ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்காமத்துப்பால்
அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல்
(நாணத்தை விட வேண்டிய நிலைமை கூறல்)
51. காதல் நிறைவேறாதவர்க்கு மடலேறுதலே வலிமை.(1131)
52. நாணத்தை நீக்கி உடலும் உயிரும் மடல் குதிரை ஏறும்.(1132)
53. நாணமும் ஆண்மையும் இருந்தது. மடல்குதிரை இருக்கிறது. (1133)
54. நாணமும் ஆண்மையும் ஆகிய தெப்பங்கள் காதல் வெள்ளத்தில் இழுக்கப்படுகின்றனவே! (1134)
55. மாலைத்துன்பத்தையும் மடலேறுதலையும் தந்தாள். (1135)
56. கண்கள் உறங்கா. நள்ளிரவிலும் மடலேறுதலையே நினைப்பேன். (1136)
57. கடல்போல் காமம் பெருகினும் மடலேறாச் சிறப்பினள் பெண்.(1137)
58. அச்சமும் இரக்கமும் இன்றிக் காமம் வெளிப்படும்.(1138)
59. யாரும் அறியார் என எண்ணிக் காதல் தெருவில் சுற்றுகிறது.(1139)
60. யாம் பெற்ற துன்பம்  பெறாமையால் ஊரார் சிரிப்பர்.(1140)
அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல்
(காதல் செய்தியைப் பலர் கூடிப் பேசுதல் அலர்.காதல் ஒழுக்கத்தை ஊரார் பழிப்பதைத் தெரிவித்தல்.)
61. காதலைப் பழிப்பதால் உயிர் நிற்கும். அறியார் அதனை ஊரார். (1141)
62. அவளை அடையாமல் இருப்பதை அறியாமல் ஊர்ச்சொல் என்னோடு சேர்க்கிறது.(1142)
63. ஊரார் அவளுடன் சேர்த்துப் பேசுவது அவளை அடைந்த மகிழ்வைத் தருகிறது. (1143)
64. ஊர்க்கூற்றால் காதல் வளர்கிறது. இல்லையேல் தளரும். (1144)
65. குடிக்கக் குடிக்கக் கள் இனிது. வெளிப்பட வெளிப்படக் காதல் இனிது.(1145)
66. கண்டேன் ஒருநாள். திங்கள் மறைப்புபோல் பாரெங்கும் பரவியது. (1146)
67. ஊர்ச்சொல் எருவாக அன்னை சொல் நீராக வளர்கிறது காதல். (1147)
68. நெய்யால் நெருப்பு அணையுமோ? ஊர்ச்சொல்லால் காதல் அழியுமோ? (1148)
69. பிரியேன் எனப் பிரிந்தார்க்கு அஞ்சாதவளா ஊர்க்கு அஞ்சுவேன். (1149)
70. உடன்போவாள் என்னும் ஊரலரை உண்மையாக்குவார் காதலர். (1150)
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
(தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க இயலாமை.)
71. செல்லவில்லை எனில் சொல். சென்று வருதலை வாழ்வாளிடம் சொல். (1151)
72. காதல் பார்வை இன்பம் தந்தது. கூடல் பார்வை பிரிவச்சம் தருகிறது. (1152)
73. பிரியேன் என்றாலும் பிரிவார். எங்ஙனம் தெளிவது? (1153)
74. பிரியேன் என்றவர் பிரிந்ததால் நம்பியவர் மீது என்ன குற்றம்? (1154)
75. காத்திடப் பிரிவைத் தடுத்திடுக. பிரிந்தால் உயிர் பிரியும். (1155)
76. பிரிவைக் கூறும் கல்நெஞ்சர் ஆயின் எங்ஙனம் அன்பு காட்டுவார்? (1156)
77. கழலும் வளையல்கள் பிரிவைக் காட்டிக் கொடுக்கின்றனவே! (1157)
78. இனமில்லார் ஊரில் வாழ்தல் கொடிது. அதனினும் கொடிது இனியவர்ப் பிரிவு. (1158)
79. தொட்டால் சுடுவது நெருப்பு. விட்டால் சுடுவது காமம். (1159)
80. தலைவர் பிரிந்தால் வாழ்வார் பலர். நான் அல்லள். (1160)
அதிகாரம் 117. படர் மெலிந்து இரங்கல்
(பிரிவுத் துன்பத்தை நினைத்து மெலிந்து இரங்கல்)
81. பிரிவு நோயை மறைப்பேன். அதுவோ ஊற்று நீராய் மிகுகின்றது. (1161)
82. காதல் நோயை மறைக்கவோ உண்டாக்கியவரிடம் உரைக்கவோ முடியவில்லை. (1162)
83. காதலும் மறைக்கும் நாணமும் உயிர்க்காவடியில் தொங்குகின்றன. (1163)
84. காதல் கடல் உண்டே! கடக்கும் காவல் தெப்பம் இல்லையே! (1164)
85. காதலர்க்குத் துன்பம் தருபவர், பகைவர்க்கு என்ன செய்வாரோ? (1165)
86. காதல் கடல் போல் பெரிது. பிரிவோ கடலினும் பெரிது. (1166)
87. காமக்கடலைக் கடக்க இயலவில்லை. இரவிலும் தனியன்.(1167)
88. உயிர்களைத தூங்கச் செய்யும் இரவிற்கு நான் மட்டுமே துணை. (1168)
89. தலைவரைப் பிரிந்த நீளிரவு கொடுமையிலும் கொடுமை. (1169)
90. கண்கள், காதலர் இருக்குமிடம் சென்றால் நீந்த வேண்டாவே. (1170)
அதிகாரம் 118. கண்விதுப்பு அழிதல்
(விரைந்து பார்க்க வேண்டும் துடிப்பால் வருந்துதல்)
91. கண்கள் காட்டியதால் காமநோய் வந்தது. மீண்டும் காட்டச்சொல்வதேனோ? (1171)
92. பார்த்ததால் துன்பம் வந்தது உணராமல், கண்களே துன்புறல் ஏனோ? (1172)
93. பார்த்த கண்களே அழுவது நகைப்பைத் தருகிறது. (1173)
94. பிழைக்க முடியாநோய் தந்த கண்ணே! அழமுடியாமல் கண்ணீர் வற்றிவிட்டாயே! (1174)
95. கடலினும் பெரிய காமநோய் தந்த கண்கள், துயிலாமல் துன்புறுகின்றன. (1175)
96. காதல் நோய் தந்த கண்களே வருந்துவது மகிழ்ச்சியே! (1176)
97. அவரைக் கண்ட கண்களே! நீர் வற்றிப் போக! (1177)
98. சொல்லால் மட்டும் விரும்பியவரைக் காணாமல் கண்கள் துன்புறுகின்றனவே! (1178)
99. கண்ணே! வராவிட்டாலும் வந்தாலும் தூங்காமல் துன்புறுகிறாயே! (1179)
100. உள்ளத்தைப் பறையடிக்கும் கண்கள் இருந்தால் காதலை மறைப்பது எப்படி? (1180)
-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)