வியாழன், 10 மார்ச், 2016

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் இயற்கை எய்தினார்!


மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்
 இயற்கை எய்தினார்!



  இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்  நேற்று மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016  இலண்டனில் காலமானார். அவருக்கு  அகவை 82.

  அமிர்தலிங்கத்தின் எதிர்பாரா மறைவிற்குப்பின்னர் இலண்டனில் வசித்து வந்த அவரது மனைவி, மங்கையர்க்கரசி நேற்று முன் நாள் கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தார். புதன்கிழமை மாலை அவர் காலமானார் என்று அவரது  பிள்ளைகளில் ஒருவரான,  மருத்துவர் பகீரதன் தெரிவித்தார்.

  மங்கையர்க்கரசி ஆனி 20, தி.பி. 1964 / 1933 இம் ஆண்டு  சூலை மாதம் மூன்றாம்  நாள், இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அருகிலிலுள்ள மூளாய் என்ற இடத்தில் பிறந்தார்.  இராமனாதன் கல்லூரியில் இசை பயின்ற அவர், பின்னர் 1954 இல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான, அமிர்தலிங்கத்தை மணந்தார்.

  அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பெற்ற மங்கையர்க்கரசி, 1960 ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறைத்தண்டனையைப்  பெற்றார்.

  இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை நின்ற மங்கையர்க்கரசி, தமிழ் அரசியல் மேடைகளில் பாடல்களைப் பாடியும், உரை நிகழ்த்தியும் தமிழர்களை அணி திரட்ட உதவியாக இருந்தார்.

  பகீரதன் தவிர, மங்கையர்க்கரசி-அமிர்தலிங்கம் தம்பதியருக்கு காண்டீபன் என்ற ஒரு மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர். 

  காலஞ்சென்ற மங்கையர்க்கரசியின் இறுதிச் சடங்குகள்  இலண்டனில் எதிர்வரும் 20 அன்று நடைபெறும் என்று  மருத்துவர் பகீரதன் தெரிவித்தார்.

  இவரது இறப்பிற்குக் கலைஞர்,  வைகோ முதலான தலைவர்கள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

  தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ் சார்பிலும் அம்மையாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத்தெரிவிக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக