பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூலை, 2013

வரலாற்றுச் சின்னங்களை பாழ்படுத்துவது கவலை அளிக்கிறது

வரலாற்று ச் சின்னங்களை பாழ்படுத்துவது கவலை அளிக்கிறது

சென்னை:""பாரம்பரியமிக்க கட்டடங்கள், சின்னங்களை பாதுகாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; அதை பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,'' என, வரலாற்று ஆய்வாளர் நரசைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொல்லியல் துறையின் முக்கியத்துவத்தை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை, மீனாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை, "ரீச் பவுண்டேஷன்' அமைப்புடன் இணைந்து ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், மீனாட்சி மகளிர் கல்லூரி செயலர் லட்சுமி, ஒப்பந்தத்தை வெளியிட, "ரீச் பவுண்டேஷன்' நிறுவனர் சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். மேலும், கல்லூரியில் தொல்லியல் மையமும் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் நரசைய்யா பேசியதாவது:வேகமாகச் செல்லும் உலகத்தோடு, நாமும் போட்டி போட்டு செல்கிறோம். பழமையை மறந்து, நாகரிக உலகத்திற்கேற்ப மாறி வருகிறோம். இதனால், நாட்டுப்புறக் கலைகள், பாடல்கள், சமையல் என அனைத்தும், இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகின்றன.சென்னையில் உள்ள, பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் நிலை, மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நினைவுச் சின்னங்களின் மதிப்பு தெரியாமல் கிறுக்குதல், உடைத்தல், அசுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், சிலர் ஈடுபடுகின்றனர்.

பாழ்படுத்துகிறோம்:கோவில் குளங்களிலும் பாரமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. நம் வரலாற்று அடையாளங்களை, நாமே பாழ்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில், வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவற்றை பாதுகாக்க சட்டம் இருந்தும், நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை.
தொல்லியல் கட்டடங்கள், நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் பணியில், அரசுடன், பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் பணியில், மாணவர்கள் ஈடுபட வேண்டும். மாணவர்களால் மட்டுமே, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும் முடியும்; பாழ்படுத்துவதை தவிர்க்கவும் முடியும்.இவ்வாறு நரசைய்யா கூறினார்.

இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் பண்பாடு, கலாசாரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் அறிய கொள்ள முடிகிறது. பழமை வாய்ந்த இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தொல்லியல் துறை குறித்த கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட உள்ளன.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மொழி அழிந்தால் இனமும், பண்பாடும் அழிந்துவிடும்: க. கபிலர்

மொழி அழிந்தால் இனமும், பண்பாடும் அழிந்துவிடும்: க. கபிலர்

First Published : 17 October 2012 06:57 PM IST
ஒரு மொழி அழிந்தால், அதை பேசும் இனமும், அவர்களுடைய பண்பாடும் அழிந்துவிடும் என திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) க. கபிலர் தெரிவித்தார்.
 மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இரு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில்  செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 பயிலரங்கில் துணை இயக்குநர் கபிலர் பேசியது:  உலகின் பழமையான மொழிகளாகக் கருதப்படுபவை கிரேக்கம், தமிழ், லத்தீன், சீனம், சம்ஸ்கிருதம். இவற்றில் தமிழ் மற்றும் சீன மொழிகள் தவிர, அனைத்து மொழிகளும் அழிந்துவிட்டன.
 அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், தங்களது பதவியைக் குறிப்பிடும்போது ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லும் நிலை உள்ளது. இந்நிலை மாற வேண்டும். பயன்பாட்டில் இல்லாத மொழி,அழியும் நிலைக்குத் தள்ளப்படும். மொழி அழியும்போது அதைப் பேசும் இனமும், அந்த இனத்தின் பண்பாடும் அழிந்து விடும்.
  இந்திய மொழிகளில் வங்காளம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகள் தான் நிலைத்து நிற்கும் என்றும், மற்ற மொழிகள் அழிந்து விடும் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
 தமிழில் பேசினால், தாழ்வாக நினைத்துக் கொள்வார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஆங்கிலம் கலந்து பேசும் நிலை உருவாகி உள்ளது.   தமிழில்  மட்டும்தான், எல்லா நேரத்துக்கும் பொருத்தமான வணக்கம் என்ற இனிமையான சொல் பயன்படுகிறது. தமிழில் என்ன எழுத்து உள்ளதோ, அது அப்படியே உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அந்நிலை இல்லை.  அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழைப் பயன்படுத்துவதற்கு சட்டம் இருக்கிறது. அதில் குறிப்பிட்ட 5 இடங்கள் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் தமிழையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அரசு முறை கடிதங்களில் திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் நாள் உலகத் தாய்மொழி தினமாகக்  கொண்டாடப்படுகிறது. அன்று நாம், தாய்மொழியிலேயே பேசுவோம் என்று உறுதி எடுக்க வேண்டும் என்றார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பெ.ரவீந்திரன்: ஆட்சி மொழியாக இருக்கும் நமது தாய்மொழிக்கு பயிலரங்கம் நடத்துவது வேதனை தருகிறது. தமிழ்மொழி செம்மொழியாக இருந்தபோதிலும், ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனாலும் கூட, அலுவலகங்களில் பயன்பாட்டில் இன்னும் முழுமையாக வரவில்லை.
 பெரும்பாலான அலுவலர்கள் தங்கள் பெயர், முகவரி, கையெழுத்து போன்றவற்றை ஆங்கிலத்திலேயே எழுதும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.
 அலுவலகப் பயன்பாட்டில் அனைத்து வரைவுகளையும் தமிழில் எழுதுவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடும் நிலையில், நம்முடைய தாய் மொழியின் நிலை இருக்கிறது. அரசுக்காக அலுவலர்கள் பணியாற்றுகிறோம், அரசு மக்களுக்காக பணி செய்கிறது. இதன் அனைத்து செயல்பாடுகளும் மக்களுக்கு தெரிந்த மொழியிலேயே இருக்கவேண்டும் என்றார்.
 தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் கோ.செழியன் (சேலம்), க.சிவசாமி (திருச்சி), சு.தம்புசாமி (பெரம்பலூர்) உள்ளிட்டோர் பேசினர். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க. பசும்பொன் வரவேற்றார். பொதுப்பணி, வணிகவரி, காவல், தீயணைப்பு, வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட  துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.