சனி, 27 ஜூலை, 2013

தன்னுயிர் கொடுத்து நண்பர்களைக் காத்த மாணவர் பரமேசுவரன்

தன்னுயிர் கொடுத்து நண்பர்களைக் காத்த மாணவர் பரமேசுவரன்






கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுற்றுலா சென்ற மதுரை திருநகர் பள்ளி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்த துயரச் சம்பவம் இப் பகுதி மக்களின் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை.
 கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இரு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சென்று, சக மாணவர்களைக் காப்பாற்றிய அந்த மாணவர், அலையின் சீற்றத்தில் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
 திருநகர் சி.எஸ். ராமாச்சாரியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 113 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு ஜூலை 12 ஆம் தேதி சுற்றுலா சென்றனர்.
 தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரைக்குச் சென்றபோதுதான் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு மாணவ, மாணவிகள் கடலில் கால்களை நனைத்தபடி நின்று கொண்டிருந்த வேளையில், ஒருசில மாணவர்கள் அலைகளில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் சிலரை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றபோது, அவர்களை உயரமான மாணவர்கள் காப்பாற்றச் சென்றுள்ளனர்.
 அதில் திருநகர் காந்திஜி தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் பரமேஸ்வரன் (17)தண்ணீரில் தத்தளித்த தன் சக நண்பர்களைக் காப்பாற்றச் சென்றுள்ளார். நீச்சல் தெரிந்த பரமேஸ்வரனின் முயற்சியில் பாலாஜிராஜன், பாலமுருகன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த விஷ்ணுதரனையும் கரை சேர்த்த பரமேஸ்வரன், மீண்டும் கடலுக்குச் சென்றபோது திரும்பவில்லை. ஆனால், விஷ்ணுதரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். கரையில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலில் மூழ்கிய சதீஷ்குமார், தேவ் ஆனந்த் ஆகியோரது உடல்களை மீட்டனர்.
 மூன்று மாணவர்களை மீட்ட பரமேஸ்வரன், நண்பர்களுடன் இருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்தே அவர் காணவில்லை என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களும் தள்ளப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு பரமேஸ்வரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
 இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர் அவரது பெற்றோர் சரவணன் - ராஜேஸ்வரி. நீச்சல் பயிற்சி பெற்ற பரமேஸ்வரனை, கடலில் மூழ்கி இறந்த நிலையில் பார்த்த அதிர்ச்சி இன்னும் எங்களைவிட்டு நீங்கவில்லை. தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்தபோதுதான், சக மாணவர்களை கடலில் சென்று காப்பாற்றியது தெரியவந்தது என்றனர்.
 சக மாணவர்களை மீட்ட பரமேஸ்வரனின் வயிற்றில் கடல் நீர் இல்லை. பிரேதப் பரிசோதனையின்போது இது தெரியவந்திருக்கிறது. கரைக்குத் திரும்ப முயற்சி செய்தும் அவரால் முடியாமல் நீரில் மூழ்கியிருக்கிறார். நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள் என்று தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்ததாக பரமேஸ்வரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 மற்ற மாணவர்களைப் போல கடலில் விளையாடச் சென்றபோது இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரது வீரச் செயல் தற்போது வெளியே தெரிய வந்திருக்கிறது. பரமேஸ்வரன் மறைந்தாலும், அவரது நினைவலைகள் திருநகர் வாசிகளின் மனதில் நிழலாடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக