வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

உலக அளவில், வலையொளி வழியாக

தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது.

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம்

இதனொரு பகுதியாக ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி இங்கு அறிவிக்கப்படுகிறது. போட்டிக்கான உங்கள் உரையைக் காணொளியாக அலைபேசியில் பதிவு செய்து புலனத்தின் வழி (WhatsApp) எமக்கு அனுப்பி வைக்கலாம். விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் கீழே தரப்பட்டுள்ளன:

வீறுகவியரசர் முடியரசனார்

பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் / கருப்பொருள்:

  • வீறுகவியரசரின் கவிப்புரட்சி
  • வீறுகவியரசர் படைப்புகளில் தமிழியப்புரட்சி
  • வீறுகவியரசரின் புலமைத்திறம்
  • வீறுகவியரசரின் படைப்பாளுமை

போட்டிக்காக வீறுகவியரசரின் படைப்புகளைப் படிக்க விரும்புவோர் பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ள வீறுகவியரசர் கவிதைகளை எமது வலைத்தளத்தின் ‘நூலகம்’ எனும் தலைப்பிலான பகுதியில் தரவிறக்கிக்கொள்ளலாம்.

நூல்களை அலைபேசியில் தரவிறக்க இயலாமல் போனால் கணினியில் இருந்து முயலுங்கள். அப்படியும் இயலாமல் போனால் இந்த மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்பி வையுங்கள்.

பரிசுத்தொகை

மொத்தப் பரிசுத்தொகையான இந்திய ரூ.15,000/=  பின்வரும் முறையில் வெற்றியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள மின்சான்றிதழ் வழங்கப்படும்:

  • முதற்பரிசு: 5000/=
  • இரண்டாம் பரிசு: 3000/=
  • மூன்றாம் பரிசு: 2000/=
  • மேலும் ஐவருக்கு 5 x 1000/= சிறப்புப் பரிசுகள்

பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பப் படிவம் இவ்வறிவிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது

விதிமுறைகள்:

  • உலகின் எப்பகுதியில் இருந்தும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்; வயது வரம்பு இல்லை.
  • போட்டியில் பங்கு பெற விரும்புவோர் முதலாவதாகக் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல் வேண்டும்.  இதன்போது எமது புலன எண் (WhatsApp no.) உங்களிடம் வழங்கப்படும்.
  • தரப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதாவதொன்றைத் தெரிவு செய்து மூன்று மணித்துளிகளுக்கு (3 நிமிடங்களுக்கு) மிகாதவாறு போட்டியாளர் தனது உரையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
  •  போட்டியாளர் தனது உரையை அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து (video recording), தரப்படும் புலன (WhatsApp) எண்ணுக்கு நவம்பர் 30, 2022 இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • கருப்பொருளை ஒட்டி அமையாத காணொளிகளும்  மூன்று மணித்துளிகளுக்கு அதிகமாக நீளும் காணொளிகளும் ஏற்கப்பட மாட்டா.

போட்டிக்கான காணொளியை உங்கள் அலைபேசியில் பதிவு செய்து அனுப்பலாம்

முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் வீறுகவியரசர் நினைவு நாளான டிசம்பர் 03, 2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும். போட்டி முடிவு அறிவிக்கப்படும் வரை போட்டியாளர் தனது உரை அடங்கிய காணொளியை வேறெங்கும் வெளியிடல் ஆகாது.

ஜனவரி 14, 2022 அன்று நடுவர் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும். போட்டியாளரின் பேச்சுத்திறன், ஆளுமை, மொழியறிவு, சொற்செறிவு, ஒலிப்பு முறை (பலுக்கல்), வலையொளிப் பக்கத்தில் குறித்த காணொளிகள் பெற்றிருக்கும் வரவேற்பு (பார்வை எண்ணிக்கை, விருப்பக் குறியீட்டு எண்ணிக்கை, பார்வையாளர் கருத்து) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடுவர் குழு வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.

தமிழர் திருநாளான ஜனவரி 15, 2023 (தைத்திரு நாள்) அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பப் படிவம் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது

இங்கே சொடுக்குக (CLICK HERE)

முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும்எமது வலையொளிப் பக்கத்தோடு இணைவதற்கு இங்கே சொடுக்குக