தமிழக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களை

          மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது

           வந்தவாசி. ஆக.26. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், சிரீகிருட்டிணா  பயிற்சி மையம் இணைந்து நடத்திய நூலகர் நாள் விழா, முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சியாரின் நூற்றாண்டு விழா, போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முனேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசு  கூறினார்.
         இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் (பொறுப்பு) பூ.சண்முகம் வரவேற்றார். நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவரும் தலைமையாசிரியருமான க.சண்முகம், பட்டதாரி ஆசிரியர் இராசேசுவரி,  சிரீ கிருட்டிணா பயிற்சி மைய  முதல்வர் பா.சீனிவாசன்,  எசு.ஆர்.எம். இன்போடெக் முதல்வர் எ.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
        விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.கே.எ. உலோகேசுவரன்,  பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
       நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் பல துறைகளில் முன்னிலையில் இருப்பதற்குப் பல தலைவர்களும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சி.இராமச்சந்திரன், பல்வேறு மக்கள் நலத்திடங்களைக் கொண்டு வந்தார். அனைத்து ஏழைக் குழந்தைகளும் பசியின்றி படிக்க வேண்டுமென்கிற உயரிய எண்ணத்தில்,  நண்பகல் உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தினரார். தமிழக உரிமைகளை மத்திய அரசோடு பலமுறை போராடி பெற்றுத் தந்தார்.”
       “இன்றைக்கு நூலகர்  நாளாக நூலகத் தந்தை எசு.ஆர்.இரெங்கநாதனின் பிறந்த நாள் கொண்டாட்டப்படுகிறது. தமிழக நூலக வளர்ச்சிக்கெனத் தன் வாழ்நாளை  ஒப்படைத்த பெருமகனார் எசு.ஆர்.இரெங்கநாதன். தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பை  ஓர் இயக்கம்போல் கொண்டு சென்ற முன்னோடி அவர். இப்படியான, தமிழகத் தலைவர்களைப்பற்றி இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு நாம் ஒன்றும் சொல்லித் தருவதில்லை. இந்தத் தலைவர்களின் தன்னலற்ற மக்கள் பணிகளை நம் குழந்தைகளிடம் நாம் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது.” என்று பேசினார்.
        விழாவில், உரூ.5,000/- செலுத்தி நூலகப் பெரும் புரவலராக இணைந்த மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.கே.எ. உலோகேசுவரன்,  உரூ.1,000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த ஆசிரியர்கள் சி.துரை, இராசேசுவரி ஆகியோர்  பாராட்டப் பெற்றனர்.
         நிறைவாக, நூலக உதவியாளர் பு.நாராயணன் நன்றி கூறினார்.
வந்தை அன்பன்