இராசபட்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராசபட்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மே, 2013

இராசபட்ச அரசு மீது பன்னாட்டு விசாரணை: கருணாநிதி

இராசபட்ச அரசு மீது  பன்னாட்டு விசாரணை: கருணாநிதி வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபட்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
பல விசாரணைக் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று உணர்த்தியுள்ளன. கொடுமைகளுக்கான சான்றுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. மேலும் ஒரு சான்றாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கையில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வரும் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது. போர் முடிந்த பிறகும் அரசியல், சமூக நடவடிக்கைகளில் இலங்கை அரசு பொறுமையின்மையை கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமைகளும், சர்வதேச சட்டங்களும் அப்பட்டமாக மீறப்படுகின்றன.
அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவில்லை. போருக்கு முன்னும் பின்னும் காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை என பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது.
பொதுமன்னிப்பு சபை, சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு போன்றவை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை.
எனவே, ராஜபட்ச அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நாமும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

தனி ஈழமே தீர்வு - பாரிவேந்தர்

தனி ஈழமே தீர்வு என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கிறார் இராசபட்ச: பாரிவேந்தர்

இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை தனி ஈழமே என்ற கோரிக்கைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வலு சேர்க்கிறார் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
 இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே, கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து இலங்கையின் மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவு கொடுத்தோம்.
2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 1½  ஆண்டுகளில் வரலாறு காணாத படுகொலைகளும், சித்ரவதைகளும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல் குழுக்களுடனான மோதல் என்றில்லாமல், இலங்கை ராணுவமே களத்தில் இறங்கி, இனப்படுகொலை செய்தது. அரச பயங்கரவாதம் என உலக நாடுகள் இதனைக் கண்டித்தன.
நாகரீக சமுதாயத்தில், எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுங்கோலராக இலங்கை அதிபர் ராஜபட்ச விளங்கினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொடூரமாக நசுக்கியும், அதன் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும் கூறி தமிழ் மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தினார்.
இத்தனைக்குப் பிறகு நடந்த அதிபர் தேர்தலில், பிரச்சாரம் செய்த ராஜபட்ச, தமிழர்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய அதிகாரம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். ஏற்கனவே ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும், ஏதோ ஒரு வகையில் அமைதி ஏற்பட்டால் சரி என்கிற அளவிற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை கூர்ந்து கவனித்தன.
ஆட்சிக்கு வந்த ராஜபட்ச ஐ.நா. சபையின் கண்டனங்களில் இருந்து தப்பிக்க நல்ல பிள்ளை மாதிரி நடித்தார்.  இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அப்போது பதவி வகித்த எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும், தமிழா்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய அதிகாரம் அளிப்பதாக உறுதி கூறினார். இதற்காக இலங்கையின் அரசியில் கூட்டத்தை திருத்தி, உரிய முறையில் ஆட்சி கட்டமைப்பு வகுக்கப்படும் என்று கூறினார். இதை எல்லாம் ஒரே நொடியில் தூக்கி எறிந்துவிட்டு, தன் கொடூர சுய ரூபத்தை மீண்டும் உலகிற்கு காட்டி விட்டார் ராஜபட்ச.
தனி ஈழம் தான் தீர்வு என்று தமிழ் நாட்டிலும், உலகின் பல பகுதிகளிலும் எழுப்பி வந்த கோரிக்கைகளை பலர் ஏற்காத நிலை இருந்தது. ஒரு நாட்டின் இறையாண்மையை சீர்குலைத்து, அந்த நாட்டை பிரிக்கக் கூடாது என்பதற்காகவே பலர் தனி ஈழ கோரிக்கையை ஆதரிக்காமல் இருந்தனர்.
தற்போது ராஜபட்ச நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் தனி ஈழம் தான் இலங்கைத் தமிழா் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என்கிற எண்ணத்தை பலரின் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நாளை (8.2.13) டெல்லி வரும் ராஜப‌ட்சவிடம்,  மத்திய அரசு இதனை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இதில் உண்மையிலேயே அக்கறை செலுத்தி, எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு, சுயமரியாதையுடன் கூடிய அரசியல் அதிகாரத்தை வழங்க பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- என்று  அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.