புதன், 18 டிசம்பர், 2013

வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் நேரம் : கனிமொழிக்கு இப்பொழுதுதான் தெரிந்ததாம்!

தலைப்பைப் பார்த்து மகிழ்ச்சியுடன் பலருக்கும் பகிரலாம் எனப் படித்துப் பார்த்தால், சிரிப்புதான் வருகின்றது. அயல்நாடுகளில் தமிழர்கள் துன்புறும் பொழுதும், ஈழத்தில்  தமிழினப் படுகொலை நடந்த பொழுதும், அவர் தந்தையார், மத்திய அரசின் வெளியுறவுக்  கொள்கைதான் எங்கள்  கொள்கை எனச் சொல்லி வந்த பொழுது தெரிவித்து வலியுறுத்த வேண்டிய கருத்தை  இப்பொழுது கூறுவது  விளம்பரத்திற்காகவா? அறியாமையாலா? இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது இந்தியாவில் உள்ள  தேசிய இனங்களுக்கான கொள்கையாகத்தான் இருக்க முடியும். மாநில நலன்களை மீறிய மத்திய அரசு கொள்கை என்பது மோசடியே! ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனச் சிக்கல் வரும்பொழுதுதான் நடுநிலை முடிவெடுக்க வேண்டிய பணி மத்திய அரசிற்கு வருகிறது. இனியேனும் ஈழத்தமிழர் நலன் குறித்த வெளியுறவுக் கொள்கையை அவர்களுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்க மத்திய அரசிடம் கனிமொழி வலியுறுத்தட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் நேரம் : கனிமொழி

இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் நேரம் இது என்று மாநிலங்களவையில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்திய தலைவர்கள் பலரும், அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதைக்கு உள்ளாகியுள்ளனர். விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக தேவயானியை அமெரிக்க காவல்துறை பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளது. இந்திய பெண்ணான தேவயானிக்கு செய்துள்ள அவமரியாதையை இந்தியர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலாது. இதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிக்க தவறிவிட்டது என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக