புதன், 5 ஆகஸ்ட், 2015

உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் – மு.வை.அரவிந்தன்

uraiyaasiriyargal_mu.vai.aravinthan_attai
உரைநூல்களின் பல்வகைப் பயன்கள்
  1. உரையாசிரியர்கள், தாம் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமைச் செல்வத்தை எல்லாம் தம் உரைகளில் கொட்டி நிரப்புவதால் நாம் அறிவுக்களஞ்சியத்தினுள் எளிதில் புகுந்து இன்புமுற முடிகிறது.
  2. சில பாடல்களுக்கு உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும் நயமிக்க விளக்கமும் எழுதியிருப்பதால் அவை இலக்கியப் பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன. விளங்காமல் இருந்த – ஐயத்திற்கு இடமாக இருந்த எத்தனையோ செய்திகள் வெளிப்படுகின்றன.
  3. காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் இயல்பு, தனித்தன்மை ஆகியவற்றை உரை கொண்டே நாம் அறிய முடிகின்றது.
  4. தமிழ் மொழியின் அமைப்பு, காலந்தோறும் எவ்வாறு மாறுதல் அடைந்து வந்துள்ளது என்பதையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை, அரசியல் மாறுதல், பழக்க வழக்கம் ஆகியவற்றையும் உரைகள் உணர்த்துகின்றன.
  5. கிடைத்தற்கரிய இலக்கியச் சுவை மிகுந்த தனிப்பாடல்களைத் திரட்டி உரைகளே நமக்கு உதவுகின்றன.
  6. ஏடுகளில் இருந்த பழைய நூல்களைப் பதித்தவர்களுக்கு மூலத்தை அறிய உரைகளே துணைபுரிந்து வந்தன. “உரையைக் கொண்டு மூலத்தையும் மூலத்தைக் கொண்டு உரையையும் பல சமயங்களில் அறிந்து கொண்டதுண்டு” (உ.வே.சா.: சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் பக்கம்.174)
  7. உரையாசிரியர்கள் மேற்கோளாகத் தரும் பாடல்கள் மூல நூல்களில் ஏற்படும் ஐயத்தைப் போக்கவும் நல்ல பாட வேறுபாடு அறிந்து பாடல்களின் பொருளைத் துணியவும் பயன்படுகின்றன.
  8. சில பழைய நூல்களில் மறைந்தும் குறைந்தும் உள்ள பகுதிகளுக்கு உரிய பாடல்களை உரைகளே நமக்குத் தந்துள்ளன. தொல்காப்பியம், குறுந்தொகை, திருக்குறள், சிந்தாமணி, நன்னூல் ஆகியநூல்களின் பழைய அமைப்பு, அளவு, உட்பிரிவு ஆகியவை பற்றி உரைகள் நமக்கு அறிவிக்கின்றன.
  9. மறைந்து போன தமிழ் நூல்களின் பெயர், அவற்றை இயற்றிய புலவர்களின் பெயர், அந்நூல்களின் சில பகுதிகள் ஆகியவற்றைப் பேணிக்காத்துவருபவை உரைகளேயாகும்.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.51-52

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக