டது. தற்போது, புத்தக வாசிப்பு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கு 60 ரூபாயும், பெரியவர்களுக்கு 75 ரூபாயும் மாத சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் ஒரு புத்த கம் என்றமுறையில், புத்தக வாசிப்பை முறைப்படுத்த உள்ளோம்.

புத்தக வாசிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

புத்தக வாசிப்பு மூலம், சமுதாயத்தின் பிரச்னைகள், சம்பவங்களை அறிந்து கொள்ள முடியும். படிப்பதை காட்டிலும், படித்ததை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய, தனி மனித கடமை உள்ளது.அதை அறிந்து, தனிப்பட்ட வாழ்க்கையோடு, சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில், ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய இளைய சமுதாயம், புத்தக வாசிப்பில் பெரிதளவு அக்கறை காட்டுவதில்லை. இது, ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல.

மேலும், ஒருவர் படித்த புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுத்து படிக்க உதவ வேண்டும். உங்களிடம், ஏதாவது படித்து முடித்த புத்தகங்கள் இருந்தால், என் நூலகத்திற்கு கொடுங்கள். உங்கள் புத்தகங்கள், பலருக்கும் பயன்பட இது ஒரு வாய்ப்பாக அமையட்டும்."ரீடர்ஸ் கிளப்' தொடர்புக்கு: 99621 00032/ 93806 55511

செவ்வாய், 23 அக்டோபர், 2012

நூறாயிரம் நூல்கள் கொண்ட அரிய தமிழ் நூலகம்

ஒரு லட்சம் நூல்கள் கொண்ட
 அரிய தமிழ் நூலகம்

சென்னை:உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகங்களுள் ஒன்றாக திகழ்கிறது, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகம். இங்கு,  
ஓர் இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.ஆய்வாளர்கள், மாணவர்கள் என, பல தரப்பினருக்கும் உதவி வரும் இந்த நூலகத்திற்கு, தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். பொதுவாக, ஆய்வு நூலகங்களில் நூல்களை நேரடியாக தேட முடியாது. இந்த நூலகத்தில், ஆய்வாளர்கள் தங்களுக்கு தேவையான நூல்களை தாங்களே தேடி எடுத்துக் கொள்ள முடியும்.

அரிய நூல்கள்:தமிழகத்தின் மிக அரிய, ஒரு முறை பதிப்பில் வெளிவந்து பின்னர் வெளிவராத பல நூல்கள், இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் முதல் பதிப்புகள், எங்கும் காண கிடைக்காத, 1927ல் பொன்னுசாமி பிள்ளை என்பவர் எழுதி வெளிவந்த பூர்வீக சங்கீத உண்மை, அபிதான கோசத்தின் 1092ல் வெளிவந்த பதிப்பு, 1911ல் வெளிவந்த ஆரியர் சத்திய வேதம், 1893ல் வெளியான நாகூர் புராணம், 1887ல் வெளியான திருவேங்கட தலபுராணம் போன்ற நூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.இலக்கியங்கள் மட்டுமல்லாமல், 1889ல் வெளியான முத்துவீரியம், 1869ல் பதிப்பு கண்ட 11ம் திருமுறை ஆகிய நூல்களும் இங்கு உள்ளன.

நூலகர் பெருமாள்சாமி கூறுகையில், ""எங்கும் காண கிடைக்காத அரிய நூல்கள், இந்த நூலகத்தில் உள்ளன. இங்கு, 1 லட்சத்து 300 நூல்கள் உள்ளன. சமீபத்தில் போதிய நூலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதால், நூலகம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது,'' என்றார்.

பழங்கால சுவடிகள்:இணை பேராசிரியர் செல்வகுமார் இதுகுறித்து கூறியதாவது:உலக தமிழாரா#ச்சி நிறுவனத்தில், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம், தமிழ் இலக்கியம் மற்றும் சுவடி புலம், சமூக அறிவியல் மற்றும் பண்பாட்டு புலம், அயல்நாட்டு தமிழர் புலம் என, நான்கு புலங்கள் செயல்படுகின்றன.தமிழ் இலக்கியம் மற்றும் சுவடி புலத்தின் சார்பில், இலக்கிய ஆ#வுகள் நடத்தப்படுகின்றன.

பழங்காலத்து சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்த சுவடிகளை படிப்பது, ஆய்வு செய்வது, பாதுகாப்பது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஜோதிடம் முதல், மருத்துவம் வரையிலான சுவடிகள் இங்கு உள்ளன. சுவடி ஆவணக் காப்பகத்தில் அவை பாதுகாக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.



சனி, 7 ஜனவரி, 2012

Statute for Namakkal Kavignar: உலகம் புகழ்ந்தாலும் ஊருக்குள் சிலை இல்லையே: நாமக்கல் கவிஞரின் மகள் பேட்டி

உலகம் புகழ்ந்தாலும் ஊருக்குள் சிலை இல்லையே: நாமக்கல் கவிஞரின் மகள் பேட்டி

First Published : 07 Jan 2012 02:45:18 AM IST


நாமக்கல், ஜன. 6: தமிழ் உணர்வையும் தேசிய உணர்வையும் தமிழர்களுக்கு ஊட்டி வளர்த்த நாமக்கல் கவிஞருக்கு நாமக்கல் நகரில் திருவுருவச் சிலை அமைக்கப்பட வேண்டும் என கவிஞரின் மகள் சரஸ்வதி ரங்கநாதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.  "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்று பாடி இளைஞர்கள் மத்தியில் காந்திய அஹிம்சை கொள்கைகளைப் பரப்பிய பெருமை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையையே சாரும். பாமர மக்களுக்கு எளிதில் பொருள்படும் வகையில் இலக்கிய நயத்துடன் எளிமையான பாடல்களை இயற்றியவர் நாமக்கல் கவிஞர்.  தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று தமிழர்களின் வீரத்துக்கு வித்திட்டு, தேசியத்தையும் தமிழ் உணர்வையும் ஒரு சேர வளர்த்தார். அவரது தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் நாமக்கல் நகரில் அவர் வாழ்ந்த வீடு கிராம நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த நூலகத்தைக் கிளை நூலகமாக தரம் உயர்த்த நாமக்கல் மாவட்ட நூலகத் துறை முடிவு செய்தது. கிளை நூலகத்துக்கான உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைப்பதற்காக வந்த நாமக்கல் கவிஞரின் மகள் சரஸ்வதி ரங்கநாதனை சந்தித்தோம்.  அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில், அந் நாட்டவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொண்டுவிட்டு, சமீபத்தில் அவர் ஓய்வு பெற்றுள்ளார். அவரது கணவர் சி.பி.ரங்கநாதன் உலக வங்கியில் பொறியாளராகப் பணியாற்றியவர். கவிஞரும், தனது தந்தையுமான நாமக்கல் கவிஞர் குறித்து சரஸ்வதி ரங்கநாதனின் மலரும் நினைவுகள்....  ""நாமக்கல் கவிஞரின் 5 குழந்தைகளில் நான்காவதாக நான் பிறந்தேன். சிறுவயதில் இருந்தே எங்களுக்கு அவர் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தார். காந்திய கொள்கையில் ஆழ்ந்த பற்று கொண்ட அவர், நாள்தோறும் ராட்டையால் நூல் நூற்பார்.  அவருடன் எங்கள் தாயார் சவுந்திரம்மாளும் நூல் நூற்கும் பணியை மேற்கொள்வார். அவர்கள் தயாரிக்கும் நூலைக் கொண்டு உற்பத்தியாகும் கதர் ஆடைகளைத்தான் நான் அணிந்து கொள்வேன். கதர் ஆடையின் சிறப்பு குறித்து நாமக்கல் கவிஞர் பாடிய பாடல்களை பாடியவாறே தாயார் கதர் துணிகளை விற்பனை செய்தது இன்னும் என்னுடைய நினைவில் இருக்கிறது.  அவருக்கு அபாரமான ஓவியம் வரையும் திறமை இருந்தது. அவர் வரைந்த அனைத்து ஓவியங்களும் காலத்தால் அழியாதவை. காரைக்குடி பகுதியில் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றளவும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  அந்தக் காலத்தில் நடத்தப்படும் தெருக் கூத்துகளை ஆர்வத்துடன் பார்ப்பார். அந்தக் கூத்துகளில் வரும் பாடல்களைப் போல மக்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் கவி பாடினார்.  கவியும், வறுமையும் உடன் பிறந்தது என்றாலும், கஷ்டமென வந்தோருக்கு அவர் தன்னாலான உதவியைச் செய்து மகிழ்ந்தார். எங்களது வீட்டின் முன் இருந்த திண்ணையில் நாள்தோறும் ஏராளமானோர் படுத்து உறங்க இடமளித்தார். நாமக்கல்லில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தனது வீட்டுக்கு வழங்கப்பட்ட குடிநீரை மக்களுக்காக அளித்து உதவினார்.  தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழின் மேன்மைக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் அர்ப்பணித்து பாடுபட்ட கவிஞர் நினைவாக, நாமக்கல் அரசு மகளிர் கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவரது இல்லம் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த இல்லத்துக்குப் பின்புறமாக நிறைய இடமுள்ளது. அந்த இடத்தில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் இணைந்து சமுதாயக் கூடத்தை அமைத்து, அங்கு தமிழ் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.  நாமக்கல் கவிஞரை நாடே போற்றிப் புகழ்ந்தாலும், அவரது திருவுருவச் சிலை நாமக்கல் நகரில் அமைக்கப்படவில்லை என்கிற மன வருத்தம் நீண்ட நாளாகவே எனக்கு இருக்கிறது.  எனவே, நாமக்கல்லின் பெருமையை உலகறியச் செய்த கவிஞரின் சேவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது திருவுருவச் சிலை நகரில் அமைக்கப்பட வேண்டும். அதே போல், அவரது தன்னலமற்ற வாழ்க்கை குறித்து தகவல்களை மாணவ சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ் ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.'