ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஊரக அருவினைப் பெண்

முதல் பெண்காவலர்!
காவல் துறையில் சேவை செய்வதற்காக வே, திருமணம் செய்யாமல், 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆய்வாளர், செல்வி. வசந்தி: என், சொந்த ஊர் விழுப்புரம். அப்பா சாரங்கன், டீசல் இன்ஜின் மெக்கானிக். நான், எஸ்.எஸ்.எல்.சி., படித்து முடித்த நேரத்தில், தமிழக காவல் துறைக்கு, முதன் முறையாக, பெண்களையும் தேர்வு செய்வதாக, பத்திரி கையில் படித்தேன். வீட்டிற்கு தெரிந்தால், தடுத்து விடுவர் என, எண்ணி, பக்கத்து வீட்டிலுள்ள ஆசிரியர் துணையுடன், காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தேன்.கடந்த, 1973ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்வில், நான் உட்பட, 21 பெண்கள் தேர்வு பெற்றோம். முதல் பெண்கள் குழு என்பதால், இரவு பகல் பாராமல், கூடுதல் பயிற்சிகள் நடைபெற்றன. திருமணம் மற்றும் பல காரணத்தால், என்னைத் தவிர அனைவரும், காவலர் பணியில் தொடர முடியாமல், பாதியில் விலகினர்.எனவே, திருமணத்தை வேண்டுமென்றே தவிர்த்தேன். ஒரு கட்டத்தில், குடும்பமே வலியுறுத்திய போது, திருமணமே வேண்டாம் என, மறுத்தேன். அவர்கள் கோபத்தில் என்னை திட்டி தீர்த்தனர். காவல் பணி கொடுத்த ஊக்கத்தால், உறுதியுடன் நின்றேன்.சமுதாயக் கொடுமைகளிலிருந்து, ஒரு பெண்ணாக துணிய முடியாததை, ஒரு காவல் துறை அதிகாரியாக துணிந்து, எதிர்த்து நின்றேன் என்பதில் மகிழ்ச்சி. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட பலரை, நீதிமன்றங்கள் மூலம், சரியான தண்டனை வாங்கி தந்துள்ளேன். உறவு முறைகளின், எந்தவித நல்ல, கெட்ட நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. அப்படி சென்றாலும், மற்றவர்களைப் போல் புடவையில் இல்லாமல், காவலர் சீருடையிலேயே செல்ல வேண்டியிருக்கும்.பணிக் காலங்களில், 10 ஆண்டுகள் காவல் துறை ஆய்வாளராக பணியாற்றி இருக்கிறேன். காவல் துறை பணியை, மக்களுக்கு உதவும் கருவியாக, பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை; அதை கடைசி வரை நிறைவேற்றியதால், மன நிறைவு கிடைத்தது.

கிராமத்து சாதனைப் பெண்!

ஒரு பெண்ணாக, விவசாயத்தில் வெற்றி பெற்று, "கிராமிய சாதனையாளர் விருது' பெற்ற, செல்வி: நான், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பத்தாம் வகுப்பு வரை, படித்திருக்கிறேன். எனக்கு திருமணம் செய்து கொடுத்த இடமும், புதுக்கோட்டையின் குருந்தடிமலை கிராமத்திலுள்ள, விவசாயக் குடும்பம் தான். வயல் வேலைகளை செய்து, பால் கறந்து கடைகளில் விற்று வந்தேன். இதன் மூலம், ஒரு குண்டு மணி தங்கம் கூட, சேர்க்க முடியவில்லை. வறுமையால், பிறந்த இரண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல், எதிர் காலம் கேள்வி குறியாக நின்றது."சக்தி மகளிர் சுய உதவிக் குழு' என்ற பெயரில், 20 பெண்களைச் சேர்த்து, குழு துவங்கினேன். வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி, விவசாயம் செய்வதை தவிர்த்து, குழு மூலம், வங்கியில் விவசாயக் கடன் வாங்கி, விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்."வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்' உளுந்து பயிரிட, தொழில்நுட்ப பயிற்சியும், சொந்த நிலம் இருந்தால், உளுந்து பயிரிட தேவையான பொருள் உதவி செய்வதையும் அறிந்து, பயிற்சிக்கு சென்றேன். முன்பு, கடையில் விற்பதை வாங்கி, கண்மூடி தனமாக விவசாயம் செய்தேன். பயிற்சியில் கிடைத்த தகவல் மூலம், ஒரு ஏக்கருக்கு, 8 கிலோ விதையை, வரிசை முறையில் விதைக்கிறேன். இதற்கு, 6,500 ரூபாய் செலவாகும். மகசூல், 30 ஆயிரத்திற்கும் குறையாது. லாபம் மட்டும் குறைந்தது, 20 ஆயிரம் கிடைக்கும். புதுரக உளுந்திலும், நல்ல மகசூலை கொண்டு வந்தேன்.உளுந்து அறுவடைக்கு குறைந்தது, 65 முதல், 75 நாட்கள் மட்டுமே ஆகும். எனவே, குறைந்த நாட்களில், லாபம் ஈட்டலாம். விதை உளுந்தாக விற்றால், கூடுதல் லாபம் என்பதால், நான் விதையாக விற்று, "சிறந்த விதை உற்பத்தியாளர்' என, பாராட்டு சான்றிதழும் பெற்றிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக