சொல்லடிப்போம் வாங்க! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்லடிப்போம் வாங்க! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜனவரி, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : சொல்லடிப்போம் வாங்க!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி)

கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி

குமுக மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, குமுக வளர்ச்சி நெறிகளின் படி முதலியம் அழிவதும் குமுகியம் (SOCIALISM) மலர்வதும் தவிர்க்கவியாலாதவை என்ற மார்க்குசியத்தின் உறுதியான நிலைப்பாடு அதனை ஓர் ஊழ்வினைக் கோட்பாடு போல் காட்டும் தீவாய்ப்பு உள்ளது. ஆனால் இஃது உண்மையில்லை. மாந்தர் விரும்பிய படியெல்லாம் குமுக மாற்றமோ அதற்கான புரட்சியோ நடந்து விட மாட்டா. அதே போது மாந்தர் விரும்பாமலும், மாந்த முயற்சி இல்லாமலும் எம்மாற்றமும் வராது, எப்புரட்சியும் நடவாது. மாற்றமும் புரட்சியும் தவிர்க்கவியலாதவை என்ற கருத்தின் பொருள் மாந்த முயற்சி இல்லாமலே அவை நடக்கும் என்பதன்று. புறஞ்சார்ந்த குமுக நெறிகளைத் தலைவிதியாக மார்க்குசியம் கருதவில்லை. குமுக நெறிகளைப் புரிந்து உள்வாங்கிக் கொண்டு குமுக அமைப்பையும் அதன் வளர்ச்சி நிலையையும் முரண்பாடுகளையும் கணித்துப் புரட்சிக்குரிய கோட்பாடும் நடைமுறையும் வழிமுறையும் அமைப்பு முறையும் இல்லாமல் குமுகியப் புரட்சி நடைபெறாது. விடுதலையும் கிட்டாது. “தானாய் எதுவும் மாறும் என்பது பழைய பொய்யடா!”

மார்க்குசியம் உயர்ந்த கனவுகளின் தோரணம் அன்று. நாம் வாழும் குமுகம் எத்தகையது என்பதை உள்ளது உள்ளபடி பகுத்தாய்ந்து அதிலிருந்து சுரண்டலற்ற புதிய பொதுமைக் குமுகத்துக்கும் அதன் முதற்கட்டமாகிய குமுகியத்துக்கும் முன்னேறும் வழிகளை வெளிபடுத்துவதே மார்க்சியத்தின் கடமை ஆயிற்று. குமுகியத்துக்கு வழிநடத்தும் குமுக ஆற்றல் எது? இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகளே என்பதை மார்க்சும் எங்கெல்சும் இனங்காட்டினார்கள். மார்க்குசிய ஆய்வுமுறையின் மையமாக இருப்பது பாட்டாளி வகுப்பின் வரலாற்று நலனும் கடனும் ஆகும்.

இலெனின் சொன்னார்:
“மார்க்குசும் எங்கெல்சும் தொழிலாளர் வகுப்புக்கு ஆற்றிய சேவை என்ன? சுருங்கச் சொல்லின் தொழிலாளர் வகுப்பு தன்னை அறியவும் தன்னை உணரவும் கற்றுத் தந்தார்கள். கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தினார்கள்.”

முதலிய (முதலாளித்துவ) அமைப்பின் கமுக்கத்தை விண்டுரைக்க மார்க்குசு பயன்படுத்திய வழிமுறை மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். பொதுமைக் கட்சியின் கொள்கையறிக்கை (COMMUNIST MANIFESTO) இப்படித் தொடங்குகிறது: “ஏடறிந்த வரலாறு அனைத்தும் வகுப்புப் போராட்டங்களின் வரலாறே ஆகும்”.

குமுக வகுப்புகளிடையிலான முரண்பாடுதான் வரலாறு நெடுகிலும் வளர்ச்சியின் உந்தல், இந்த முரண்பாடுகள் முற்றித்தான் புரட்சிகள் வெடிக்கின்றன, குமுக மாற்றங்கள் நடக்கின்றன, இந்தக் குமுக மாற்றங்களின் வேர்க் காரணங்கள் பொருளாக்கத்திலும் பங்கீட்டிலுமான மாற்றங்களே என்பது மார்க்குசியக் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் ஆய்வுமுறைக்கும் அடிப்படை ஆகும்.

வகுப்புப் போராட்டம் என்பதைக் குறுக்கி தேசியப் போராட்டங்களுக்கு உரிய அழுத்தம் தராதாரும் உளர். ஆனால் தொழிலாளர் வகுப்பு தன்னைத் தேசமாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமை அறிக்கை கூறுவதன் ஆழ்பொருளை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. அதனால்தான் அறிக்கையின் முத்தாய்ப்பையே திரித்து “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்று முடிக்கின்றார்கள். “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்பதுதான் உண்மையான இறுதி முழக்கம். இரண்டுக்குமான வேறுபாடு எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்கதே.

பொதுமை அறிக்கை என்ற அந்தச் சின்னஞ்சிறிய நூல் முழுவதுமே மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சுடர்மிகு செயல்விளக்கமாகத் திகழ்கிறது.

மார்க்குசிய ஆய்வுமுறை நேரான வகுப்புப் போராட்டங்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் உரிய அறிந்தேற்பு வழங்குகிறது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆதிக்கத்தை வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கம் என்றும், இனஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய விடுதலைப் போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவியது. இன்றைய இசுரேலின் சீயோனிய அரசு வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கத்தைக் குறிக்கும் இன ஒதுக்கல் ஆட்சி என்றும், பாலத்தீன மக்களின் போராட்டத்தைத் தேசியத் தன்தீர்வுக்கும் தேசிய விடுதலைக்குமான போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவுகிறது. இசுரேல்-பாலத்தீனப் பூசலுக்கு மதங்களிடையிலான பூசல் ஒரு வரலாற்றுக் காரணமாகத் தோன்றினாலும், மெய்யான வேர்க் காரணம் வல்லரசியங்களின் விரிவாளுகை நலனே என்பதைப் புரிந்து கொள்ளவும், இந்தப் பூசலுக்கு நிலையான அரசியல் தீர்வு காணவும் மார்க்சிய ஆய்வுமுறை வழிகாட்டுகிறது.

இந்துத்துவத்தை இந்து மதம் என்று நம்பப்படும் மத நம்பிக்கைகளிலிருந்து வேறுபடுத்திக் காணவும், இந்துத்துவ அரசியலின் பார்ப்பனிய உள்ளடக்கத்தைக் கண்டுணரவும், வகுப்பு வகையிலும் சாதி வகையிலும் அதன் பார்ப்பன-பனியா-பெருமுதலிய ஆளும் வகுப்புச் சார்பைத் தோலுரித்துக் காட்டவும் மார்க்சிய ஆய்வுமுறை துணைசெய்கிறது.

முதலிய வளர்ச்சிக்கும் இயற்கைச் சூழல் அழிவுக்குமான நெருங்கிய தொடர்பை மார்க்சிய ஆய்வுமுறை துலக்கமாக வெளிப்படுத்துகிறது. முதலியம் நிலத்தைக் கொள்ளையிடுவதாகவே மார்க்சு சொல்கிறார்:

“…முதலிய வேளாண்மையில் முன்னேற்றம் என்பதெல்லாம் தொழிலாளரை மட்டுமல்லாமல் மண்ணையும் கொள்ளையிடும் கலையிலான முன்னேற்றம்தான். குறிப்பிட்ட காலத்திற்கு மண்வளத்தைப் பெருக்குவதிலான முன்னேற்றம் என்பதெல்லாம் அந்த வளத்தின் நீடித்து நிலைக்கும் தோற்றுவாய்களைச் சிதைப்பது நோக்கிய முன்னேற்றம்தான்… முதலியப் பொருளாக்கம் செல்வமனைத்தின் மூலத் தோற்றுவாய்களான மண்ணையும் தொழிலாளரையும் உறிஞ்சித்தான் தொழில்நுட்பம் வளர்க்கிறது.”

மாந்தருக்கும் சுற்றுச் சூழலுக்குமான இயங்கியல் உறவை மார்க்சிய ஆய்வுமுறை வெளிப்படுத்துகிறதுமாந்தர் சுற்றுச்சூழல் மீது செயல் புரிவது போலவே சுற்றுச் சூழலும் மாந்தர் மீது செயல் புரிகிறது. எப்படி நீருக்கு வெளியே மீனால் உயிர்வாழ முடியாதோ, அதே போல் சுற்றுச் சூழலுக்கு வெளியே மாந்தரால் உயிர்வாழ முடியாது. மாந்தர்தம் உடனடி நன்மைக்காக சுற்றுச்சூழலைச் சிதைக்கலாம் என்பது எவ்வளவு விபரீதம்! இந்த விபரீதத்தை அறிவியல் வழியில் வெளிப்படுத்துவது மார்க்சிய ஆய்வுமுறையே!

கொடும் போர்களாலும், காலநிலை மாற்றத்தாலும், முதலிய ஈட்ட வெறியின் வரம்பற்ற பெருக்கத்தாலும் உலகம் பேரழிவு நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணரவும், இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவும் இன்றைய உலகப் பொருளியலையும் அரசியலையும் பகுத்தாய மார்க்சிய ஆய்வுமுறையே நமக்குத் துணை!


பின்குறிப்பு:

இந்தக் கட்டுரையில் இடம்பெறும் புதிய கலைச்சொற்கள்:

[சொல்லடிப்போம் வாங்க!]

புதிய தமிழ் (பழைய தமிழ்) – ENGLISH)



1) மார்க்குசிய ஆய்வுமுறை – THE MARXIST METHOD;
2) குமுக மாற்றம் (சமூக மற்றம்) – SOCIAL CHANGE;
3) பொருண்மியம் (பொருள்முதல் வாதம்) – MATERISLAISM;
4) கருத்தியம் (கருத்துமுதல்வாதம்) – IDEALISM;
5) இயங்கியல் பொருண்மியம் (இயக்கவியல் பொருள்முதல்வாதம்) – DIALECTICAL MATERIALISM;
6) வரலாற்றுப் பொருண்மியம் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம்) – HISTORICAL MATERIALISM;
7) முதலியம் (முதலாளித்துவம்) – CAPITALISM;
8) குமுக வகுப்புகள் (சமூக வருக்கங்கள்) – SOCIAL CLASSES;
9) வகுப்புப் போராட்டம் (வருக்கப் போராட்டம்) – CLASS STRUGGLE;
10) படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) – EVOLUTION;
11) வாழ்நிலை – BEING;
12) உணர்வுநிலை – CONSCIOUSNESS;
13) ஆக்கம் (உற்பத்தி) – PRODUCTION;
14) உழைப்பின் இலக்குப் பொருள் – OBJECT OF LABOUR;
15) உழைப்புக் கருவி – INSTRUMENT OF LABOUR;
16) ஆக்கப் பொறிகள (உற்பத்திச் சாதனங்கள்) – MEANS OF PRODUCTION;
17) ஆக்க ஆற்றல்கள் (உற்பத்திச் சக்திகள்) – FORCES OF PRODUCTION;
18) ஆக்க உறவுகள் (உற்பத்தி உறவுகள்) – RELATIONS OF PRODUCTION;
19) பொதுமைக் கட்சி அறிக்கை (பொதுமை அறிக்கை) – MANIFESTO OF THE COMMUNIST PARTY (COMMUNIST MANIFESTO);
20) குமுக அமைப்பு (சமூக அமைப்பு) – SOCIAL SYSTEM;
21) குமுகப் புரட்சி (சமூகப் புரட்சி) – SOCIAL REVOLUTION;
22) தொல் பொதுமைக் குமுகம் (ஆதிப் பொதுவுடைமைச் சமூகம்) – PRIMITIVE COMMUNIST SOCIETY;
23) அடிமையுடைமைக் குமுகம் (அடிமையுடைமைச் சமூகம்) – SLAVE-OWNING SOCIETY;
24) கிழாரியக் குமுகம் (பிரபுத்துவ / நிலப்பிரபுத்துவ) சமூகம்) – FEUDAL SOCIETY;
25) அடித்தளம் – BASE;
26) மேற்கட்டுமானம் – SUPERSTRUCTURE;
27) புறஞ்சார்ந்த குமுக நெறிகள் (புறவய சமூக விதிகள்) – OBJECTIVE SOCIAL LAWS;
28) சுற்றுச் சூழல் – ENVIRONMENT;
29) காலநிலை மாற்றம் – CLIMATE CHANGE;
30) முதலிய ஈட்டம் (முதலாளித்துவ இலாபம்) – CAPITALIST PROFIT;
31) முதலிய வேளாண்மை (முதலாளித்துவ விவசாயம்) – CAPITALIST PROFIT.
32) ஊழ்வினைக் கொள்கை (தலைவிதித் தத்துவம்) – FATALISM;
33) தன்-தீர்வு (சுய நிர்ணயம்) – SELF-DETERMINATION.

தோழர் தியாகு
தாழி மடல் 413

(தொடரும்
)


திங்கள், 27 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 52 : சொல்லடிப்போம் வாங்க! (7)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (7)

அன்பர் சிபி எழுதுகின்றார்:
ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன்.

சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.
Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது வேறு சொல் உண்டா? இது குறித்து அன்பர்கள் எழுதுங்கள்.
Capitalism = முதலாளித்துவமா? முதலாளியமா? முதலியமா? – இது குறித்த உரையாடலையும் தொடங்குவோம், தொடங்குங்கள்.

பெரியாரா? பிராபகரனா? (தாழி மடல் 30) கட்டுரைக்கு எதிர்வினையாக அன்பர் சிபி எழுதுகின்றார்:
ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக்கூடாது என்பது ஏற்புடையதல்ல.
சரியாகச் சொன்னீர்கள். நானும் திருப்பிச் சொல்கிறேன்: ஈழத்தில் பிரபாகரன் (பெரியார்) ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.
யார் அப்படிச் சொன்னது? எங்கே? எப்போது? நான் எங்கும் அப்படியோ அந்தப் பொருள்படும்படியோ சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில் நான் அப்படிச் சொல்லியிருந்தால் எடுத்துக் காட்டுங்கள், சிபி!
சிபிதான் என்றில்லை! அன்பர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் காட்டுங்கள்! திருத்திக் கொள்கிறேன். சத்தியசீலனின் கடிதம் தொடங்கி இந்த மடல் வரை 29 முதல் 33 வரைக்குமான தாழி மடல்களில் இது குறித்து வந்துள்ள அனைத்தையும் படித்து விட்டுச் சொல்லுங்கள்.
பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவரே தவிர எமதியக்கத்தின் தலைவரல்லர் என்று நான் தெளிவாக எழுதிய பின் சிபி சாற்றுவது போல் நான் எப்படிச் சொல்வேன்?
உரையாடலைத் தொடர்வோம்.
(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 33

செவ்வாய், 21 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)

 



(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (6)

பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்:

இயம்இசம்இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம்  என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்?

தாராளியம் என்பது எப்படி அமைப்பையும்தத்துவத்தையும் குறிக்கிறதுஎன்பதை விளக்கப்படுத்துங்கள்.

இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும்.

இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர்  இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது பெரியாரியம் என்ற பொருளில் ஆளப்படுகிறது. நுட்பமாகப் பார்த்தால் இரண்டுக்கும் வேறுபாடுள்ளது. Marxism என்பது மார்க்குசியம். இது மார்க்குசியக் கொள்கையமைப்பைக் குறிக்கும். இது மார்க்குசிய மெய்யியல், மார்க்குசியப் பொருளியல், மார்க்குசிய அரசியல் ஆகிய மூன்று கூறுகளாலானது. ஆனால் Marxology வேறு. இதை மார்க்குசியல் எனலாம். இது மார்க்குசைப் பற்றிய ஆய்வுத்  துறை. மார்க்குசியம் மார்க்குசின் ஆய்விலிருந்து கிடைத்தது. மார்க்குசியல் மார்க்குசைப் பற்றிய ஆய்விலிருந்து கிடைத்தது. Geography புவியியலைக் குறிக்கும்.  ஆனால் historiography வரலாற்றெழுதியல் ஆகும். History வேறு, historiography வேறு. சிலர் இதனை வரலாற்றியல் என்று சொல்வோருண்டு. வரலாறு என்றால் வந்த வழி. வரலாறு எழுதும் முறை வரலாற்றியல் அல்லது வரலாற்றெழுதியல் ஆகும்.

இயம் என்பது இசம் என்பதன் தமிழ் வடிவமாக இருக்க வேண்டியதில்லை, இயைபு (composition), இயல்பு (nature) என்பவை தூய தமிழ்ச் சொற்கள். இயைதல் என்பதும் தமிழே. எனவே இயைந்து அமையும் அமைப்பு இயம் என்ற பின்னொட்டைத் தருகிறது. இது இடம் பொருள் ஏவலைப் பொறுத்து கருத்தமைப்பாகவும் இருக்கலாம். குமுக அமைப்பாகவும் இருக்கலாம்.

முதலியம் (முதலாளியம்) என்பது முதல்சார் கருத்தமைப்பாகவும் இருக்கலாம். முதல்சார் பொருளாக்க அமைப்பாகவும் இருக்கலாம். Liberalism என்பதும் அப்படித்தான். தமிழில் தாராளியம் அல்லது தாராளவியம் என்பது இரண்டு பொருளிலும் பயன்படும். பொருள் (அருத்தம்) என்பது மட்டுமல்ல, பொருட்சாயல் (shade அல்லது அருத்தச் சாயல்) என்ற ஒன்றும் உண்டு. Liberalism என்பது இரு பொருட்சாயல்கள் கொண்டது என்றால், தாராளியம் (தாராளவியம்) இடம் பொருள் ஏவலைப் பொறுத்து இரண்டில் எந்தச் சாயலையும் குறிக்கலாம். ஆனால் ‘தராளவாதம்’ ஒரு பொருளாக்க முறைமை என்ற சாயலைக் காட்டிலும் ஒரு கருத்தியல் என்ற சாயலையே கூடுதலாகச் சுட்டுவதாக நினைக்கிறேன். நவ-தாராளவாதம், புதுத் தாராளியம் இரண்டையும் சொல்லிப் பாருங்கள். தமிழ் நாவிற்கு எது பொருத்தம்? என்று எண்ணிப் பாருங்கள்.

Ism என்பது செயலை அல்லது தொழிலைக் குறிக்கும் இடங்களும் உண்டு. காட்டாக, terrorism, journalism.

சொல்லாக்கம் என்பது சுவையான விளையாட்டு. பள்ளிப் பருவத்தில் விளையாட்டுகளில் பங்கேற்க முடியாத ஏக்கம் எனக்குண்டு. மாற்றாக அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த விளையாட்டு சொல் விளையாட்டு. Concise Oxford Dictionary  மொத்தமான புத்தகத்தைக் கையில் கொடுத்து சொல்- அதன் சமன் – சமனின் சமன் என்று தேடச் சொல்வார். READERS DIGESTஇல் சுவையான ஒரு பகுதி சொல் விளையாட்டு (WORDPLAY). ஆங்கில நாளேடுகளின் cross words பக்கம் செல்ல நேரமில்லை.

இரா. கிருட்டிணய்யாவோடு ஒருசில சொல்லாக்கங்கள் தொடர்பாக நிறைய சமர் செய்திருக்கிறேன். அவர் சொல்வார்: சொற்கள் நம் குழந்தைகள், விட்டுக் கொடுக்க முடியாது அல்லவா?

ஒரு சொல், அதற்கு ஒரு பொருள் என்று முடிவாக அமைந்து விட்டால், சொல்லாக்கத்தில் சிக்கலே இருக்காது. ஆனால் உலகம் (வாழ்க்கை)  சிக்கலானதாக இருப்பதால் உலகை விளக்கப்படுத்தும் சொல்லாக்கமும் சிக்கலானதாகிறது. பொருட்களின் பல்வகைமைக்கு எல்லையில்லை என்பதால்,  சொற்கள், அவற்றின் பொருட்கள், பொருட்சாயல்களின் பல்வகைமைக்கும் எல்லையில்லை.

வாழ்க்கையிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் நம் அறிவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கான சொற்களைப் பெற முடியும். அவை போதாத போது நாமே நம் மொழியின் இலக்கணத்துக்கும் ஒலியமைதிக்கும் இசைவாகச் சொல்லடிக்கலாம். வேறு வழியில்லாத போது, அயல்மொழிச் சொற்களை நம் மொழியின் ஒலியமைதிக்குப் பெயர்த்தும் பயன்படுத்தலாம்.

பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்:

குற்றாய்வு குறித்த விளக்கத்திற்கு நன்றி தோழர்.”

நல்லது. குற்றம் என்பது கடுமையாக இருப்பதால் வேறு மென்மையான சொல்லடிக்க முயலலாம் என்று தாழி அன்பர் தமிழ்க் காப்பர் இலக்குவனார் திருவள்ளுவன் சொல்கிறார். சரி, சிந்திப்போம்.

தாராளவியம் என்பதற்குச் சிபி சொல்லும் இலக்கண விளக்கம் சரியானது என்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.

தாராளம் + இயம் தாராளவியம்தான். இதை தாராள் + இயம் எனக் கொண்டால் மட்டுமே தாராளியம் என முடியும். தாராள இயம், தாராள் இயம் ஆகுமா? ஆழக் கடல் ஆழ்கடல் ஆவது போல்!

தாராளிகம் என்று சொல்லாய்வறிஞர் அருளியார் சொல்வதையும் கருத்தில் கொள்வோம்.

இந்த உரையாடல் தொடரும்.

சத்தியசீலன் கேட்கிறார்:    

தாராளவாதம் அல்லது தாராளவியம் (Liberalism) என்பதும் தாராளமயம் (Liberalisation) என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறானவையா?

வேறு வேறுதான். தாராளவியம், தாராளவாதம் (liberalism) பற்றி முன்பே விளக்கி விட்டேன். அதன் வரலாறும் பார்க்கப் போகிறோம். தாராளமயம் அல்லது தாராளமயமாக்கம் (liberalization) என்பது தாராளியத்தின் செயலாக்கம். அதன் பரவலாக்கம். Nationalism, nationalization இரண்டும் வேறு வேறுதானே?

இனிய அன்பர்களே!

தாழி அன்பர் சத்தியசீலன் என் நேற்றைய மடலுக்கு மறுமொழி இட்டுள்ளார். அதே பொருள் குறித்து சிபி, நலங்கிள்ளி மடல்களும் வந்துள்ளன. இரோசிமா நாகசாகி தொடர்பான அன்பர் இயூபருட்டு மடலும் வந்துள்ளது. நாளை அந்த உரையாடலைத் தொடர்கிறேன். இன்று அரசியல் வகுப்புக்கு அணியமாக வேண்டும். நாளை சந்திப்போம் – தாழியில்தான்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  31

ஞாயிறு, 19 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 44: சொல்லடிப்போம் வாங்க! (5)

      19 March 2023      அகரமுதல



 (தோழர்தியாகுஎழுதுகிறார் 43 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (5)

தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு கேட்கிறார்:

குற்றாய்வு என்ற சொல் விமர்சனம் என்பதற்கான தமிழ்ச் சொல்லா?

ஆமாங்க. விமர்சனம் என்பதில் இரு வகையுண்டு: (1) திறனாய்வு [review] (2) குற்றாய்வு [criticism]. Criticism and self-criticism = குற்றாய்வும் தற்குற்றாய்வும்.

இன்னுஞ் சிறந்த மாற்று இருப்பின் அன்பர்கள் எழுதலாம்.

நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கலில் நவ-தாராளவாதம் ஒழிந்து, தாராளியமா? தாராளவியமா? தாராளிகமா? என்ற சிக்கல் மட்டும் தொடர்கிறது. அறிஞர்தம் கருத்துக்காகக் காத்துள்ளேன். இந்தச் சிக்கலை முடித்துக் கொண்டு தாராளியத்தின் வரலாற்றைப் பார்ப்போம்.

இதற்கிடையில் அடுத்த சிக்கலாக ‘ஏகாதிபத்தியம்’ (imperialism) என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் [Imperialism, Highest Stage of Capitalism] என்பது மா இலெனின் எழுதிய புகழார்ந்த நூல். பொதுமை இயக்கத் தலைவர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவும் தில்லி ஏகாதிபத்தியம் பற்றிப் பேசியுள்ளார். (அண்ணாவுக்குப் பின் யாரும் பேசினார்களா, தெரியாது.)

ஆனால் imperialism என்பதை முதலில் யார் ஏகாதிபத்தியம் என்று தமிழாக்கினார்களோ, தெரியவில்லை. இரண்டுக்கும் என்ன பொருத்தம் என்று கேட்க வேண்டியுள்ளது.

ஏகாதிபத்தியம் = ஏகம் + ஆதிபத்தியம். ஏகம் என்றால் ஒன்று. ஆதிபத்தியம் என்றால் அதிகாரம் அல்லது தலைமை. இது எப்படி imperialism ஆகும்?

ஏகாதிபத்தியம் தமிழ்ச் சொல் இல்லை என்பது மட்டுமல்ல. அதற்கு imperialism என்ற பொருளும் இல்லை.

Empire என்பதே அடிச்சொல். பேரரசு என்று பொருள். Imperialism வட மொழியில் சாம்ராச்சியம். மலையாளத்தில் சாம்ராச்சியவாதம் என்று நினைக்கிறேன். நல்ல தமிழில் பேரரசியம் எனலாம். ஆனால் பேரரசியத்தில் ஒரு நேர்நிறைத் தொனி இருப்பதால்

imperialism = வல்லரசியம்

என்பதில் போய் நிற்கிறோம். வல்லரசியம் ஒழிக! வல்லரசியம் எதிர்ப்போம்!

சொல்லாராய்ச்சியாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. வரலாற்று நோக்கில் imperialism = வல்லரசியம் எவ்வாறு உருவானது? மா இலெனின் அவரது நூலில் இதனை எப்படி விளக்கினார் என்பதையும் பார்க்க வேண்டும். பார்ப்போம்.  

தாழி மடல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உள்பெட்டியில் பெற்றுப் படிக்கும் அன்பர்கள் குறைவாகவே உள்ளனர் என்ற மனக்குறை எனக்கும் தோழர்களுக்கும் உண்டு. ஆனால் நேரடியாக வரப்பெறாமலே தாழி மடல் படிப்பவர்கள் நிறைய உண்டென்பதை பெங்களூருவில் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி! அன்பர்கள் நேராக மின்னஞ்சலில் பெற்றுப் படிப்பது நம் உரையாடலுக்குக் கூடுதல் பொருத்தமாய் இருக்கும் என்பது என் நம்பிக்கை. தாழி மடல் செய்திகளை எல்லா வழிகளிலும் பரப்புங்கள். ஆர்வமுள்ளவர்களிடம் மின்னஞ்சல் முகவரிகள் திரட்டித் தோழர் மகிழனுக்கு அனுப்புங்கள். அறிவின் ஒளி படரத் துணை செய்யுங்கள்!

தாழி மடலுக்கு அன்பர்கள் எழுதுவது ஊக்கமளிக்கிறது. தாழி அன்பர் சத்தியசீலனிடமிருந்து சற்றே நீண்ட மடல் ஒன்று வந்துள்ளது. அதனை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அன்பர் சத்தியசீலன் மா. எழுதுகிறார்:

ஐயா, வணக்கம். தங்களின் மடல்கள் கருத்துக் கருவூலங்களாக- அழகுத் தமிழில் என்னைப் போன்ற பலர் அறியாத -ஆனால் அறியவேண்டிய அரிய தகவல்களுடன் வருகின்றன; மிக்க மகிழ்ச்சி!

தாழி-20, 21 மடல்கள் குறித்தான சில ஐயப்பாடுகளைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவே இம்மடலை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றியும் அவர்தம் இயக்கத்தைப் பற்றியும் என்னைப் போன்ற பலருக்கும் மேலதிகமான புரிதல் தேவைப்படும் எனக் கருதுகிறேன்; அதனைக் குறித்தே இக்கடிதம்.

எனது பள்ளிப் பருவத்திலிருந்து 2009 மாபெரும் இனவழிப்பு நடந்தேறிய வரை புலிகளின் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் மாபெரும் நன்மதிப்பையும் மரியாதையையும் வைத்திருந்தேன்; ஆனால் அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் எனும் பெயரால் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தியும் திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்- கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அவர்தம் சாதிகளின் அடிப்படையில்  ‘தமிழர்அல்லாதோர்’ என்றும் ‘திராவிடர்கள்’ என்போரை இனப் பகைவர் என்றும் சாதிய அடிப்படையிலான இனவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர்.

பெரியாரின் பகுத்தறிவு – பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகள் மீதும் திமுகவின் இந்தி எதிர்ப்பு – தமிழின அரசியல் மீதும் எனக்கு மிகுந்த பேரார்வம் உண்டு. 

விடுதலைப் புலிகளின் அரசியலை தமிழகத்தில் என்னைப் போன்ற பலர் பரவலாக அறிய வந்தது திராவிட இயக்கமும் திமுகவும் ஈழ விடுதலை ஆதரவுப் பரப்புரையின் மூலம்தான் என்பதை அவர்கள் அறிவார்களா?

திமுக தலைவர் கலைஞர் வெளிப்படையாக வி.பு.க்களையும் பிரபாகரனையும் ஆதரிக்கவில்லை எனினும் அக்கட்சியினர் பலர் – அடிமட்டத் தொண்டர் வரை வெளிப்படையாக புலிகளை ஆதரித்து வந்தனர் என்பதை அனைவரும் அறிவோம். ஏனெனில் கலைஞர் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார்.

ஆனால் அதிமுகவின் நிலைப்பாடோ இதற்கு நேரெதிரானது; அதன் தலைவர் எம்ஞ்சியார் பிரபாகரனை ஆதரித்து வந்தார். ஆனால் அவரைத் தவிர அவரது கட்சியினர் வேறெவரும் புலிகளை ஆதரித்ததாக எந்தவொரு தகவலும் எனக்குத் தெரிந்து இல்லை.

திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் பிரதமர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே. அதுவும் அப்படுகொலையினால் அதிகம் பாதிக்கப்பட்டோர் திமுகவினரும் – திகவினருமே ஆவர் என்பதனாலும் அப்படுகொலையை நிகழ்த்தியது புலிகள்தான் என்ற அனைத்திந்தியப் பரப்புரை எடுபட்டதும்தான்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகள் திமுக – திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் எவரும் ஈழ விடுதலை அரசியலுக்காகக் களத்தில் நிற்கவோ சிறை செல்லவோ இல்லை.

பிறகு ஏன் இவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம்; இவர்களுக்குப் பின்னிற்பது யார் அல்லது எந்த ஆற்றல்! திராவிட இயக்கம் வீழ்ந்துபட்டால் அதனால் ஆதாயம் பெறுவது வலதுசாரி – இந்துத்துவா பாசிட்டுகளாகத்தான் இருக்க இயலும்.

இந்த இனவாதப் பிழைப்புவாதிகளுக்குப் பொருளாதார அடித்தளமாக இருப்பது மேலைநாடுகளில் வசிக்கும் ஈழ ஏதிலியரே!

அவர்கள் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் – அரசியல் அறிவற்று ஆதரிக்கிறார்களா இல்லை தெரிந்தேதான் ஏதேனும் உள்நோக்கத்துடன் ஆதரிக்கிறார்களா!

அவர்களின் நோக்கம்தான் என்ன! இவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் பெற்று ஈழத்தைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்று நிசமாகவே நம்புகிறார்களா? – அந்தளவுக்கு அறிவற்றவர்களா?

இத்தகைய அரசியல் அறிவைத் தான் இவர்களின் தலைவரான பிரபாகரன் இவர்களுக்குப் போதித்திருக்கிறாரா?

அப்படி எனில் விடுதலைப் புலிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு அய்யம் எழுகிறது!

பெரியாருக்கு எதிராக பிரபாகரனை எதிர் நிறுத்துகின்றனர்; நான் தெரியாமல்தான் கேட்கிறேன் – தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பெரியாராலா பிரபாகரனாலா? பிரபாகரனா தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடினார்?

அது மட்டுமல்ல, பெரும்பாலான இடதுசாரிகள் (மகஇகவினர் உள்ளிட்ட) – அறிவுசீவிகள் பலரும் புலிகளைக் குற்றாய்வு செய்து வருகின்றனர்! ஆனால் தங்களைப் போன்ற ஒரு சில இடதுசாரி அரசியலர்களும் பெரியாரியலாளர்களும் (பெரியாருக்கு நிகராகவே) ஆதரிக்கின்றனர்!

இதுதான் என்னைப் போன்றோருக்கு கருத்து மயக்கத்தை

ஏற்படுத்துகிறது. ஆகவே விரைவாகத் தங்களிடமிருந்து இதுகுறித்து தெளிவான விளக்கம் பக்கச் சார்பற்று – எனக்குப் புரிதல் ஏற்படுத்தும் அளவில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்; 

நன்றி!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  29

சனி, 18 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 43: சொல்லடிப்போம் வாங்க! (4)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 42 தொடர்ச்சி

சொல்லடிப்போம் வாங்க! (4)

இனிய அன்பர்களே!

பெங்களூருவிலிருந்து எழுதுகிறேன். விடியுமுன் வந்து சேர்ந்து விட்டேன். இன்று (04.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 18, ஞாயிறு) மாலை கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நடத்தும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வில் பேசுவதற்காக வந்துள்ளேன். விழா நடக்கும் இடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம்.

அழகிய அல்சூர் ஏரிக்கரையில் தமிழ்ச் சங்க வாயிலில் பொன்னிறச் சிலை வடிவில் திருவள்ளுவர் அமர்ந்துள்ளார். கன்னட இன வெறியர்களின் எதிர்ப்பால் பல காலம் சாக்குச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிலைதான் இது. இந்தச் சிலையைத் திறப்பதற்காகக் கர்நாடகத் தமிழர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. திருவள்ளுவர் பால் கன்னட மக்களுக்குப் பகை ஏதும் இல்லை. ஆனால் கன்னட இனவெறியர்களுக்கு அவர் தமிழர் என்பது ஒன்றே போதும். அதாவது இப்போது காவிரியில் உரிமைப் பங்கு கேட்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் முப்பாட்டன் என்பதால்தான் பகை! இதற்கு மாறாக எளிய கன்னட மக்கள் “வள்ளுவர் சாமி” என்று போற்றி வணங்குவதைத் தாய்த் தமிழ் செங்கல் நடைப்பயணத்தின் போது கண்டேன்.

கடந்த முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் பல முறை பெங்களூரு வந்துள்ளேன். கடைசியாக, ஈராண்டுக்கு மேலிருக்கும், இங்குள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினேன். தமிழர்களும் கன்னடர்களும் சேர்ந்து நடத்தும் மகளிர் கல்வி அமைப்பு (சாவித்திரிபா பெயரில் என்று நினைவு) நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக வந்திருந்தேன். கருநாடகத் தமிழ்ச் சங்கத்தில் ஈழம் தொடர்பான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன்.

பாவலர் அறிவுமதியின் ‘குப்பி கடித்த புலிப்பல்’ வெளியீட்டுக்காக அறிவுமதி, சுபவீ, அருள்மொழி… உட்பட நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தோம். அன்று தோழர் கொளத்தூர் மணியும் எதிர்பார்க்கப்பட்டார். ஏனோ வரவில்லை. ஆனால் எல்லோருமே அவரையும் புலிகளின் ஆய்தப் போராட்டத்துக்கு அவர் செய்த ஆக்கப் பங்களிப்பையும் சுட்டிப் பேசினர். 

கருநாடகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் அண்ணாச்சியின் இராசாசி நகர் வீட்டில் தங்கியிருந்தோம். இதே வீட்டில்தான் தலைவர் பிராபாகரன் (சார்க்கு மாநாட்டுக்கு வந்த செயவர்த்தனாவுடன் பேசி முடிப்பதற்காக என்று சொல்லி அழைத்து வரப்பட்ட போது) தங்கினார்.

பிராபகரனின் அந்த பெங்களூரு பயணம் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியும்தானே? பிராபகரன் ஏற்றுக் கொண்டால் அவரை யாழ்ப்பாணத்துக்கு முதலமைச்சராக்கி விட அதிபர் செயவர்த்தனா முன்வந்தாராம். அதற்காக அவர் பிராபகரனைச் சந்திக்க ஏற்பாடு செய்ய எம்ஞ்சிஆரும் பண்ருட்டி இராமச்சந்திரனும் பெங்களூரு வந்து விட்டார்களாம். “பிராபகரன் முதலமைச்சர் ஆனால் என்ன?” என்று எம்ஞ்சிஆரும் கேட்டாராம். “நாங்கள் விடுதலைக்காகப் போராடுகிறோம், முதலமைச்சர் பதவிக்காக அல்ல” என்று பிரபாகரன் தெளிவாக்கினாராம்.

தமிழ்நாட்டில் பிராபகரன் படத்தை போட்டுக் கொண்டே முதலமைச்சர் பதவிக்கு அலைகிற யாரைப் பார்த்தாலும் மேற்கண்ட பெங்களூரு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியைப் போல் வருங்கால முதலமைச்சர் பதவியும் உண்டு. இரண்டு பதவிகளுக்குமே சரியான போட்டி! ‘வருங்கால முதலமைச்சர்’ கனவு மெய்ப்படத் தலைவர் பிராபாகரனின் பெயரையோ படத்தையோ பயன்படுத்துவது எப்படிப்பட்ட செயல் தெரியுமா? பீடி பற்ற வைக்கத் திருவிளக்கைப் பயன்படுத்துவது போன்றது. கடப்பாரையால் காது நோண்டும் முயற்சி என்றும் வண்ணிக்கலாம்.

பெருந்தொற்றுக் காலத்தில் பெங்களூர் வரவே இல்லை. அதற்கு முன்பும் இனம்புரியாத பெங்களூரு குளிரும் இனிமையான தமிழ் அன்பர்களும் கண்டு பல காலம் ஆகியிருந்தது. கடைசியாகக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் சண்முகம் இல்லத் திருமணம் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற போது வந்திருந்தேன். 

பெங்களூருவிலும் மைசூருவிலும் தமிழ்ச் சங்கங்கள் உயிர்ப்புடன் செயல்படக் கூடியவை. ஆனால் காவிரிக் கலவரத்தின் போது ஏற்பட்ட பட்டறிவைக் கணக்கில் கொண்டு கருநாடகத் தமிழர்களைப் பாதுகாக்கும் அரசியல் இயக்கமாகக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நிறுவப்பட்டது. ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் இயக்கம் இரண்டாகப் பிளவுற்றது. சிறிது காலம் இரு பிரிவுகளும் ஒரே பெயரில் இயங்கி வந்தன. ஒரு பிரிவினரின் அழைப்பின் பேரில் நான் பெங்களூரு வந்த போது மறு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த இரண்டாம் பிரிவினரிடம், “நீங்கள் அழைத்தாலும் வருகிறேன்” என்று சொல்லி விட்டேன். அவ்வாறே அந்த ஆண்டு அவர்கள் நடத்திய மாவீரர் நாளில் கலந்து கொண்டேன். இரு பிரிவுகளும் ஒன்றுபட்ட, மீண்டும் ஒரே இயக்கமாக வேண்டும் என்பதை மட்டும் பலருள் ஒருவனாக நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். விரைவில் இரு பிரிவுகளும் ஒன்றுபட்டு விட்டன. ஒரே இயக்கமாக கருநாடகத் தமிழ் மக்கள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத்தான் இந்தப் பயணம். அவர்களும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாள் தள்ளி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள். 

ஒரு நாள் கூட தாழி மடல் தேங்கக் கூடாது என்ற உறுதியால் கருநாடகத் தோழர்களின் கலகலப்புக்கு நடுவிலிருந்து இந்த அளவு எழுதி விட்டேன். எழுத வேண்டிய பலவும் எஞ்சியுள்ளன. நாளை எழுதுவேன்.

ஒரு மன நெருடலைத் தயக்கத்தோடுதான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: சவுக்கு சங்கர் உதயநிதியை எதிர்த்துப் போட்டியிடுவதோ அவருக்கு சீமான் ஆதரவு கொடுப்பதோ அரசியலில் எள்முனையளவும் தாக்கம் கொள்ளக் கூடிய செய்திகள் அல்லவே அல்ல. நமக்கு அது பற்றிக் கவலையே இல்லை. ஆனால் ஊடகர்கள் முன்னிலையிலேயே சீமான் சங்கரை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவதை சங்கரே அனுமதித்தாலும், செய்தியாளர்கள் சீமானுக்கு “இது கண்ணியம் இல்லை” என்று சுட்டிக்காட்ட வேண்டாவா? அண்ணன் பண்ணையார், தம்பி பண்ணையாளா?

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 28

வெள்ளி, 17 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 42: சொல்லடிப்போம் வாங்க! (3)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 41 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (3)     

தாராளியமா?

தாராளவியமா?

தாழி அன்பர் ‘சிபி’ எழுதுகிறார்:

தாரளம்+இயம் என்பதில் மகரவீற்று கெட்டப்பின்னர் தாராளவியம் தானே வரும். தாரள+இயம் என நிற்கும் போது உடம்படுமெய் விதியைத் தான் பொருத்தமுடியும். ள+இ என்பதில் அகரம் கெட்டாலொழிய ள்+இ என நிற்காது. அகரம் கெடும் விதி இதற்குப் பொருந்துமாமேலும் தாராளவியம் என்பதே இயல்பான பலுக்கலாக உள்ளது.

*************************

சிபி சொல்லும் தமிழ் இலக்கணத்தில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அது என் குறை. எனவே தமிழறிஞர்களின் கருத்தறிய விரும்புகிறேன். யாரும் “நவ-தாராளவாதமே இருந்து விட்டுப் போகட்டும்” என்று சொல்லவில்லை என்பது நல்ல செய்தி. நவம் வேண்டாம். புதுச் சிந்தனைதான் வேண்டும் என்பதில் அனைவரும் உடன்படுகிறோம். எஞ்சி நிற்கும் கேள்வி: தாராளவியமா? தாராளியமா? இரண்டுமே சரிதான், நாம் தாராளியத்தையே வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. சிபி சொல்வது போல் அது இலக்கணப் பிழையாக இருப்பின் தாராளவியத்துக்கு மாறிக் கொள்ளலாம், தாராளமாக!

தாராளியம் பிழையன்று என்றுதான் இலக்குவனார் திருவள்ளுவன் கூறியிருந்ததாகப் புரிந்து கொள்கிறேன். சொல்லாய்வறிஞர் அருளியார் தாராளிகம் என்கிறார். இது குறித்து அவரது விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.

இது ஒருபுறமிருக்க… அடுத்து ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம்.

இரோசிமா நாகசாகியை

மறப்போமா? மன்னிப்போமா?

சப்பான் நாட்டு நகரங்களாகிய இரோசிமா, நாகசாகி மீது நேக் கூட்டணியில் ஒரு நாடாகிய அமெரிக்க வல்லரசு அணுக்குண்டு வீசித் தாக்குதல் நிகழ்த்தியது. இரு குண்டுவீச்சுகள்! உலக வரலாற்றில் இதுவே முதல் அணுகுண்டுத் தாக்குதல். இதுவே கடைசியாகவும் இருந்து விட்டால் மாந்தக் குலத்துக்கே நிம்மதி. ஆனால் இன்றும் அணுவாய்தங்களால் பேரழிவு ஏற்படும் அச்சம் நீடிக்கிறது. இந்தப் பேரழிவைத் தவிர்க்க உறுதியாகப் போராட வேண்டிய தேவை உள்ளது. தன்னை அணுவாய்த வல்லரசாகப் பெருமை பேசும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அணுவாய்த மோகம் கொண்டவர்களை அறிவியல் பேரறிஞர்களாக மதிக்கும் நாடு! வெட்கம்!

இந்தப் பின்னணியில் இரோசிமா நாகசாகியை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது என்று நமக்கு நாம் உறுதியேற்கவும், எதிர்காலத் தலைமுறைகளை உறுதியேற்கவும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இரோசிமா நாகசாகியை ஞாயப்படுத்தும் முயற்சிகள் புதியவை அல்ல. குண்டுவீசிய காலத்திலேயே அமெரிக்க வல்லரசு அதனை ஞாயப்படுத்தி அறிக்கை விட்டது: இந்த அணுக்குண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாம்! சப்பான் மீது அணுக்குண்டு போட்டுப் பேரழிவை உண்டாக்காம லிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்குமாம். அதன்மூலம் இன்னுங் கூடுதலான  மக்கள் இறந்திருப்பார்களாம்!  பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டதாம் அமெரிக்கா!  இந்தப் பெரும்  படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை சரிதானா?

இரண்டாம் உலகப் போரில் செருமனி, இத்தாலி ஆகியவற்றுடன் சேர்ந்து சப்பான் உக்கிரமாகப் போரில் குதித்தது.  பசிபிக்கு கடல் வட்டாரத்தில் முத்துத் துறைமுகத்தில் (Pearl Harbour)  நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்து அமெரிக்காவையும் முழுமூச்சான போரில் இழுத்து விட்டது.  இது  நடந்தது 1941 திசம்பர் 7ஆம் நாள்.

அமெரிக்கா தான் புதிதாகக் கண்டு படைத்திருந்த அணுகுண்டுகளை வீசியது: இரோசிமா – 1945 ஆகட்டு 6ஆம் நாள்; நாகசாகி – ஆகட்டு 9ஆம் நாள். முத்துத் துறைமுகத்தில் சப்பானால் தாக்கப்பட்டது ஒரு போர்க்கப்பல்! இரோசிமா நாகசாகியில் அமெரிக்க அணுக்குண்டு வீச்சுகளால் பல்லாயிரக்கணக்கில் எரிந்து சாம்பலானவர்கள் –– சாம்பலும் கூட மிஞ்சாமல் ஆவியாகிப் போனவர்கள் பொதுமக்கள்! அதற்கு இது பழிதீர்ப்பு என்றால் நியாயம்தானா? கேட்போம்.

_____ “ எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த உள்ளமும் எண்ணிப் பார்க்காத, எந்தச் சொல்லும் சொல்ல முடியாத கொடுமை இது! இன்றைய தேவை ஆணைகளோ சொற்பொழிவுகளோ கட்டுரைகளோ அல்ல! இக்கணமே மாநகரக் காவல் ஆணையரும் காவல் துறைத் தலைமை இயக்குநரும் இடைநீக்கம் செய்யபட வேண்டும். இல்லையெனில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் மாண்பையும் காப்பாற்ற உடனே பதவி துறக்க வேண்டும் “ ______

இது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியர் வி.ஆர். கிருட்டிணய்யர் கூறியது.

ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? அப்படி என்ன நடந்தது? நினைவிருக்குமானால் எழுதுங்கள்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 27