ஞாயிறு, 20 நவம்பர், 2016

செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்









கார்த்திகா நூல் வெளியீடும இசையும்07 ; karthika_nuulveliyeedu07

சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்

 தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன்செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார்.
முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.
 தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை இஃது ஒரு தரம் மிக்க நிகழ்வு என்பதை உறுதிப் படுத்தியது.
‘தந்தை எவ்வழி மைந்தரும் அவ்வழி’ என்ற பழமொழிக்கிணங்க மகள் தன் பதின்மூன்றாவது  அகவையிலேயே அழகாக ஒரு நூலை எழுதி வெளியிட்டது பாராட்டத்தகுந்தது. மாக்கவி பாரதியைப்பற்றித் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிய வேண்டும்.. இருபதாம் நூற்றாண்டின்  தொடக்கக் காலத்தில் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ் மன்பதைக்கு அறிவொளி ஊட்டத் தோன்றிய ஒளிமிகு சூரியன் மாக்கவி. அவரது அளப்பரிய பெருமை மிகு வரலாற்றையும் சில பாடல்களையும் தனது நூலில் பதிவு செய்துள்ளார் கார்த்திகா.
  அது மட்டுமன்றி, கருநாடக இசை மேன்மையுற்று வளர  உதவிய மும்மூர்த்திகளின் வரலாறும், இசைப்பணியும் மட்டுமன்றி அவர்களுக்கு இணையான இன்னும் சில இசைமேதைகளின் (கோபால கிருட்டிணபாரதி, பாபநாசம் சிவன், சுவாதித் திருநாள்) வரலாறும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந் நூலில் இடம் பெற்றுள்ளது.
  ஈழத்தில் தோன்றி ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் இசைக்கும் , தமிழுக்கும் தம் வாழ்வை முழுவதும்  ஒப்படைத்த விபுலானந்த அடிகளின் வரலாறும் இந் நூலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது இந் நாட்டில் வளரும் இளம் தலைமுறையினருக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்தத் துணை நிற்கும். இசை கற்போர் அனைவருக்கும் சிரந்த கைந்நூலாக அமையும்.
  நூல் வெளியீட்டின்  தொடக்க நிகழ்வில், செல்வி.சிவபைரவி சிறிதரன் கைகுவித்துக் கண் மூடியவண்ணம் பாடிய தேவாரம்,  நிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்பதற்குக் கட்டியம் கூறியது.
 செல்விகள் தருமிகா பூரணம்பிள்ளை, பபிதா சிவசுந்தரம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரவேற்புரை வழங்கினார்கள்.
அடுத்து இடம்பெற்ற வரவேற்பு நடனம் நிகழ்ச்சிக்குக் களைகட்டியது. நடன ஆசிரியை திருமதி. தருசிகா பிரதீபனின் நெறியாள்கையின் திறனை நடனம் எடுத்தியம்பியது.
 வாழ்த்துரை வழங்க வந்த வரகவிப்புலவர் சிவநாதனின் இடிமுழக்கத்துடன் கூடிய கவிதை மழை  அவையோரை மெய்மறக்கச் செய்தது. (தமிழ் தெரியாத சிலரைத் திடுக்கிடவும் செய்தது)
  மகளின் திறமையை வியந்து பாராட்டியதுடன், எழுத்துலகில் தன் கொள்கையின் வழி நின்று சிறிதும் பிறழாது வாழ்ந்து வரும் தந்தை முல்லை அமுதனின் தனித்துவத்தையும் சுட்டிக்காட்டினர்.
  அடுத்து, கருத்துரை வழங்கிய இளந்தலைமுறையைச் சேர்ந்த செல்வி. சனனி விசயமனோகரன் நூலைப் பற்றி அளவாக ,அழகாகத், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் உரையாற்றியமை  அவையோரை  வியப்பில்  ஆழ்த்தியது.  .
  வெளியீட்டுரை நிகழ்த்திய,  இலண்டனில் வாழும் எல்லாராலும் அறியப்பட்ட கவிஞர், பெரும் பேச்சாளர். திரு.இராசமனோகரன் இன்னும் கொஞ்சம் விவரமாக நூலைப்பற்றிச் சொல்லி இருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது .ஏனெனில், குட்டி எழுத்தாளருக்கு அது ஒரு தூண்டுதலாக அமையும்.
 தலைமை விருந்தினராக வந்தமர்ந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்த சைவ சித்தாந்தப் பண்டிதர் வசந்தன் குருக்கள் தனக்கே உரிய பாணியில் தமிழையும் இசையையும் நடைமுறை வாழ்வுடன் இணைந்து நகைச்சுவையும் கலந்து நயம்பட நல்லுரையாற்றினார்.
