jayalalitha-meeting01

ஆளத் தகுதியானவர் யார்?: செயலலிதா சொன்ன குட்டிக்கதை

  இன்று (மாசி 16, 2047 / பிப்.28, 2016) சென்னை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் நடந்த விழாவில் முதல்வர் செயலலிதா பேசுகையில் ஆளத் தகுதியானவர் யார் என்பது குறித்து விளக்கக் கூறிய குட்டிக்கதை வருமாறு:–
  ஓர் ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆளத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார்.
  அதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர். அந்த இருவரிடமும் ஒரே அளவான தங்கக் கட்டிகளைக் கொடுத்து, ‘‘இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை 3 மாதங்களுக்குப் பிறகு அரசவையில் வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கூறினார் அரசர்.
  மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர். முதலாமவரைப் பார்த்துத் தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்று அரசன் வினவினார். தனது மகனையும், மகளையும் அவையின் முன் நிறுத்திய அவர் அழகிய வேலைப் பாடுகள் அமைந்த நகைகளை மகள் அணிந்து கொண்டிருப்பதையும், அழகிய தங்கப் பேழை ஒன்றை மகன் வைத்திருந்ததையும் அரசனுக்குக் காட்டினார். அவற்றைக் கண்டு வியந்த அவையினர் அரசர் கொடுத்த தங்கக் கட்டிகளை, இவர் நன்றாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, நாட்டினை நன்றாக ஆள்வார் எனக் கூறினர்.
  ‘‘உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும் தானா?’’ என அரசன் வினவினார். அதற்கு அந்தமுதலாமவர் ‘‘இல்லை. இல்லை. எனது மற்ற பிள்ளைகளை எல்லாம் நான் தலை முழுகி விட்டேன்’’ என்று கூறினார்.
  சரி. இரண்டாமவர் என்ன செய்துள்ளார் எனப் பார்க்கலாம் என்று அரசர் அவனை அழைத்தார். அந்த இரண்டாமவர் தன்னுடன் 100 பேரை, அழைத்து வந்திருந்தார். ‘‘தங்கக் கட்டியை என்ன செய்தீர்கள்? இவர்கள் எல்லாம் யார்?’’ என்று அரசர் வினவினார். அதற்கு அந்த இரண்டாமவர், ‘‘இவர்கள் எல்லாம் இந்த ஊரில் ஏழைகளாக இருந்தவர்கள். நீங்கள் கொடுத்த தங்கக் கட்டிகளை இவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வணிகம் செய்து இவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர்’’ என்று கூறினார்.
  தன் நலன், தன் குடும்ப நலன் என்று பார்க்காமல் ஏழை எளியோருக்கு உதவிய இரண்டாமவரே நாட்டை ஆளத் தகுதியானவர் என, அரசரும் அந்த அவையில் இருந்தவர்களும் முடிவு செய்தனர்.
  இந்தக் கதையில் வரும் இரண்டாமவரைப்போலத்தான் எனது தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது.
இவ்வாறு முதல்–அமைச்சர் செயலலிதா பேசினார்.