செவ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 மே, 2024

திங்கள், 15 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 8

யமுனா ராசேந்திரன் அன்பர் விசுவுடன் என்னை நேர்கண்டு எடுத்த செவ்வியின் மூன்றாம் இறுதிப் பகுதி இதோ:

யமுனா:

தமிழ்த் தேசியப் இனப் போராட்டத்தினூடே  தென்னிந்தியத் தேசிய இனங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய அரசியல் என்ன நிலைபாடு எடுக்கும்?

தியாகு:

தேசிய இனங்களில் இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றன.  கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலையாளத் தேசியம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது இந்திய எதிர்ப்புத் தன்மையயை விட அதிகமாகத் தமிழ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கன்னடத்திலும். அவர்களுக்குத் தமிழ் எதிர்ப்புதான் இந்திய தேசிய எதிர்ப்பை விடவும் முதன்மையாக இருக்கிறது. இது தற்காலிமான ஒரு போக்குதான். இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அனுபவம் அவர்களுக்கு உணர்த்தும்.

யமுனா:

தேசியஇனச் சிக்கலில் உலகமயமான சில கூறுகள் இருக்கின்றன. (உ)யுகோசுலாவியாவில் செருபியர்களுக்கும் பிற தேசிய இனங்களுக்குமான கோளாறாக இருந்த சிக்கல் கொசவா பொசுனியா போன்ற நாடுகளின் பிரிவினைக்குப் பிறகு – விடுதலையடைந்த பிறகான கொசவா பொசுனியாவில் உள் இருக்கும் சிறுபான்மையினத்தவர்க்கும் தற்போது ஒப்பீட்டளவில் பேரினமாகி விட்டவர்களுக்குமான ஆயுத மோதல்களாக வெடித்திருக்கிறது. இவை தேசிய இனத்துக்குள் இருக்கிற சிறு சிறு இனக் குழுக்களின் உரிமைகளுக்கான சிக்கல்களாகியிருக்கின்றன. கேரளாவில், கருநாடகாவில் தமிழர் எதிர்ப்புணர்வு இருக்கிறது போலவே தமிழகத்திலும் மலையாளி எதிர்ப்புணர்வுக்கான, தெலுங்கர் எதிர்ப்புணர்வுக்கான சான்றுகள் இருக்கின்றன. ஆகவே ஒருவருக்கொருவர் வெறுப்பின் பொருட்டு இந்தத் தேசிய இனப் பிரதேசங்களில் நடக்கிற கலவரங்கள் அல்லது சிக்கல்கள் ஒன்றுக்கொன்று தேசிய இனங்களின் அரசியலின் மீது தாக்கம் தொடுக்கும். ஆகவே நீங்கள் இலட்சியப்படுத்திக் கொள்கிற மாதிரி இந்தப் போராட்டங்கள் கலவரம் தவிர்ந்ததாகவோ இன வெறுப்பு தவிர்ந்ததாகவோ இருக்க முடியாது.

தியாகு:

பெரியார் அணைச் சிக்கலில் நாம் கேரள தேசியத்தை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே போல காவிரிச் சிக்கலில் நாம் கர்நாடகத்தோடுதான் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் ஐனநாயகபூர்வமான தேசிய இயக்கத்தை நடத்தக் கூடிய தலைமை அந்த மககளுக்கெதிரான விரோதவுணர்வு கொண்டதாக இப்போராட்டத்தைக் கொணடுபோகக் கூடாது. கொண்டு போகவும் முடியாது. இந்தியத் தேசியத்தின் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்பதை இருவருமே உணர்வார்கள். இன்று கன்னட தேசியம் பேசுகிறவர்கள்  பால் தாக்கரே பேசுகிற மராட்டிய தேசியம் போல இந்தியத் தேசியத்தின் ஒரு பகுதியாகத்தான் அதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

யமுனா:

தென்னிந்தியத் தேசிய இனங்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகள் ஒரு வன்முறையிலான முரண்பாடாக உருவாவதற்கான எல்லாச் சாத்தியங்களும் இருக்கிறது. தேசியவாதத்தை குடிநாயக நிலையாகவோ இலட்சியவாத நிலையாகவோ எல்லாத் தேசியஇனவாதிகளும் பார்க்க அவசியமில்லை. மற்ற மாநிலங்களில் தேசியத்தின் வளர்ச்சி நிலைமைகளைப் பொறுத்து குணா போன்றவர்கள் முன்வைக்கிற கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் கை ஓங்கலாம் – இவ்வாறான சூழலில் இனங்களுக்கிடையில் இரத்தக்களறியான கலவரம் தோன்றுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இது இவ்வாறிருக்க நான் ஜரோப்பாவின் தேசியப் போர் தொடர்பான பட்டறிவுகளுக்குப் போகிறேன். ஜரோப்பாவில் தேசியம் ஒரு குடினநாயகத்துக்கான அவா எனும் அளவில் தேசியத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஐரோப்பாவில் அண்மையில் நிறைய  தேசங்கள் தோன்றியுள்ளன. செக்கோசுலாவாகியா இரண்டாகியிருக்கிறது. பொசுனியா கொசவா மெசடோனியர் மோண்டிநிக்குரோ போன்றன பழைய (உ)யுகோசுலாவியாவில் இருந்து உருவாகியிருக்கின்றன. சமவேளையில் ஐரோப்பிய ஒன்றியன் எனும் பெயரில் தேசிய இன அடிப்படைகளை மறுத்து பொருளியல் ஒருமைக்கான அரசியல் நிருவாக ஒருமைக்கான கூட்டமைப்பு உருவாகிவருகிறது. இன்னும் பிரிந்த தேசங்கள் ஜரோப்பிய ஒன்றியன் உறுப்பினராவதற்கும் விண்ணப்பித்து வருகின்றன. பொருளாதாரம் மட்டுமல்ல, இவர்களை இணைக்கிற விடயங்களாக வெள்ளை நிறம், பண்பாடு போன்றவையும் இருக்கின்றன. இவ்வாறான சூழலில் இந்திய நிலைமைகளை எடுத்துக் கொணடு பாரக்கிற போது இந்தியாவில் தேசிய இனச் சிக்கல் தோன்றுவதற்கான காரணங்களாக என்னால் இரண்டு தலையாய சிக்கல்களைப் பார்க்க முடிகிறது. ஒன்று பொருளியல் முறையிலானது. அடுத்தது பண்பாட்டு முறையிலானது. பொருளியல் முறையிலானது என்கிற போது இந்திய மாநிலங்களுக்கிடையில் நிறையப் பொருளாதாரச் சமனின்மை நிலவுகிறது. மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலின் காரணங்களால் வடகிழக்கு மாநிலங்கள் அநியாயமான முறையில் பின்தங்கியிருக்கின்றன. பண்பாட்டு முறையிலான சிக்கல் என்று வருகிற போது இந்தி மொழி வளர்ச்சிக்காக அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்குகிறது. இந்திக்கு அளிக்கும் முதன்மைத்துவம் இநதியாவின் பிற மொழிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. புழக்கத்தில் இல்லாத சமற்கிருத மொழி வளர்ச்சி பிராமணிய ஆதிக்கத்தோடு பிணைக்கப்பட்டு, அரசின் நிதி அதனது வளர்ச்சிக்குப் பயன்பத்தப்படுகிறது. இந்தப் பண்பாட்டு, பொருளியல் சமனின்மையிலிருந்துதான் இந்தியத் தேசிய இனச் சிக்கல் என்பதும் தேசிய உணர்வு என்பதுவும் உருவாவதாகக் கருத முடிகிறது. தமிழர்கள் இன்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி வாழ்கிறார்கள். நாகாலாந்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள். தில்லியிலும் இருக்கிறார்கள் கல்கத்தாவிலும்  இருக்கிறார்கள். திருவனந்தபுரத்திலும் இருக்கிறார்கள். இவ்வாறாக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை எடுத்துக் கொண்டு தேசியத்தை வரையறுப்பதில் நிறையப் பாரதூரமான எதிர்மறையான போக்குகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவ்வகையில் நிலவிவரும் ஐரோப்பிய ஒன்றியன் பட்டறிவுகளை எடுத்துக் கொண்டு  குடிநாயகத்துக்கான, தேசியப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு, ஏன் ஒரு இந்தியக் கூட்டாளுமைக்கான முறைக்கான முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது? ஏனெனில் இந்தியாவில் நம்மைப் பிரிக்கிற தன்மைகள் இருக்கின்றமை போலவே இணைக்கிற தன்மைகளும் நிறைய இருக்கின்றன. தென்னிந்தியத் தேசிய இனங்களுக்கிடையில் பண்பாட்டு முறையில் நிற அடிப்படையில் உணவு உடை உறையுள் போன்ற பழக்கங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஞானி போன்றவர்கள் திராவிடப் பண்பாட்டுக் கூறுகள் இந்தியாவெங்கிலும் பரந்து கிடக்கின்றன என்கிறார்கள்.  எனில் ஏன் இரத்தக்களறியை, இன இரண்டகத்தைத் தவிர்க்கிற மாதிரியான அரசியலை முன்னெடுக்கக் கூடாது? இன்னும் ஒடுக்கப்பட்டோர் சிக்கல் என்பது இந்தியத் தேசம் தழுவிய சிக்கலே ஒழிய தமிழ்த் தேசியம் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல என்பதையும் நினைவில் கொண்டு ஏன் அவ்வாறான ஓர் அரசியலை மாற்றரசியலாகத் தேர்ந்து கொள்ள முடியாமலிருக்கிறது?

தியாகு

ஐரோப்பாவில் ஏற்கெனவே தேசிய அரசுகள் உருவாகி விட்டன. குடிநாயக அரசியல் என்பது தேசங்களுக்கிடையில் உருவாகி விட்டது. அந்தத் தேசிய அரசுகள் நெருங்கி வருகின்றன. அவற்றுக்கிடையில் ஒற்றுமையைப் பேசுகின்றன. தேசிய அரசுகள் உருவாகி வளர்ந்த பிறகுதான் பொதுவான சந்தையை உருவாக்குவது நிருவாக அலகுகளை உருவாக்குவது போன்ற வளர்ச்சிகள் வந்திருக்கின்றன. அயர்லாந்து பற்றி மார்க்குசு குறிப்பிடுகிறபோது முதலில் அயர்லாந்து பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற வேண்டும். பிற்பாடு அவர்கள் ஒரு கூட்டமைப்பாகக் கூட இணையலாம் என்கிறார். கூட்டமைப்பு என்று சொல்கிற போது தன்னுரிமையாக(சுதந்திரமாக) இருக்கிற தேசிய அரசுகள் தம் விருப்பில் இணைகிற ஒரு முறை அது. கூட்டமைப்பிற்கான முன் நிபந்தனையே தேசியத் தன்னுரிமைதான்.  தேசிய ஒடுக்குமுறை என்று ஒன்று இருந்தால் அந்த ஒடுக்குமுறைக்கெதிரான தீர்வு என்பது தேசிய விடுதலைதான்.  விடுதலை பெற்ற பின்னால் ஒரு கூட்டமைப்புக்குள் வருவதில் சிக்கலில்லை. நான் ஆந்திரா போகும் போது அடிக்கடி எண்ணுவதுண்டு. வாயைத் திறந்து பேசினால் மட்டும்தான் நமக்கிடையில் வேறுபாடு உண்டு. மற்றபடி வீடு உணவு உடை- இன்னும் திரைப்படக் கவர்ச்சி கூட ஆந்திராவைச் சேர்ந்தவனுக்கும் தமிழகத்தைச் சேர்நதவனுக்கும் வேறுபாடில்லை. தமிழகத்துக்கு எம்ஞ்சிஆர். ஆந்திராவுக்கு என்.டி.ஆர். மொழி தவிர ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் நிபந்தனை யாதெனில் விடுதலை பெறுவோம். பிற்பாடு கூட்டரசுபற்றிக் கருதிப் பார்க்கலாம்.

தென்னிந்திய மாநிலங்களிடையில் இருக்கிற குறிப்பான சில சிக்கல்களால் இனத் தூய்மை போன்றவை நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. எம்ஞ்சியார். எதிர்ப்புக்காகவே கருணாநிதி தமிழர் படை என்று ஒன்றை உருவாக்கி மலையாளி எதிர்ப்பை வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் எம்ஞ்சியாரை ஒரு போதும் அன்னியனாகவோ மலையாளியாகவோ பார்க்கவில்லை. இன்னும் மலையாளியாக இருந்தது அவருக்கு நேர்மறையாக இருந்தது. காரணம் இந்தத் தமிழ் நாட்டிலிருக்கும் எந்தச் சாதியாகவும் அவர் பார்க்கப்படவில்லை. இது அவருக்கு ரொம்பவும் சாதகமான தன்மையாக இருந்தது. எம்ஞ்சிஆருக்குக் கிடைத்த புகழுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. அவர் எந்த சாதிக்காரரும் கிடையாது – எல்லாருக்கும் பொதுவான மனிதர் அவர் என்று இந்த மக்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். இடஒதுக்கீட்டிற்குப் பொருளாதார அடிப்படையை வைத்த போதும் பிற்பாடு இட ஒதுக்கீட்டை ஐம்பது விழுக்காடாக உயர்த்திய போதும் அவருக்குச் சாதிய உள்நோக்கம் கற்பிக்க முடியவில்லை. தமிழகத்தில் இவ்வாறான வன்முறைகள் எதுவும் பிற இனத்தவர் மீது நடைபெறவில்லை. அபபடித் தூண்டியவர்களும் மக்களிடம் இருந்து அன்னியமாகிப்  போனார்கள். காவிரிச் சிக்கலில் கூடத் தமிழர்கள் கன்னடர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடவில்லை. தமிழக மக்கள் அந்த மரபில்தான் வந்திருக்கிறார்கள். கேரள மக்கள்  பற்றியும் நான் அதே நம்பிக்கையைத்தான் கொண்டிருக்கிறேன்.

மூலம்: பதிவுகள் மே 2003; இதழ் 41.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 67

ஞாயிறு, 14 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 99: பதிவுகள் தளத்தில் செவ்வி 6 – தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 7

இதற்குப் பிற்பாடு தலைமை தொடர்பான கேள்வி வருகிறது. குமுகிய(சோசலிச)ப் புரட்சிக்குப் பாட்டாளி வருக்கம் தலைமை தாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் தலைமையாவது வேண்டும். ஆனால் இதற்கு அப்படிக் கிடையாது. இது ஒரு புரட்சிகரச் சனநாயகக் கட்டம் என்பதால் ஒரு பொதுவான புரட்சிகரத் தலைமை வேண்டும். எல்லாச் சக்திகளையும் இணக்கப்படுத்துவதற்குப் புரட்சிகரமான முறையில் ஒன்றுபடுத்துவதற்கு – பொது எதிரிக்கெதிராக இந்த அணிவகுப்பை வளர்த்துச் செல்வதற்கும் பொருத்தமான ஒரு பொதுத் தலைமை. அது காலப் போக்கில் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில்தான்உருவாக முடியும். அது ஒரே ஒரு சமூக சக்தியின் பிரதிநிதியாக இருக்காது. ஒரே ஒரு சமூக சக்தி மட்டும் தலைமை தாங்க முடியாது. அது தமிழ்த் தேசியச் சமூக நீதிப் புரட்சிகரத் தலைமை. நமது தந்திரோபாயம் என்ன? நாம் நீண்ட நாட்களாக அரசு அதிகாரம், அது ஒடுக்குமுறைத் தன்மை கொண்டது, அதற்கெதிராக நாம் படை கட்ட வேண்டும் எனப் பார்த்து வந்திருக்கிறோம். – அரசு அதிகாரம் பற்றிய பார்வையை இன்னும் கொஞ்சம் ஆழமாக்கிக் கொள்ள வேண்டும் – ஒரு சமூகப் பிரக்ஞையை அடிப்படையாக வைத்துத்தான் ஓர் அரசு அதிகாரம் இயங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது. இலெனின் புரட்சிக்கான நிலைமையைப் பற்றிக் குறிப்பிடுகிற போது: ஆளுகிற வருக்கங்கள் பழைய முறையில் தொடர்ந்து ஆள முடியாது என்ற நிலைக்கு வரும் போதும், ஆளப்படும் சக்திகள் பழைய முறையில் தொடர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வரும் போதும் இந்நிலை உருவாகிறது. இது மட்டும் நடந்தால் போதாது என அவர் குறிப்பிடுகிறார். ஆளும் வருக்கங்களின் சமூகப் பிரக்ஞையின் அதே அளவான பிரக்ஞை பொதுமக்களிடமும் இருக்கும் போதுதான் அவர்களை ஆள முடிகிறது. பொதுமக்களிடமுள்ள இந்தப் பிரக்ஞையை மாற்றுவதுதான் புரட்சிகர சக்திகளின் கடமையாகிறது. இது மாறும் போதுதான் பழைய முறையில் ஆளமுடியாத ஒரு நிலை வரும். இது புரட்சிக்கான புறநிலைத் தேவையை வளர்ப்பதற்கான ஒரு போராட்டம். இதை எவ்வாறு செய்யப் போகிறோம்? வெகுமக்களின் உடனடிக் கோரிக்கைகளின் மீதான வெகுமக்கள் போராட்டங்களின் வாயிலாகத்தான் அரசியல் இலக்கை நோக்கிய அணிவகுப்பை உருவாக்க முடியும். இவ்வகையில் இக்கட்டத்தில் பழைய சமூகப் பிரக்ஞைக்கெதிரான புதிய சமூகப் பிரக்ஞையை உருவாக்குவதற்கான தனித்தனியான உடனடிக் கோரிக்கையடிப்படையிலான போராட்டங்களும் ஒரு பொது அரசியல் இலக்கை நோக்கிய கருத்தியலையும் உருவாக்குவதுதான் முக்கியமானது. அதற்கு என்ன தேவை? இலெனின் சொன்னதைப் போல அமைப்புதான் நமது கையில் இருக்கிற ஒரே ஒரு கருவி. அந்த அமைப்பைக் கட்டுவதுதான் நமது இன்றைய தந்திரோபாயம்.

யமுனா: 

இந்த அரசு அமைப்பைத் தாங்கி நிற்கிறவையாக கருத்தியல் அமைப்பும் பண்பாட்டுக் கட்டமைப்பும் இருக்கிறது என்பதால் – இந்த அரசமைப்பை மாற்றவதற்குக் கருத்தியல் பண்பாட்டு அமைப்புத் தளத்திலான பேராட்டங்களை மேறகொள்ள வேண்டும் எனச் சொல்கிறீர்கள். எனில் இந்தப் பண்பாட்டு, கருத்தியல் செல்பாடுகளின் சமூகச் செயல்பாட்டு அங்கமாக இருக்கிற நடவடிக்கைகளில்தான் மாற்றுப் பண்பாட்டு, மாற்றுக் கருத்தியல் உருவாக்கம் நோக்கித்தான் நீங்கள் இடையீடு செய்ய வேண்டும்.

தியாகு:

நாம் இந்த அமைப்பின் எல்லைகளை நடைமுறையில் வெகுசனங்களுக்குப் புரியச் செய்ய வேண்டும். பொதுசனங்கள் இந்த அமைப்பில் இதுதான் முடியும் என நினைக்கிறார்கள். தமது நலன்களுக்காக அமைப்பை மாற்றுவது, மாற்று அமைப்பை உருவாக்குவது சம்பந்தமான பிரக்ஞையை நிலவும் அமைப்பின் எல்லையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம்தான் உருவாக்க முடியும். இவர்கள் இந்திய அரசமைப்புக்குள்தான் இயங்க முடியும் என நினைக்கிறார்கள். இவர்கள் வாசுபாயை விட்டால் சோனியா என நினைக்கிறார்கள். கருணாநிதியை விட்டால் செயலலிதா என நினைக்கிறார்கள். வேலைநிறுத்தம் செய்தால் இதுவரைதான் கிடைக்கும் என நினைக்கிறார்கள். இப்போது இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பு இருந்தால்தான் தமது சிக்கல்கள் தீரும் என்று மக்கள் வந்துசேர்கிற பிரக்ஞையை நாம் உருவாக்க வேண்டும். இதிலிருந்து அவர்கள் இன்றிருக்கிற அரசியல் அதிகாரம், மாற்று அரசியல் அதிகாரம் பற்றிய பிரக்ஞையைப் பெற முடியும். இந்தப் போராட்டங்கள் பொருளாதாரத் துறையில் இருக்கின்றன. கலாசாரத் துறையில் இருக்கின்றன. மொழித் துறையில் இருக்கின்றன. இவ்வாறான மாற்றுப் பிரக்ஞையைப் பல்வேறு போராட்டங்களின் மூலமாகத்தான் ஏற்படுத்த முடியும். அவ்வாறு போராடும் போதே ஒரு நீண்ட கால அரசியல் இயக்கத்திற்கான முன்னேற்பாடுகளை ஏற்படுத்துகிறீர்கள். அந்த இயக்கம் இந்த எல்லாப் போராட்டச் சிற்றோடைகளையும் ஒரு பொதுப் போராட்ட நோக்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

யமுனா:

இந்தி மொழி ஆதிக்கம் என்கிற போது இந்திய மொழி பேசுகிற வடநாட்டவர்களைச் சொல்கிறீர்களா அல்லது இந்தி மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஆதிக்கச் சக்திகளைச் சொல்கிறீர்களா?

தியாகு: நாம் தெளிவாக இருக்க வேண்டும். நான் இந்தி மொழி ஆதிக்கச் சக்திகளென்கிறேன். இது இந்தி மொழி பேசும் மக்கள் என்பதைக் குறிக்காது. அவர்கள் நம் மீது இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிற சக்திகள் கிடையாது. அவர்களுக்குள் இருக்கிற ஒரு பகுதிதான் ஆளும் வருக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தியப் பெருமுதலாளிகள் என்கிற போது பெரும்பாலும் மார்வாரிகள் சேட்டுகள்தான். மற்ற தேசிய இனத்தவர்களில் பெருமுதலாளிகள் மிகக் குறைவு. இந்தியப் பெருமுதலாளிகளின் வரிசையில் இருக்கிறவர்களில் தொண்ணூறு சதவீதமானவர்கள் அவர்கள்தான். குசராத்தி சேட்டுக்கு குசராத்திதான் தாய்மொழி. ஆனால் இந்திதான் அவனது ஆதிக்கக் கருவி. அனைத்திந்திய சந்தையைப் பாதுகாப்பதற்கு இந்தியா என்கிற கட்டமைப்பை வைத்துக் கொள்வதற்கு, இந்திய தேசத்தைக் கட்டுவதற்கெல்லாம் இந்தி தேவைப்படுகிறது. இதை ஒரு மொழி பேசும் மக்களென்றோ ஒரு சமூக சக்தி என்றோ ஒரு தேசிய இனத்தவரென்றோ  பிரிக்க முடியாது. எல்லாமே கலந்ததாகத்தான் இந்தி ஆதிக்க சக்தி இருக்கிறது.

யமுனா:

தமிழ்த் தேசிய ஒடுக்குமுறையின் வடிவங்கள் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்? உதாரணமாக ஈழத்தை எடுத்துக் கொண்டால் சிங்களப் பெருந்தேசியத்தினுடைய ஒடுக்குமுறை வடிவங்கள் மிகத் தூலமாக இருக்கிறது. தரப்படுத்துதல், கோயில்கள் இடிப்பு, பாலியல் பலாத்துகாரம், சிவில் நிறுவனங்களில் புறக்கணிப்பு, யாப்புரீதியில் சிங்களமயமாக்கப்பட்டிருப்பது, தமிழர்கள் மீதான வெளிப்படையான இராணுவ வன்முறை என நிறைய வரையறுத்துச் சொல்ல முடியும். அவ்வகையில் தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் மீதான ஒடுக்குமுறைகளை நீஙகள் எப்படி வரையறுப்பீர்கள்?

தியாகு:

முதலாவதாக அடையாள மறுப்பு. தமிழ் மொழி தேசிய மொழியாக இங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமிழ்த் தேசிய இனம் என்பதற்கான அங்கிகாரம் இல்லை.  இதனுடைய விரிவாக்கமாகத்தான் மற்ற எல்லாவற்றையும் நாங்கள் பார்க்கிறோம். மைய அரசுப் பணிகளில் இந்தி அல்லது ஆங்கிலம் என்ற நிலைதான் இருக்கிறது. தமிழை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவன் மைய அரசுப் பணிக்குப் போகமுடியாது. இந்தி மொழித் திணிப்பு என்பது தொடர்கிறது. தமிழ் வழிக் கல்வி மறுக்கப்படுகிறது. அரசு உரிமை என்பது கிடையாது. தில்லியிலிருந்து மாநில அரசுகளைக் கலைக்க முடியும். ஆனால் எல்லா மாநில அரசுகளும் சேர்ந்தால் கூட தில்லி அரசைக் கலைக்க முடியாது. தமிழ்நாட்டின் ஆட்சிப் பரப்புக்கான உரிமை நமக்குக் கிடையாது. கச்சத் தீவைத் தமிழக அரசிடம் கேட்டுக் கெள்ளாமலேயே கொடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டு எல்லைகளை மாற்றுகிற உரிமை தில்லியிடம்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்களின் மீது தமிழ்த் தேசத்திற்கு இறையாண்மை கிடையாது. நமது இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்தி நமக்குத் தொழில் தொடங்க உரிமை கிடையாது. நமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிற உரிமை நமக்குக்  கிடையாது. சாதி அடிப்படையிலான குலத் தொழில் முறையை உடைத்து யாரும் எந்த வேலையும் பார்க்கலாம் என்பதற்குப் பொருத்தமான வேலைவாய்ப்புக் கொள்கை இல்லை. நமக்குப் பொருத்தமான சட்டமியற்றும் உரிமை இல்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65

சனி, 13 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 99 : பதிவுகள் தளத்தில் செவ்வி 6

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 98: பதிவுகள் தளத்தில் செவ்வி 5 – தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 6

யமுனா :

பொதுவாக மார்க்குசியத்தின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை இடித்தாய்வு செய்யும்(விமர்சிக்கும்) போது மார்க்குசியம் இரண்டு விசயங்கள் தொடர்பாக வரலாற்று முறையிலான – அடம்பிடித்த படியிலான தவற்றைச் செய்திருக்கிறது என உரொனாலுடு மங்கு(Ronald Mang) தனது நூலில் குறிப்பிடுகிறார். பெண்கள் தொடர்பான சிக்கலையும் தேசியம் தொடர்பான சிக்கலையும் அணுகிய விதம் அதனது புரட்சிகரத் தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கி விட்டதென அவர் அவதானிக்கிறார். இன்னும் தேசியம்  பெண்களின் உயிர் மறுஉற்பத்தி சார்ந்த விசயங்களைக் கட்டுப்படுத்தும் பிற்போக்கான கருத்தியலாகவும் வளர்ந்திருக்கிறது எனும் விமர்சனமும் அதன் மீது உண்டு. இவ்வகையில் தமிழ்த் தேசியத்தில் ஒரு சமூக சக்தியாகப் பெண்கள் பற்றிக் குறிப்பிபடவேயில்லை – அவர்கள் தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன?

தியாகு:

சமூகநீதிப் போராட்டத்தின் ஒரு கூறாக ஆணாதிக்கத்திற்கெதிரான பெண்களின் போராட்டத்தை வரவிருக்கும் “தலித்தியமும் தமிழ்த் தேசியமும்” நூலில் விரிவாகக் குறிப்பிடுகிறேன். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் எல்லாவிதமான ஆதிக்கங்களையும் சாதிய ஆதிக்கத்தோடு தொடர்புபடுத்த முடியும் என நான் அதில் விவாதிக்கிறேன். ஆணாதிக்கத்தைக் கூட சாதிய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கருவியாக விளக்கிய அம்பேத்துகரை மேற்கோள் காட்டுகிறேன். எவ்வாறாக இராசபுத்திரர்களின் உடன்கட்டை ஏறும் பழக்கம் கூட அகமணமுறையைப் பாதுகாக்குமுகத்தான் ஏற்படுத்தப்பட்டது என அம்பேத்துகர் சொல்கிறார். பாரதிராசாவினுடைய ‘கருத்தம்மா‘ திரைப்படத் திறனாய்வுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசினேன். ‘கருத்தம்மா’ படத்தில் ஏன் இந்த பெண் சிசுக் கொலைப் பழக்கம் வந்தது என்பதை பாரதிராசாவினால் சரியாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று நான் கூறினேன். வரதட்சணைக் கொடுமையால் சிசுக் கொலை நடப்பதாக அந்தப் படத்தில் அவர் சொல்கிறார். வரதட்சணைக் கொடுமையால் பெண்சிசுக் கொலை நடைபெற வேண்டுமானால் எந்தச் சாதியில் வரதட்சணைக் கொடுமை அதிகமாக இருக்கிறதோ அந்தச் சாதியில்தான் அந்தச் சிசுக்கொலை நடந்திருக்கவேண்டும். வரதட்சணைக் கொடுமை என்பது பார்ப்பனர்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடமும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் எந்தப் பார்ப்பனக் குடும்பத்திலும் நாட்டுக் கோட்டைச் செட்டியார் குடும்பத்திலும் பெண்சிசுக் கொலை நடக்கவில்லை. மாறாக முக்குலத்தோரில், தேவர் குடும்பஙகளில் நடக்கிறது – வரதட்சணை என்பதை ஒப்புக் கொள்ளாத சாதியில் பெண் சிசுக்கொலை இருக்கிறது. வரதட்சணைக் கொடுமை என்பது அவர்களிடம் இல்லை. தற்போது தலித்துகளுக்கிடையில் கூட வரதட்சணைப் பழக்கம் வந்திருக்கிறது. பார்ப்பனமயமாதலின்  தாக்கமாகத்தான் அது மற்றவர்களிடம் பரவியிருக்கிறது. தாங்களும் அவர்களைப் போல் நடந்து கொள்ளவும் இருக்கவும் மற்ற சாதிகள் முயற்சி பண்ணுவதின் விளைவுதான் வரதட்சணைக் கொடுமை இவர்களிடம் வந்திருக்கிறது. நான் அந்தப் படத்தின் உள்ளிருந்தே ஒரு உதாரணம் கொடுத்தேன். கருத்தம்மாவை ஒருவன் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்யப் போவான். போகும் போது இதோ இந்தச் சீதனத்தை வைத்துக் கொள் என்று கொடுப்பான். மாப்பிள்ளை பெண்ணுக்குச் சீதனம் கொடுத்து கல்யாணம் பண்ணிக் கொள்கிற பழக்கம்தான் தேவர் சாதியில் உண்டே தவிர பெண்வீட்டார் அவனுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் பண்ணுகிற பழக்கம் கிடையாது. எனில் தேவர் குடும்பத்தில் எப்படி பெண்சிசுக்கொலை நடக்கும்? இது வரதட்சணைக் கொடுமையோடு தொடர்புடையதல்ல, அந்தச் சாதியின் படைத் தொழிலோடு சம்பந்தமுள்ளது. அது படைச் சாதி (martial caste). அவர்கள் போர்களுக்குச் செல்கிற போது இயல்பாகவே ஆண்பெண் விகிதம் மாறிப் போய் விடுகிறது. ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விடுகிறது. பெண்களின் தொகை அதிகரிக்கிற போது திருமணம் செயவதற்கு அவர்கள் சாதியை மீறி வெளியில் போக வேண்டிய கட்டாயம் வருகிறது. இதைத் தடுக்க வேண்டுமெனில் – சாதியைக் காப்பாற்ற வேண்டுமெனில் –  ஆண்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெண்களின் எணணிக்கையைக் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இராசபுத்திரர்களின் மத்தியில் இது உடன்கட்டை ஏறும் பழக்கமாக இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், தேவர்கள் மத்தியில் இது பெண்சிசுக் கொலையாகியது என்று சொன்னேன். 

யமுனா:

தமிழ்த் தேசியத்தின் புரட்சிகரத் தன்மை, அதனது சமூக வருக்க சக்திகள் பற்றி இது வரை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்த் தேசியத்தின் எதிரிகளென எவரை வரையறுக்கிறீர்கள்?

தியாகு: 

தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு எது தடை – தேசிய வளரச்சியென்பதை சமூகத்தின் சனநாயக வளர்ச்சியாக – மனிதத் தன்மை கொண்ட, மனிதநேயம் கொண்ட ஒரு கட்டமைப்பை நோக்கிய சமூகத்திற்கான தடையாக – குமுகவியம், பொதுவுடைமை யெல்லாம்(சோசலிசம் கம்யூனிசமெல்லாம்) நீண்ட கால நோக்கம் – அதற்குள் எல்லாம் நாங்கள் இப்போது போகவில்லை – ஒரு சனநாயக சமூகத்தை – மனித சமத்துவம் நிலவும் “பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்” என்ற நிலையைக் கொண்டுவந்தால் போதும், இப்போது அந்தவொரு சமூகத்திற்கு எது தடையாக இருக்கிறது என நாம் பார்க்கிறோம். இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று, தில்லி ஏகாதிபத்தியம், மற்றது சாதியம். தில்லி ஏகாதிபத்தியம் என்கிற போது இந்திய  அரசைக் குறிப்பிடுகிறேன். இதனது சமூகச் சக்திகளை மூன்று விதமாக வரையறுக்கிறோம். ஐரோப்பா மாதிரி இந்தியச் சமூகத்தை வருக்கப் பகுப்பாய்வுக்குள், வருக்கக் குறுக்கல் வாதத்துக்குள் கொண்டுவர முடியாது. அந்தக் கட்டத்தை நாம் தாண்டிப் போய் விட்டோம். ஆனால் வருக்கம் இல்லையென்றோ வருக்க நிராகரிப்பு என்றோ நாம் சொல்லவில்லை.

1)     அந்நிய நிதி மூலதனத்தோடு இணைந்து செயல்படுகிற, அதனைச்  சார்ந்திருக்கிற – உலகமயமாதல்  மற்றும் ஏகாதிபத்தியப் போக்குகளின் கருவியாகச் செயல்படுகிற – இந்தியப் பெருமுதலாளி வருக்கம். இவர்களை நாம் பன்னாட்டு மூலதனத்தினர் என்று வரையறுக்கிறோம். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று நாங்கள் சொல்கிற போது இவர்கள் பன்னாட்டு மூலதனத்தினர்தான். வருக்கெமன்று பார்க்கும் போது இவர்கள்தான் முதல் எதிரிகள்.

2)     சமூகச் சக்திகள் என்று பார்க்கிற போது உத்தியோகத் துறை மற்றும் பொருளுற்பத்தியில் இருக்கக் கூடிய மூலதனம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பார்ப்பன பனியா வருக்கம். இது சாதிய அடிப்படை கொண்டது.

3)      இந்துத் தேசியம் என்கிற இந்தியத் தேசியம்: இந்தி மொழி ஆதிக்க சக்திகள். இவர்கள் சார்பில் நடைபெறுவதுதான் இந்திய அரசு அதிகாரம் என்று நாம் வரையறை செய்கிறோம். இவர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் எமது நோக்கம். இதற்கான புரட்சிகர சக்திகள் யார்? இயல்பாகத் தமிழ்த் தேசியம் என்பது எந்தெந்தச் சக்திகளின்  வளர்ச்சிக்குத் துணை செய்யுமோ அந்தச் சக்திகள். – அப்படிப் பார்க்கிற போது பாட்டாளி வருக்கம் – பாட்டாளி வருக்கம் இன்னும்  முழு வளர்ச்சி பெறாத போதும் –  வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளி வருக்கம் என்று கொள்ளலாம். – அதே போல சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் – இவர்கள்தான் பிரதான சக்திகள். இதைப் போலவே பிற்படுத்தப்பட்ட சாதியினர் – இவர்களைப் பொறுத்து இரண்டு விதமான போக்குகளை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது – அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகப் போராட வேண்டும். அவர்களே அடிமைகள் எனும் அளவில் அவர்களுக்கு மேலிருக்கிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். போராட்டப் போக்கில்தான் இந்தச் சக்திகளை நாம் ஒன்றுபடுத்த முடியும். அடுத்தாகச் சமுதாயத்தில் இருக்கும் சனநாயக சக்திகள். இதில் எந்த வருக்கமும் உள்ளடங்கும். எந்தச் சாதியும் இதற்குள் வரலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65

வெள்ளி, 12 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 98 : பதிவுகள் தளத்தில் செவ்வி 5

 

தோழர் தியாகு எழுதுகிறார் 98 : பதிவுகள் தளத்தில் செவ்வி 5



(தோழர் தியாகு எழுதுகிறார் 97: பதிவுகள் தளத்தில் செவ்வி 4- தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 5

தமிழ்த் தேசியத்தின் ஓர்மையும் பன்மையும்

யமுனா:  

நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசியம் ஒரு பலப்பண்பாட்டு(மல்ட்டி கல்ச்சுரல்) மன்பதையாக இருக்குமா?

தியாகு:

இல்லை – ஒரு பகுதி, சிறுபான்மையர் இருப்பர். ஆனால் முதன்மை மன்பதை (main stream) ஒன்று இருக்கும். பலப்பண்பாட்டு குமுகத்தில் முதன்மை மன்பதை (main stream) என்ற ஒன்று இருக்காது. அப்படிப் பார்ப்பது தமிழர் தாயகத்தை மறுப்பதாகும். தமிழர்களின் தாயகம்தான் தமிழ்நாடு  தமிழ் இனத்தின் வாழ்விடம் இது. நமது எல்லைதான் இது. இதில் சிறுபான்மையினர்க்கு இடம் உண்டு. சிறுபான்மையினர்க்கான உரிமை வேறு. தேசியத்தின் உரிமைகள் வேறு. இரண்டையும் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. சிறுபான்மையினர்களின் உரிமைகள் அங்கிகரிக்க்ப்பட்டு மதிக்கப்படும்அதே நேரத்தில் இது தமிழர்களின் தேசியத் தாயகம்.

யமுனா:

இப்போது சிறுபான்மையினர் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

தியாகு: 

மொழிவழிச் சிறுபான்மையினர் எல்லையோரங்களில் இருப்பவர்கள். கன்னடர்கள் இருக்கிறார்கள்.  மலையாளிகள் இருக்கிறார்கள்.

யமுனா: 

தமிழ்ப்பண்பாடு(கலாச்சாரம்) என்று சொல்கிற போது நீங்கள் பொது மொழி, பொதுப் பண்பாடு போன்றவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். இவ்வகையில் மதம் இங்கு எந்தவிடத்தில் பொருந்துகிறது?

தியாகு: 

தேசம் என்கிற அமைவில் பல்வேறு கூறுகள் இடம்பெறுகின்றன. அகக்கூறுகள் மற்றும் புறக்கூறுகள். புறக்கூறுகள் என்கிற போது அவர்கள் பேசும் மொழி, அவர்கள் வாழக் கூடிய நிலப்பரப்பு. இதில் அவர்களின் தெரிவென்று ஏதுமில்லை. இனச் சிறுபான்மையினர் என்பது சரியான சொல்லாட்சி இல்லை. மொழிச் சிறுபான்மையினர் என்று சொல்லலாம். நாம் மதம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மதம் ஒடுக்குமுறைக்கான கருவியாகிற போது – பல்வேறு மொழி பேசும் பல தேசிய இனங்களைச் சார்ந்தவராயினும் யூதர்களை மதத்தின் பெயரில் ஒடுக்கியதால் அதுவே அவர்களை இணைக்கக் கூடிய காரணியாயிற்று. ஒரே மதத்தில் கூட ஒடுக்கப்பட்டவர்களும் ஒடுக்குபவர்களும் இருப்பர். தென் ஆப்பிரிக்க எடுத்துக்காட்டைப் பாரக்கலாம். கறுப்பர்களின் கிறித்துவப் பிரிவு என்பது வேறு. வெள்ளையர்களின் கிறித்துவம் என்பது வேறு. அயர்லாந்து சிக்கலில்  கத்தோலிக்கமும் திருத்த அவையினர்(protestant) சிக்கலும் தலையாய சிக்கலாக இருக்கிறது. நமது சிக்கலில் மதம் ஒரு காரணமாக வைத்து ஒடுக்குமுறை அமையவில்லை. இங்கு நமக்கிடையிலுள்ள  சிக்கல் சாதிய வேறுபாடுதான். அது நமக்கு வெளியிலிருந்து வருவது அல்ல.

யமுனா: 

மதம் தொடர்பாகப் பார்க்கிற போது மொழியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மொழி சார்ந்த பண்பாட்டை நாம் பேசுகிற போது மொழி மதச்சார்பற்றதாக இல்லாதிருக்கிறதை நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. மொழி தொடர்பான ஆய்வுகளிலிருந்து  பாரக்கிற போது மதம் தொடர்பான சார்புநிலையினின்று மொழியைப் பிரித்துப் பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக ஈழத்தில் சைவத்திலிருந்து தமிழ் மொழியைப் பிரித்துப் பார்ப்பது கடினம். அம்மொழி மதச்சார்பற்ற மொழியாகவில்லை. அதைப் போலவே மொழி நாம் பேசுகிற மன்பதைச் சூழலில் சாதி ஆதிக்கத்தினுடைய கருவியாக இருக்கிறது. அவ்வகையில் மொழி மத ஆதிக்கத்தினுடைய கருவியாக இருக்கிறது. ஜரோப்பிய மொழிகளுக்கும் நமது மொழிகளுக்கும் இருக்கிற மிகப் பெரிய வேறுபாடுகளில் ஒன்று  மேற்கில் மொழிக்குள் மதச்சார்பற்ற மற்றும் பாலாதிக்கநீக்க மொழிக்கான நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது மொழிகளில் அவ்வகையிலான முயற்சிகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை. கலைஞர் கருணாநிதி பேசுகிற தமிழும் கிருபானந்தவாரியார் பேசுகிற தமிழும் ஒடுக்கப்பட்ட ஒருவர்(தலித்து) பேசுகிற தமிழும் பல்வேறு வகைகளில் வேறுபாடானது. மொழி மதநீக்கம் அடையாத போது எவ்வாறு மொழியைத் தேசியத்தின் பொது அலகாக நீங்கள் வரையறுக்கிறீர்கள்?

தியாகு:

உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். தமிழ் மொழி முழுக்க மதநீக்கம் பெற்ற மொழிதான். மொழி அதனளவில் ஒரு வருக்கக் கருவியோ சாதியக் கருவியோ மதக் கருவியோ அல்ல. மொழியை எதற்கும் பயன்படுத்திக்   கொள்ள முடியும். தமிழ்ப் பண்பாடு என்பது சமயப் பண்பாடு அல்ல. இன்னும் சமயப் பண்பாடு வெறும் ஆதிக்கப் பண்பாடு கிடையாது. சாதியச் சிந்தனைகள் வைதிகக் கருத்துகள், இலக்கியங்கள் எந்த மொழியில் வந்தனவோ அதே மொழியில்தான் சித்தர் பாடல்களும் வள்ளலார் பாடல்களும் வந்தன.  எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குறள். திருக்குறள் போன்ற மதநீக்கம் பெற்ற இலக்கியம் சாதிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு சமத்துவக் கருத்துகள் நிறைந்த இலக்கியமென்று வேறொன்று இல்லை. குறளியம் என்பதோர் அமைப்பு, ஒரு முறைமை. நமது தமிழ் மன்பதையின் நடந்திருக்கக் கூடிய சமூக நீதிக்கான, சமத்துவத்துக்கான போராட்டத்துக்கான மிகப் பெரிய வரலாற்றுப்  பதிவு திருக்குறள்தான். தமிழில் திருக்குறளுக்குப் பிற்பாடுதான் பிற இலக்கியங்களைச் சொல்லலாம். மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழிகளோடு ஒபபிட்டுப் பார்ப்போமானால் தமிழ் அதிக அளவில் மதநீக்கம் கொண்டது. அதிக அளவில் முற்போக்கு சக்திகளின் பக்கம் நிற்பதாகும். என்னளவில் தமிழ் அனைத்து மக்களுக்குமான மொழிதான்.

விசு:

நாம் வரையறுத்திருக்கிற பொதுவான தமிழ்த் தேசியத்திற்கு மொழி, பண்பாடு, குறிப்பிட்ட எல்லை இம்மாதிரியான ஒரு வரையறைக்குள் தமிழ்ப் பண்பாடு என்பது ஒரு பொதுவான பண்பாடு இருக்கிறதா? தமிழ்ப் பண்பாடு என்பதையும், தமிழ் வாழ்முறை என்பதையும் நீங்கள் எப்படி வரையறுக்கிறிர்கள்?

தியாகு:

வருக்க மன்பதையில் பண்பாடு என்பது இரண்டு முனைகளின் போராட்டமாகத்தான் இருக்கும். சமூக நீதிக்கான சக்திகளும் அதற்கு எதிரான சக்திகளும் காலங்காலமாகப் போராடி வருகிற ஒரு சமூகத்தில் தமிழ்ப் பண்பாடு என்பதும் போராடுகிற இரண்டு முனைகளைக் கொண்ட ஒரு பண்பாடுதான். இந்தத் தமிழ் பண்பாட்டில் சாதியத்திற்கு இடமில்லை. இந்தத் தமிழ்ப் பண்பாட்டில் பார்ப்பனியத்திற்கு இடமில்லை. இந்தத் தமிழ்ப் பண்பாட்டில் மானுடச் சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைக்கு இடம் கிடையாது. ஆத்திகம் ஒரு கூறாக இருந்தால் நாத்திகம் ஒரு கூறாக இருக்கும்.  இதைத்தான் நாம் தமிழ்த் தேசத்தின் பண்பாடு என வரையறுக்கிறோம்.

விசு:

பலப் பண்பாடு, பன்முக வரலாறு என்கிற வகையில் இங்கு பல விடயங்கள் முன்வந்திருக்கின்றன. உயர் சாதி தாழ்ந்த சாதி பிற்பட்ட  ஒடுக்கப்பட்பட மக்கள் போன்றவர்களின் பண்பாடு என்பது தமிழ்ப்பண்பாட்டுக்குள் வருகிறதா?

தியாகு:

அமெரிக்கத் தேசிய வளர்ச்சியிலும் அமெரிக்க ப் பண்பாட்டு வளர்ச்சியிலும் கறுப்பர்களுக்கு ஒரு பங்கு உண்டு. அமெரிக்கத் தேசிய வரலாறு என்பது வெள்ளையர்கள் சென்று செவ்விந்தியர்களை  அழித்தது மட்டுமல்லவே? அவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டிலும் நீங்கள் குறிப்பிடுகிற அனைவரும் உள்ளடங்குவர். ஆபிரகாம் இலிங்கனுடைய போராட்டத்துக்கும் கறுப்பின மக்களின் போராட்டத்துக்கும் எவ்வாறாக அமெரிக்க வரலாற்றிலும் பண்பாட்டிலும் இடமிருக்கிறதோ அவ்வாறே தமிழ்ப் பண்பாட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பங்கிருக்கிறது. பண்பாடு என்பதை ஓர் இறுகிய நிலையாகப் பார்க்க முடியாது. அதை இயங்கியல் முரண்களுக்கிடையிலான போராட்டமாக (டைனமிக்காக)ப் பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்த அளவில் எதுவெல்லாம் குமுக மாற்றத்துக்குத் துணை நிற்கக் கூடியதோ, எது தேசியத்தனிநிலைக்கும் சாதியத்தனிநிலைக்கும் எதிரானதோ அதுவெல்லாம் தமிழ் தேசியப் பண்பாட்டுக்குள் இயங்கும். இதைத்தான் தமிழ் வரலாறாக நாம் பாரக்கிறோம்.

விசு:

இவ்வாறாகப் பொதுமைப்படுத்தும் போது ஒடுக்கப்பட்டவர்களுடைய வரலாற்றில் எந்தவிதமான கூறுகளை நாம் எடுத்துக் கொள்கிறோம் – எதனை விலக்குகிறோம்?

தியாகு:

திருக்குறள் என்பது ஒடுக்கப்பட்டோர் இலக்கியம். யார் கடைக்கோடியில் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவர்களது விடுதலைக்கான இலக்கியம்தான் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம். எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது ஒடுக்கியம். சித்தர்களிடம் இந்த வேகத்தைப் பார்க்கலாம். பாரதியின் சாதிய எதிர்ப்பில் அதைப் பாரக்கலாம். இந்தியத் தேசியப் பண்பாட்டில் எஞ்சி நிற்பது ஆதிக்கப் பண்பாடு மட்டும்தான். முருகன் குறத்தியை மணந்து கொள்கிற தமிழ்க் கடவுளாகத்தான் இருக்கிறான். தேவயானியைக் கொண்டுவந்து அவனோடு இணைக்கும் போதுதான் நமக்குச் சிக்கல் வருகிறது. இவ்வகையில் தமிழ்த் தேசியப் பண்பாடு என்பது அனைத்து வகையான ஆதிக்கப் பண்பாடுகளுக்கும் எதிரானதாகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65