ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகள்


தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகள் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!


seithi-well_theni_vaigaianees02
தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகளினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறிவருகிறது.
இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை, சருக்கரைத் தொழிற்சாலை,  காழிலை(காப்பி)த்தொழிற்சாலை எனப் பல தொழிற்சாலைகளும்  பாறைகளை உடைத்துத் தூசு எடுக்கும் தொழிற்சாலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
இதனால் சாயத்தொழிற்சாலையின் கழிவு நீர், சருக்கரைத்தொழிற்சாலையின் கழிவு நீர், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ச் சுமையுந்துகளிலும் இழுபொறிகளின் மூலமும் எடுத்துச்செல்லப்பட்டுக் கொட்டப்படுகின்றன.
இவ்வாறு கொட்டப்படும் கழிவுநீர்கள்  பூமிக்குள் சென்று இப்பகுதியில் உள்ள கிணறுகள், குளங்களில் உள்ள நீருடன் கலந்து பலவித நிறத்தில் கிணற்று நீர் காணப்படுகிறது. இதனால் முதலக்கம்பட்டி, குள்ளப்புரம் பகுதியில் உள்ள ஊராட்சிகளின் குடிநீர்க் கிணறுகள் பாதிக்கப்பட்டு குடிநீருக்கு உகந்தவை அல்ல  எனச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளன.
அந்தளவிற்கு இப்பகுதியில் நிலத்தடி நீர் கெட்டு சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இப்பகுதியில் மற்ற கிணறுகளும் குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே மாவட்ட நிருவாகம் குள்ளப்புரம், தேவதானப்பட்டி, முதலக்கம்பட்டி பகுதிகளில் உள்ள கிணறுகளின் தண்ணீரை பரிசோதனை செய்து தண்ணீருக்கு ஆபத்து விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமத்தை  நீக்க செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- வைகை அனிசு






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக