சனி, 22 செப்டம்பர், 2012

"மனிதனாக இருக்கிறானா...!'

சொல்கிறார்கள்

"மனிதனாக இருக்கிறானா...!'
கலைமாமணி வீ.கே.டி.பாலன்: ஒரு மனிதன் கல்வி கற்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லை; அவன் மனிதனாக இருக்கிறானா என்பது தான் முக்கியம். கல்வி, அதிகமாகவே மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. ஆகவே, கல்வி கற்றல், மனித சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை. என் மகளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, பேசிய பின், ரிசீவரை கீழே வைத்த அவள், "ஓ...'வென, அழத் தொடங்கி விட்டாள். காரணம் கேட்க, "என்னுடன் படிக்கும் மாணவி, கெரசின் ஊற்றி, தற்கொலை செய்து கொண்டாள்' என்றாள். காரணம் உடனடியாகத் தெரியாத போதும், மறுநாள் தெரிய வந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அப்பெண், கடைசித் தேர்வில், மதிப்பெண்ணில் கொஞ்சம் பின்தங்கி விட்டாள். அதற்காக, அவள் தாயும், தந்தையும் திட்டியதன் பொருட்டு, இந்தத் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறாள். இந்த சம்பவத்தால், "பெற்றோரே... உங்கள் குழந்தைகளை வெறும் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகத் தான் பார்க்கிறீர்களா?' என்று கேட்கத் தோன்றுகிறது. அதே வேளையில், கண்டிக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்பதுமில்லை. அமைதியாக அமர்ந்து, நிதானமாக, உங்களின் வாரிசுகளின் வருங்காலத்தை நிமிர்த்த, அவர்களின் சிக்கல்களை, உங்களுக்குள் அவிழ்த்துக் கொள்வது தான் வாழ்க்கை. அகம்பாவம் கொள்வது, அடாவடி நடவடிக்கைகளுடன் உயிரையே துச்சமாக மதிக்கும் முடிவை எடுத்துக் கொள்வது மாணவப் பருவத்தினருக்கு ஏற்புடையதாகுமா? கல்வி கற்றல் நல்லது என்பது உண்மையோ, இல்லையோ... அது குறிக்கோள் உடையதாக இருக்க வேண்டும் என்பது நிதர்சனம். குறிக்கோள் இல்லாத கல்வி, பாமரத்தனத்தை விட மோசமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக