சுப்ரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப்ரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அ. காற்றடித்தாலும் இனி வாழை சாயாது! ஆ. எடை குறைந்தால் பயப்படாதீர்கள்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_825400.jpg

காற்றடித்தாலும் இனி வாழை சாயாது! 
காற்றின் தாக்கத்திலிருந்து வாழைத்தோப்புகளை ப் பாதுகாக்கும், புது ரக சவுக்கு மரத்தை உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர், புவனேசுவரன்: நான், கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறேன். வாழை சாகுபடியில் உள்ள பெரும் சவாலே, அவற்றை காற்றின் தாக்கத்தில் இருந்து, பாதுகாப்பது தான். நீர் தட்டுப்பாடு, நோய் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பைவிட, பலத்த காற்றால் ஏற்படும் பாதிப்பில் தான், விவசாயிகளுக்கு அதிக நட்டம் ஏற்படும். பருவக்காற்று வீசும் காலங்களில், கம்புகளால் முட்டு கொடுப்பது, 'பிளாஸ்டிக் பெல்ட்'டால் கட்டுவது, மண் அணைப்பது, இலைகளை கவாத்து செய்வது வழக்கம். இருந்தும், 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசினால், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிடும். கடலோர பகுதிகளில் வீசும் காற்றை தடுக்கவும், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புழுதியை தடுக்கவும், பொதுவாக சவுக்கு மரங்களை வளர்ப்பர். எனவே, காற்றின் தாக்கத்திலிருந்து வாழை தோப்புகளை பாதுகாக்க, அடர்த்தியான வீரிய ரக சவுக்கு மரத்தை உருவாக்க முயற்சித்தோம்.
இவ்வாறு, 10க்கும் மேற்பட்ட, உயர் ரக சவுக்கு மரத்திலிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 'குளோனிங்' என்ற தாவர இனப்பெருக்கம் முறையில், 'காசுரினா ஜூங்குனியானா' என்ற புதிய ரக சவுக்கை கண்டுபிடித்தோம். இதை, வாழைத்தோப்பின், நான்கு திசைகளின் ஓரத்தை சுற்றிலும், மூன்று வரிசையாக, வரிசைக்கு வரிசை, 1 மீ., இடைவெளியில், குறுக்கு-மறுக்காக நட வேண்டும். இச்சவுக்கை வளர்ப்பதால், காற்றின் வேகத்தை, 46 சதவீதமும், மண்ணரிப்பை, 76 சதவீதமும் கட்டுப்படுத்தலாம். மேலும், தோட்டத்தின் தட்பவெப்ப நிலை சமன் ஆவதுடன், காற்றில் உள்ள தழைச்சத்தையும் மண்ணில் நிலைநிறுத்துகிறது. ஒரு முறை நடப்படும் இச்சவுக்கு மரம், மூன்று ஆண்டுகள் வரை பயன்படும். பின், சவுக்கு மரங்களை அறுவடை செய்வதன் மூலம், உபரி வருமானமும் பெற முடியும். தொடர்புக்கு: 0422-2484100

எடை குறைந்தால் பயப்படாதீர்கள்!
குழந்தை நல மருத்துவர், சுப்ரமணியன்: குழந்தையின் உடல் எடை, ஆரோக்கியத்தை தீர்மானிக்கிற விஷயங்களில் ஒன்று, என்பதால், எடையை வைத்து மட்டுமே, குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியாது. பிறந்த குழந்தையின் எடை, 2.5 முதல் 3.5 கிலோ வரை இருக்கலாம். தாயின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் பரம்பரையை பொறுத்தே, குழந்தை யின் எடை அமையும். எனவே, 'நான் நல்லா தான் சாப்பிட்டேன்; குழந்தை ஏன் அதிக எடையுடன் பிறக்கவில்லை...' என, தாய் கேள்வி கேட்க முடியாது. குழந்தை பிறந்த சில நாட்களில், எடை குறையும். உடம்பில் உள்ள, தேவையில்லாத நீர் இறங்குவதே, இதற்கு காரணம். ஒரு வாரத்திற்கு பின், மீண்டும் சரியாகி விடும். குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு, தினமும், 20 முதல் 30 கிராம் வரை, உடல் எடை கூடும். மூன்றி லிருந்து, ஆறாம் மாதம் வரை, தினமும், 15 கிராம் வரையே, எடை கூடும். ஆறாம் மாதத்திலிருந்து, குழந்தையின் வளர்ச்சி அளவு குறைய ஆரம்பிக்கும். எனவே, 'பிறந்த ஆறு மாதம் வரை, குழந்தை நன்றாக வளர்ந்தது. யாரு கண்ணு பட்டது என, தெரியவில்லையே...' என, பெற்றோர் கவலைப்பட தேவையில்லை. ஒரு வயது குழந்தைக்கு, 8 முதல் 12 கிலோ வரை, எடை இருக்கும். எட்டு கிலோவை விட சற்று குறைந்தாலும், பிரச்னை இல்லை. குழந்தை நன்றாக ஓடி ஆடி விளையாடுகிறதா என்பதே முக்கியம். எனவே, குழந்தையின் எடைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும், குழந்தையின் எடை தான், அதன் வளர்ச்சியை சரியாக காட்டும் கருவியாக செயல்படுகிறது. மேலும், 200 குழந்தைகள் இருக்கும் இடத்தில், சில குழந்தைகளை மட்டும், பிரச்னை உடையவர்கள் என, எளிதில் காட்ட, இந்த எடை வளர்ச்சி விகிதம் உதவும். பெரும்பாலான குழந்தைக்கு நீர்சத்து தான், அதிகம் இருக்கும். சிலருக்கு திசு, எலும்பு, கொழுப்பு போன்றவை அதிக எடையுடன் இருப்ப தால், குண்டாகவும் இருப்பர்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

அ.) பார்வையிழந்தாலும் கனரக த் தொழிலில் சாதித்தோம்! ஆ.) சிக்கல்களை எளிதாகக் கையாளலாம்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82008120131005214445.jpg


பார்வையிழந்தாலும் கனரக த் தொழிலில் சாதித்தோம்!

பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வேலை வழங்கி, அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும்,சுப்ரமணியன்: நான், திருச்சியில் உள்ள, 'ஆர்பிட்' நிறுவனத்தின், செயலராக பணியாற்றுகிறேன். பார்வையை இழந்தால், வாழ்க்கையே இருண்டு விட்டது என, இடிந்து போய் விடாமல், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, மற்ற சாதாரண மனிதர்கள் போல், தங்களின் சொந்த காலில் நிற்பதற்கு, 1973ல், 'ஆர்பிட்' ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஐந்து பார்வையிழந்தவர்கள் மூலம், 'சாக்பீஸ், சோப்பு' போன்ற, எளிய பொருட்களை மட்டுமே தயாரித்து விற்றோம். பார்வையற்றவர்களால், சரியாக வேலை செய்ய முடியாது என, எந்த நிறுவனமும் எங்களுக்கு, 'ஆர்டர்'கள் தருவதில்லை. ஆனால், எங்கள் திறமையை உணர்ந்த, திருச்சி பெல் நிறுவனம், கனரக பொருட்களுக்கான ஆர்டர்கள் தந்தது.
கொடுக்கப்பட்ட ஆர்டர்களை சரியாக செய்து முடித்ததால், ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன. இதனால், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தரும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டதால், பார்வை உள்ளவர்களை விட, 20 சதவீதம் அதிக திறனுடன் உழைக்க முடிகிறது. ஏனெனில், பார்வையற்றவர்களால், வேடிக்கை பார்க்காமல், கவனச்சிதறல் இன்றி வேலை செய்ய முடியும். எங்களின் அயராத உழைப்பால், கடந்த ஆண்டு ராணிபேட்டையிலும் புதிய கிளை நிறுவி, 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். 2001 மற்றும் 2009ம் ஆண்டிற்கான, 'சிறந்த தனியார் நிறுவனம்' என்ற விருதை, தமிழக அரசிடமிருந்து பெற்றோம். கடந்த, 2010ல், உடல் ஊனமுற்றோர் தினத்தன்று, 'சிறந்த நிறுவனம்' என்ற விருதை, ஜனாதிபதியிடமிருந்தும் பெற்றுள்ளோம். தைவானில், 2012ம் ஆண்டு, 23 நாடுகள் பங்கேற்ற, 'வொர்க்கபிலிட்டி ஆசியா' மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும், 200 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், நாங்கள் தான் சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டப்பட்டோம்.
 
 சிக்கல்களை எளிதாகக் கையாளலாம்!  
மனநல ஆலோசகர், நவரத்தினா: நான், சென்னையை சேர்ந்த, மனநல ஆலோசகர். இன்றைய அவசர உலகில், பிரச்னைகள் வரும் போது, அதற்கான தீர்வுகள் தெரிந்திருந்தும், தவறான முடிவுகளையே பலர் எடுக்கின்றனர். பின், ஆற அமர்ந்து யோசிக்கும் போது தான், தடுமாற்றத்தை உணர முடிகிறது. ஆனால், மறுபடியும் தவறான முடிவெடுத்து, பல இக்கட்டுகளில் சிக்கி தவிக்கிறோம். இதற்கு காரணம், எதிர்மறை எண்ணங்களே. இவ்வுலகில், எதிர்மறை எண்ணங்கள் இல்லாதவரே இல்லை. அதற்காக, எதிர்மறை எண்ணத்துடனேயே வாழ்வதும், ஆரோக்கியமாக இருக்காது. எதிர்மறை எண்ணத்தால், தவறாக முடிவெடுக்கிறோம். பின், அதனால் ஏற்படும் பாதிப்புகளை, நாம் உணரும் போது, 'எனக்கு அதிர்ஷ்டம் இல்லை' என, அவநம்பிக்கையை வளர்க்கிறோம். நல்ல மனநிலையில் முடிவுகள் எடுத்து, நல்ல பலன் கிடைக்கும் போது தான், மனம் தெளிவடையும். எனவே, பிரச்னையின் ஆரம்ப நிலையிலேயே, மனதை திடமாக வைத்திருப்பது நல்லது. உண்மையிலேயே நீங்கள் எதிர்கொள்வது பிரச்னை தானா என்பதை, முதலில் நன்றாக யோசியுங்கள். ஏனெனில், சில நேரங்களில் ஒன்றுமில்லா காரியம் கூட, நம்மால் பெரிதாக ஊதப்பட்டு, பெரிய பிரச்னையாக மாறிவிடும். எனவே, பிரச்னையை முழுமையாக புரிந்து கொண்டாலே, பிரச்னைக்கான தீர்வின் பாதி கிணற்றை தாண்டலாம்.
பிரச்னைக்கான முக்கியத்துவம், அதற்கான தீர்வு, அதனால் ஏற்படப் போகும் பலன் மற்றும் இந்த சமூகத்தில் உங்களுக்கு கிடைக்கப் போகும் மரியாதை போன்றவற்றை எண்ணிப் பார்த்து, நிதானமாக முடிவு எடுத்தாலே, பிரச்னைக்கான தீர்வை எட்டலாம். முதலில், உங்களை பற்றிய சுயமதிப்பை அதிகமாக்குங்கள். சுயமதிப்பில் தொய்வு கண்டவர்களுக்கு தான், அதிக எதிர்மறை எண்ணங்கள் எழும். தினமும், கண்ணாடி முன் நின்று, நான் தன்னம்பிக்கையான(வள்)வன் என, சொல்லி பழகினாலே, உங்களின் சுயமதிப்பு அதிகரித்து, பிரச்னைகளை எளிதாக கையாள்வீர்கள்.