புதன், 13 செப்டம்பர், 2017

குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு


குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன  
– கவி மு.முருகேசு
நூற்றாண்டு கண்ட குறும்பாக்கள்(ஐ.கூ கவிதைகள்)
புதிய பார்வையைத் தமிழிலக்கியத்திற்குத் தந்துள்ளன  
                 – நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேசு
          வாலாசாபேட்டை.செப்.10. வாலாசாபேட்டை  அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற  குறும்பாக்கள் நூல் வெளியீட்டு விழாவில், தமிழில் அறிமுகமாகி  நூற்றாண்டைத் தொட்டிருக்கும் சப்பானிய  ஐக்கூ கவிதைகள், இன்றைக்குத் தமிழிலக்கியத்திற்குப் புதிய பார்வையையும் செறிவையும் தந்துள்ளன என்று வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.
  இவ்விழாவிற்கு வேலூர் மாவட்ட உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் த.வ.சிவசுப்பிரணியன் தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் கவிஞர் ப.கார்த்திகேயன் வரவேற்றார்.
       வாலாசாபேட்டை நூலக வாசகர் வட்டத் தலைவரும், ஓய்வுபெற்ற தலைமையாசிரியருமான  கவிஞர் மல்லிகைதாசன் எழுதிய ‘கோபுர உச்சியில் அரச மரம்’  குறும்பா நூலை வேலூர் தமிழ்ச் சங்கப் பொருளாளர் புலவர் வே.பதுமனார் வெளியிட, வாலாசா தமிழ்ச் சங்கத் தலைவர் ந.அசோக்குமார் பெற்றுக்கொண்டார்.
        விழாவில், வாலாசா முன்னாள் நகர்மன்றத் தலைவர் டபுள்யு . எசு.வேதகிரி, வேலூர் மாவட்ட நூலகர் க.ஆனந்தன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் டபுள்யு.எசு..மணிடபுள்யு.சி..மோகன், வேலூர் தமிழ்ச் செயலாளர் மு.சுகுமார் படைக்கள பாவலர் துரை.மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
         விழாவில், சிறப்புரையாற்றிய வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு பேசியதாவது:
  ”1916-இல் மகாகவி பாரதியார் எழுதிய சிறுகட்டுரை மூலமாகத் தமிழுக்கு அறிமுகமான சப்பானிய மூன்று வரி குறும்பாக்கள்    புதிய பார்வையைத் தமிழிலக்கியத்திற்குத் தந்துள்ளன  
 கவிதைகள், இன்றைக்கு உலகின் திசையெங்கும் அறிமுகமாகி இருக்கின்றன. புத்த மத சென் தத்துவப் பார்வையில் எழுதப்பட்ட 17 அசைகளையுடைய ஜப்பானிய மரபுக்கவிதையான குறும்பாக்களை(ஐக்கூ) உலக மொழிகளிலுள்ள கவிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் எழுதி வருகின்றனர்.
    தமிழில் 1972-இல் கவிக்கோ அபுதுல்ரகுமானால் நேரடியான தமிழ் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) எழுதப்பட்டன. தமிழில் குறும்பாக்கள் அறிமுகமாகி, ஒரு நூற்றாண்டைத் தொட்டிருக்கும் இவ்வேளையில், இதுவரை 450-க்கும் மேற்பட்ட குறும்பா நூல்கள், குறும்பாவின் கிளை வடிவங்களான ‘சென்ட்ரியு’, ‘லிமரைக்கூ’, ‘லிமரைக் சென்ட்ரியு’, ‘ஐபுன்’ ஆகிய வடிவங்களிலும் நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் குறும்பாக்கென்றே சிற்றிதழ்கள் நடத்தப்படுகின்றன. இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் மிகுதியான குறும்பா நூல்கள் வெளியாகியுள்ளன. குறும்பா தொடர்பான செயல்பாடுகளும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. தமிழ் குறும்பா குறித்த ஆய்வரங்குகளும், குறும்பாத் திருவிழாக்களும் நடைபெற்றுள்ளன. பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் குறும்பாக்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்க் குறும்பாக்கள் இந்தி, மலையாளம், தெலுங்கு முதலான இந்திய மொழிகளில் மட்டுமின்றி, ஆங்கிலம், இசுபானியம், சப்பானிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
   தமிழில் அறிமுகமாகும் சப்பானியக் குறும்பாக்கள், சப்பானிய மரபுப்படி சென் தத்துவப் பார்வையோடு எழுதப்படுவதில்லை. தமிழ் மண், தமிழர் வாழ்க்கை தொடர்பாகவே எழுதப்படுகின்றன. சொற் செறிவையும், காட்சியழகையும் தமிழ்க் கவிதைக்குத் தந்ததில் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) பங்களிப்பு அதிகம். சமூக நிகழ்வுகளைச் ‘சுருக்’கென மூன்று வரிகளில் பதிவு செய்யும் குறும்பாக்களை (ஐக்கூ கவிதைகளை) இன்றைய தலைமுறை இளைய கவிஞர்கள் மட்டுமின்றி, மூத்த மரபுக் கவிஞர்கள் பலரும் தமிழில் எழுதி வருகிறார்கள். மெல்லிய நகைச்சுவை உணர்வும், சமூக நடப்புகளைச் சாடும் தொனியும் இவற்றின் சிறப்பு.
     இவ்வாறு அவர் பேசினார்.
    நூலாசிரியர் கவிஞர் மல்லிகைதாசன் ஏற்புரை வழங்கினார்.
    நிறைவாக, வாலாசா நூலகர் ப.நரசிம்மன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக