வெள்ளி, 8 மார்ச், 2013

பாலியல் வன்முறை அதிகரிப்பு

தில்லி மாணவி கற்பழிப்பு நிகழ்விற்குப்  பிறகு பாலியல் வன்முறை அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்துக்கு பிறகு பாலியல் பலாத்காரம் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, மார்ச். 8-
நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கொதித்து எழுந்து போராடினார்கள். இதையடுத்து மத்திய அரசு கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகும் கற்பழிப்பு குற்றங்கள் குறையவில்லை. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பாலியல் கொடுமை அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமையும், வியாழக்கிழமையும் ஓட்டலில் பணிபுரிந்த இளம்பெண், 15 வயது வேலைக்கார சிறுமி, குடும்பத்தலைவி, வேலை தேடி வந்த பெண், மற்றும் 8 வயது சிறுமி என 5 பேர் கற்பழிக்கப்பட்டனர்.
டிசம்பர் சம்பவத்துக்கு பின் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு பதிலாக குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் டெல்லியில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் சம்பவம் நடப்பதாகவும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு (2012) ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படும் சம்பவம் நடந்தது. இந்த ஆண்டு அதுவும் தொடக்கத்திலேயே பல மடங்கு அதிகரித்து இருப்பது போலீஸ் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதேபோல் டெல்லியை ஒட்டி உள்ள நகரங்களான குர்கான், நொய்டாவிலும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. குர்கானில் மாதத்துக்கு 7 கற்பழிப்பு மற்றும் மானபங்கம் சம்பவங்கள் நடந்தது. அது தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று காலை குர்கானில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த 27 வயது பெண் சக ஆண் ஊழியரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தார். பின்னர் அவர் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆனால் போலீசார் வழக்கை முடிக்கவில்லை. அது பொய் புகாரா? நடந்தது என்ன என்று விசாரணை நடக்கிறது.
நொய்டாவிலும் இந்த ஆண்டு கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 4 பாலியல் கொடுமை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு மாதத்துக்கு 10 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
கற்பழிப்பு சம்பவங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரித்து இருப்பது போலீசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.
டெல்லியில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று ஆய்வு நடத்தியதில் 90 சதவீத பெண்கள், 'இரவு நேரத்தில் டெல்லியில் நடமாடுவது பாதுகாப்பானது அல்ல' என்று தெரிவித்துள்ளனர்.
3-ல் 2 பங்கு பெண்கள் கூறுகையில், டெல்லி தெருக்களில் நடந்து செல்லும் போது தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அலுவலகங்களில் பாலியல் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். வீடுகளில் நடந்த குற்றங்கள் குறைந்துள்ளது. ஆனால் வேலை பார்க்கும் இடங்கள் இன்னும் பெண்களுக்கு சவாலாகவே விளங்குவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல. 94 சதவீதம் பேரும், இரவு நேரம் பாதுகாப்பானது அல்ல 96 சதவீதம் பேரும், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது சிறப்பானது என்று 67 சதவீதம் பேரும் அலுவலகத்தில் செக்ஸ் கொடுமையை எதிர்த்து போராட வேண்டி இருப்பதாக 63 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக