வியாழன், 3 மார்ச், 2016

அப்பாவித்தமிழர்கள் எழுவரின் விடுதலைக்கான முயற்சியில் தமிழக அரசு! பாராட்டும் தவறான எதிருரைகளும்


  அப்பாவித்தமிழர்கள் எழுவரின் 
விடுதலைக்கான முயற்சியில் தமிழக அரசு!
பாராட்டும் தவறான எதிருரைகளும்

  "சட்டத்தின் முன் யாவரும் சமம்" என்பதற்கு மாறாக இறந்தவர் குடும்பத்திற்குரிய செல்வாக்கின் அடிப்படையில் எழுவரின் விடுதலை தடுக்கப்படுவது அறமற்ற செயலாகும். எனவே, அறத்தை நிலைநாட்ட இந்த எழுவரையும் விடுதலை செய்யத் தொடர்ந்து முயலும் தமிழக அரசிற்குப் பாராட்டுகள்.

  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்   முதலானோர் இவ்விடுதலை முயற்சியைப் பாராட்டி வரவேற்றுள்ளனர். உலகெங்கிலுமுள்ள தமிழியக்க உணர்வாளர்களும் மனித நேய ஆர்வலர்களும் தமிழக அரசைப் பாராட்டி  வரவேற்று வருகின்றனர்.
 
  எழுவரின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் மரு.இராமதாசு அரசியலமைப்புச் சட்டத்தின் 161–வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்குப் பரிந்துரைத்து விடுதலைசெய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.  இதேபோன்று வைகோவும்  எழுவர்களையும் தூக்கிலிடத்துடிக்கும் மத்திய அரசிடம் கருத்து கேட்டு  நாடகமாடாமல் 161 ஆம் சட்டப்பிரிவின்படி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

  தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநதி, பாராட்டு அறிக்கையில், "கடந்த முறை தமிழக அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் இவர்களது விடுதலை தள்ளிப்போனது. தற்போது, தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 மத்திய அரசிடம் கருத்து கேட்கும் பொழுது அவர்கள் கிடப்பில் போடக்கூடாது. காலவரம்பாக 3 நாள்தான் சட்டம்  வழங்கியுள்ளது. அவ்வாறில்லாவிட்டால், நான்காம் நாள்   கருத்து ஏதுமில்லை எனக் கருதி கருத்து கேட்கும் அரசு முடிவெடுக்கலாம். இதன் அடிப்படையில்தான் முதல்வர் செயலலிதா முன்பு தெரிவிததிருந்தார். வேறு வகையில் நடைமுறைத் தவறு இருந்திருந்தாலும் இப்பொழுது விடுதலையை வலியுறுத்தாமல் அது குறித்துக் கூறத் தேவையில்லை.  

  கடந்த காலத்தைச் சுட்டிக்காட்டுவதாயின் முதல்வராக இரு்நதபொழுது தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிய கலைஞர் கருணாநிதியும் குற்றவாளிதான். அவர் செய்ய வேண்டிய வேலை, இதனை வழி  மொழிந்து மத்திய அரசிற்குப் போலியாக மடல் எழுதுவதல்ல! கொள்கை அடிப்படையில் இணைந்ததாகக் கூறப்படும் பேராயக்கட்சியின் (காங்-கின்) அறத்திற்கு மாறான எதிர்ப்புகளை நிறுத்தச் செய்வதே! உண்மையிலேயே எழுவர் விடுதலையிலும் கலைஞர் கருணாநிதிக்கு ஈடுபாடு இருப்பின், சட்டப்படியான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் யாராயினும்  அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக்  குரல் கொடுப்பதும், எழுவர் விடுதலைக்குத் தடைக்குரல் எழுப்பாமலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபடாமலும்  பேராயக்கட்சி இருந்தால்தான் கூட்டணி தொடரும்  என அறிப்பதுமே!  பழுத்த அரசியல்வாதியும் தமிழ்நலனுக்காக அவ்வப்பொழுது குரல் கொடுப்பவருமான கலைஞர் கருணாநிதி தம்முடைய செல்வாக்கால்  எழுவர் விடுதலைக்கான எதிர்ப்பை நிறுத்தினால் இவர்கள் விடுதலை எளிதாகும். எனவே, இம் முயற்சியில் ஈ.டுபடுமாறு அவரை வேண்டுகிறோம்.

 சிலர் அரசியல்ஆதாயத்திற்காகத் தேர்தல் நேரம் எடுக்கப்பட்ட முடிவு எனத் தவறாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.

  அரசின் திட்டங்களும் செயற்பாடுகளும் பெரும்பாலும் தேர்தல் நோக்கில் அமைவது இயற்கையே! இவற்றால் மக்கள் பயனுற்றால் மக்கள் நலனுக்கானவை எனத்தான் கருத வேண்டும். தேர்தல் நோக்கு  என்றால், மக்களின்  பேராதரவைப்  பெற்ற திட்டமாகத்தான் இருக்க முடியும். அப்படியாயின் எழுவர் விடுதலைக்கு மக்களின் பேராதரவு இருக்கிறது என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் என்பது இப்பொழுதுதான் முதன்முறை வரவில்லை. இதற்கு முன்பும் தேர்தல்கள் வந்தன. அப்பொழுதெல்லாம், தேர்தல் நோக்கில் விடுதலை செய்யும் வாய்ப்பு இரு்நததே! பயன்படுத்தியிருக்கலாமே!  இப்பொழுது தேர்தல் வண்ணம் பூசுபவர்கள் அந்த நல்வாய்ப்பை ஏன் பயன்படுத்தவில்லை்?  இதில் ஈடுபாடு இன்மைதானே!

  எனவே, நோக்கம் எதுவாயினும் அறமுறையற்ற உசாவுதல்களால்  தண்டிக்கப்பட்டு வாழ்வை இழந்து வரும் எழுவரின் நலனுக்காகவும் எழுவரின் குடும்ப நலனுக்காகவும்  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன்,இராபர்ட்டு பயசு,  செயக்குமார் ஆகிய எழுவரையும் விடுதலை செய்யும் தமிழக அரசையும் முதல்வர் செ.செயலலிதாவையும் மனமாரப் பாராட்டுகிறோம்!

  ஆனால், இம்முயற்சியால் பயனற்றுப் போயின், மீண்டும் மீண்டும் இதே வழியில் செல்லாமல் அரசமைப்புச்சட்டம் 161 இன்படி  விடுதலை செய்யவேண்டும். விடுதலை நோக்கம் உண்மையானது என்பதை வெளிக்காட்ட, இப்பொழுதும் தடை வருமாயின் முதலில் எழுவரையும் காலவரையற்ற காப்பு விடுப்பில்(பரோலில்) விடுவித்து வேறு தொடர் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

எழுவரின் எதிர்காலமும் அமைதியாகவும் நலம்,வளம் சூழ்ந்ததாகவும் அமையட்டும்!
 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்காப்புக் கழகம்
/தமிழே விழி! தமிழா விழி! 
 எழுத்தைக் காப்போம்! மொழியைக்காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தொடர்பான செய்தி வருமாறு:



  தமிழக அரசு தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், மத்திய உள்துறைச் செயலாளர் திரு.  இராசீவு மெஃகரிசிக்கு  எழுவர் விடுதலை  தொடர்பாக நேற்று (மாசி 19, 2046/ மார்ச்சு 02, 2016  ) மடல் எழுதியுள்ளார்.

 அதில், முன்னாள்   தலைமையாளர் இராசீவுகாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 18 அன்று உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த 3 பேரின் ஆயுள் தண்டனையையும்,  இராசீவு காந்தி கொலை வழக்கில் ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்ற  செயக்குமார்,  இராபர்டு பயாசு, ரவிச்சந்திரன், நளினி ஆகிய 4 பேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து, இந்த 7 பேரையும் விடுவிக்கத் தமிழக அரசு முடிவு செய்ததையும் தொடர்பான தொடர் போக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இராசீவுகாந்தி கொலைக் குற்றம் குறித்து  மத்தியப்புலனாய்வால்(சி.பி.ஐ.யால்) விசாரணை நடத்தப்பட்டதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432- ஆவது பிரிவின்படி, தமிழக அரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, மத்திய அரசைக் கலந்து பேச வேண்டும்- இதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு ஃபிப்பிரவரி மாதம் 19 அன்று மத்திய அரசுக்கத்  தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பி, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசின் கருத்து ஏதேனும் இருந்தால், 3 நாட்களுக்குள் அதுகுறித்துத் தெரிவிக்குமாறு கோரப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மத்தியில் அப்போது இருந்த அரசு, இந்த 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல், தமிழக அரசின் முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அவசர அவசரமாக  பேராணைவழக்கைத் தொடுத்தது. இதன் விளைவாகச் சட்டப்படி விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் சிறைக்கொட்டடியில் அல்லலுறுகின்றனர்.

  இறுதியில்,  “ஆயுள் தண்டனைத் துய்த்துவரும் 7 பேரும், ஏற்கெனவே 24 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால், இந்த 7 பேரும் அளித்துள்ள மனுக்களை தீவிரமாக  ஆய்ந்து, அவர்களின் ஆயுள் தண்டனையைக் குறைத்து, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது - இதன் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435- ஆவது பிரிவின்படி, தமிழக அரசின் முடிவு குறித்து மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது” எனத் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தனது மடலில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக