செவ்வாய், 31 மே, 2016

பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !




பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !

கவனஈர்ப்புப்போராட்டம், இலண்டன்04 : london04

தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு விடை என்ன ?

பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில்

அணிதிரண்ட தமிழர்கள் !

  நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசினால் மூடி மறைக்கப்படும், நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.
  கடந்த ஞாயிறன்று (வைகாசி 09 / 22-05-2016) பிரித்தானியத்தலைமையர்(பிரதமரது) வாயில் தளத்துக்கு முன்னால் இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்திருந்தது.
 வெள்ளையூர்தி கடத்தல்கள், கைதுகள் எனச் சிறிலங்காவில் நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டம், இதற்கான விடையினை அனைத்துலகக் குமுகாயம் முன்வைக்க வேண்டுமெனக் கோரியிருந்தது.
  பிரித்தானியா முதலான பல்வேறு நாடுகள் சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்துக்கு நற்சான்றுதல் வழங்கியிருந்ததோடு, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமையவை தீர்மானத்துக்கும் ஆதரவு வழங்கியிருந்தது.
  இந்நிலையில், தமிழர் என்ற ஒரே காரணத்துக்காகவே தொடரும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதிலும், நடந்தேறிய மீப்பெரு மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தவறும் சிறிலங்காவைப் பொறுப்புணர்த்துவதிலும் பிரித்தானியாவுக்குக் கூடுதல் பங்கு உள்ளதாக இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்வைத்துள்ளது.
  இதேவேளை சிறிலங்காவில் நிலவும் இயல்புமீறிய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, பிரித்தானியாவில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப்படுதல் நிறுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
  பெருந்திரளான மக்கள் கூடியிருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் நோக்கத்தினை உள்ளடக்கிய கோரிக்கை மனு, பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயில்தள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக