சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலை த் தானம் செய்த மனைவி
பெங்களூர் சாமந்த்நகரை ச் சேர்ந்தவர் உமேசுகுமார் ராவ், 53. விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இவரது மனைவி சிரீலதா, ஆசிரியை. குடும்பத்துடன் நேற்று முன்தினம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நள்ளிரவு, 2:00 மணிக்கு, உமேஷ் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
அழுது புரண்ட குடும்பத்தினர், அந்த இக்கட்டான நேரத்திலும், இறந்தவரின் கண்களை தானம் செய்ய விரும்பினர். இறந்த, 6:00 மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்பதால், அதற்கான வசதியுள்ள மருத்துவமனை குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு, திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவமனை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக இறந்த உடலுடன், திண்டுக்கல் சென்றனர். அங்கு அவகாச நேரத்திற்கு, அரைமணி நேரத்திற்கு முன், அவரது கண்கள் தானம் பெறப்பட்டன. இதன்பின் உடலுடன் பெங்களூரு சென்றனர். உடலை பெங்களூரு அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்ததாக, அரவிந்த் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ராமநாதன் தெரிவித்தார்.