  இசை  ஒப்படைப்பில் கேட்போரைக் கவரும் வகையில் பாடல்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பாடல்களின் பொருளை உணர்ந்து அவற்றிற்கான உணர்ச்சியை வெளிப்படுத்தி அருமையாகப் பாடியுள்ளார் கார்த்திகா. சுருக்கமாகக் கூறினால் பாடலின் பொருளாக மேடையில் கார்த்திகா அமர்ந்திருந்தார் எனலாம்.
  பாட்டிற்கேற்ப குரல் அசைவும் தலையசைவும் மிகவும்  சுவைக்கக்கூடியதாக இருந்தது.
 பட்டறிவு மிக்க கலைஞர்கள் பாடல்களைப் பாடும் போது சொற்களை மென்மையாகவும், நளினமாகவும் உச்சரிப்பார்கள். அதைப் போலவே பாடியமை என்னை மிகவும் கவர்ந்தது. தாயகப் பாடல் எல்லோரது நெஞ்சைத் தொடும் வகையில் இருத்தது. குறிப்பாக “தூர… தூர.. தூர” என்ற வரிகள் தாயகத்திலிருந்து  இலண்டன் வரை நடைப்பயணம்  மேற்கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அப்பாடலை தமிழ்நதி எனும் நம்மவரே எழுதியதாக அறிந்தபோது இன்னும்  மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் வாழ்த்துகள் போய்ச் சேரட்டும்.
  கார்த்திகாவின் குரு திருமதி சேய்மணி சிறிதரன் மாணவி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் வகையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தமை ஆசிரியரின்  ஈடுபாட்டைக் காட்டியது. குருவின் பங்களிப்புப் பாராட்டுக்குரியது.
  இசை நிகழ்ச்சியில் பக்கவாத்தியக் கலைஞர்கள்  அவையோரை  வியப்பில் ஆழ்த்தினர். இனிமேல் பெருங்கலைஞர்களை அரங்கேற்றத்திற்கு அழைக்கவேண்டிய  தேவை இல்லை என்பதை மேடையிலிருந்த குட்டிக் கலைஞர்கள் உறுதிப்படுத்தினர்.
  பாரதிநேயன் சிறிதரன்  முழவு இசைத்தனர்.  தபலை,  பறைப்பட்டை(கஞ்சிரா), நாமுழவு(மோர்சிங்கு) வித்துவான். சிதம்பரநாதன் எனப் போற்றப்படும் கலைஞரின்  மக்களான தனுசன் தபலை வாசிக்க, தர்மசன்  நாமுழவு(மோர்சிங்கு) வாசிக்க சிவசனனி சுரேசு  வில்யாழ்(வயலின்) மீட்டினார். சிவபைரவி, தருசிகா எனும் சிறுமிகள் தம்புராவை மீட்டினர்.
  தமிழும் இசையும் சைவமும் இந் நாட்டில் தழைக்கும், நிலைபெறும் என்னும் நம்பிக்கையை எமக்களிப்பதாக  நூல் வெளியீடும், இசைப்படையலும் அமைந்தன.
செல்வி .துவாரகா பாலச்சந்திரன், கவிஞரும் ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான திரு.வேல்தருமா. திரு ஆனந்ததியாகர் (அதிபர், சைவ முன்னேற்றச் சங்க நால்வர் தமிழ்ப் பாடசாலை), திருமதி. அமிருதா சாந்திகுமார் (அதிபர், தமிழ்க் கல்விகூடம், எசெக்சு) ஆகியோரும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சிறப்புரை யாற்றினர்.
.*கார்த்திகாவின் மேற்கத்தைய இசை ஆசிரியர் சேம்சு இலிண்டுசே (Mr.James Lindsay) கார்த்திகாவின் இசை ஆர்வத்தையும் அவருக்குக் கற்பிப்பதில் தான்  மகிழ்ச்சி அடைந்ததையும் தான் இன்று எவ்வளவு இசையைச் சுவைத்தார் என்பதையும் அழகாக ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார். இசைக்கு மொழி  தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். பிறநாட்டு இசை மரபுகள் இந் நாட்டு இசையை வளப்படுத்துகிறது என்றும் கூறினார். இள வயதில் கார்த்திகா எழுதி இசை அமைத்த பாடலைத் தொலைக்காட்சியிலும் ஆவணப்படுத்தியதாகவும் சொன்னார்.
மூத்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு.விக்கி .விக்னராசா தன் பங்கை மிகத் திறம்பட ஆற்றினார்.
 மண்டபம் நிறைந்த மக்களும்  களித்துச் சென்றமையும், ஒவ்வொருவரும் நிகழ்ச்சி, நிகழ்ச்சி ஒருக்கிணைப்பு, நூல், இளம் கலைஞர்கள், சிறார்களுக்கே  முதன்மை கொடுத்தமை, சிற்றுண்டி, உணவு எனப் பலவற்றையும் புகழ்ந்து சென்றனர். .
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முல்லைஅமுதன் நடத்திய முழுமையான நிகழ்ச்சி இதுவாகும்
இப்படியான நிகழ்வுகளை நடத்தியதன் மூலம் பலருக்கும் முன் மாதிரியாக இது அமையும் என்பதே கணிப்பு.
வாழ்க கலை!  வளர்க இளம் கலைஞர்கள்!
(படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்.)
திருமதி.தவமணி மனோகரன்
அதிபர், திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலை
 ஈசுட்ஃகாம், இலணடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக