வியாழன், 16 பிப்ரவரி, 2017

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள்!




எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான
புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள்!

  மிகப்பெரும் எண்ணிக்கையில் சசிகலா அணி இருந்தமையால் பன்னீர்செல்வம் மூலம் அதிமுகவைக் குலைக்க முயன்ற திட்டம் தவிடு  பொடியானது. எனவே வேறு வழியின்றி இன்று மேதகு ஆளுநர் பொறுப்பு வித்தியாசாகர் எடப்பாடி க.பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இன்று (04/02/2048 ; 16/02/2017)மாலை 4.30 மணிக்குப் புதிய  ஆட்சிக்கான அமைச்சரவை பொறுப்பேற்கிறது. மேலும் காலம் நீட்டிக்காமல், உரியவர்களை அழைத்த பொறுப்பு ஆளுநருக்குப் பாராட்டுகள்!

 பதவி ஆசை என்பதும் செல்வாக்கு பெற வேண்டும் என்பதும் அனைவருக்கும் உரிய ஆசையாகும்.  ஆனால், அனைவருக்கும் பதவி வழங்கும் நடைமுறை என்பது இயலாத ஒன்று. எனவே, பதவி கிடைக்காதவர்கள் பொறுமை காக்க வேண்டும்.

 முதல்வரும் அமைச்சர்களும்
எளிமை,
தூய்மை
உழைப்பு
என்பனவற்றைக் கைக்கொண்டு அறவழியிலான ஆட்சியை நடத்த வேண்டும்.

கலகம் விளைவித்தவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டா.

உழவர்களின் சிக்கல்களைத் தீர்த்தல்,
தற்கொலை புரிந்தஉழவர்களின் குடும்பத்திற்கான தக்க உதவிகள் வழங்கல்,
மாற்றுத்திறனாளிகளின் குறைகளைப் போக்கல்,
தமிழ்வழிக்கல்வியைமட்டுமே நடைமுறைப்படுத்தல்,
மாநலத்தன்னாட்சியைப் பெற்றுப் பேணல், 
இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு ஆகியவற்றைத் தடுத்து அன்னை மொழியைக் காத்தல்,
சட்டமன்றத் தீர்மானத்திற்கிணங்க ஈழத்தமிழர்களின் தாயக விடுதலைக்குரிய செயல்பாடுகளை நிறைவேற்றல்,
இனப்படுகொலையாளிகள் தண்டனை பெறச்செய்தல்,
தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் உரிமையுடன் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை ஆற்றுதல்,
14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைவாசிகளாகச் சிறையில்  அல்லலுறுவோர்க்கு விடுதலையும் மறுவாழ்வும் வழங்கல்,
இராசீவு கொலை தொடர்பில் சிக்கவைக்கப்பட்டவர்களுக்கு விடுதலை, இராசீவு கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகள் பிடிபடும் வகையில் மறு உசாவல் நடத்தல்
என்பன போன்ற மக்கள்நலம் சார்ந்தனவும், இனம், மொழி சார்ந்தனவுமான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு பெருக்கல், தொழில் வளர்ச்சி, தடங்கலின்றி மின்திறன் வழங்கல், உணவுப்பற்றாக்குறையைப் போக்கல்,விலைவாசி உயர்வைத் தடுத்தல் என்பன போன்ற எல்லா நலம் பயக்கும் வளம் பெருக்கும் திட்டங்களை நிறைவேற்ற விரைந்து செயல்படுவார்களாக!

அகரமுதல மின்னிதழ் சார்பிலும்
   தமிழ்க்காப்புக்கழகம்,
   இலக்குவனார் இலக்கிய இணையம்
   தமிழ்நாடு- புதுச்சேரி தமிழ் அமைப்பு
ஆகியவற்றின் சார்பிலும்
 முதலமைச்சருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பா.ச.க.வின் குறுக்கீட்டைத் தடுக்கும் வகையில் கட்டுக்கோப்புடன் நடந்து கொண்ட அதிமுக தொண்டர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும்  கட்சிமாறிகளை ஊக்குவித்து ஆட்சி அமைக்க முயலாமல்  இயல்பான போக்கில் விட்ட தி.மு.க.வினருக்கும் அதன் செயல் தலைவர் தாலினுக்கும் வாழ்த்துகள்!
வாழ்த்துகளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக