படிப்பு மட்டுமே தீர்வு!
சத்தியமங்கலம் வனப் பகுதியில், ஏழை குழந்தைகளுக்கு, உதவி தொகையுடன் கல்வி கற்று தரும்,
கருப்பசாமி: நான், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில், மிகவும்
தாழ்த்தப்பட்ட, அருந்ததி இனத்தை சேர்ந்தவன். படிக்காமல் கஷ்டப்படுவதை
உணர்ந்த என் பெற்றோர், என்னை, எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற
வைராக்கியத்தோடு, எம்.ஏ., வரை படிக்க வைத்தனர். கல்லூரி படிப்பை
முடித்ததும், ஒரு கம்பெனியில் வேலை செய்தேன். படித்த படிப்பு, பலருக்கு
உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வேலையை ராஜினாமா செய்து,
சத்தியமங்கலத்திற்கே திரும்பினேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை மீட்டு வர,
கல்வியறிவு கொடுப்பதே சிறந்தது என, உறுதியாக நம்பினேன். தொடர்ந்து, 2001ல்,
"ரீட்' எனும், கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தை ஆரம்பித்தேன். எங்கள்
பகுதியில், எந்நேரமும், காட்டு யானை மற்றும் சிறுத்தைகளால் ஆபத்து
உண்டாவதால், அருந்ததியினர் மற்றும் தலித் மக்களின் குழந்தைகள், தினமும்
அதிக தூரம் வெளியில் சென்று, கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அதனால், ஆங்காங்கே, சம்பளத்திற்கு படித்த இளைஞர்களை பணியில் அமர்த்தி, மாலை
நேர பள்ளிகளை, இலவசமாக துவங்கினேன். முதலில், போதிய ஆதரவு இல்லாததால்,
ஆர்வத்துடன் வரும் மாணவர்களுக்கு, வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன். 10
கிராமங்களில் ஆரம்பித்த இரவு நேர பாடசாலை, மிகுந்த சிரமத்திலும்,
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பாலும் வளர்ச்சி பெற்று, தற்போது, 71
கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பவர்களுக்கு
ஆண்டிற்கு, 1,500 ரூபாயும், கல்லூரி படிப்பவர்களுக்கு, 5,000 வரை கல்வி
உதவி தொகையாக வழங்கி, மேலும் படிக்க ஊக்குவிக்கிறோம். இதனால், பள்ளிக்
கூடமே செல்லாத மாணவர்கள், இன்று இன்ஜினியரிங், நர்சிங் என, உயர் படிப்புகளை
படித்து வருகின்றனர். எங்கள் உதவியால், 2,000த்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் படிப்பதை நினைக்கும் போது, மனதிற்கு மகிழ்ச்சியாகவும், பெரிய
அளவில் சாதித்த திருப்தியும் கிடைக்கிறது.