இனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜூலை, 2013

மொழி அழிந்தால் இனமும் அழிந்து விடும்

மொழி அழிந்தால் இனமும் அழிந்து விடும்: தமிழ்ப் பேராசிரியை மு.குருவம்மாள்

ஒரு மொழி அழிந்தால், அதனைப் பின்பற்றும் அந்த இனமும் அழிந்து விடும் என, காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள் தெரிவித்தார்.
  திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் இளங்கலை தமிழ்த் துறை (சுயநிதிப் பிரிவு) துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள் தலைமை வகித்து, வகுப்புகளைத் தொடக்கி வைத்துப் பேசியது:
  உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து) தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம் தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
  நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு செயல்களை நம் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம். இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு, இலக்கியப் படைப்பாளிகள் முன்வர வேண்டும்.
  பெயர் எழுதத் தெரிந்துவிட்டாலே, அவரைக் கற்றவராக ஏற்கும் நிலை உள்ளது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். குழந்தைகளைப் போல் மாணவர்களும் தொடர்ந்து கேள்வி கேட்கும் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
  மாணவர்களின் சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். கேட்க உதவும் செவிகளின் அமைப்பே, கேள்விக் குறி போல் இருப்பதை அனைவரும் உணர வேண்டும்.
  தமிழ் கற்றால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான எண்ணத்தை மாணவர்களும், பெற்றோர்களும் கைவிட வேண்டும். தமிழ் சமுதாயத்தின் கலாசாரத்தினையும், பண்பாட்டினையும் தமிழ் கற்கும் மாணவர்களால் மட்டுமே உணர முடியும். தமிழ் கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது.
  ஒரு மொழி என்பது அதனை பேசும் மக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவர்கள் பேசும் மொழியை அழித்தாலே போதுமானது. அந்தச் செயலை சரியாக செய்த நாடு இலங்கை. 
  உங்கள் வாழ்க்கையினை அடுத்தவர் கையில் ஒப்படைக்காமல், நீங்களே (மாணவர்கள்) தீர்மானிக்கும் சக்தியாக உருவாக வேண்டும். ஆயுதம் தாங்கிய தமிழ் மொழியை கற்க வரும் மாணவர்கள், அதனை சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் நா.மார்கண்டேயன்:    தாய் மொழியான தமிழில் ஞானம் இல்லாதவர்களுக்கு, பிற மொழியிலும் சரியான ஞானத்தைப் பெற இயலாது. 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தக் கல்லூரியில் தற்போது, சுயநிதிப் பிரிவில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பத்திரிகை துறையில் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது என்றார்.
  நிகழ்ச்சியில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் துறையில் சேர்ந்துள்ள 28 மாணவ, மாணவிகளுக்கு ஜி.டி.என். கல்லூரியின் தனி அலுவலர் இரா. ஆறுமுகம் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில், அக் கல்லூரியின் செயலர் வெ. ஆதிநாராயணசாமி, தமிழ்த் துறை தலைவர் மு. விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மொழி அழிந்தால் இனமும், பண்பாடும் அழிந்துவிடும்: க. கபிலர்

மொழி அழிந்தால் இனமும், பண்பாடும் அழிந்துவிடும்: க. கபிலர்

First Published : 17 October 2012 06:57 PM IST
ஒரு மொழி அழிந்தால், அதை பேசும் இனமும், அவர்களுடைய பண்பாடும் அழிந்துவிடும் என திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) க. கபிலர் தெரிவித்தார்.
 மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இரு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில்  செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 பயிலரங்கில் துணை இயக்குநர் கபிலர் பேசியது:  உலகின் பழமையான மொழிகளாகக் கருதப்படுபவை கிரேக்கம், தமிழ், லத்தீன், சீனம், சம்ஸ்கிருதம். இவற்றில் தமிழ் மற்றும் சீன மொழிகள் தவிர, அனைத்து மொழிகளும் அழிந்துவிட்டன.
 அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், தங்களது பதவியைக் குறிப்பிடும்போது ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லும் நிலை உள்ளது. இந்நிலை மாற வேண்டும். பயன்பாட்டில் இல்லாத மொழி,அழியும் நிலைக்குத் தள்ளப்படும். மொழி அழியும்போது அதைப் பேசும் இனமும், அந்த இனத்தின் பண்பாடும் அழிந்து விடும்.
  இந்திய மொழிகளில் வங்காளம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகள் தான் நிலைத்து நிற்கும் என்றும், மற்ற மொழிகள் அழிந்து விடும் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
 தமிழில் பேசினால், தாழ்வாக நினைத்துக் கொள்வார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஆங்கிலம் கலந்து பேசும் நிலை உருவாகி உள்ளது.   தமிழில்  மட்டும்தான், எல்லா நேரத்துக்கும் பொருத்தமான வணக்கம் என்ற இனிமையான சொல் பயன்படுகிறது. தமிழில் என்ன எழுத்து உள்ளதோ, அது அப்படியே உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அந்நிலை இல்லை.  அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழைப் பயன்படுத்துவதற்கு சட்டம் இருக்கிறது. அதில் குறிப்பிட்ட 5 இடங்கள் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் தமிழையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அரசு முறை கடிதங்களில் திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் நாள் உலகத் தாய்மொழி தினமாகக்  கொண்டாடப்படுகிறது. அன்று நாம், தாய்மொழியிலேயே பேசுவோம் என்று உறுதி எடுக்க வேண்டும் என்றார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பெ.ரவீந்திரன்: ஆட்சி மொழியாக இருக்கும் நமது தாய்மொழிக்கு பயிலரங்கம் நடத்துவது வேதனை தருகிறது. தமிழ்மொழி செம்மொழியாக இருந்தபோதிலும், ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனாலும் கூட, அலுவலகங்களில் பயன்பாட்டில் இன்னும் முழுமையாக வரவில்லை.
 பெரும்பாலான அலுவலர்கள் தங்கள் பெயர், முகவரி, கையெழுத்து போன்றவற்றை ஆங்கிலத்திலேயே எழுதும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.
 அலுவலகப் பயன்பாட்டில் அனைத்து வரைவுகளையும் தமிழில் எழுதுவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடும் நிலையில், நம்முடைய தாய் மொழியின் நிலை இருக்கிறது. அரசுக்காக அலுவலர்கள் பணியாற்றுகிறோம், அரசு மக்களுக்காக பணி செய்கிறது. இதன் அனைத்து செயல்பாடுகளும் மக்களுக்கு தெரிந்த மொழியிலேயே இருக்கவேண்டும் என்றார்.
 தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் கோ.செழியன் (சேலம்), க.சிவசாமி (திருச்சி), சு.தம்புசாமி (பெரம்பலூர்) உள்ளிட்டோர் பேசினர். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க. பசும்பொன் வரவேற்றார். பொதுப்பணி, வணிகவரி, காவல், தீயணைப்பு, வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட  துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.