வெள்ளி, 24 ஜூன், 2016

திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது – தமிழ்த்தென்றல் திரு.வி.க.




தலைப்பு-முப்பால் உலகப்பொது : thalaippu_muppaal_ulakukkupodhu

திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது

திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது.
திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம்.
திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார்.. உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந் நினைவையூட்டும்? அ·து உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை.
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற.
  • தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள் – மறைமலையடிகள்




தலைப்பு-திருக்குறள், தீந்தமிழ்ச்சாற்றுக்கட்டி : thalaippu_theenthamizh_chaattrukatti

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்!

  திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, ‘தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு’ என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்.
தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்.
– மறைமலையடிகள்

தனித்தமிழ்இயக்கத்தின் சிலப்பதிகார விழா, புதுச்சேரி


தனித்தமிழ்இயக்கத்தின் சிலப்பதிகார விழா, புதுச்சேரி

ஆனி 16, 2047 / சூன் 30, 2016

அழை-சிலப்பதிகார விழா : azhai_chilappathikaaravizhaa